தமிழ்நாட்டில், பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவந்து கொண்டிருப்பது தினமலர் நாளேடு. அந்த நாளேடு 30.07.2022 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அப்போது மோடி, தமிழ்நாடு பாஜகவினரிடம் ஒரு கருத்தை எச்சரிக்கையாக கூறி இருக்கிறார்; ‘திராவிட முன்னேற்றக் கழகம், பாஜகவிற்கு சிந்தாந்த ரீதியாக எதிரான ஒரு கட்சி. அதே நேரத்தில் திமுகவை பாஜக எதிர்க்கின்றபோது, பாஜக தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாச்சாரத்திற்கோ எதிரான கட்சி என்று மக்கள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் எச்சரிக்கை செய்ததாக அந்த செய்தி கூறுகிறது.

மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம், திருக்குறளின் பெருமையையும், தமிழின் பெருமையையும் ஏன் பேசி வருகிறார்? அதன் பின்னால் உள்ள உள்நோக்கம் என்ன என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டுமானால், தமிழின் பெருமையையும், திருக்குறளின் பெருமையையும் பேசியாக வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் இதை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் மோடியின் கருத்து பிரதிபலிப்பதாக இருக்கிறது.

தினமலர் நாளேடு பாஜகவின் செல்வாக்குமிக்க நாளேடு. தமிழ்நாட்டில் நடைபெறும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், அனுராக் சிங் தாக்கூர், தினமலர் நிர்வாகி ஆ.ஆதிமூலம் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே ஊடகத் துறையைச் சேர்ந்த, குறிப்பிடத்தக்க சிலரை மட்டும் அவர் சந்தித்து பேசியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. குறிப்பாக ‘இந்து குழுமம், புதிய தலைமுறை, ராஜ், பாலிமர், நியூஸ் 7, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்த விகடன்’ ஆகிய ஊடகங்களின் அதிபர்களை மட்டும் மத்திய அமைச்சர், தினமலர் நிர்வாகி ஆ.ஆதிமூலம் வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார்.

ஊடக சந்திப்பு என்றால், அதில் அனைத்து ஊடகங்களும் பங்கேற்பதாக இருக்க வேண்டும். ஆனால், தேர்வு செய்யப்பட்ட சில ஊடகங்களை மட்டும் அமைச்சர் ஏன் சந்தித்திருக்கிறார் என்பதை சந்தித்த ஊடகத்துறையினர் தான் மக்களுக்கு வெளிச்சப்படுத்த வேண்டும். அத்தகைய செல்வாக்கு மிக்க தினமலர் நாளேடு தான் மோடியினுடைய இந்தக் கருத்தையும் வெளியிட்டிருக்கிறது.

இந்து' பெண்களை சங்கிகள் புண்படுத்தலாமா?

இந்துக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்ற கூக்குரல், தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. புராணங்களில் இருப்பதை, உள்ளதை உள்ளபடி எடுத்துப் பேசினாலே, இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என்று சங்கிகளும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். அப்படியானால் அவர்கள் அந்த புராணத்தை தான் தடை செய்ய வேண்டும் என்று கூற வேண்டுமே தவிர, புராணத்தில் இருப்பதை எடுத்துக் கூறுவது எப்படி புண்படுத்துவதாகும் ?

ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ‘கீதாஞ்சலி ஸ்ரீ ' என்ற பெண்மணி ‘ரெத் சமாதி’ என்ற இந்தி நாவலை எழுதி இருக்கிறார். அந்த நாவலுக்கு சர்வதேச புகழ் வாய்ந்த ‘புக்கர் பரிசு’ கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு நாவலுக்கு பரிசு கிடைப்பதை அந்த மாநிலம் பாராட்ட வேண்டும். ஆக்ராவில் கீதாஞ்சலியை பாராட்டுகிற நிகழ்ச்சிக்கு ரங்கீலா என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. அந்த நாவலில் வருகிற சில பகுதிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர் காவல்துறையில் புகாரளிக்க அந்தப் புகாரை உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் டுவிட் செய்ய உடனடியாக காவல்துறை அந்த நிகழ்விற்கு அனுமதி மறுத்துவிட்டது.

காரணம், சிவன் குறித்தும் பார்வதி குறித்தும் அதில் கூறப்பட்ட கருத்துகள், இந்துக்கள் மனதைப் புண்படுத்துகிறது என்பது தான். இதற்கு ரங்கீலா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரியான விளக்கம் ஒன்றைத் தந்திருக்கிறார்கள்.

புராணங்களில் இருக்கிறது என்று கூறினாலே புண்படுத்துகிறது என்று எப்படி கூறுகிறீர்கள் ? அப்படிப் புண்படுத்துகிறது என்று சொன்னால், அந்தப் புராணங்களைத் தடை செய்யக் கோரி நீங்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும். அதை எடுத்துக் கூறுவது எப்படி புண்படுத்துவது ஆகும்? என்ற கேள்வியை எழுப்பியிருக் கிறார்கள். விஷ்ணு புராணம், லிங்க புராணம், சிவ புராணம் என்று பல்வேறு புராணங்கள் கற்பனைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றன. கடவுள்களின் பிறப்புகளைக் கூறிக் கொண்டிருக்கின்றன. இவைகளில் இருப்பதை எடுத்துக் காட்டினாலே இந்துக்களின் மனது புண்படுகிறது என்று புலம்பத் துவங்கி விடுகிறார்கள்.

‘பூக்கர் பரிசு’ என்ற மிக உயரிய பரிசு பெற்ற ஒரு நாவலுக்கு, மனதைப் புண்படுத்துகிறது என்ற காரணம் காட்டி அந்த நிகழ்ச்சிக்கு தடை போடுவது என்பது சர்வதேச உலகம் இந்தியாவை எவ்வளவு கேவலமாக பார்க்கும்.

புண்படுத்துகிறது என்று கூறுபவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. சமூகத்தில் சரிபாதியாக இருக்கிறவர்கள் பெண்கள். ஆனால் பெண்களை இந்து மத சடங்கிலிருந்து, இந்து புரோகிதர் வேலை பார்ப்பதிலிருந்து முற்றாக ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே இது இந்து பெண்களை அவமதிப்பது ஆகாதா ? புண்படுத்துவதாகாதா ? இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சுவயம் சேவக்குகளாக பெண்கள் இருக்கக் கூடாது என்று தடை இருக்கிறதே இது இந்துப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற மிகப் பெரிய அவமானம் அல்லவா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It