உரோமா புரியின் ஆண்டை அரசை
மிரளச் செய்த அடிமை ஸ்பார்டகஸ்
மனிதரில் முதலாம் விடுதலை வீரன்
சிலுவையில் அறைந்து மாண்டிட் டாலும்
வல்லுந ராக வாழ்ந்தவர் தானே
அடிமை பண்ணை சமூகங்கள் தம்மைப்
பிடிமண் ணாக ஆக்கிய உழைப்போர்
வாழ்வாங்கு வாழ்ந்த வல்லுநர் அன்றோ
மாற்றம் கண்ட சமூகம் தன்னில்
ஏற்றம் பெற்ற முதலிடு மனிதர்
சீற்றம் கொண்ட அரவம் போலப்
போற்றி வளர்க்கிறார் சுரண்டல் நஞ்சை
விடுதலைப் போரில் திடமாய் நின்று
வடுவேற்றாலும் வல்லுநர் ஆவர்
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்று விளிந் தோரே
(உரோமாபுரியின் ஆண்டைகள் அரசை (தன் திறன் மிகு போராட்டத்தினால்) மிரளச் செய்த ஸ்பார்டகஸ் மனித இனத்தில் முதன் முதலாகத் தோன்றிய விடுதலை வீரர் ஆவார். அவர் சிலுவையில் அறையப்பட்டு மாண்டு விட்டார் என்றாலும் வல்லவராக வாழந்தவரே ஆவார். அடிமைச் சமூகத்தையும் பண்ணைச் சமூகத்தையும் (அழித்துப்) பிடி மண்ணாக்கிய உழைக்கும் வர்க்கத்தினர் சிறப்புடன் வாழ்ந்த வல்லவர்களே. (அதன் பின்) ஏற்பட்ட சமூகத்தில் உயர்நிலைகளில் அமர்ந்து கொண்ட முதலாளிகள் சீற்றம் கொண்ட பாம்பைப் போல, சுரண்டல் நஞ்சைப் போற்றி வளர்க்கின்றனர். (இந்த சுரண்டலுக்கு எதிரான) விடுதலைப் போரில் காயம் அடைபவர்களும் வல்லவர்களே ஆவர்; வீர ஒழுக்கம் வல்லவரே வாழ்ந்தோர் என்பர் அறிவுடையோர். பழமையான புகழும் அதுவே! பரந்த இவ்வுலகிற் பிறந்தும் அவ்வாறே வீரமுடன் ஒழுகாது இருப்பவர் பலர். அவர் எல்லாம் வாழ்ந்தவர் அன்று; தாழ்ந்தவரே யாவர்.)
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post