அன்றொரு ஒத்தையடிப் பாதை இருந்தது
அதில்
கீறலாகி விட்ட சுவடுகளை
கவனமற்று
கடந்து விடுகின்றன
இன்றைய பாதங்கள்..

நிறைவேறாத வேட்கையும்
துயரம் அமிழ
அலைந்துருகிய தனிமையும்

மெல்லிய புல்லிதழ்களாக
பசுமைப் பூசிய நாட்களை இழந்து
பழுத்து விட்டன..

சிறு பூக்களைக் கொய்ய
காரணங்கள் இல்லாத
பகல் பொழுதுகளை

மௌனமொன்று
நிதானமாக அசைப்போடுகிறது
மனதை மேய்ந்த அவகாசத்தோடு...

******
- இளங்கோ

 

Pin It