அம்பேத்கர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு 3 இலட்சம் மக்களுடன் புத்த மார்க்கம் தழுவியதை வரவேற்று அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய கட்டுரை.

இந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது.

ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம் பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், “உலகில் வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

anna 250மூன்று இலட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியையும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர், “நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம் என்றும், மைதானம் முழுதும் ஒரே ஜனசமுத்திரமாகக் காணப்பட்டது” என்றும் வரைந்துள்ளார்.

இந்து மதத்தைவிட்டு வெளியேறும் திருப்பணி இன்று நேற்று ஏற்பட்டதன்று, இவ்வெளியேற்றம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இருந்தாலும், மூன்று இலட்சம் மக்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கூடி, இந்து மதத்திலிருந்து நீங்கிப் புத்த மதம் புகுந்திருப்பது, இந்து மதப் பாதுகாப்பாளர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் சம்பவமாகும். இதற்குமுன் மதம் மாறி இருப்பவர்கள், பொன்னாசைக்கும் பொருளாசைக்கும் பலியாகியும், அந்தஸ்துக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகியும், மதம் மாறி இருப்பவர்களாகும் எனக் கூறுவது மிகைப்படக் கூறியதாகாது.

ஆனால், மூன்று இலட்சம் மக்களுடன் இன்று புத்த நெறியில் புகுந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் மதம் மாற்றச் செய்தி, அப்பட்டியலில் சேர்த்து எண்ணத்தக்கதன்று.

டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்றிருப்பவர்; அவர் கற்காத இந்துமதத் தொடர்புடைய வடமொழி வேதாகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம்.

இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர்.

அத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மூன்று இலட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கிவிட்ட சம்பவம்போல் கருதக்கூடியது அல்ல.

புத்தநெறி தழுவிய டாக்டர் அம்பேத்கர்,

“பிரம்மா, விஷ்ணு, மகேஷ், கபாலி, கணபதி மற்றும் இந்துமத தெய்வங்களைக் கடவுள்களாகக் கருத மாட்டேன். கடவுள் அவதாரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எந்த விதச் சடங்கிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. புத்தரை விஷ்ணு அவதாரமாக நம்பவில்லை, சடங்குகள் செய்விக்கப் பார்ப்பனர்களை அழைக்க மாட்டேன். தீண்டாமையை அனுஷ்டிக்க மாட்டேன். எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன். எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன். பஞ்சசீலக் கொள்கையை அனுஷ்டிப்பேன்.”

என உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த உறுதிமொழியே இந்து மதத்தின் உட்பொருளையும், புத்த நெறியின் கோட்பாடுகளையும் தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

இம்மதமாற்றச் சேதி, இந்துமதக் காப்பாளர்களிடம் என்றும்போல் சிந்தனையைத் தூண்டத் தவறிவிட்டது. வழக்கமாக அவர்களுக்கு ஏற்படுகிற எரிச்சல், இச்சேதி கேட்டு ஏற்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் ஆளவந்தார்களும், இம்மதமாற்றத்தை வழக்கம்போல் நையாண்டி செய்வதிலும், இம்மத மாற்றத்தின் நடுநாயகமாக இருக்கும் டாக்டரைத் தூற்றுவதிலும் மனச்சாந்தி தேடிக் கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

இப்பெரும் வரலாற்றுச் சம்பவத்தை, மிகமிகச் சாதாரண சம்பவம்போல் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் பாணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை, சிறிய சம்பவமெனக் காட்ட அவர்கள் எவ்வளவுதான் முயன்றபோதிலும், அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். அவர்கள் இயல்பு அது; அதை மாற்ற எவரால் முடியும்? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ள ஒப்புமா?

இவர்கள் வாயுரையைக் கேட்டா உலக மக்கள், இம்மதமாற்றத்திற்குத் தரப்பட வேண்டிய மதிப்பின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒருக்காலுமில்லை.

டாக்டர் அம்பேத்கரின் மத மாற்றச் சம்பவம், உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறிவிடாது.

