பண்டிகைகள் -
ந்டுத்தர வர்க்கத்தின்
குரல்வளையை நெரிக்கும்
கெளரவ தற்கொலைகள்..!

அறியாத வயதில்
அனுபவித்த மகிழ்ச்சியை
தொலைத்து விட்ட..
அறிவின் துக்கங்கள்..!

கூடிக் களித்த
கொண்டாட்டங்களை
கொட்டி கவிழ்த்த
விலைவாசி உயர்வின்
குலை நடுங்கும்
விஷப் பரிட்சைகள்..!

கும்பிடும்போது ஒலிக்கும்
கோயில் மணிகள் அல்ல..!
மரணம் வரை தொடரும்
சம்பிரதாயத்தின்
சாவு மணிகள்..!

மானத்தை மறைக்க
வழியற்றவனின்
கிழிசல் ஆடைகள் அல்ல..!
துயர நெசவுகளால்
நெய்யப்பட்ட
புகழின் பொன்னாடைகள்..!

சாமானியனின் வியர்வை
விதைத்ததை
அறுவடை செய்யும்
சாஸ்திர அரிவாள்கள்..!

உழைக்காமல் வெல்பவனுக்கு
மட்டும் உண்டு..!
ஏமாற்றப் பட்டவனுக்கு..
இல்லை கடவுள்..!

- அமீர் அப்பாஸ்

Pin It