கொளத்தூரில் காவல்துறை, ஆண்டாள் ஆய்வரங் கத்துக்கு தடைபோட்டது; உடனே ‘ஆண்டாள் அருள்வாக்கு மகிமை’ என்ற தலைப்பில் கழகம், ஆய்வரங்கை பெயர் மாற்றி நடத்தி முடித்தது. இது குறித்த செய்தி விவரம்:

03.02.2018 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” எனும் கருத்தரங்கிற்கு காவல்துறை தடை விதித்தது. மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டுக் கதவுகளில் வருவாய்த்துறை அலுவர்கள் முன்னிலை யில் 31.01.2018 அன்று ஒட்டினர்.

kolathoor mani 624

இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது:

இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள்!

வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண மண்டபத்தில் 'ஆண்டாள் ஆய்வுக்குரியவளே' என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த திட்டமிட் டிருந்த கருத்தரங்கை நடத்தினால் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று “கற்பனைத் திறன்” மிகுந்த கொளத்தூர் ஆய்வாளர் முடிவுக்கு வந்துள்ளார்.

எனவே நாம் அனுமதிக்கு விண்ணப்பிக்காத அந்த நிகழ்வை நமக்கு சொந்தமான பெரியார் படிப்பகத்துக்குள் கலந்து உரையாடுவதையே, அதுவும் நுழைவுக் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே வந்து நிகழ்வைக் கேட்கலாம் என்று அறிவித்த உள்ளரங்கு கூட்டத்தையே நடத்த அனுமதி மறுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி 31.01.2018 அன்று காலை 09.01 மணிக்கு என்னை கைபேசியில் அழைத்து 3 நிமிடம் 20 விநாடிகள் பேசிய ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் (அவர்தான் மேட்டூர் துணைக் கண்காணிப்பாளர்(பொறுப்பு). ஏசு ஆய்வுக்குரியரே! அல்லா ஆய்வுக்குரியவரே! என்று நடத்தாமல் ஏன் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்று மட்டும் கருத்தரங்கம் நடத்துகிறீர்கள் என்ற ஓர் அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பினார். நானும்,'அய்யா, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் எழுப்பும் கேள்விகளை அப்படியே கேட்கிறீர்களே?' என அவரது எஜமான விசுவாசத்தைப் பாராட்டி விட்டு ‘எனக்கு என்னமோ சோறு மட்டும் விருப்பமாக உள்ளது; ஆனால் ஏன் மலம் சாப்பிட மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்! நீங்களோ, உங்களைக் கேள்வி கேட்கச் சொன்ன வர்களோ அதை விரும்பி சாப்பிடுவதற்கு எப்போதா வது தடை சொல்லி இருக்கிறேனா?’ என்று மிகவும் பணிவாகக் கூறினேன். “அந்தத் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினால் 153 ‘எச்’ பிரிவில் ரிமாண்ட் செய்யச் சொல்லி இருக்கிறார்கள்” என்று குலை நடுங்க வைக்கும் ஒரு செய்தியைச் சொன்னார். (ஒலிப் பதிவு எம்மிடம் உள்ளது; தேவை எனில் வெளியிடு வோம்.) நானும் மாவட்ட கண்காணிப்பாளர் கைபேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.

பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளரையும், அவரது உதவியாளராக உள்ள தனிப் பிரிவு ஆய்வாளரையும், கைபேசியில் அழைத்துப் பார்த்தேன். அழைப்பை எடுக்கவில்லை. சரி,ஏதோ முக்கியப் பணியில் இருப்பார்கள் என மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஜனநாயக நாட்டில் அரங்கத்திற்குள்ளும், எங்கள் படிப்பகத்திற்குள்ளும் கூட பேச கருத்துரிமை இல்லையா? என்பதையும் - 29.01.2018 அன்று சேலம் மாவட்ட தமிழ்நாடு ‘பிராமண சங்கம்’ மற்றும் இந்து முன்னணி செயலாளர் கடிதங்களையும் குறிப்பிட்டு அனுமதி மறுத்திருக்கிறீர்களே, எங்கள் கருத்தை மட்டும் ஏன் கேட்கத் தோன்றவில்லை என்பதையும் – பேருந்து, சந்தை, திருவிழா ஆகியவற்றில் திருட்டு, ஜேப்படி, சச்சரவுகள் நடைபெறலாம் என்று சந்தேகம் வந்தால் பேருந்துகளையும், சந்தை, திருவிழாக்களையும் தடை செய்வீர்களா? அல்லது திருடர்களை, சச்சரவில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க முயற்சி செய்வீர்களா? - என்பவற்றுக்கு அவர்களது அறிவார்ந்த, பொறுப்புணர்வு மிக்க பதில்களைப் பெற விரும்பிய எனது ஆசையில் மண்விழுந்து விட்டதே என்ற கவலையோடு என் முயற்சி களையும் கைவிட்டு விட்டேன்.

