"எந்தவொரு தனிநபருக்கும் ஸ்டாம்ப் கூடாது. குறிப்பாக ஈ.வெ.ரா.வின் ஸ்டாம்ப் இருப்பது நாட்டுக்கே அவமானம்! அதை உடனே தடை செய்ய வேண்டும் இல்லையேல் நாங்கள் பிரதமருக்கு வலியுறுத்திக் கோரிக்கை வைப்போம்!” என்று கூறும் அர்ஜூன் சம்பத், “இவர் பிரிட்டிஷாரின் எடுபிடி. இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டாம் என்றவர். அவர் ஒரு தேசத்துரோகி, அவர் தமிழரே கிடையாது. அவருக்கு எதற்கு ஸ்டாம்ப்?" என்று அதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

அரைவேக்காடுகள் என்று நான் தொடக்கத்திலே சொன்னதற்குக் காரணம் இதுதான். ஆங்கில ஆட்சி உடனே அகலக்கூடாது; அகன்றால் அது ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதால் அவர்கள் ஆட்சி நீடிக்கட்டும் என்ற கருத்தை விவேகாநந்தரே கூறியுள்ளார் என்பது இந்த நொய்யரிசிகளுக்குத் தெரியுமா?

இதோ விவேகாநந்தர் கூறியதைப் பாருங்கள்:

ஆரியர்களின் ஆதிக்கக் கொடுமையால் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் தான் கல்வியும் உரிமையும் பெற்றனர். அந்த ஆட்சியிருக்கும்போதே ஆரிய பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

"ஆரியர்களே நீங்கள் இறந்தகாலப் பிரதிநிதிகள். நீங்கள்தான் சூனியம், நீங்கள் இன்னும் ஏன் வாழ்கிறிர்கள்? நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்துவிடக்கூடாது.

நீங்கள் இந்த பாரதத்தை நிர்மாணிக்கும் உரிமையை உரியவர்களிடம் ஒப்படையுங்கள். அதற்கு இதுதான் சரியான காலம். பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ், கல்வியும் ஞான ஒளியும் சுதந்திரமாகக் கிடைக்கும். இந்த நேரந்தான் ஒப்படைக்கச் சரியான நேரம். நவபாரதம் ஏழை எளிய மக்களிடமிருந்து உருவாகட்டும்" என்றார்.

ஆக, ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியும், உரிமையும், விழிப்பும், உயர்வும் பெற உரிய காலம் ஆங்கில ஆட்சிக் காலமே என்கிறார் விவேகாநந்தர்.

இதைத் தான் பெரியாரும் சொன்னார். ஆரிய பார்ப்பனர்களால் இந்த நாடு மூடநம்பிக்கையிலும், அறியாமையிலும் அமுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு சாதிக்கொடுமை உருவாக்கப்பட்டு இழிமக்களாய் மாற்றப்பட்டனர். இந்நிலை பல நூற்றாண்டுகளாய் நீடித்தது. ஆனால், தற்போது ஆங்கில ஆட்சியால் சாதிக்கொடுமை விலக்கப்பட்டு எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, பார்ப்பன ஆதிக்கம் அழியும் மட்டும் ஆங்கில ஆட்சியே நீடிக்கட்டும். விடுதலை கிடைத்தால் அது ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கே பயன்படும் என்றார்.

மக்கள் நலன்கருதி சொல்லப்பட்ட கருத்தேயன்றி, பெரியார் சுயநலத்திற்காகச் சொல்லவில்லையே! ஆங்கில கவர்னர் பெரியாரை மாகாண முதல்வராய் பொறுப்பேற்க அழைத்தபோது அதை மறுத்த சுயநலமற்ற பொதுநலத் தொண்டரை பொறுக்கிகளெல்லாம் விமர்சிப்பது கேவலத்திலும் கேவலம்.

நாடு சுதந்திரம் அடைந்தது. அதற்கு காந்தி நாடு என்று பெயர் வைக்கச் சொன்னது பெரியார். காந்தி சுடப்பட்டபோது சுட்டவன் இஸ்லாமியர் அல்ல; இந்து என்ற உண்மையைக் கூறி நாட்டில் கலவரம் நிகழாமல் தடுத்தவர் பெரியார்.

இக்கட்டான காலகட்டத்தில் இந்த நாட்டின் ஒற்றுமைக்காக பிரிவினைக் கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டவர் பெரியார். சீனப் போரின் போது நமது உடல், பொருள் உயிர் எல்லாவற்றையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார்.

உண்மை இப்படியிருக்க ஒன்றும் அறியாதவர்கள் எல்லாம் பெரியாரைக் கொச்சைப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை!

பெரியாருக்குத் தபால் தலை வெளியிட்டது காங்கிரஸ் அரசு அல்ல; ஜனதா அரசு! இந்த உண்மைக்கூடத் தெரியாத அரைவேக்காடுகள் எல்லாம் இன்று தலைவர்கள்! எப்படிப்பட்ட கேவலம் பாருங்கள்.

தந்தை பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி அன்றைய ஜனதா அரசு பெரியார் தபால்தலை வெளியிட்டது. அந்த அரசில் வாஜ்பாயி, அத்வானியெல்லாம் அமைச்சர்கள். அதன் பொருள் என்ன இன்றைய பி.ஜே.பி. ஆட்சி வெளியிட்டது போன்றதுதானே அது!

தபால் தலையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை எஸ்.மோகன் அவர்கள் தலைமையில், உயர் நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஏ.வரதராசன் 17.09.1978இல் பெரியார் திடலில் வெளியிட்டார்.

பெரியாரின் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி அப்போது வாஜ்பேயி தலைமையில் அமைந்த மத்திய அரசு தந்தை பெரியார் அவர்களைப் பெருமைப்படுத்த அஞ்சல் சிறப்பு உறையை வெளியிட்டது அதைச் சென்னையில் எஸ். திருநாவுக்கரசர் மத்திய இணையமைச்சர் என்ற முறையில் வெளியிட்டார்.

ஆக, பெரியாருக்கு இப்பெருமைகளைச் செய்தது பி.ஜே.பி. அரசு. குறிப்பாக வாஜ்பேயி என்ற நிலையில் காங்கிரஸ் செய்ததாகக் கற்பனை செய்து கொண்டு களங்கம் பேசுவதும், தடைசெய்யச் சொல்வதும் கடைந்தெடுத்த கயமைச் செயலாகும்!

தமிழராய்ப் பிறந்த விபீஷணனாய் பிழைப்பு நடத்தும் இந்தப் பேர்வழிகள், வரலாறு தெரியாமல் தலைவர்களின் பெருமை தெரியாமல் பிதற்றுவதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்! பெரியாரிடம் பிழை செய்தவன் எவனையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்! எச்சரிக்கை!

- மஞ்சை வசந்தன்

Pin It