periyar kamarajar 259தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக் கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும் அதைக் கொண்டாடினால் மோக்ஷம் அடையலாம் என்றும் பிரசங்கம் செய்யக் கூட்டுவார்கள். ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ளவனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத் தக்கதேயாகும்.

இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலைவரைக் கண்டுபிடித்தது மிகவும் போற்றத் தக்கதேயாகும். தலைவர் திரு.வி.எஸ்.செங்கோட்டையா அவர்கள் பெரும் செல்வவான், பொதுஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர், அநேக நல்ல பொதுக்காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மத சம்மந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வருபவர். ஆதலால் அவரை இந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களை பாராட்ட வேண்டியதே. எனது உபன்யாசம் பயன்படுமானால் தலைவரால் சீர்திருத்தத் துறைக்கு அநேக லாபம் ஏற்படும். அவர்கள் என்னை குருவென்றும் மற்றும் பிரமாதமாய் புகழ்ந்து பேசினார். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை.

நானும் அவரும் மற்றும் இந்த ஊர்காரர்களும் ஒன்றேயாவோம். 30, 40 வருஷங்களாகவே தாய் பிள்ளைகள்போல் நெருங்கி பழகினவர்கள். ஒரே துறையில் வியாபாரம் செய்து வந்தவர்கள். அநேகர் எனக்கு வரவு செலவுகாரர்களாய் இருந்தவர்கள். அக்கிராசனர் வியாபாரத் துறையில் மேலோங்கி விட்டார். நான் வேறு துறையில் இறங்கி விட்டேன். இவ்வளவுதான் வித்தியாசம். தலைவரும் இந்தத் துறையில் இறங்கியிருந்தால் அபாரமான காரியங்களை சாதித்து இருப்பார். ஆதலால் அவரைவிட நான் ஒன்றும் சிறந்தவனல்ல. அவர் போன்றவர்கள் இவ்வித உபன்யாசங்களுக்குத் தலைவராகக் கிடைத்து மனமாறுதல் அடைந்தால் நாட்டில் எவ்வளவோ திருத்துப்பாடு ஏற்படும்.

தவிரவும் வயதில் மூத்தவன் என்கின்ற காரணத்திற்காக மரியாதை செய்வது என்கின்ற மூடப்பழக்க வழக்கத்தை ஒழிப்பது சீர்திருத்தத்தில் பட்டது என்று தலைவர் திரு.செங்கோட்டையா அவர்கள் கருதாததால் தன்னை வயதில் சிறியவன் என்று பல தடவை சொல்லி விட்டார். அது சரியல்ல. அறிவுள்ளவர்களும், அரும்பெரும் காரியங்களை தன்னலமற்று தியாக புத்தியுடன் செய்கின்றவர்களும்தான் பெரியவர்களே யொழிய, வெறும் வயதைப் பார்த்து, நரையைப் பார்த்து நடுக்கத்தைப் பார்த்து பெரியவர்கள் என்று மயங்குவது தவறுதலாகும். ஆகையால் இன்று நமக்குக் கிடைத்த தலைவர் சரியான தலைவரேயாவர். பெரியவரேயாவர். மற்றும் எனக்கு பல வரவேற்புப் பத்திரங்கள் கொடுத்தீர்கள். அதில் நீங்கள் எனது கொள்கைகளை நன்றாய் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், அந்தக் கொள்கைகளுக்கு என்னை ஊக்கமாய் உழைக்கும்படி எதிர்பார்க்கின்றீர்கள் - தூண்டுகின்றீர்கள் என்றுமேதான் கருதி அவற்றை நன்றியறி தலுடன் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

