பா.ஜ.க.வை எதிர்த்தால் - பார்ப்பனர்களை விமர்சித்தால் - எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ‘இந்திய எதிர்ப்பாளர் (anti-Indian) என்று வசை பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். திமிரும், பார்ப்பன ஆணவமும் கொழுத்து திரிகிறது இந்தக் கூட்டம். அதிகார மமதையில் ஊறி நிற்கும் ‘சங்கி’ பார்ப்பனர்கள், ‘இந்தியா’ என்பதையே ஏற்றுக் கொள்ளாத ‘தேச பக்த’ கும்பல், பா.ஜ.க.விலிருந்து சங் பரிவார் துணை அமைப்புகள் வரை ‘இந்தியா’ என்பதை ஏற்பதே இல்லை. ‘பாரதிய’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துவார்கள். ‘அவாள்’ கண்ணோட்டத்தில் ‘இந்தியா’ என்பது ‘தீட்டு’. இந்த கும்பல் இப்போதும் தத்துவத் தந்தையாக ஏற்றுக் கொண்டிருக்கும் கோல்வாக்கர் இந்தியா என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார். அந்த அடிப்படையிலேயே ‘இந்தியா’ என்ற சொற்றொடரும் அரசியல் சட்டமும் அவர்களுக்கு கசக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பிரகடனத்திலும் ‘இந்தியா’ என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்துவது கிடையாது. ஆர்.எஸ். எஸ். கொள்கை அறிக்கை என்ன கூறுகிறது?

“இந்து சமூகத்திலுள்ள பல்வேறு கூட்டத்தாரையும் ஒன்றுபடுத்துவது, ‘தர்மம்’, ‘சான்ஸ்கிருதி’ என்ற அடிப்படையில் இந்து சமூகத்துக்கு புத்துயிர் ஊட்டி புணருத்தாரணம் செய்வது, ‘பாரத் வர்ஷத்’தின் பன்முக வளர்ச்சியை சாதிப்பது என்பதே ‘சங்’கத்தின் நோக்கங்களும், இலட்சியங்களும் ஆகும்”.

- இந்த கொள்கை அறிக்கையில் ‘இந்தியா’ என்ற சொல்லே இடம் பெறவில்லை. இந்து சமூகம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இவர்களுக்கு கொள்கை வகுத்துத் தந்த கோல்வாக்கருக்கு ‘இந்தியா’ பற்றிய கருத்து என்ன?

“பாரதியா என்பது நம்முடைய பழமையான பெயர். நமக்கு நினைவு தெரியாத காலம் முதல் இந்தப் பெயர் இருந்திருக்கிறது. வேதத்தில்கூட இந்தப் பெயர் இடம் பெற்றுள்ளது. நமது புராணங்கள்கூட, நமது தாய்நாட்டை ‘பாரத்’ என்றும் நமது மக்களை ‘பாரதியர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் ‘பாரத்’ என்பது ‘இந்து’ என்பதுதான்.

இன்று பாரதியம், பாரத் என்ற சொற்கள்கூட தவறான பொருளில் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியா - இந்தியர் என்ற சொல்லுக்கு மாற்றாக அதைப் பயன்படுத்துகிறார்கள். ‘இந்தியன்’ என்ற சொல் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி போன்ற பல்வேறு சமூகத்தவரையும் சேர்த்துத்தான் குறிக்கிறது. நம்முடைய சமூகமான ‘இந்து’வை மட்டும் குறிப்பதில்லை. ‘பாரதிய’ என்ற சொல்லை மற்ற சமூகத்தினரையும் இணைத்துக் கொள்ளும் சொல்லாக குறிப்பிடுகிறார்கள். எனவே தான், இந்து என்ற குழப்பமில்லாத சரியான சொல்லையே இப்போது நாம் பயன்படுத்துகிறோம். (ஆதாரம் : கோல்வாக்கர்-ஆர்.எஸ்.எஸ். அதிகார பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ ஏடு 1.12.1449)

இந்திய தேசியக் கொடியைக் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொண்டது. தேசியக் கொடி உருவாக்கப் பட்டபோதே கோல்வாக்கர் அதை எதிர்த்தார். நமக்கானது காவி கொடி என்று கூறினார்.

‘இந்தியா’ என்பது இந்து தேசத்துக்கு எதிரானது என்பதை தங்களது கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கும் ‘வந்தேறி’ கூட்டம் தான் நாட்டின் மண்ணின் மைந்தர்களை ‘தேச விரோதிகள்’ என்று பேசித் திரிகிறது.

இந்த வரலாறுகளை வீதி தோறும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

- ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து

Pin It