தமிழ்நாட்டில் ‘கதாநாயகர்’, ‘கதாநாயகி’களாக தேர்தல் அறிக்கைகள் வெளி வந்துள்ளன. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவசப் பொருள் களின் பட்டியல்கள் வீதிதோறும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இதழ் அச்சேறும் வரை தேர்தல் அறிக்கையை வெளி யிடாத ஒரே கட்சி காங்கிரஸ்தான். அக்கட்சிக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடு, நாம் அவர் களுக்காக தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை இது.
அன்னை சோனியாவின் தலைமையில் தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியை அமைத்திடும் லட்சியத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக வாக்காளர்கள் முன் பணிவுடன் இந்தத் தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கிறது. 63 தொகுதிகளிலே எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட் டுள்ளார்கள். தமிழ்நாட்டிலே எங்கள் கட்சிக்குள் வெவ்வேறு தலைமையின் கீழ் இயங்கிவரும் வெவ்வேறு குழுக்களுக்கும் வேட்பாளர்களை பகிர்ந்தளித்துக் கொண்டு, சம உரிமையோடு போட்டியில் நிற்கிறோம். எங்களுக்குள் தேர்தல் முடியும் வரை எந்த சண்டை சச்சரவும் இருக்காது என்பதை, தமிழக வாக்காளர் பெருமக்களுக்கு உறுதியளிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே சின்னத்தில் போட்டி யிடுவதிலிருந்தே எங்களின் உறுதியான ஒற்றுமையை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
தி.மு.க.வுடன் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி, கொள்கை கூட்டணி என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க. ஆட்சியின் திட்டங்களுக்கு மத்திய அரசு தான் நிதி உதவி செய்து வருகிறது என்ற உண்மையை முதல்வர் கலைஞர், மக்களிடம் மறைக்கிறார் என்று, கடந்த காலங்களில் எங்கள் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டிப் பேசியதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன், குழந்தையாக இருந்தபோது முதல்வர் கலைஞர் மடியில் தவழ்ந்தவர் தான் என்ற வரலாற்று உண்மையை முதலமைச்சரே கூறியிருப்பதை நினைவூட்டுகிறோம்.
தமிழ்நாட்டில், விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு, மீனவர் மீது துப்பாக்கி சூடு, மின்சார வெட்டு போன்ற மக்கள் பிரச்சினைகளில் தமிழக காங்கிரஸ் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்தாமல்,
கை கட்டி வாய் பொத்திக் கொண்டு, சட்டம் ஒழுங்குக்கு உட்பட்ட நல்ல குடிமகனாக செயல்பட்டதை தமிழக வாக்காளர்கள் மதித்து எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
எங்கள் கட்சிக்குள் அவ்வப்போது கொள்கைப் பிரச்சினைகள் வரும்போது அதை எங்கள் கட்சித் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனுக்குள்ளேயே நாங்கள் செருப்படி, சட்டை கிழிப்பு, கொடும்பாவி எரிப்பு என்று அமைதி வழியில் போராடி வந்திருக்கிறோமே தவிர, பொது மக்களுக்கு எந்த இடையூறும் செய்தது இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியை நாங்கள் அமைத்தே தீர வேண்டும் என்ற ஆவேசத்தினால், நாங்கள் அப்படி நடந்து கொள்கிறோமே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. எங்கே, காமராசருக்கு நூற்றாண்டு விழா, நடத்தக் கிளம்பி, அதன் காரணமாக, ஊருக்கு ஊர் கலவரம் வந்துவிடுமோ, என்ற பதட்டத்தின் காரணமாக, காமராசர் நூற்றாண்டு விழாக்களைக்கூட நடத்தாமல், நாங்கள் அடக்கமாக மக்கள் தொண்டாற்றியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் பொருளாதாரம் நன்றாக செழித்து வளர்ந்துள்ளது. இதற்கு உதாரணம் கூற வேண்டுமானால் அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கட்சி வேட்பாளர்கள், தி.மு.க. வேட்பாளாகள் அளித்த சொத்து கணக்கையும் இப்போது அளித்துள்ள சொத்துக் கணக்கையும் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இந்த ‘அபார’ பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் சோனியா வழிகாட்டுதலோ டு நாங்கள் நடத்தும் ஆட்சியின் சிறந்த பொருளாதார கொள்கைகள் தான் காரணம் என்பதை எவராலும் மறுக்கவே முடியாது.