சீர்திருத்தம்

தவிர ‘சீர்திருத்தம்’ என்பதைப் பற்றிப் பேசுவதில் யாருக்கு சீர்திருத்தம்? எப்படிப்பட்ட சீர்திருத்தம்? எதற்காக சீர்திருத்தம்? எது சீர்திருத்தம்? அவற்றை எப்படி நிர்ணயிப்பது? அதற்கு முட்டுக்கட்டை எது? பிறகு அவற்றை எப்படி அமுலுக்கு கொண்டு வருவது? என்பவை போன்ற விஷயங்கள் சீர்திருத்தத் தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும். அப்படிப் பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும் மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும் உலக அக்கம்பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர்திருத்தமடைய வேண்டுமென்றும் தான் சொல்லக்கூடும். எவ்வித சீர்திருத்தத்திற்கும் பல விரோதிகள் உண்டு. அவை பழைமை, முன்னோர் வாக்கு, மகான் வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக் கொண்டாக வேண்டியது என்பவை போன்ற நிர்பந்தம் முதலியவைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவைகளுமாகும்.

தன்னை சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக்கொள்ளுகின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரத்தியக்ஷக் கண்களால் அலசிப்பார்க்க உரிமையும், தைரியமும் உடையவர்களாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ‘மற்றதெல்லாம் சரி’ ஆனால் ‘மதத்தைப் பற்றி பேசலாமா? கடவுளைப் பற்றி பேசலாமா? தேசீயத்தைப் பற்றி பேசலாமா? புராணங்களைப் பற்றி பேசலாமா? மகான்களைப் பற்றி பேசலாமா? மகான்கள் அபிப்பிராயத்தைப் பற்றி பேசலாமா? நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா’ என்பது போன்ற பிடிவாதகுணங்களும், தன்னம்பிக்கையற்ற குணங்களும், ‘ஆனால்’ களும் உடையவர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது. ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும் பரீக்ஷிக்கும் தாராள தன்மையும் வேண்டும். இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்தமடைந்து விட்டது. நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்? யார் வீட்டில் சாப்பிடலாம்? எதைச் சாப்பிட லாம்? என்பது போன்றவைகளில் இப்பொழுது, இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.

உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள். நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படுகின்றார்கள். மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்த மடைகின்றார்கள். நமது நாட்டு மக்கள் நம் பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தை தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமுலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.

முன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப் பட்டு விட்டது. அந்தப் பக்கம் திரும்புவ தென்றால் “உயிரை விடுகின்றேன்” என்கின்றார்கள். ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை ஆகிய எல்லாம் சோம்பேரிகள் வயிற்றுப் பிழைப்புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம்பேரிகளும்,ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒருநாளும் ஒப்பமாட்டார்கள். ஆதலால் நம் நாட்டு மக்களே நம் முன்னேற் றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள். இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேறவிடவே விடாது. சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள். அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்கு செல்வம் சேராமல் இருக்கும்படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால், தேசீயத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90 மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள். இந்த சூக்ஷி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசீயம் முதலாகிய எல்லா புரட்டுகளையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும்.

அதற்கு மக்கள் சம்மதிப்பதென்பது மிக்க கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும் பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும், வயிற்றுப்பிழைப்பாய்க் கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டு வருகின்றார்கள். அவர்களது தொல்லை அடியோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.

உதாரணமாக மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதி வித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள்ளு வானா? என்று பாருங்கள். அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பானா? அல்லது இருக்க மாட்டானா? என்று பாருங்கள். அன்றியும் மதப்பிரசாரம் செய்யவும் வெளி கிளம்ப மாட்டானா? என்றும் பாருங்கள். இதுபோலவே கடவுள், தேசீயம் என்பதின் பயனாய் வயிரு வளர்க்கும் சோம்பேரிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா? என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசீய பிரசாரம் செய்ய மாட்டார்களா? என்றும் யோசித்துப் பாருங்கள்.

இந்த முட்டுக்கட்டையும் எதிர்பிரசாரக் கூட்டமும் இயற்கையே யானாலும் அவை யொழிந்தாக வேண்டும். நமது மக்கள் படித்தவர்கள் என்றாலும், பாமர மக்கள் என்றாலும் இவ்விஷயங்களில் ஒரே மாதிரி மூடர்களாகவே இருக்கின்றார்கள்.