மூன்று இலட்சம் மக்களை உடனழைத்துக் கொண்டு டாக்டர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறத் துணிந்தார் என்ற கேள்வியை, பல்வேறு நாடுகளிலுமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்-கொள்ளத்தான் போகின்றனர்.

சட்டப்படி தீண்டாமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது.

இந்தியத் துணைக் கண்டத்தில் மதமாற்றத்திற்காக வெளிநாட்டினர் ஒன்பது கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர் என நியோகியின் நியாயத்தை எடுத்துக்காட்டி காஞ்சி காமகோடி பீடத்தார் ‘இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டினர் இவ்வளவு பெருந்தொகையைச் செலவிட்டுள்ளனரே!’ எனப் பேசும் பேச்சு, மேற்குறிப்பிட்ட வினாவிற்குத் தக்க விடையாக அமைய முடியாது.

உலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் மூன்று இலட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமையின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான், உலக மக்கள் முடிவு கட்டுவர். அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்ட சமரசப் பூச்சும், தேசிய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவைகளாகும்.

இந்து மதத்தைவிட்டு மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாக இப்பொழுதும் வெளியேறி வருகிறார்கள் என்பதற்கான மூல காரணத்தைத் தேடிக் கண்டறிந்து, அதைக் களைந்தெறிய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் ஆளவந்தார்களுக்குக் குறைவாக இருக்கலாம்; அப்பணி தங்கள் பொறுப்பு அல்ல என்றுகூட அவர்கள் கருதலாம்.

ஆனால், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் நிலை அதுவாக இருக்க முடியாது.

தனது மதிப்புக்கும், வருவாய்க்கும் இந்து மதத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்து உயர்நிலையில் வீற்றிருப்பவராவர், சங்கராச்சாரியார்.

எப்பொழுதும்போல், சரிந்து வரும் தனது மதிப்பையும், குறைந்துவரும் தனது வருவாயையும், இருக்கும் நிலையளவாவது பாதுகாத்துக் கொள்ளும் போக்குடையதாகத்தான், சங்கராச்சாரியாரின் இப்பொழுதைய செய்தியும் அமைந்திருக்கின்றதேயல்லாது, இந்து மதத்தை மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இல்லையானாலும், இருக்கிறவர்களாவது தாங்கள் இறக்கும்வரை அதிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கும் வகையில், அதைப் புனிதமுடையதாக ஆக்கும் விருப்புக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

9 கோடி ரூபாய் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்து மதத்திலிருப்போரைத் தங்கள் மதத்துக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிடும் சங்கராச்சாரியார், இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, கோடிக் கணக்கு இருக்கட்டும், எத்தனை இலட்சம் எத்தனை ஆயிரம் செலவிட்டிருக்கிறார்? புள்ளி விவரம் காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.

அரேபியாவிலிருந்து இஸ்லாம் மார்க்கம்தான் இறக்குமதியாயிற்று, தவிர, இன்றுள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அங்கிருந்து இங்கு வந்து குடியேறினவர்களன்று. என்றோ ஒரு நாள் இந்து மதத்திலிருந்தவர்கள்தான் இன்று முஸ்லிம்களாக இருப்பவர்கள் அனைவரும்.

அன்றொரு காலத்தில் நூற்றுக்கணக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள், இன்று ஒன்பதுகோடி என்ற கணக்கில் பெருகிவிட்டனர் என்பதற்குரிய நியாயமான காரணத்தை இந்து மதத்தில்தான் கண்டுபிடித்தாக வேண்டும்.

இதுபோலவே கிறித்துவ மதம் இங்கு ஏன் எப்படிப் பரவ முடிந்தது என்பதனை அம்பேத்கரின் மதமாற்றத்தை நையாண்டி செய்யும் போக்கினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூன்று இலட்சம் மக்களுடன் டாக்டர் அம்பேத்கர் மட்டுமல்ல, வேறு பல இலட்சக்கணக்கானவர்களும் வெளியேறிச் செல்லும் நிலை இருக்கத்தான் செய்கிறது.

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.

டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.

(திராவிட நாடு, 21.10.1956)

Pin It