பண்டாரவாடை (Pandaravadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் எனது கிராமம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். பல சமூகங்கள் வாழும் எனது ஊரின் வரலாற்றை அறிய எடுத்த சிறு முயற்சியே இந்த பதிவு....)

pandaravaadaiதென் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பேரரசான விஜயநகர பேரரசு 1336'ல் ஹரிஹர ராஜா மற்றும் அவரது சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற ஸ்ரீனகிரி மடத்தின் 12 ஆம் ஜகடகுருவான வித்யாரன்யா (Vidyaranya) என்ற பார்ப்பனரே விஜயநகர பேரரசின் மூளையாகவும், முதன்மை அமைச்சராகவும் செயல்பட்டார். அவர் பேரரசின் நிர்வாக வசதிக்காக நிலங்களை எட்டு பிரிவுகளாகப் பிரித்தார். அவை ராஜ்யம், நாடு, சிம்மா, ஸ்த்லா, வலிதா, கவாடி, பூமி மற்றும் கிராம ஆகும்.

இதில் கிராம என்பதை மேலும் மூன்று வகைகளாகப் பிரித்தார். அவை

1. அமர கிராமா (Amara gramas)
2. மான்ய கிராமா (Manya gramas)
3. பண்டாரவாடா கிராமா (Bandaravada gramas)

1. அமர கிராமா (Amara gramas) :

இங்குச் சூத்திர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்தனர். நிலத்தின் முழுமையான வருவாய் பேரரசின் ராணுவ செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

2. மான்ய கிராமா (Manya gramas) :

மான்ய கிராமா என்பதை இன்றைய வழக்கில் அக்ரஹாரம் என்று புரிந்துகொள்ளலாம். நிலங்கள் அரசர்களால் பார்ப்பனர்களுக்குப் பரிசாக கொடுக்கப்பட்டது. நிலமும் நிலத்தின் வருவாயும் பார்ப்பனர்களுக்கே முழுமையாக வழங்கப்பட்டது.

3. பண்டாரவாடா கிராமா (Bandaravada gramas) :

பண்டாரவாடா கிராமா என்பது கோவிலுக்காகக் கொடுக்கப்பட்ட கிராமங்கள். இங்குச் சூத்திர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்தனர். கிராமத்தின் நிர்வாகம் கோவில் தருமகர்த்தாக்களால் நடத்தப்பட்டது. விளைச்சலில் பெரும்பகுதி மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[1]

Dr. பார்வதி மேனன் என்ற வரலாற்று ஆய்வாளர் 1986'ல் "AGRARIAN ECONOMY OF THE CARNATIC IN THE 17th AND 18th CENTURIES" என்ற தலைப்பில் வெளியிட்ட தனது ஆய்வறிக்கையில், கிராம பிரிவுகள் பற்றிப் பேசும் போது "This classification was clearly not a Karnataka phenomenon alone as amara, and bandaravada (pandaravadai, in Tamil) villages were prevalent in the Carnatic as well." என்று குறிப்பிடுகிறார்[2]. அதாவது, பண்டாரவாடா என்பது கர்நாடகாவின் நிகழ்வாக மட்டுமல்லாது Carnatic Region எனப்படும் பண்டைய தமிழ் நிலத்திலும் "பண்டாரவாடை" என்ற பெயரிலிருந்ததாக குறிப்பிடுகிறார்.

மேலும் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பண்டாரவாடா கிராமங்கள் பின்னர் சில அதிகாரம் படைத்த சூத்திர சாதிகளின் தனியுடைமையாக மாறி இருக்கிறது என்றும் விளக்குகிறார்[3].

"தமிழ் மானிடவியலின் விவிலியம்" (Bible of Tamil Anthropology) என்று போற்றப்படும் பேராசிரியர் பக்தவச்சல பாரதி அவர்களின் "பண்பாட்டு மானிடவியல்" புத்தகத்திலும் இதே போன்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

அதில் "தஞ்சைப் பகுதியில் ஆய்வு செய்த ஆந்த்ரே நெத்திலி (1965). சிற்றூர்களில் அக்ரஹாகாரவாடை (பார்ப்பனர்கள் வாழும் இடம்), பண்டாரவாடை (பார்ப்பனர் அல்லாதோர் வாழும் இடம்) என இரு பிரிவுகள் உள்ளது எனச் சுட்டிக் காட்டுகிறார். சில சிற்றூர்கள் முழுவதும் அக்ரஹாரவாடையாகவும் சில பண்டாரவாடையாகவும் உள்ளன எனக் கூறுகிறார்.[4]".