பெட்ரோல், டீசல் விலை பற்றி தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு சில விளக்கங்களை வழங்க வேண்டியது எங்களது கடமையாகிறது. பெட்ரோல் டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதால்தான், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயருகிறது. அதனால் பணப் புழக்கம் அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கிறது. இந்த ஒரே ஒரு சாதனைக்காவது தமிழக வாக்காளர் பெரு மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்.
மக்களுக்கு கல்வித் தொண்டாற்ற விரும்பும் நாங்கள், அதற்காகவே பல சுயநிதி கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருவதை தமிழக வாக்காளர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் காமராசர் கால தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியக் கனவில் நாங்கள் நடத்துவதுதான் இந்தக் கல்வி நிறுவனங்கள் ஆகும்.
பாபர் மசூதி பிரச்சினையிலும் சரி, ஈழத் தமிழர் பிரச்சினையிலும் சரி, அந்தப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை காங்கிரசுக்கே உண்டு என்று மார்தட்டி கூற முடியும்! பாபர் மசூதியை - சங் பரிவாரங்கள் இடித்தபோது,
அதைத் தடுக்காமல் அப்படியே இடிக்க விட்டதால்தான் இப்போது அப்பிரச்சினைக்கே ‘தீர்வு’ கிடைத்தது. அதேபோல்,  ஈழத் தமிழர் பிரச்சினை எத்தனை காலம் தான் நீடிப்பது என்று ‘கவலைப்பட்ட’ அன்னை சோனியா, அதற்கு அருமையான திட்டம்
தீட்டி செயல்பட்டார். பாபர்  மசூதியை ரைமட்டமாக்கியதுபோல், ஈழத் தமிழர்களையும் போராளிகளையும் முழுமையாக ‘சமாதி’ கட்டி  பிரச்சினையை சுமூகமான தீர்வுக்குக் கொண்டு வந்துள்ளோம். வாக்குச் சாவடிக்கு செல்லுவதற்கு முன் ஒவ்வொரு தமிழரும், இந்த சதனையை நெஞ்சில் நிறுத்த வேண்டும் என்று தமிழன் என்ற உணர்வோடு கேட்டுக் கொள்கிறோம்.
இலவச அறிவிப்புகள் வெளியிடப்படாவிட்டால், இதை தேர்தல் அறிக்கையாக மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், கூடுதலாக, புதிதாக அறிவிக்க இலவசம் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. எல்லா இலவசங்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், நாங்கள்,  அறிவிக்கப்பட்ட ‘இலவசங்களை’ எல்லாம் இலவசமாக வாங்கித் தருவோம் என்ற உறுதியைத் தருகிறோம்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு விலை மதிப்பற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று தி.மு.க. அணியில் நிற்கும் நாங்கள், நாளைக்கு எந்த அணியில் நிற்போம் என்பதற்கு உறுதி கூற முடியாது. தேவைப்பட்டால் அணிகளை மாற்றி, மக்களுக்கும் தேசத்துக்கும் தொண்டாற்ற தயாராகவே இருப்போம். எனவே எங்களுக்கு அளிக்கும் வாக்கு எல்லா அணிகளுக்கும் பொதுவான வாக்கு என்பதை மறந்து விடாதீர்கள்!
நாங்கள் செய்துள்ள தியாகங்கள் மகத்தானவைகளாகும். கொள்கை, தன்மானம், நேர்மை, தமிழின உணர்வு, மக்கள் தொண்டு போன்ற வாழ்க்கைக்கு தேவையற்ற அர்த்தமற்ற பண்புகளை தியாகம் செய்துவிட்டு, உங்கள் வீடு தேடி, கைகால்கள் உள்ள னிதர்களாக வாக்குக் கேட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்; ஜெய்ஹிந்த்!

Pin It