lady_269மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்
விம்மி வலித்து கசிகிறது எனதன்பு - நீயோ
அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய்

வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி
ஓயாமல் அலைகின்றேன் - நீயோ
மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்

இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய்
வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு

புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

- செ.சுஜாதா, பெங்களூர்.

Pin It