பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடர்ந்தகுடிஅரசுவழக்கைத் திரும்பப் பெற்றது

கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ‘குடி அரசு' வழக்கு 15 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தற்போது திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராக 1925 முதல் 1949 வரை பெரியார் நடத்தி வந்த குடிஅரசு பத்திரிக்கையில் உள்ள மற்றும் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுக்களும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானது என்றும், தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது என்றும் தங்களைத் தவிர யாருக்கும் உரிமை இல்லை என்றும், கொளத்தூர் மணி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுக்களையும் புத்தகமாக வெளியிடக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ்வாறு வெளியிட முயற்சித்ததற்காக ரூ. 15 இலட்சம் இழப்பீடாக தர வேண்டும் என்று அன்றைய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தது.

ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கொளத்தூர் மணிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். தடையை விலக்கக் கோரி கொளத்தூர் மணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு அவர்கள் தடையை விலக்கி பெரியாரின் எழுத்துகளுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் யார் வேண்டுமானாலும் தொகுத்து வெளியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதனை எதிர்த்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆரம்பத்தில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இறுதியாக அத் தடையை விலக்கி பெரியாரின் எழுத்துகளுக்கும் பேச்சுக்கும் என்றுமே பெரியார் பதிப்புரிமையோ சொந்தமோ கோரவில்லை என்றும், பெரியார் இறந்து 25 வருடங்கள் கழித்து புத்தகங்கள் தொகுக்கப் பட்டதால் பதிப்புரிமை சட்டப்படி தடை விதிக்க முடியாது என்றும், குடிஅரசு பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தொகுத்து வெளியிட யாருக்கும் தடை கிடையாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு இப்ராஹிம் கலிஃபுல்லா மற்றும் திரு கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடியாக உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குடிஅரசில் வெளியான பெரியாரின் எழுத்துக்களும் பேச்சும் தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மேல்முறையீடு செய்ய, அந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து விட்டது. எனவே பெரியாரின் எழுத்துகளுக்கும், அவரின் பேச்சுகளும் பொதுத்தளத்திற்கு வந்துவிட்டது, ஆகவே யார் வேண்டுமானாலும் வெளியீடு செய்யலாம், அது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு தான் சொந்தம் என்று தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது என்ற ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற இருவர் ஆயம் இடைக்கால உத்தரவினை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

மற்றொரு பிரதிவாதியான திரு. கோவை இராமகிருட்டிணன் மீதான வழக்கை மட்டும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 2019ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இடைக்காலத் தடைகள் நீக்கப்பட்டிருந்தாலும், குடிஅரசு வெளியிட்டதற்கான இழப்பீடு 15 இலட்சத்தை வழங்கக் கோரி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் தொடர்ந்திருந்த அசல் வழக்கைத் தொடர்ந்து நடத்தினர். மேற்படி வழக்கு இறுதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு மாஸ்டர் கோர்ட் முன்னிலையில் சாட்சி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி வீரமணி வாக்குமூலம் அதாவது பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருந்தாலும் அவர் தன்னை சாட்சியாக விசாரிக்காமல் தவிர்த்துக் கொண்டு, அதன் உறுப்பினர்களில் ஒருவரான திரு. கலிபூங்குன்றன் முதல் சாட்சியாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் விசாரிக்கப்பட்டார். வாதி தரப்பு சாட்சியம் முடிக்கப்பட்டு பிரதிவாதி தரப்பு சாட்சியாக கொளத்தூர் மணி விசாரிக்கப்படவிருந்தார்.

இந்நிலையில் இன்று 31.10.2022 பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கினைத் திரும்பப் பெறுவதாக நீதிபதி எம். சுந்தர் அவர்கள் முன்பு பட்டியலிடப்பட்டது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் டி. வீரசேகரனும், கொளத்தூர் மணி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களும் நேர்நின்றார்கள். மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மேற்படி வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும், 15 வருடங்களாக பிரதிவாதி கொளத்தூர் மணி இந்த வழக்கினால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார் என்றும், அதற்காக நீதிமன்றம் காஸ்ட் (cost) அதாவது செலவுத் தொகை போட வேண்டும் என்றும் வாதிட்டார்.

நீதிமன்றம் வழக்கறிஞர் துரைசாமியின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் நீதிபதி அவர்கள், அவர்களாகவே வந்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக சொல்கிறார்கள்; மேலும் இது பெரியார் பற்றிய வழக்கு, விட்டு விடலாமே என்று கேட்டுக் கொண்டார், நான் சொல்லுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் வழக்கறிஞர் துரைசாமியிடம் நீதிபதி கேட்டுக் கொண்டார். காஸ்ட் (செலவுத் தொகை) போடுவதென்றால் அவர்களையும் விசாரித்த பின்பு காஸ்ட் போட நேரிடும் என்றும், அதே நேரத்தில் அவர்களாகவே வரும்போது ஏன் நீங்கள் ஒத்துக் கொள்ளக் கூடாது என்றும் நீதிபதி திரு எம். சுந்தர் அவர்கள் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

வழக்கறிஞர் துரைசாமியும் நீதிபதியின் பெருந்தன்மைக்கு நன்றி பாராட்டி நீதிபதி சொல்வதை ஏற்றுக்கொண்டு வழக்கினை நீதிமன்ற போக்கிற்கு விட்டுக் கொடுத்தார். அதனால் நீதிமன்றம் மேற்படி வழக்கை நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்தது. இதன் மூலம் பெரியாரின் எழுத்துகளும் பேச்சும் பொது மக்களுக்கு சொந்தமாகி விட்டது. இனிமேல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும், திரு.கி. வீரமணி அவர்களும் பெரியாரின் பேச்சையும், எழுத்தையும் தனித்து சொந்தம் கொண்டாட முடியாது.

இந்த வழக்கில் ஆரம்பம் முதல் கடைசி வரை மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களும், வழக்கறிஞர் வை. இளங்கோவனும் கடுமையாக வாதாடி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு வரலாறு காணாத மாபெரும் வெற்றியைத் தேடி கொடுத்துள்ளனர்.

- வழக்கறிஞர் வை.இளங்கோவன்

Pin It