(சமூக பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் - இந்தியாவின் தலை சிறந்த ஆங்கில ஆய்வு வார ஏடு - 'எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி' ஆகும். நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்களை வாசகர்களாகக் கொண்டிருக்கும் அந்த ஏடு பெரியார் நூல்கள் தேசவுடைமையாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

திராவிடர் இயக்கத்தின் சீரிய ஆய்வாளரும், சர்வதேச நாடுகளில் திராவிடர் இயக்க ஆய்வாளர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவருமான முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய கட்டுரையை அந்த வார ஏடு தலையங்கமாகவே வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம், இங்கே தரப்படுகிறது)

பெரியாருடைய எழுத்தும் பேச்சும் அறிவுசார் சொத்துடைமை என்றும், அவை தனது தலைமையின் கீழ் உள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உரிமை கோரியுள்ளார்.

பெரியார் எழுத்து - பேச்சுகளை வேறு எவராவது வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், தமிழ்நாட்டில் வெகு மக்களின் பொதுப் புத்தியில் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கிய பெரியாரின் அரை நூற்றாண்டு கால சிந்தனைகளையும் அதை பரப்பிட பெரியார் மேற்கொண்ட கடினமான உழைப்பையும், தமக்கே உரித்தானது என்று 'ஏகபோக' உரிமை கோருகிறார் கி.வீரமணி.

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஒரு மரபு உண்டு. பெரியாருடைய கருத்துகளை ஏற்றுக் கொண்ட பல வெளியீட்டாளர்கள் பெரியார் நூல்களை எந்தத் தடையுமின்றி, வெளியிட்டு பரப்பி வந்திருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள்தான் பெரியாரின் எழுத்தும், பேச்சும், நிலையாக தொடர்ந்து தமிழக மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தின.

அப்படி பெரியார் நூல்களை வெளியிட்டவர்களில் பெரும்பாலோர் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல. அவர்களே தங்களிடமுள்ள மிகக் குறைந்த நிதி வாய்ப்புகளைக் கொண்டு வெளியிட்ட சிறு வெளியீட்டாளர்கள் தான். அவர்களின் அரசியல் ஈடுபாடு தந்த உந்துதல் காரணமாகவே இந்த வெளியீடுகளைக் கொண்டு வந்தார்கள்.

அதே நேரத்தில், கடந்த காலங்களில் பெரியார் சிந்தனைகளை தொகுக்கும் பெரிய முயற்சிகளும் நடந்துள்ளன. திருச்சி சிந்தனையாளர் கழகம் 1974 ம் ஆண்டில் வே. ஆனைமுத்து அவர்களை பதிப்பாசிரியராக கொண்டு பெரியார் சிந்தனைகள் - 3 தொகுதிகளை வெளியிட்டது. அந்த தொகுதிகள்தான் பெரியாரின் சமூகம் மற்றும் அரசியல் குறித்த - பல்வேறு தமிழ் ஆங்கில ஆய்வுகள் உருவாகக் காரணமாக இருந்தன. இந்த 3 தொகுதிகளையும் சுதந்திரமாக பயன்படுத்தி எத்தனையோ ஆய்வுகள் வெளிவந்து விட்டன. அப்போதெல்லாம், இதை எதிர்த்து எவரும் கேள்வி கேட்டதில்லை.

தமிழ்நாட்டில் வாசிப்பாளர்களிடையே பெரியார் நூல்களுக்கான தேவை அதிகமாக இருந்தும்கூட, திராவிடர் கழகமோ அல்லது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமோ, இந்தத் தேவைகளை நிறைவேற்ற - பெரிய முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் திராவிடர் கழகத்திடம் ஏராளமான சொத்துகளும் பொருள் வசதியும் உண்டு. அவர்களுக்கு நிதிப் பற்றாக்குறை என்ற பிரச்சினை ஏதுமில்லை.

1983 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழக செயல்பாட்டாளர்கள் கடுமையாக உழைத்து, பெரியாரின் எழுத்து பேச்சுகளை தொகுத்து கைப்பட எழுதி, கி.வீரமணியிடம் கையளித்தார்கள். அப்படி தரப்பட்டு, கால் நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது.