உதாரணமாக ஒரு ‘வடுகனோ’ ஒரு ‘கைக்கோளனோ’ ஒரு ‘செட்டியோ’ என்பவன் எவ்வளவுதான் சுத்தமாய் இருந்து கொண்டு ஒருபடி அரிசிக்கு 30 இட்டலி போட்டு இட்டலி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்பவர்கள் வாங்குவதில்லை. ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத் துணியுடனும் சொரி சிரங்குடனும், வேற்வை நாற்றத்துடனும், வெள்ளைப் படையுடனுமிருந் தாலும் ஒரு படிக்கு 60 இட்டலி வீதம் போட்டாலும் இட்டலி ஒன்று 0-0-6 பை வீதம் முன் பணம் கொடுத்து ‘சாமி சாமி’ என்று ‘சொக்கவாசல் பிரசாதம்’ போல் கேட்டு வாங்கிச் சாப்பிடத் தயாராயிருக்கின்றோம். இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. பண்டிதர்களிடமும், நாகரீக செல்வவான்களிடமுமே இந்த குணத்தை நான் பார்க்கின்றேன்.

ஆகவே சீர்திருத்தத்திற்கு யார் முட்டுக்கட்டை என்று பாருங்கள். இதுபோலவே கடவுள் விஷயத்திலும், கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்கு பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை இம்சித்து தப்பித்துக் கொள்வதற்கும், ஏமாற்றுவதற்கும், தான் மற்ற மக்களை விட அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக் கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோவில் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும், விளக்குப்போடவும், அதன் தலையில் பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய வஸ்துக் களைக் கொட்டிப் பாழாக்கவும், அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக் காரியம் செய்து வயிர் பிழைப்பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேரிகள் பிழைக்கவுமான காரியத்தில் அமர்ந்திருக்கும் கூட்டத்தார், கடவுள் புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா? மேலும் முட்டுக் கட்டையாய் இருக்க மாட்டார்களா? மற்றும் கடவுள் பிரசாரமும் செய்ய மாட்டார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப் புரட்டில் ஏமாறுகின்றவர்களும், இதற்கு அனுகூலமாய் இருப்பவர்களும் எல்லோரும் முழு மூட மக்கள் என்றே சொல்லி விடலாமா? என்றும் பாருங்கள்.

அப்படியும் இல்லையே. நல்ல சாமர்த்தியக்காரர்கள், வெகுதந்திர மாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள், ஜாலவித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்திசாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்தினுட்பத்துடனும், தந்திரத்துடனும், கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிரெறிய - எறிய அதைக்கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல்மனதுடனும், பசியுடன் குழந்தைகளும், பெண்களும், மொண்டி முடங்களும், கிழடுகளும் பசியால் பதரப் பதர அதை சற்றும் லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய், லட்சம் லட்சமாய் இம்மாதிரிகடவுள் புரட்டு காரியங்களில் செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும் அறியாத்தனமென்றும் சுலபத்தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இந்த மாதிரி ஆட்களின் காரியங்களால் பிழைக்கவிருக்கும் கோயிலைக் காத்துப் பிழைக்கும் மக்கள் கடவுள் பிரசாரம் செய்ய மாட்டார் களா? என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே தேசீயமென்பதும், ஏழைகளுக்குத் துன்பம் விளை வித்து வருவதும் குடியானவர்களுக்கு தொல்லை விளைவித்து வருவதும், தொழிலாளிகளுக்கும், சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரைபட்டினியையே அளித்துவருவதும் சோம்பேறிகள் மூன்று வேஷ்டியுடன் வாழவும் சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மெலுக்காக வெள்ளை வேஷ்டியுடன் திரியவும், பதவி ஓட்டுக்கும், உத்தியோகத்திற்கும் அலையும் கூட்டத்தார் இத்தேசீயத்தை நம்பியே முன்னுக்கு வரவேண்டுமென்று கருதி யிருக்கும் கூட்டத்தார், கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவது போல் தேசீய அர்ச்சகர்களுக்கு - தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண்டிருக்கும்போது தேசீயப் புரட்டை வெளியாக்குவது சுலபமா? அல்லது சாத்தியமா? என்றும் யோசித்துப் பாருங்கள். இவர்கள் முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா? என்றும் யோசித்துப் பாருங்கள். அது மாத்திர மல்லாமல் ஒரு கூட்டம் சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பிரசாரமும் செய்ய மாட்டார்களா? என்றும் கருதிப் பாருங்கள்.

