warமந்தைகளைப் போல
மனிதர்களை நடத்தும்
மதம்
சிந்திக்கிறவர்களை
ஊர்விலக்கம் செய்கிறது

சில சமயம்
தேச எல்லைகளைக் கடந்தும்
அவர்களைத் துரத்துகிறது..!

குழந்தைகளைக்
கொன்றுத் தீர்ப்பதற்கும்
அஞ்சாத மதம்
சித்திரம் வரைபவர்களின்
முகத்தையும்
சிதைத்துப் பார்க்கிறது..!

மதம்
அரசியலாக்கப் படும்போதெல்லாம்
அகோரிகளைப் போலவே
பிணங்களைத் தின்றே
பிழைத்து வருகிறது..!

இறந்த பின்பு
சொர்க்கத்தை மீட்டுத் தருவதாக
சொன்ன மதங்கள்
இருக்கின்ற வாழ்வை
நரகமாக்கி விட்டன..!

புத்தனின் பெயரால்
போர்கள் நடக்கின்றன..!
அல்லாஹ்வின் பெயரால்
எல்லா நாடுகளும் வெடிக்கின்றன..!

ஏசுவை வணங்கும்
ஏகாதிபத்திய நாடுகள்
இல்லாதவர்கள் மீது
கண்ணுக்குத் தெரியாத
பொருளாதார யுத்தத்தை
கணங்கள் தோறும் நிகழ்த்துகின்றன

கடவுளைக் காப்பாற்ற
இத்தனை நிறுவனங்களும்
மதங்களும் எழுந்து
நிற்கும் போதே புரிகிறது..!
நம்மைக் காப்பாற்ற
எந்த கடவுளும்
வரப் போவதில்லை..!

Pin It