தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை.peranbum perunkobamumமுத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள்.

இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த சமூகத்தினர் ஒப்பாரி வைத்து அழுவதும், பிறகு திருநீறு போட்ட பின்பு உயிர்த்தெழுவதும் முத்தாலம்மனையும் அவள் கணவன் குழந்தைகளை கொன்றது போன்று நடத்திக் காட்டும் நிகழ்த்துக் கலையாகும்.

இப்படத்தில் காட்டப்படுவது போன்று என்னதான் முத்தாலம்மனை சாமியாக ஏற்றுக்கொண்டாலும், ‘என்னதான் இருந்தாலும் நீ தாழ்த்தப்பட்டவனைத் திருமணம் செய்து கொண்டவள்தானே’ என்ற வன்மம் இன்றும் தொடர்கிறது. திருவிழாவிற்கு முத்தாலம்மனுக்கு மண் சிலை செய்து, திருவிழா முடிந்ததும் அந்தச் சிலையை ஊரைவிட்டு நீண்டதூரம் தள்ளிப் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். இதுபோல ஜாதி மாறி திருமணம் செய்தவர்களை கொன்று சாமியாக்கிய நிறைய கடவுள்கள் இங்கு உண்டு. மதுரைவீரன், காத்தவராயன் போன்ற நிறைய கடவுள்களை சொல்லமுடியும். இவை பற்றி ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியம் விரிவாக எழுதியிருக்கிறார். வேற்று சமூகத்தில் பிறந்து காதலித்ததில், இவர்கள் கொலை செய்யாமல் விட்டது முருகனையும் வள்ளியையும் மட்டும்தான். முருகன் காதலித்த காலத்தில் ஜாதி இல்லாமல் இருந்ததால் தப்பித்தார்.

இப்போது பார்க்கிறோமே! “சத்தியம் சத்தியமே! கலியாணம் பண்ணிக்குவோம் கவுண்ட வீட்டு பையனையே” என்று பெண்களிடம் சத்தியம் வாங்குகிறார்களே. ஆனால் ஆடுவதோ வள்ளிக்கும்மி. அந்த வள்ளி இப்போது காதலித்திருக்க வேண்டும்.

19-ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலும் நிறைய ஜாதி சங்கங்கள் உருவாகின. பறிக்கப்பட்ட தங்களுடைய உரிமைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் அச்சங்கங்கள் குரல் எழுப்பின. பெரியாரும் நிறைய ஜாதிச் சங்க மாநாடுகளில் பேசியிருக்கிறார். அந்த மேடைகளிலே அவர்களேயே விமர்சித்தும் இருக்கிறார். ஆனால் இப்போது இருக்கிற ஜாதிச் சங்கங்கள் ஆண்ட பரம்பரை வசனம் பேசி இளைஞர்களிடம் ஜாதிவெறியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

தாழ்த்தப்பட்ட ஜாதியில் உதித்த தெய்வங்களை ஏற்றுக்கொள்ளும்போது அந்த தெய்வத்தின் அப்பனையே மாற்றிவிடுகிறார்கள். இங்கு பெற்ற தாய் எந்த ஜாதி என்பதைவிட அந்த தெய்வத்தின் தகப்பன் எந்த ஜாதி என்பதே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தெய்வமாக இருந்தாலும், தாழ்த்தப்பட்டவரின் விந்துக்குப் பிறந்த தெய்வம் என்பதை அவர்கள் மனம் ஒப்ப மறுக்கிறது.

இப்படத்தில் ஊர்த் திருவிழாவிற்கான கூட்டம் மந்தையில் நடக்கிறது. உன்னிடம் திருவிழாவிற்குத் தலைக்கட்டு வரி வாங்க மாட்டோம் என்று சொல்லுவது திருப்புமுனைக் காட்சியாக அமைகிறது. திருவிழாவிற்கு வரி வாங்க மாட்டோம் என்பது சமூக ஒதுக்கல் ஆகும். தம்மிடம் வரி வாங்காமல் இருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். எனது பக்கத்து ஊரில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேற்று சமூகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

ஊர்க்காரர்கள் அவர்களிடம் திருவிழாவிற்கு வரி வாங்குவதில்லை என்று தீர்மானித்தார்கள். பிரச்சனையாகி காவல் நிலையம், கலெக்டர் அலுவலகம் வரை சென்றது. திருவிழாவில் மட்டுமல்ல, அவர்களிடம் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்காமலும், சாடை பேசியும், சமூக ஒதுக்குதல் செய்தும் அந்த குடும்பத்தையே மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடுவார்கள்.

சாமியை விட பெரிது ஜாதிதான். அதனால் தான் அந்த சாமியைத் தொட எல்லா ஜாதியும் கருவறைக்குள் இன்றுவரை போக முடியவில்லை. இப்படத்தில் ‘திருவிழா கூட நடத்தாமல் இருப்போமே ஒழிய உன்னிடம் வரி வாங்க மாட்டோம்’ என்கிற வசனம் வரும். அட! மதம் மாறி இங்கு சாமியை மாற்றிக்கொண்டாலும் ஜாதி போகவில்லை. ஆக சாமியை விட ஜாதிதான் பெரிது. சாமிக்கு ஜாதியை திணித்ததால்தான் சாமியே இல்லை என்று பேசும் நிலை வந்தது என்ற கூர்மையான கருத்து படத்தில் வசனமாக வருகிறது. அதுதான் நிஜத்திலும் நடக்கிறது.

இன்று வரை கிராமங்களெங்கும் மதுரை வீரன், முத்தாலம்மன், வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் திருவிழாவின் போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த நாடகங்களை பார்க்கக் கூடியவர்கள் சாதிய எண்ணத்திலேயே தான் இருக்கிறார்கள். அந்த நாடகங்களை பார்ப்பவர்கள் “அடப்பாவிகளா! ஜாதி மாறி கலியாணம் பண்ணுனா இப்படியா அநியாயமா கொல்லுவீங்க” என்று கேட்பதில்லை. வேறு ஜாதியில் காதலித்தால் கொலை செய்வது தவறு என்ற கருத்தை அந்த நாடகங்கள் ஏற்படுத்துவதில்லை.

காலம் காலமாக அந்த நாடகங்களைப் பார்ப்பவர்களுக்கும் ஜாதி தவறு என்ற எண்ணம் வரவில்லை. மாறாக வள்ளித் திருமணம் நாடகம் பார்த்தவன், வள்ளி கும்மியை ரசித்தவன்தான் காதலித்தால் கொலை செய்கிறான். அப்படி கொலை செய்து தண்டனை பெற்ற குற்றவாளியைக் கூட மாவீரனாக கொண்டாடும் கேவலத்தை எல்லாம் பார்க்கிறோமே!

நாட்டார் கதையை கருவாக எடுத்து கதையை சொல்லக் கூடிய விதத்தில் சொல்லி, ‘ஜாதியென்பது அசிங்கமானது’ என்ற கருத்தை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சாமியை விட ஜாதிதான் பெரிது என்பதும், ஜாதி பிறப்பில் இல்லை வளர்ப்பில்தான் இருக்கிறது, ஏனென்றால் கடவுளே மாற்ற முடியாத ஒருவரின் ஜாதியை மருத்துவமனை செவிலியர் மாற்றிவிட முடியும் என்ற அரசியல் கருத்தையும் இப்படம் பேசுகிறது.

- ம.சரவணகுமார்