தொடர்புடைய படைப்புகள்

2024-ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடி, இட ஒதுக்கீடு, ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் வங்கதேசத்தின் ஜென் இசட் இளைஞர்கள் அப்போதைய ஷேக்ஹசீனா அரசை எதிர்த்துப் போராடினர். இந்தப் போராட்டம் அந்த நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனைடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது பிரதமர் பதவியிலிருந்து விலகி, இந்தியாவிற்குத் தஞ்சம் புகுந்தார், அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. இதையடுத்து வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.bangladesh violenceஆகஸ்ட் 9 ஆம் நாள், முகமது யூனுஸ் வங்கானதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற மறுநாளே, டாக்காவில் உள்ள ஜினாக் சதுக்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் இந்துத்துவ இயக்கங்கள் போராட்டத்தில் இறங்கினர். சிலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டனர். அனுமார் கொடியை உயர்த்திப் பிடித்தனர். இது நான் இந்துத்துவ இயக்கங்கள் வங்கதேசத்தில் பற்ற வைத்த நெருப்பு இதன் பின்னணியில் இந்தியா அரசு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

போராட்டங்களின் மூன்றாவது நாளான ஆகஸ்ட் 11 அன்று, பங்களாதேஷ் இந்து ஜாக்ரன் மன்ச் (BHJM) என்ற புதிய அமைப்பு இந்தியாவின் ஆதரவோடு அங்கு உருவாக்கப்பட்டது. மேலும் நிஹார் ஹல்தார், ஷாலால் ஐச் அர்கோ, ஜாய் ராஜ்போன்ஷி, ரோனி ராஜ்பான்ஷி மற்றும் பிரதிப் காந்தி டே ஆகியோர் இதன் ஒருங்கிணைப்பாளர்களாக முன்மொழியப்பட்டனர்.

நிஹார் ஹல்தார் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார்.

ஹல்தார் இந்தியா சென்று, செப்டம்பர் 21 அன்று பாஜக திரிபுரா நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிபா மெளமியக்கையும், செப்டம்பர் 27 அன்று கொல்கத்தாவில் முன்னாள் திரிபுரா மற்றும் மேகாலயா ஆளுநர் ததாகதா ராயையும், அக்டோபர் 1 அன்று வங்காள பாஜகவின் கலாச்சாரப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ருத்ரனில் கோஷையும், அக்டோபர் 28 அன்று கொல்கத்தாவின் பாஜக கட்சி அலுவலகத்தில் வங்காள பாஜக சட்டமன்ற உறுப்பினர் அமித் சர்க்காரையும், நவம்பர் 7 அன்று பாஜக வங்காளப் பிரிவு முன்னாள் தலைவர் திலீப் கோஷையும் இறுதியாக, நவம்பர் 9 அன்று மீண்டும் மெளமியக்கையும் சந்தித்துள்ளார்.

பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து விட்டு, தனது சந்திப்புகளின் புகைப்படங்களை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவும் செய்தார். இதன் மூலம் இந்திய அரசு குறிப்பாக மோடி அரசு தங்களுக்குப் பக்கபலமாக உள்ளது என்பதை வங்க மக்களுக்கு உணர்த்தினார். இதன் மூலம், இந்திய அரசு, இந்துத்துவ இயக்கங்கள், வங்கதேச இந்துத்துவ இயக்கங்களின் ஒருங்கிணைப்பை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஷேக் ஹசீனா ஆதரவோடு இந்துத்துவ இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். ராம நவமியை ஏற்பாடு செய்து இந்துத்துவத்தை வளர்த்து வந்தனர். ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம், அனுமனின் உருவம், ராம நவமி போன்ற பண்டிகைகள் மற்றும் எல் ஜிஹாரத் போன்ற பிரச்சினைகள் குறித்த பரப்புரைகள் மூலம் இந்துத்துவத்தை வங்கதேசத்தில் காலூன்ற வைத்தனர்.

வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை இந்தியாவின் அவர் நெருங்கிய நட்புறவை வளர்த்தார். இதனால் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் இருந்து விலகி இருந்தது. ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்து ஜாக்ரன் மஞ்ச் மற்றும் அதைத் தொடர்ந்து சனாதன் ஜாக்ரன் மஞ்ச் ஆகியவை நடத்திய போராட்டங்களின் விளைவாக முகமது யூனுஸ் பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவும் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் வங்கதேசத்திற்குச் செல்வதும், வங்கதேச தலைவர்கள் பாகிஸ்தான் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது. இது இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டியது. எனவே முகமது யூனுசின் ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுத்து மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.

பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவி விலகியதற்கும் வங்கதேசத்திலிருந்து வெளியேறியதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் பங்கெடுக்க முடியாமல் போவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது இன்கிலாப் மஞ்சா என்ற அமைப்பு தான்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தான் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி. இவர் தான், 2024 மாணவர் தலைமையிலான கிளர்ச்சியின் முக்கிய தலைவராக இருந்தார். இவர் மீதான வெறுப்புப் பார்வை இந்திய அரசிற்கும், இந்துத்துவ இயக்கங்களும் அவாமி லீக் கட்சிக்கும் உருவாகியது. அவரது உயிருக்கு ஆபத்து என்றேனும் வேண்டுமானாலும் இவர்களால் நிகழலாம் என்ற நிலையே இருந்தது.

வங்கதேசத்தில் ஆட்சியாற்றம் ஏற்பட்ட பிறகு, சூலை எழுச்சிக்குக் காரணமான பல மாணவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளை இந்தியாவின் பின்னணியில் அவாமி லீக் கட்சி நடத்திய அரசியல் கொலைகள் என்று ஹாடி தொடர்ந்து கண்டித்து வந்தார்.

தொடர் சதிக் கொலைகளைத் தொடர்ந்து முகமது யூனுஸ் அரசாங்கத்திடம் அரசியல் கொலைகளுக்குக் காரணமான அவாமி லீக் கட்சியின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தேசபக்தியுள்ள மாணவர்களையும் குழந்தைகளையும் அரசியல் படுகொலைகளில் இருந்து பாதுகாக்க, அவாமி லீக் குழுக்களில் உள்ள பயங்கரவாதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து சூலை இயக்கப் போராளிகளின் முழு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார் ஹாடி.

இதன் பின்னணியில் தான், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதித்ததுடன், சூலை மாதப் படுகொலைகள் தொடர்பாக அவர் மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்குள்ளும் தொடரப்பட்டு கைது வாரண்ட் பிறப்பித்து இந்தியாவிற்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அதையும் மீறி ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது.

இதற்குப் பிறகு, ஹசீனாவின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஷேக் ஹசீனாவையும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாணுளமான் கான் கமானையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் வங்கதேசம் முறைப்படி கேட்டிருக்கிறது. வங்கதேசத்தின் கோரிக்கைக்கு இந்தியா செவிமடுக்காமல் இழுத்தடிக்கிறது.

இப்படி ஒரு நெருக்கடியான நிலையில், வங்கதேசத்திற்கான பொதுத் தேர்தல் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெற உள்ளதாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது. அவாமி லீக் கட்சிக்கு அரசியல் நடவடிக்கைத் தடை நடைமுறையில் இருப்பதால் இந்தத் தேர்தலில் அவாமி லீக் பங்கெடுக்க முடியாது.

அதேநேரம், ஹாடி டாக்கா- 8 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டு வந்தார். தன்னுடைய தேர்தல் பரப்புரையில், இந்தியாவையும், வங்காளதேசத்தில் உள்நாட்டு அரசியலில் அதன் செல்வாக்கையும் ஹாடி வெளிப்படையாக விமர்சித்து வந்தார். வங்கதேசத்தின் ஜனநாயகப் போராட்டம், குறிப்பாக இந்தியாவிலிருந்து வெளிப்பற்ற ஆதிக்கத்தை அகற்றுவதோடு உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட வேண்டும் என்று ஹாடி வலியுறுத்திப் பேசி வந்தார். வங்கதேசத்தின் மீதான ‘இந்திய மேலாதிக்கம்’ தகர்க்கப்பட வேண்டும் என்றும் பேசி வந்தார்.

இப்படியான நிலையில் தான், ஹாடி, கடந்த வாரம் டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 18-ஆம் நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல் பரவியது. இதனால், இந்தியாவின் மீதான கோபத்தை இந்தியன் மீது அவர்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தீபு சந்திர தாஸ், 30, என்ற இந்து இளைஞர் சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அவாமி லீக்கின் கட்சியின் மாணவர் அணி முன்னாள் உறுப்பினர் பைசுல் கரிம் மசூத் என்பவன் தான் ஹாடியைச் சுட்டதாகக் காவல் துறை கண்டறிந்துள்ளனர். தற்போது அவன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் காவல் துறை கூறுகிறது.

