அய்யா (பெரியார்) வெளியிட்ட குடிஅரசு இதழ் பச்சை அட்டையைத் தாங்கி வந்தது. இப்படி பச்சை அட்டையை அய்யா தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்று பலவாறு யோசித்து யோசித்துக் கடைசியாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தேன்.

ரஷ்யாவில் லெனின் நடத்திய பத்திரிகையின் நிறம் பச்சை! லெனின் வெளியிட்ட முதல் அறிக்கையின் நிறம் பச்சை! காந்தியார் வெளியிட்ட முதல் அறிக்கை பச்சைத் தாளில், இதையெல்லாம் கண்டுபிடித்து. அய்யாவும் இவைகளைப் பின்பற்றிதானே பச்சை அட்டையைப் பயன்படுத்தியிருப்பார் என்ற முடிவோடு இருந்தேன். ஒரு நாள் சமயங்கிடைத்தது. அய்யாவிடம் நேரில் இதையெல்லாம் எடுத்துக் கூறி நீங்களும் அவற்றைப் பின்பற்றிதானே பச்சை அட்டையைப் பயன்படுத்தினீர்கள் என்று கேட்டேன்.

நாசமா போச்சு என்று சொல்லிவிட்டு சிரித்து விட்டு சொன்னார்.

சென்னையில் பெருமாள் செட்டிதான் நமக்கு பேப்பர் வாங்கித் தருபவர். நான் சென்னை சென்றபோது பி.ஆர். அண்ட் சன்னுக்கு சென்றேன். அவர்கள் எல்லா வித பொருள்களையும் விற்பார்கள். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு ஓரமாக பெரிய பெரிய பேப்பர் கட்டுகள் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தேன். ஏன் விலை போகாமல் இருக்கிறது என்று கேட்டபோது ஏதோ ஒரு சாமானுக்கு லேபிள் ஒட்ட பயன்படுத்தியபோது இந்த ஓட்டை விழுந்து விட்டது. அதனால் யாரும் அதை வாங்காமலிருக்கிறார்கள் என்றார்.

நான் அளவெடுத்துப் பார்த்தபோது ஓட்டையை நீக்கினால் நமது பத்திரிகையின் மேல் பகுதியாக போடலாமெனக் கருதி அத்தனை பேப்பரையும் குறைந்த விலைக்கு வாங்கி வந்து நமது குடிஅரசு பத்திரிகைக்குப் பயன்படுத்தினேனே தவிர இதற்கென்று ஒரு தனி சரித்திரமில்லை என்றார்.

------------------------

28.11.2009 அன்று பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஜி. ராமானுசம் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.... பேட்டி கண்டவர்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன். -- "விடுதலை" ஞாயிறுமலர் 9-1-2010 பக்கம் 3

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Pin It