யாருமற்ற அறையின் அடுத்திருக்கும் உள்வாசல்
காற்றின் மண்துகள்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது..

மத்தியில் கோடுகளாய் நீண்ட இரும்புக்கம்பிகள்
வாசல் முழுதும் துணை கரங்களை நீட்டி
ஒன்றோடொன்று உரசாமல் பேசிக் கொண்டிருக்கின்றன..

ஒரு மூலையில் பச்சை நிற நெகிழி நீர்க்குழாய்
தனிமை காற்றை உள்வாங்கியபடி
மெலிதான இரைச்சலோடு சொட்டும்
மழையை விரிவாய் சொல்வதற்கில்லை..

இடை கனத்திருந்த சாம்பல் நிற அணில்
கம்பிகளின் நீளத்தில் ஒரு எல்லைக்கும் மற்றதுக்குமாய்
தாவித் திரிந்து
ஊர்ந்தும் ஓடியும் விளையாடுகிறது....

மின்னல் மறையும் நொடிப்பொழுதில் "சத்" என்ற ஓசையுடன்
இடைகனம் தரையைக் கண்டதை உணர்ந்து
சாம்பல் நிறம் க்ரீச் ஒலியை எதிரொலிக்கிறது
எங்கெங்கிலும்..

நெகிழி நீர்க்குழாய் சொட்டும் மழையில்
இடை கனத்தின் க்ரீச் க்ரீச் ஒலி
சிறிது சிறிதாய் தேய்வதை உள்வாங்கிப்
பெருத்துக் கொண்டிருக்கிறது வாசல்..

தன்னலம் கலந்த வெயில் மழை
ஓட்டின் வழி மண்துகளோடு துளி துளியாய்
இன்னமும் வழிந்து கொண்டுதான் இருக்கிறது...

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Pin It