'குடிஅரசு' 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கி நடத்தப்பட்ட வார ஏடு ஆகும். 'குடிஅரசு' தொகுப்புகளோடு 1928 இல் பெரியார் நடத்திய ஆங்கில ஏடான 'ரிவோல்ட்'டிலிருந்து முக்கிய கட்டுரைகளைத் தொகுத்து 800 பக்கம் கொண்ட நூலை வெளியிடுவதாகவும் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. திராவிடர் கழகத்தைப் போல் பெரியார் திராவிடர் கழகம் பொருள் வசதி கொண்ட அமைப்பு அல்ல.

ஆனாலும் கூட, பெரியாரின் எழுத்து-பேச்சுகளை மக்களின் கரங்களில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்தப் பெரிய திட்டத்தை அந்த அமைப்பு தேர்வு செய்தது. தமிழ்நாட்டின் வாசகர்களிடையே இந்த திட்டம், மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தாங்களாகவே முன் வந்து நன்கொடைகளை வழங்குகிறார்கள். முன் பதிவுத் திட்டத்தின் கீழ் - இதற்காக நிதி திரட்டப்படுகிறது.

இந்த நிலையில், பெரியார் எழுத்துகளை ஏகபோகமாக்கிக் கொண்டு, மக்கள் மன்றத்துக்கு சென்று அடையாது தடுத்து நிறுத்தும் வீரமணியின் முயற்சிகள், பெரியார் கொள்கைகளுக்கே நேர்எதிரானதாகும். திராவிடர் கழகத்தின் அடிப்படையான வேலைத் திட்டமே, பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரப்புவதுதான் என்று பெரியார் கருதினார். நூல்கள் வெளியிடுவதில், பெரியார் எப்போதும் லாபக் கணக்குப் பார்த்ததில்லை.

தனது சகாவும், சைவருமான ஈ.எம்.சுப்ரமணிய பிள்ளைக்கு பெரியார் 1947 இல் எழுதிய கடிதத்தில், "நான் மிகவும் குறைந்த விலையிலேயே நூல்களை வெளியிடுகிறேன். இதில் வர்த்தக நோக்கம் இல்லை. பெரும்பாலான நூல்கள், இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

எனவே, வர்த்தக எல்லைக்குள் நின்று இந்த வேலையை செய்வது மிகக் கடினம்" என்று எழுதினார். பெரியாரைப் பொறுத்தவரை எல்லாவற் றையும்விட, பகுத்தறிவு கருத்துகள் பரவ வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது. பெரியாரின் அந்த பகுத்தறிவுக் கருத்துகள் தாராளமாக பரவுதலை, முடக்கிப் போடும் முயற்சிகளில் தான் வீரமணி, இறங்கியுள்ளார்.

ஆளும் கட்சியான தி.மு.கழகம், இதில் வீரமணியை ஆதரிப்பதுதான், வருத்தத்துக்கு உரியதாகும். தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான 'முரசொலி' வீரமணியின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தந்து வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் 'குடிஅரசு' தொகுப்புகளை தி.மு.க. தொண்டர்கள் வாங்கி விடாமல், ஒதுங்கிக் கொள்ளச் செய்வதுதான். வீரமணி, அ.இ.அ.தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, இப்போது, தி.மு.க.வின் அரவணைப்புக்கு வந்துள்ளார். எனவே புதிதாக கிடைத்துள்ள நண்பரை, கைவிட வேண்டாம் என்று தி.மு.க. கருதுகிறது போலும்.

தான் ஒரு 'பெரியாரிஸ்ட்' என்றும், 'பகுத்தறிவுவாதி' என்றும், அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறி வருகிறார். அது உண்மையானால், உடனடியாக பெரியார் நூல்களை அவர் நாட்டுடைமையாக்க வேண்டும். அதன் பிறகு எவர் வேண்டுமானாலும் பெரியார் நூல்களை வெளியிடலாம்.

ஏற்கனவே, புதுமைப்பித்தன், கல்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், பதிப்புத்துறை ஜனநாயகப்படுத்தப்பட்டு, சிலர் மட்டுமே 'லாபம்' குவித்து வந்த ஏகபோகம் தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்துக்கள் உரிமை என்ற பெயரால் தமிழ்நாட்டில் மதவாத அமைப்புகள் காலூன்ற இடம் தேடும் சூழ்நிலையில் பெரியாரியல் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Pin It