தற்போது, ஹாடியின் படுகொலையை முன்னிட்டு வங்கதேசம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு ஆதரவான டாக்காவிலியி உள்ள ‘பிரதம் ஆலோ’ மற்றும் ‘டெய்லி ஸ்டார்’ அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மீது கல் வீாித் தாக்குதல் நடத்தப்பட்டது.

தேசியக் குடிமக்கள் கட்சியின் (NCP) தலைவர் சர்ஜீஸ் ஆலம், “இடைக்கால அரசாங்கம், ஹாடி கொலையாளிகளை இந்தியா திருப்பி அனுப்பும் வரை, பங்களாதேஷ்கான இந்திய உயர் அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். நாங்கள் ஒரு போரில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வங்காளதேச தேசியவாதக் கட்சி நாஜிம் ஹால்தார், ‘ஷேக் ஹசீனாவும் கொலைகளுக்குப் பொறுப்பான அனைவரும் திரும்பி வரும் வரை’ போராட்டங்கள் தொடரும் என்றும் “நாங்கள் அவரது கொலையையும் இந்திய ஆக்கிரமிப்பு என்று நாங்கள் கருதுவதையும் எதிர்க்க வந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இவரது படுகொலையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில்

"வங்கதேசத்தின் இறையாண்மை, ஆற்றல், வாக்க உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மதிக்காத சக்திகளுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்தால், வங்கதேசம் பதிலடி கொடுக்கும் என்பதை நான் இந்தியாவிடம் தெளிவாகக் கூற விரும்புகிறேன்," என்றும் "வங்கதேசத்தை நிலையற்றதாக்குவது பரந்த பிராந்திய விளைவுகளை ஏற்படுத்தும்" என்றும், சுதந்திரம் பெற்று 54 ஆண்டுகள் கடந்த பிறகும், வங்கதேசம் இன்னும் நாட்டைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ‘கழுகுகளின் முயற்சிகளை எதிர்கொண்டு வருகிறது என்றும் தேசியக் குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னாத் அப்துல்லா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்திய அரசு தங்களது விரிவாக்கக் கொள்கையின் காரணமாகத் தங்களது அண்டை நாடுகளில் எப்படி மூக்கை நுழைக்கிறதோ, அப்படி 1971 முதல் வங்காளதேசத்தின் மீதும் தேவையற்ற வகையில் அரசியல் செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியைப் பயன்படுத்தி மோடி அரசு இந்துத்துவத்தை வளர்க்கிறது. இதன் விளைவாக அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதமும் வளர்ந்து வருகிறது.

தற்போது, ஹசீனா தேர்தலில் போட்டியிட முடியாமல் போய் விட்டால் தங்களது ஆதரவான அரசு அமையாது என்பதும் பாகிஸ்தானுடன் நல்லுறவு பேணுகிற அல்லது இந்திய எதிர்ப்பு அரசே ஆட்சி அமைக்கும் என்பது இந்திய அரசிற்குத் தெரியும். எனவே, தேர்தல் நடைபெறாமல் போவதற்களனா எல்லா வேலைகளையும் இந்திய அரசும், இந்துத்துவ இயக்கங்களும் , அவாமி லீக் கட்சியும் செய்யும். இதன் விளைவுதான் அரசியல் படுகொலைகளும் அதனையொட்டி நடைபெறுகிற கலவரங்களும்.

இந்தியாவின் விரிவாக்கக் கொள்கைக்கு எதிராக வங்கதேசம் போராடினால் மட்டும் போதாது நாமும் போராட வேண்டும். இன்னொரு நாட்டை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் ஒரு விரிவாக்க அரசு தன் சொந்த நாட்டு மக்களையும் அடிமையாக வைத்திருக்கவே விரும்பும். எனவே தான் வங்காள தேச மக்கள் மட்டுமல்ல நாமும் போராட வேண்டும் என்கிறோம். எனவே, இந்தியா வங்கதேசத்தில் பற்ற வைத்துள்ள நெருப்பைச் சேர்ந்து அணைப்போம்.

- பொழிலன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.