பிரெஞ்சு ஆளுகையிலிருந்த புதுச்சேரியின் (பாண்டிச்சேரி) சுதந்திர வரலாற்றை இந்த புதினம் சற்றே ஒரு முறை நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறது.

prabanjan novel kanneraal kaappom1850 தொடங்கி 1934 வரையில் புதுச்சேரி மண்ணில்; சுதந்திர தாகம் கொண்டு போராடிய போராளிகளின் வாழ்வின், அவர்கள் வலியின் எழுத்து சித்திரமாக இந்த நூல் உள்ளது. அன்றைய புதுச்சேரியின் சமூகச் சூழல் குறித்தும், சாதிய அடுக்குகள் குறித்தும் தெளிவு படுத்தும் விதமாகக் கதைக் களங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்னுத்தம்பி என்ற தமிழ் வழக்குரைஞர் வழக்கு மன்றத்திற்குக் காலணிகளோடு (Shoes) சென்றதால் பிரஞ்சு நீதிபதியால் தண்டிக்கப் படுகிறான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் உலகுக்குப் பாடம் எடுத்த பிரெஞ்சு மக்கள் அவர்களுக்குக் கீழ் இருந்த தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக நடத்தினார்கள் என்பதை முதல் கதையே நமக்குத் தெளிவு படுத்துகிறது.

கிருத்துவ மதத்திற்கு மாறிய பின்பும் மக்கள் சாதியைப் பற்றிப்பிடித்திருப்பது பற்றியும் பிரபஞ்சன் பேசுகிறார். தாழ்ந்த சாதியில் பிறந்த குழந்தைக்கு ஞானஸ்தனாம் செய்ய முயலும் பாதிரிக்கு உயர் சாதியினரால் வரும் இடைஞ்சல்கள்; அதை மீறிச் செயல்பட அவர் நினைத்தாலும், சபையின் பொருளாதாரச் சூழல் அவரை பின் இழுப்பதையும், ஏசு கோவில் மணியை சின்னக்குருசு என்ற தாழ்ந்த சாதி மகன் அடித்ததற்காக உயர் சாதியினரால் அவன் கொடூரமாகத் தாக்கப்படுவதையும்; இந்த நூலில் பிரபஞ்சன் படம் எடுத்துக் காட்டுகிறார்.

ஆறு வயது குட்டியம்மாள் தீமிதி திருவிழாவிற்கு தன் தந்தையோடு செல்கிறாள். குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு தந்தை தீ மிதிக்கும்போது; சிறு குழந்தை தீயில் விழுந்து சாகிறாள். இதனால் பிரஞ்சு அரசு தீமிதி தடை செய்கிறது.

சண்முக வேலாயுதம் முதலியார் என்ற தலைவர் பிரஞ்சு அரசிடம் பேரம் பேசி தீமிதி மேல் உள்ள அரசின் தடையை நீக்கி விடுகிறார். பின் அதையே காரணமாகக் காட்டி இந்து மக்களின் தலைவராக மாறி; பல ஆண்டுகள் பிரஞ்சு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்.

திலகரின் புதுச்சேரி வருகை பற்றிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. திலகருக்குப் பிரிட்டிஷ் அரசின் மீது இருந்த வெறுப்பையும் அதே நேரம் பிரஞ்சு அரசு மீது அவர் நல்ல எண்ணம் கொண்டிருந்ததையும் பிரபஞ்சன் பதிவுசெய்கிறார்.

புத்தகத்தின் அதிக பக்கங்கள் பாரதியைப் பற்றியதாக இருக்கிறது. புதுச்சேரிக்கு பாரதி வருவதையும் அங்கு அவருக்கு இருக்கும் இடர்களையும் நமக்குக் கதையாகச் சொல்கிறார் பிரபஞ்சன்.

பாரதியின் முண்டாசுக்குக் கீழ் இருந்தது வழுக்கைத் தலை என்ற செய்தியை வேறு எந்த வரலாற்றுப் புத்தகமாவது சொல்லி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பிரபஞ்சன் என்ற கதை சொல்லி அதை அழகு நயத்துடன் சொல்லிக் கடக்கிறார்.

வாஞ்சிநாதன் - ஆஷ் துரையைச் சுட்ட சம்பவம் இந்நூல் காட்சிப் படுத்தப்படுகிறது. அரவிந்தர் பற்றியும் பல செய்திகள் இந்நூலில் உள்ளன. இருவர் பேசிக்கொள்வது போன்ற உரையாடலில் பெரியார், வா.ஊ.சி போன்ற தலைவர்கள் பற்றிய செய்திகள் வந்து போகின்றன. இரண்டாம் உலகப் போரின் பல அறியப்படாத தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாரதிதாசனின் சுதந்திர உணர்வு, வீரம், தமிழ் அறிவு ஆகியவற்றை விளக்கும் சம்பவங்கள் இந்நூலில் பேசப்படுகிறது. காந்தியின் மகாத்மா என்ற பிம்பத்தை உடைக்கும் ஒரு செய்தியும் இந்நூலில் உள்ளது.

மாணவர் இயக்கம், ஆளைத் தொழிலாளர்கள் இயக்கம் எனப் பல இயக்கங்களின் செயல்பாடுகள் சமூக மாற்றத்தை, விடுதலையை எப்படி ஏற்படுத்தியது என முழுமையாக இந்நூல் பேசுகிறது.

வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை; சின்னசின்ன ஒப்புமைகள் மூலம் இனைத்து பிரபஞ்சன் கதை சொல்லும் நடை நிச்சயம் நம்மை ஈர்க்கும்.

பிரபஞ்சனின் எழுத்தின் வழியே வரலாற்றையும் தமிழையும் மட்டுமல்லாது; போன்மூர்- காலை வணக்கம், முசே - மிஸ்டர், மெர்சி - நன்றி என பல பிரஞ்சு வார்த்தைகளையும் கற்றுக்கொள்ள முடிந்தது.

வரலாற்றை இந்த ஆண்டு இந்த சம்பவம் என்று படிக்காமல் உணர்வுப்பூர்வமாக உள்வாங்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல் "கண்ணீரால் காப்போம்".

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It