தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரு நாள்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்கு திடீர் ‘ஞானோதயம்’ வந்தது. ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. நவம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றம் இது குறித்து தீர்ப்பளித்தப் பிறகு, 3 மாத காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மல்லிகார்ஜுனா, இந்த 7 தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது; அவர்கள் தேச விரோதிகள்என்று சோனியா சொல்லிக் கொடுத்த மொழி களில் பா.ஜ.க. ஆட்சியை மிரட்டி விட்டார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று கூறி விட்டார்.

இந்த 7 தமிழர்களும், ராஜீவ் கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல; ‘தடா’ சட்டத்தின் கீழ் மிரட்டி, சித்திரவதை செய்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக மாற்றப்பட்ட அவலம் இந்த வழக்கில் அரங்கேறியது.

தடா சட்டம் - இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று கூறிய உச்சநீதிமன்றம், அதே தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் ஏற்றுக் கொண்டது. அதிலும்கூட பேரறிவாளன் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தைத் தாம் திருத்தி தவறாக எழுதியதாக ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற சி.பி.அய். அதிகாரி தியாகராசன் என்பவரே நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்தார்.

24 ஆண்டுகாலம் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு அவர்கள் சிறையில் கழித்த காலமும் நன்னடத்தைகளுமே போதுமானது. குற்றத்தின் தன்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ராஜீவ் காந்திக்காக மட்டும் நாட்டில் ஏதோ தனியான ஒரு சட்டம் இருப்பதுபோலவும், அது எல்லாவற்றையும் விட மேலானது என்பது போலவும் பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பா.ஜ.க. ஆட்சி - மகாராஷ்டிராவில் நடிகர் சஞ்சய்தத்தை தண்டனைக் குறைவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஏர்வாடி சிறையிலிருந்து விடுதலை செய்திருக்கிறது. 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட திரைப்பட நடிகர் சஞ்சய்தத் சிறையில் இருந்தது 42 மாதங்கள் மட்டுமே. அவரது தண்டனைக் காலம் நவம்பரில்தான் முடிகிறது என்றாலும், பிப்ரவரியிலேயே விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

இவர் மீதான வழக்கு ராஜீவ் கொலை வழக்கை விட மிகவும் கொடூரமானது. இந்தியாவின் தொழில் தலைநகர மாகக் கருதப்படும் பம்பாயை அழித் தொழிப்பதற்காக 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி தொடர் வெடிகுண்டுகள் வெடித்த வழக்கு.

இந்தத் தாக்குதலில் ஒரே நாளில் மரண மடைந்தவர்கள் 257 பேர். படுகாயமடைந்தவர்கள் 717 பேர். (உண்மையில் இறந்தது 317 பேர் என்றும், காயமடைந்தவர்கள் 1400 பேர் என்றும் வேறு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.)

சங்பரிவார் கும்பல் பாபர் மசூதியை இடித்ததற்கு எதிர்வினையாக பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தனது ஆட்களான டைகர் மேமன், யாகூப் மேமன் ஆகியோர் வழியாக சதித் திட்டம் தீட்டி அரங்கேற்றப்பட்ட தாக்குதல்.

சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டவர் நடிகர் சஞ்சய்தத். அவரது வீட்டில் ஏ.கே.56 ரக துப்பாக்கி, 9 மி.மி. துப்பாக்கி, 650 வெடி மருந்து பொருள்களை வைத்திருந்தார் என்பது குற்றச்சாட்டு. இவை பயங்கர ஆயுதங்கள். தற்காப்புக்கான ஆயுதங்கள் அல்ல; தாவூத் இப்ராகிமின் பயங்கரவாதக் குழு சஞ்சய் தத் வீட்டில் இந்த ஆயுதங்களை பாதுகாத்து, அவர் வழியாக தீவிரவாதி களுக்கு தேவைப்படும்போது இரகசியமாகக் கடத்தத் திட்டமிட்டார்கள் என்பது குற்றச்சாட்டு.

சஞ்சய் தத் பிரபல திரைப்பட நடிகர்; செல்வாக்கு மிக்கவர் என்பதற்காக இவருக்கு தாராளமாக சலுகைகள் காட்டப்பட்டன.

•             1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (28ஆம் தேதி) ‘தடா’வில் கைது செய்யப்பட்ட சஞ்சத்தத்துக்கு ஒரு வாரத்திலேயே (மே 5) பம்பாய் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

•             இரண்டு மாதங்களுக்குப் பிறகு விசாரணை நீதிமன்றம் (1994, ஜூலை 4) பிணையை இரத்து செய்தது. முதலில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சஞ்சய்தத் - பிறகு அதற்கு நேர்மாறாக குற்றத்தை மறுத்தார்.