ஆந்த்ரே நெத்திலியின் கூற்றுப்படி பண்டாரவாடை எனும் பெயர் "பார்ப்பனர் அல்லாதோர் வாழும் இடம்" என்னும் வகையில் சமூக குறிப்பு பெயராக இருந்துள்ளது.

மேலும் 1738'ல் தஞ்சையை ஆண்ட சஹாஜீ ராஜா (சரபோஜி மன்னர்) பிரஞ்ச் வணிகர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் "You are not to convert the Bramins houses into those of Bandaravada or sudra caft"- பார்ப்பனர் குடியிருப்புக்களை பண்டாரவாடா அல்லது சூத்திர இடங்களுக்கு மாற்ற கூடாது என்று நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. [8]

கிராமங்களை இப்படித் பார்ப்பனர்களுக்கு தானமாகக் கொடுக்கும் முறை விஜயநகர பேரரசு புதிதாக ஏற்படுத்தியது அல்ல, அதற்கு முன் சோழர் காலத்திலேயே 'பிரமதேயம்' என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வரி இல்லாத தனியுடைமையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்குப் பல கல்வெட்டுக்கள் சான்று கூறுகின்றன. பிரமதேயம் -என்பதில் பிரம்ம/பிரம -என்பது பார்ப்பனர்களையும், தாயம் என்பது உரிமையையும் குறிக்கிறது[5].

எனவே பண்டாரவாடை என்னும் பெயர் விஜயநகர பேரரசின் தஞ்சை வருகைக்குப் பின் வந்ததா அல்லது அதற்கு முன்பே இந்த பெயர் இங்கு இருந்ததா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

-*-

பண்டாரவாடா - சொல் பொருள்:

பண்டாரவாடா என்ற தெலுங்கு சொல்லைப் பண்டாரி + வாடா என்பதாகப் பிரிக்கின்றனர்.

இதில் 'வாடா'(వాడ) என்ற தெலுங்கு சொல்லுக்குத் தெரு அல்லது வரிசையான வீடுகள் என்று பொருள்.[6]

'பண்டாரி' என்பது சமூகத்தைக் (சாதியைக்) குறிக்கும் சொல்லாகும். அதன் பொருள் ' பொருளாளர்' என்பதாகும்.

Edgar Thurston என்ற வெள்ளைக்காரர் எழுதிய Castes and Tribes of Southern India புத்தகத்தில் பண்டாரி சமூகத்தைப் பற்றி பின் வருமாறு எழுதுகிறார்.

"Bandari (“treasurer”) is one of the many exogamous septs (division) among the Telugu section of the Devangas (a caste of weavers). The Devangas, speaking Telugu or Canarese, are found all over the Madras Presidency. Devanga is composed of Deva and angam, “limb of god”."

தெலுங்கு உச்சரிப்பில் உள்ள 'Ba' என்பதைத் தமிழில் பா என்று உச்சரிப்பதால். தமிழகத்தில் கோவில் நிர்வாகம் செய்யும் சமூகங்களை பண்டாரம் என்று அழைத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் பண்டாரம் சமூகத்தைப் பற்றி Edgar Thurston எழுதியுள்ள சில குறிப்புகள்:

1. Pandārams are those who are made to pass through some ceremonies in connection with Saiva Āgama.
2. Pandārams, who belong to the Sōzhia sub-division of the Vellālas, regularly recite Tamil verses from Thēvāram and Tiruvāchagam in Saivite temples.
3. Pandārams are usually Vellālas by caste
4. In their ceremonial observances, the Bhatrāzus closely follow the standard Telugu type. At marriages, the bridal couple sit on the dais on a plank of juvvi (Ficus Tsiela) wood. They have the Telugu Janappans as their disciples, and are the only non-Brāhman caste, except Jangams and Pandārams, which performs the duties of guru or religious instructor. The badge of the Bhatrāzus at Conjeeveram is a silver stick.
5. Dīkshitar Brāhmans, and Pandāram priests are in higher order[7]

மேலுள்ள குறிப்புகளிலிருந்து பண்டார வகுப்பினர் தமிழகத்தின் நிலவுடைமை சமூகமான வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் சைவ சமயத்தை ஏற்றவர்கள் இருந்துள்ளனர் என்றும், மத அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு இணையான நிலையிலும் இருந்துள்ளனர் என்றும் தெரிகிறது.

இந்த 'சர் சூத்திரர்கள்' பார்ப்பனர்களுக்கு இணையாக ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததாக "கோவில்-நிலம்-சாதி" என்ற நூலில் பொ. வேல் சாமி குறிப்பிடுகிறார்.