அப்புறம்தான், அய்யய்யோ, சட்டத்தைப் பேணுகிற காவல்துறையிடம் எதிர் கேள்வி கேட்டால் என்னிடமே சட்டம் பேசுகிறாயா? எனக் கேட்டு அடியும், பொய் வழக்குகள் புனைவதும் நடக்குமே என்கிற புரிதல் நம்மை கொஞ்சம் ‘அச்சுறுத்தியது!’

காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இருக்கிறதே? குண்டாந்தடிகள் இருக் கின்றனவே? ஆயுத பூஜையில் வைத்து சந்தனம் குங்குமம் வைத்த துப்பாக்கிகள் இருக்கின்றனவே? என்பவை எல்லாம் வேறு நினைவுக்கு வந்து தொலைத்தன!

சரி, சரி, நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்! நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் ! என்ற புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகவே காவல்துறையில் ஆணையை மதிக்கும் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக கீழ்கண்ட முடிவுக்கு வந்துவிட்டேன்.

இம்முடிவுகளுக்காக என்னை ’கோழை’ என்றோ, ‘பயந்தாங்கொள்ளி’ என்றோ தயவு செய்து குற்றம் சாட்ட வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

அறிவிப்புகள் !

1)            ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே' எனும் கருத்தரங்கம் இரத்து செய்யப்படுகிறது.

2)            திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி “ஸ்ரீ மத் சடகோப இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு” என்ற தலைப்பிலும், முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் “ஸ்ரீ ஆண்டாள் திருஅவதாரமகிமை” எனும் தலைப்பிலும் பிரசங்கம் செய்வார்கள்.

3)            காலம், கட்டணம், இடம் மாற்றம் இல்லை.

4)            நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கவோ, இரத்து செய்யவோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

5)            நிகழ்ச்சி இடையில் ஏதாவது காரணத்தால் நிறுத்தப்பட்டால் நுழைவுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.

பின் குறிப்பு : ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு கவிஞர் வைரமுத்து சென்று மன்னிப்பு கேட்காத பட்சத்தில் 03.02.2018 அன்று ஸ்ரீமத் சடகோப ராமானுஜ ஜீயர், இரண்டாவது முறை இட்ட சபதத்தில் உறுதியாய் இருந்து, திருமதி. துர்க்கா ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாலும் அதையும் மீறி, தொடங்கவுள்ள சாகும்வரை உண்ணாவிரதத் தொடக்க விழாவிற்கும், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒருவேளை தீக்குளித்தால் அந்நிகழ்விற்கும் செல்பவர்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் நிகழ்விற்கு வந்து ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

கொளத்தூர் தா.செ.மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம்

- என்ற அறிக்கையை கழகத் தலைவர் விடுத்தார்.

கொளத்தூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.02.2018 அன்று காலை 10.30 மணிக்கு கொளத்தூர் கே.பி.என். மகேஷ்வரன் தோட்டத்தில் “இந்து மதப் பெருமைகள் ஆய்வரங்கம்” ஒன்றிய கழகச் செயலாளர் காவை. ஈசுவரன் தலைமையில் தொடங்கியது. சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், செயலாளர் சி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணபரத் வரவேற்புரையைத் தொடர்ந்து இந்த ஆய்வரங்கத்திற்கான தேவைகள் தற்போது உள்ள சூழ்நிலைகள் குறித்து தோழர்கள் சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், செயற்குழு உறுப்பினர் சக்திவேல், கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தலைமை கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, முனைவர் க.நெடுஞ்செழியன் ஆகியோர் ஆய்வுரையாற்றினர். கொளத்தூர் நகர கழகச் செயலாளர் சி.இராமமூர்த்தி நன்றி கூற ஆய்வரங்கம் நிறைவுற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதியம் மாட்டுக்கறி பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

“சோடா பாட்டில் புகழ்” ஜீயரின் அருள்வாக்கைக் கேட்கும் புனித யாத்திரையை 3.2.18 காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருப்பூர் மாவட்ட கழகத் தோழர்கள் தொடங்கினர்.

மோட்டார் வண்டியில் யாத்திரையின் நோக்கத்தைக் குறிக்கும் வகையில் பேனர் கட்டி, பெரியார் பிஞ்சுகள் நாமம், செந்தூரம் இட்டு கையில் ஜீயரின் வன்முறை பேச்சை குறிக்கும் வகையில் காவி நிற முக்கோண கொடியில் சோடா பாட்டில் ஜீயர் பெயரோடு அச்சிட்டு யாத்திரை கிளம்பினர். ஆண்டாளின் பக்தர்களாக கொளத்தூரில் முன்வரிசையில் அமர்ந்து வேத உபன்யாசங்களையும் ஆன்மீக சொற்பொழிவையும் கண்டு கேட்டு ஆண்டாளின் திருவருளை பெற்றனர். நிகழ்வில் மதியம் கோமாதா பிரியாணி ‘போஜனம்’ உண்டு மகிழ்வுடன் ஊர் திரும்பினர். நிகழ்ச்சிக்கு காவலாண்டியூர் கழக ஆதரவாளர் செட்டியூர் மகேஷ் ரூ.10,000 நன்கொடை வழங்கி ‘புண்ணியம்’ தேடிக் கொண்டார்.

Pin It