ஆகவே எந்தப் புரட்டை யொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடைகின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள். பேசிப்பேசி எழுதியெழுதி இந்தக் கூட்டத்தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமே யொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக் கூடிய சுலபமான காரியமல்ல.

ஆனபோதிலும் விடாமுயற்சியுடன் சுயநலப்பற்றற்ற வாலிபர்களும், நம்பிக்கையுள்ள பெரியவர்களும் பாடுபட்டால் சீர்திருத்தம் சீக்கிரம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் சீர்திருத்தப் பக்கம் திரும்பி விட்டது. இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரிகாசம் செய்கின்றது. ஆதலால் தானாகவே சீர்திருத்தத்திற்கு பல நற்குறிகள் காணப்படுகின்றன. நான் உங்களைக் கேட்பதெல்லாம் அதைத் தடுக்க வராதீர்கள் என்பதேயாகும். சீர்திருத்தக் காரியங்களில் வேறு காரியத்தைப் போட்டு குழப்பாதீர்கள். சீர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன்வாருங்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறிதும் வித்தியாச மில்லாமல் ஒன்று போலாக்குங்கள். பிறகு உங்களால் என்ன காரியமாகாது என்று நினைக்கிறீர்கள்? ‘சுயராஜ்யம்’ ‘பரராஜ்யம்’ என்பதெல்லாம் உங்கள் காலடியில் தானாகவே வந்துவிடும். அதில்லாமல் வெறும் கூப்பாடு உண்மைப் பயனளிக்காது.

இந்த ஊரில் சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்பதாகக் கத்தலாம், கதர் கட்டலாம், கொடி பிடிக்கலாம், காந்திக் குல்லாய் போடலாம், தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை என்று சொல்லலாம், மகாத்மாவுக்கு ஜே! என்று கத்தலாம், ‘சுயமரியாதை இயக்கம் தேசீயத்திற்கு விறோதம்’ என்றும் சொல்லலாம். ஆனால் இந்த ஊர் தண்ணீர் கிணற்றில் ஒரு பறையன் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் மொள்ள ஒரு நான்கு பெயர்கள் சம்மதிப்பார்களா? தண்ணீர் மொண்டவனை உதைக்காமல் இருப்பார்களா? பாருங்கள். சுயராஜ்யம் என்பது வந்தால் மாத்திரம் இந்த ஊர் ஜனங்களுக்குப் புத்தி மாறிவிடுமா? யோசித்துப் பாருங்கள்.

ஆகவே ஒருவன் “கங்காதரா மாண்டாயோ?” வென்றால் எல்லாரும் விபரம் தெரியாமல் அழுகாதீர்கள். இந்த பலக்குறைவேதான் சீர்திருத்தத் திற்கு முட்டுக்கட்டை. ஆகையால் கவனித்து உங்களுக்குத் தோன்றுகிறபடி நடவுங்கள். நான் சொன்னதை யோசித்து ஆராய்ந்து பார்க்காமல் நம்பி விடாதீர்கள்.

(குறிப்பு : 02.08.1931 அன்று ஆடிப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் செங்குந்தர் சாவடியில் சித்தோடு சீர்திருத்தச் சங்கத்தார் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 09.08.1931)

Pin It