•             சிறையிலிருந்தபடியே தனக்கு பிணை வழங்குமாறு சஞ்சய்தத் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினார். உடனே உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. (1995, அக்டோபர்)

•             தொடர்ந்து அவர் மீதான ‘தடா’ சட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. ஆயுதங்கள் தடை சட்டத்தின் கீழ் மட்டும் வழக்கு பதிவாகிறது. அதனடிப்படையில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. (2007, ஜூலை)

•             தனது தண்டனையை எதிர்த்து சஞ்சய் தத் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். உடனே உச்சநீதிமன்றம் பிணை வழங்குகிறது. (நவம். 2007)

•             வழக்கு விசாரணை உச்சநீதிமன்றம் வருகிறது. தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்த உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் சரணடைய 14 நாள்கள் அவகாசமும் வழங்குகிறது. (அக். 2015)

•             சிறைக்குப் போன 6 மாதத்துக்குள் 14 நாள் பரோலில் விடுதலை செய்யப் படுகிறார். தனக்கு கால்வலி என்று கூறி, மேலும் 14 நாள் பரோல் கேட்கிறார். 28 நாள் பரோல் அனுமதி உடனே கிடைத்து விடுகிறது. (அக், 2013)

•             அடுத்த இரண்டு மாதங்களில் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று கேட்டு 28 நாள் பரோலில் விடுதலையாகிறார். இது மேலும் 28 நாள்களுக்கு நீடிக்க அனுமதி கோருகிறார்; உடனே நீட்டிக்கப்படுகிறது.

•             அடுத்த 8 மாதத்தில் தனது மகளுக்கு மூக்கில் அறுவை சிகிச்சை நடப்பதாகக் கூறி 30 நாள் ‘பரோல்’ விடுதலை பெற்றார். (ஆகஸ்ட், 2015)

•             இடையில் பரோலில் விடுதலையான போது, 2015 ஜனவரியில் உரிய நேரத்தில் சிறைக்கு திரும்பவில்லை. சிறைச்சாலை விதிகளின் படி, இப்படி ஒழுங்கு மீறி நடப்போருக்கு தண்டனைக் குறைப்பு வழங்க முடியாது. இதிலும் சஞ்சய் தத்தைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறை நிர்வாகம் ஒரு விசாரணைக் குழுவை பெயரளவுக்கு நியமித்து, சிறை நிர்வாகம் தகவல் தருவதில் ஏற்பட்ட குழப்பத்தால் சஞ்சத் தத் சிறைக்கு உரிய நாளில் திரும்ப முடியவில்லை என்றும், தவறு சிறை நிர்வாகத்தின் மீது தானேயொழிய சஞ்சத்தத் மீது அல்ல என்றும் குழுவிடம் அறிக்கைப் பெறப் பட்டது. முதல் ஒருவருட கால சிறையிலேயே 118 நாட்கள் பரோலில் வெளியே இருக்க அனுமதிக்கப்பட் டிருக்கிறார் சஞ்சய்தத்.

•             இவ்வளவுக்கும் பிறகு மகாராஷ்டிராவில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, தண்டனை காலத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. பிப்.25, 2016இல் சஞ்சத் தத் விடுதலையாகிவிட்டார். காங்கிரஸ் கட்சியும் சஞ்சத் தத்துக்கு காட்டிய சலுகைகளை எதிர்க்க முன்வரவில்லை.

257 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்ட வழக்கில் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு , அவர் செல்வாக்கு பெற்ற நடிகர் என்பதால், முறைகேடாக பரோல்களையும், தண்டனைக் குற்றங்களையும் வழங்கிய இதே பார்ப்பன தேசம்தான் - 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களுக்கு நீதி வழங்க மறுக்கிறது.

பேரறிவாளன் ஒருமுறை கூட பரோல் கேட்டதில்லை. கடைசியாக தனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பரோல் கேட்ட நிலையிலும் அரசிடமிருந்து சாதகமான பதில் இல்லை. இத்தனைக்கும் சிறை அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்ற நன்னடத்தை யாளர்கள் இவர்கள். ஏன் இந்த பாகுபாடு? ஏன் இந்த அநீதி? பார்ப்பன இந்தியாவின் நீதிமன்றங்களும் அரசுகளும் ‘மனுநீதி’ப் பார்வையோடு செயல்படுவதுதானே!

ராஜீவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை பல்லாயிரம் தமிழர்களை போராளிகளை கொன்று குவித்ததே; பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதே; மறுக்க முடியுமா?

•             இறுதிக் கட்ட இனப்படுகொலையில் பல லட்சம் தமிழர் இனப்படுகொலைக்கு திட்டமிட்டு கொடுத்ததே சோனியாவின் உளவுப் படை தானே! இவை எல்லாம் மனித உயிர்கள் இல்லையா? இன்னும் எத்தனை யுகத்துக்கு ‘ராஜீவ் காந்தி’யின் பெயரைக் கூறிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ராஜீவ் கொலை இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்றால், ராஜீவ் மரணத்தோடு, இந்த இறையாண்மையும் சேர்ந்து மடிந்திருக்க வேண்டுமே; மடிந்து விட்டதா? பதில் சொல்லுங்கள்!

Pin It