சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்” என்று பேசி இருக்கிறார்.

rn ravi 252நாம் அவர் ஆளுநராகப் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அவரோ ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக மட்டுமே பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சனாதன தர்மம், ஆன்மீக வளர்ச்சி என்று அவர் குறிப்பதெல்லாம் வன்முறையைத்தான் என்பதையும் அவரே அதே பேச்சின் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்.

‘’சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது” என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர்.

 சனாதன தர்மத்தின் வலிமையால்தான் கந்தகார், பெஷாவர் நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டன என்றால், எதன் வலிமையால் அன்று சோமநாதர் கோவில் சொத்துகள் அழிக்கப்பட்டன? சனாதன தர்மம் அன்று என்ன செய்துகொண்டிருந்தது. சனாதன தர்மம் அன்று வலிமையற்று இருந்ததா? அல்லது சனாதன தர்மம் கோமாவில் இருந்ததா?

வன்முறைகளை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இங்கு சிறுபான்மையினராய் இருக்கும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து மனித உரிமைகளுக்கு எதிரான சனாதன தர்மத்தை முன்னெடுக்கிறார்கள்.

சாதிக்கொரு நீதி சொல்வதும் பார்ப்பனர் நலனுக்காகவும் உண்டாக்கப்பட்டிருக்கும் சனாதன தர்மத்தை அழித்தொழிக்கவே பெரியாரும் அம்பேத்கரும் இன்னும் பலரும் பாடுபட்டிருக்கின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இன்று முன்னெடுக்கும் விவேகானந்தர், இந்த சனாதன தர்மத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

“Whatever the rascally and wily priests teach them (that is , people) all sorts of mummery and tomfoolery as the very gist of the vedas and Hinduism - (mind you, neither these rascals of priests nor their forefathers have so much as seen a volume of the vedas for the last 400 generations) - they follow and degrade themselves. Lord help them from the rakshasas in the shape of the Brahmins of the kaliyuga” (Vivekananda: The Complete Works, Volume 8, Page 290, Calcutta, 1971)

“துர்த்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் எல்லா வகையான மூட நம்பிக்கைகளையும் வேதம் மற்றும் இந்து மதத்தின் சாரம் என்று மக்களுக்குக் கற்பிக்கிறார்கள். இந்தப் போக்கிரித்தனம் மிக்க புரோகிதர்களும் அவர்களுடைய முன்னோர்களும் கடந்த நாநூறு தலைமுறைகளாக வேதத்தின் ஒரு பகுதியைக் கூட பார்த்ததில்லை. மூடத்தனமிக்க ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து அவர்கள் தம்மைத்தாமே இழி நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். கலியுகத்தில் பார்ப்பனர்கள் வடிவில் இருக்கும் ராட்சசர்களிடம் இருந்து மக்களையும் இந்நாட்டையும் அந்த தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும்.”

இந்த வரிகளைச் சொல்லியிருப்பது ஆங்கிலேயர்களோ, இஸ்லாமியர்களோ, அல்லது தந்தை பெரியாரோ, அண்ணல் அம்பேத்கரோ அல்ல. இந்து மதத்தின் அடையாளமாக, இளைய பாரதம் - இளைஞர்களுக்கான முன்மாதிரி என்று சங்பரிவாரம் பரப்புரை செய்யும் விவேகானந்தர் சொன்ன வரிகள். இன்னும் அழுத்தமாக சனாதன தர்மம பற்றியும், ரிஷிகள் முனிவர்கள் பற்றியும் விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.

“The Smritis and the Puranas are productions of men of limited intelligence and are full of fallacies, errors, and the feelings of class and malice.” - Vivekananda: The Complete Works, Volume 6, Page 393

அதாவது ஸ்மிருதிகளும் புராணங்களும் குறுகிய சிந்தனைகள் கொண்ட மனிதரகளால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் முழுதும் தவறானவைகளும், சாதிப்பெருமைகளும், காழ்ப்புணர்ச்சிகளுமே இடம்பெற்றிருக்கின்றன என்று விவேகானந்தர் கூறுகிறார். “ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது” என்று ஆளுநர் சொன்னவர்களைப் பற்றிதான் விவேகானந்தர் மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

இன்னும் ஒரு படி மேலே போய் மிகவும் வெளிப்படையாக, “உலகில் உள்ள எந்த ஒரு மதமும் இந்து மதத்தைப் போன்று ஏழைகள் மற்றும் கீழ் மட்டத்தவர்களின் கழுத்தைப் போட்டு மிதிப்பதில்லை.” (“No religion on earth treads upon the necks of the poor and the low in such a fashion as the Hinduism.” - Vivekananda: The Complete Works, Volume 1, Page 502) என்று சொல்லியிருக்கிறார்.

மக்கள் கழுத்தைப் போட்டு மிதிக்கும் சனாதனத்தை வேரோடு அழிக்க பார்ப்பனரல்லாதோர் ஒன்றிணைய வேண்டும்.

- மா.உதயகுமார்

Pin It