வரும் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 மாவட்டங்களில்  சிலிண்டருக்கான நேரடி மானியம் ஆதார் அட்டை மூலம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இனி 410 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை 845 ரூபாயாக விலை உயர்த்தப்படும். சிலிண்டருக்கான மானிய தொகை 435ஐ அரசாங்கம் இனி ஆதார் அட்டையின் மூலம் மக்களின் வங்கிக்கணக்கில்  செலுத்திவிடும். கேட்பதற்கு இது என்னமோ இனிப்பாக தான் இருக்கிறது. ஆனால் இதன் பின் உள்ள அரசியலை உற்று நோக்கினால் தான் இதன் ஆபத்து புரியும்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆதார் அட்டையை அறிமுகப்படுத்திய பொழுது  ஆதார் அட்டையை அனைவரும் பெறவேண்டிய  கட்டாயமில்லை அவரவர் சுயவிருப்பத்தின் பெயரில் இதை பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது பொருட்களுக்கான மானியங்களை ஆதார் அட்டையின் மூலம் அளிப்பதன் மூலம் ஆதார் அட்டையை அனைவரும் பெறவேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது.

மேலும் இப்பொழுது சிலிண்டருக்கு மானியத்தை வங்கிக்கணக்கில் அளிக்கப் போவதாக சொல்லும் இவர்கள் நாளை ரேசன் கடைகளை மூடிவிட்டு ரேசன் பொருட்களுக்கான மானியத்தையும் ஆதார் அட்டையின் மூலம் அளிக்கப் போவதாக சொல்வார்கள்.

நன்றாக யோசித்து பாருங்கள் சொந்தங்களே. ரேசனில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசிக்கு அரசாங்கம் உங்கள் வங்கியில் 5 ரூபாய்  போட்டுவிட்டு உங்களை வெளி சந்தையில் அரிசி வாங்கிக்கொள்ள சொல்லும். வெளியில் உங்களால் 6 ரூபாய்க்கு அரிசி வாங்கிவிட முடியமா என்ன?

நாளை மறுநாள் பெட்ரோலின் விலையை ஏற்றிவிட்டு இதையே சொல்வார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது சமையல் எரிவாயுவின் விலையும், பெட்ரோலின் விலையும், அரிசியின் விலையும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கேற்றபடி அரசாங்கம் அவர்களின் மானியத்தை ஏற்றித் தருவார்களா  என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

மேலும் நேரடி மானியம் என்ற பெயரில் நாளை அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிக்கூடங்களும், அரசு போக்குவரத்து நிறுவனங்களும் கூட இழுத்து மூடப்படும் அபாயம் நடக்கத்தான் போகிறது.

ஆதார் அட்டையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் பெரு முதலாளிகளுக்கும்  இது பயனுள்ளதாக இருக்குமே தவிர இதனால் பொதுமக்கள் நிச்சயமாக பயனடையப் போவதில்லை. ஏனென்றால் வங்கிகளில் செலுத்தப்படும் தொகையை நாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு அவசர தேவைக்காக பயன்படுத்தி விடுவோம். எனவே பொருட்களை வாங்கும் பொழுது அது அதிகப்படியான விலையாக இருந்தாலும் அரசு தான் நமக்கு மானியம் தந்துவிட்டதே என்று வாங்கப் பழகி விடுவோம். இன்று நேரடி மானியம் மூலம்  விலையேற்றத்தை சிறுக சிறுக உங்களிடம் பழக்கிவிட்டால் நாளை மானியம் குறைக்கப்பட்டாலோ அல்லது நிருத்தப்பட்டாலோ உங்களுக்கு அது பெரிய பிரச்சனையாக தெரியாது. உதாரணத்திற்கு எப்படி மின் தடையை பழகிக் கொண்டோமோ அதே போல் தான்.

ஆதார் அட்டையை பயன்படுத்துவதால் இது மட்டும் தான் பாதகமா என்றால் அது தான் இல்லை. நாளை அனைத்து துறையிலும் நேரடி மானியம் என்று அறிமுகப்படுத்தப்பட்டால், ஆதார் அட்டை மூலம் நீங்கள் எங்கே செல்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், உங்கள் தனிநபர் வருமானம் என்ன, வங்கி இருப்பு என்ன  என்பது வரை உங்கள் தனிமனித விவரங்களை கண்காணிக்க முடியும். இது நல்ல விஷயங்கள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆதார் அட்டைக்கான விவரங்களை திரட்டுவது அரசாங்க அதிகாரிகள் அல்ல UIDAI தனியார் நிறுவனமே. ஒரு தனியார் நிறுவனத்திடம் எப்படி உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்  என்பதன் மூலம் இதிலிருக்கும் ஆபத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

ஆதார் எனும் பெயரில் நம் தனிமனித உரிமைகளை நசுக்க வரும் அரக்கனை எதிர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

- கார்த்திக், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It