உழைக்கும் மக்களிடம் இருந்து மதம், சாதி என்ற பெயரால் நிலம் பிடுங்கப்படவும், அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதுமாக வரலாறு முழுவதும் நிலைத்திருக்கிறது. அந்த வரலாற்றின் நினைவுக் குறியீடே இந்த "பண்டாரவாடை".

-*-

இஸ்லாத்தின் வருகை:

அரபு தேசத்தில் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்னரே அரபுகளுக்கும் தமிழர்களுக்கும் இடையே வணிக தொடர்பு இருந்துள்ளது என P.T ஸ்ரீனிவாச ஐயங்கார் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர் [9]. 707A.D முதல் 1005 A.D வரை என மூன்று நூற்றாண்டுகளை உள்ளடக்கிய 155 அரபு நாணயங்கள் தமிழகத்தில் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[10]

அப்படி வணிக காரணங்களுக்காகத் தமிழகம் வந்த அரபுகள் தஞ்சையின் கடலோர நகரங்களான நாகூர், காயல் பட்டினம் போன்ற பகுதிகளில் தங்கி, அங்கு இருந்த தமிழ் பெண்களை மணந்து இருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் தமிழர்கள் பலரும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர்.

கடலோர நகரங்களைத் தாண்டி தமிழகத்தின் மையப் பகுதியிலும் இஸ்லாம் எட்டாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே வந்தடைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டில் திருச்சியில் பள்ளிவாசல் கட்டுவதற்காகப் பாண்டிய மன்னன் நிலம் வழங்கியுள்ளது; இதற்கு மிகப் பெரும் சான்றாகும் [11].

1659'ல் பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சியின் போதுதான் முதன் முதலில் ராஜகிரி, பண்டாரவாடை மற்றும் அய்யம்பேட்டை பகுதிகளில் இஸ்லாமியக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன என 20 ஆம் நூற்றாண்டு ஆய்வாளர்கள் கருதுவது தவறாகும்[12].

1389'லேயே பண்டாரவடையில் சைவத்தில் இருந்து மதம் மாறிய தமிழ் முஸ்லீம்களால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் சுல்தான்களால் குடியமர்த்தப்பட்ட உருது முஸ்லிம்கள் இன்றும் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டு பண்டாரவாடையில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1659-1784 இடையேயான பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சியில் அதிகமான நிலங்கள் தர்காக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பண்டாரவாடையில் உள்ள காசிம் சாகிப் தர்காவுக்கு நான்கு ஏக்கர் நிலம் அனாதைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 1765 துளாஜ் (thulaj) என்ற மன்னனால் வழங்கப்பட்டுள்ளது[12].

பல சமூகம் வாழும் பண்டாரவாடையில் தேடியவரை சமூக, மத மோதல்கள் இல்லாத அமைதியான பகுதியாகவே வரலாறு முழுவதும் இருந்துள்ளது. இன்றும் அது அப்படியே தொடர்கிறது.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

அடிக்குறிப்புகள்:

1. http://shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/223939/6/06_introduction.pdf

2. AGRARIAN ECONOMY OF THE CARNATIC IN THE 17th AND 18th CENTURIES - SUBMITTED FOR THE DEGREE OF DOCTOR OF PHILOSOPHY IN HISTORY - PARVATHI MEIMON - DEPARTMENT OF HISTORY - ALIGARH MUSLIM UNIVERSITY -1986 : Page Number - 32

3. "In the same region, villages of which the absolute proprietary right was chiefly held by sudra inhabitants were termed pandara vadiky" - AGRARIAN ECONOMY OF THE CARNATIC IN THE 17th AND 18th CENTURIES - PARVATHI MEIMON : Page Number - 224

4. பண்பாட்டு மானிடவியல் - பக்கம் 125.

5. https://bit.ly/2kl0Co5

6. http://telugudictionary.telugupedia.com/telugu_english.php?id=15339

7. Castes and Tribes of Southern India - Edgar Thurston

8. Italian History of resorgimento period- H.Nelson Gay-1896

9. P.T. Srinivasa Iyengar, History of the Tamils (reprint), Chapters VII and X, New Delhi, 1992.)

10. E.Thurston, Coins of the Madras Museum, Catalogue No.2. Also see Robert Caldwell, History of Tinnevelly, (reprint),New Delhi, 1982), pp, 287-288.)

11. Bayly,Susan, Saints, Goddesses and kings , Muslims and Christians in South Indian society, 1700 – 1900, Cambridge University Press. pp. 73-74

12. ROYAL PATRONAGE TO ISLAM IN TANJORE MARATHA KINGDOM [AS GLEANED FROM MODI RECORDS]- S. Chinnaiyan- Proceedings of the Indian History Congress-Vol. 65 (2004), pp. 370-374

Pin It