மோடி அரசு பதவி ஏற்றது முதல் உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை இந்தியாவில் தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. மோடி உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து இந்தியாவை கூறு போட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, வங்கித்துறை மற்றும் காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத்துறை முதலியவற்றில் 100 சதவீதம் அந்நிய நாட்டு மூலதனங்களை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு இந்தியாவின் தொழில்களையும், பொருளாதாரத்தையும் அழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளித்தல், பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தல், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துதல், மேலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் முதலிய நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது மோடி அரசு.

modi ambani tataமோடி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது, தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கைகள் அமையும் என சாதாரண குண்டூசி தயாரிப்பாளர் கூட எதிர்பார்த்தனர். ஆனால், மோடி தமது முதல் சுதந்திர தின விழா உரையில் “மேக் இன் இந்தியா” திட்டத்தை அறிவித்தார். அந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்களை அழித்துவிடும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவில் 3.5 கோடிக்கு மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சிறு தொழில் நிறுவனங்களில் 7500-க்கும் மேற்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் 8 கோடி பேர் பணி புரிகின்றனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம், இந்தியாவின் ஏற்றுமதியில் 43 சதவீதம் சிறு தொழில் துறையைச் சார்ந்தது. சிறு தொழில் உற்பத்திக்கு இந்தியா கேந்திரமாக விளங்குகிறது.

சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மோடி அரசு 15.03.2015 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து 20 சிறு தொழில்களை நீக்கியுள்ளது. மேலும் அத்தொழில்களின் முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. அதாவது, குறுந்தொழிற்சாலைகளின் முதலீட்டை ரூ. 50 லட்சமாகவும், சிறு தொழிற்சாலைகளுக்கு ரூ. 10 கோடியாகவும், நடுத்தர தொழிற்சாலைகளுக்கு ரூ. 20 கோடியாகவும் உயர்த்தியுள்ளது.

மோடி அரசு சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து பட்டாசு, தீக்குச்சி, நோட்டுப் புத்தகங்கள், பதிவேடுகள், பூட்டு தயாரிப்பு, எவர்சில்வர், பாத்திரங்கள் தயாரிப்பு, ஸ்டீல் பர்னிச்சர் தயாரிப்பு, ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, சலவை சோப்பு, ரொட்டி தயாரிப்பு, கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், மரப்பொருள்கள், கண்ணாடி வளையல், அலுமினியப் பொருட்கள் தயாரிப்பு முதலியவற்றினை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை தொழில் துறையில் சீர்திருத்தம் என்று கூறுகிறது மோடி அரசு. ஆனால், இந்த அறிவிப்பு சிறுதொழில்களின் அழிவுக்கு வழிவகுக்கும். சிறு தொழில்களில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும், ஏகபோக நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளை செய்வதற்கும், அதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டவும் தான் வழிவகுக்கும்.

மோடி அரசு சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்களின் முதலீட்டு உச்ச வரம்பை உயர்த்தியுள்ளதால், தொழில் முனைவோர்களையும், அத்தொழில்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் நடுத்தெருவுக்கு தள்ளியுள்ளது.

மோடி அரசின் முடிவால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான். பார்வையில்லாத, கை, கால் ஊனமடைந்த மாற்றுத் திறனாளிகள் பலர் ஊறுகாய், ஊதுபத்தி, நோட்டுப்புத்தகங்கள் முதலிய தயாரிப்புகளை குடிசைத் தொழல்கள் மூலம் தயார் செய்து, வீடுகள், சாலை ஓரங்கள், நடைபாதைகள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் முதலிய இடங்களில் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மோடி அரசின் அறிவிப்பால் அவர்களது வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும். பிழைக்க வழியில்லாமல் போகும் சூழல் ஏற்படும்.

தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி முதலிய பகுதிகளில் தீக்குச்சி, பட்டாசு, நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கும் சிறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. திருப்பூர், கும்பகோணம், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, ராஜபாளையம், ஆத்தூர் முதலிய ஊர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டறைகளில் எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் பணி சிறு தொழில்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
சிறு தொழில் நிறுவனங்களில் எவர்சில்வர் தகடுகளைக் கொண்டு அண்டா பானை, சாப்பாடு தட்டுகள், டம்ளர்கள், சமையல் பாத்திரங்கள் எனப் பல்வேறு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்கண்ட சிறு தொழில்களில் நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

எவர்சில்வர் தொழில் சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், இத்தொழிலில் ஏகபோக, கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து. நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தையைக் கைப்பற்றி கொள்ளை லாபம் ஈட்டும். பாரம்பரியமாக மனித உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் எவர்சில்வர் தொழில் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும். அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலையில்லாப் பட்டாளத்தில் சேர்க்கப்படுவர். அவர்களது வாழ்க்கை பறிபோகும்.

பன்னாட்டு நிறுவனங்கள் நவீன இயந்திரங்கள் மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும். இதனால் பல ஆண்டுகளாக சிறு தொழில் செய்து பிழைத்து வருபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் துயரமான நிலை ஏற்படும்.

மோடி அரசு வளர்ச்சிப்பாதை என்ற போர்வையில் சிறு, குறு தொழிற்சாலைகளை நசுக்கி அழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமலும், மின் வெட்டாலும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.

பெரும் தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களைத் தேடிச் சென்று கடன் கொடுக்க வங்கி நிர்வாகங்கள் தயாராக வரிசையில் காத்திருக்கின்றன. அவர்களுக்கு வழங்கிய கடன் தொகையை வசூலிப்பதும் இல்லை. வட்டியும், கடன் தொகையும் தள்ளுப்படி செய்யப்படுகிறது. ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் போதிய நிதி இல்லாமல் திண்டாடும் அவல நிலை நீடிக்கிறது.

மோடி அரசின் அறிவிப்பினால் கிராமப்புற இளைஞர்கள் சுயமாக சிறு தொழில் தொடங்கிட முன்வராத நிலை ஏற்படும். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை – எளிய – நடுத்தர மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச மாற்றத்தைக் கூட உருவாக்கவில்லை. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் மக்கள் மத்தியில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்குகின்றன. நகர்புற, கிராமப்புற ஏழைகளின், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் வளர்ச்சி, மாற்றம் என்றெல்லாம் முழங்கினார் மோடி. ஆனால், அவரது ஆட்சி செல்லும் திசை வழி பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வளர்ச்சியாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஏமாற்றமாகவுமே உள்ளது.

மோடி அரசு மேற்கண்ட 20 பொருள் உற்பத்தியை மீண்டும் சிறு தொழில்களில் சேர்த்திட வலியுறுத்திட வேண்டும். சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வங்கிக்கடன் வழங்கிட வேண்டும்.

- பி.தயாளன்

Pin It