சகோதரிகளே! சகோதரர்களே!!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ எது எது உண்மையான - இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமா அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப் பட்டிருக்கின்றது. இது நமது நாட்டில் மட்டும் அல்ல உலக முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப் போயிற்று. ஆனால் நமது நாட்டில் மற்ற நாடுகளைவிட வெகு தூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது.

periyar 450முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்க மல்லாமல் நியாயப்பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேச முடியாது. ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப் பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல் சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.

ஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் அவைகள் சம்மந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச சன்மார்க்கம் என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகின்றேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமூகத்தார், அடைந்த தனிமனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள் - அடைகின்றார்கள் - அடைய முயற்சிக்கின்றார்கள். இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியே யடைந்து விட்டார்கள்.

உதாரணமாக கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் ருஷியர்கள், பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்கு பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்து விட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை அதாவது சமரசத்திற்கு எதிர்பிரசாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களை பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட் டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்க போட்டார்கள். அது போலவே சர்ச்சுகளை தொழிற்சாலை பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாமல் போக்குவரவுக்கும், மற்ற சௌகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள். பணக்காரர்கள் சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்களுக்கு பூமி, தொழிலில்லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாதவர்களுக்கு படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தினார்கள். கல்யாண முறையை ஒழித்து பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச் செய்து அளவுபடுத்தி ஆண் பெண் வாழ்க்கை இன்பத்திற்கு சௌகரியம் செய்தார்கள். இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.

ஆனால் நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள்? யார் கேட்பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி, உயர்ந்த ஜாதிக்காரன், அரசன் ஆகியவர்கள் தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90 க்கு மேற்பட்டவர்களாவார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள் அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?

முதலாவது உங்களைக் கேட்கின்றேன். நீங்கள் இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? (சிரிப்பு) ஆகவே இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு இன்றே அம்மூன்றும் ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில் இன்னும் அநேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால் இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வு தாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்மபலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை.

சகோதரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும் , மதத்திற்கும், கடவுளுக்கும் எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். என்ன பலன் அடைந்திருக்கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுகின்றீர்களா?

இன்றைய நிலைமையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லக்ஷியம் என்று கருதுவீர்களானால் நீங்கள் எதற்காக நாளைய தினம் வரையில்கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லக்ஷியமோ இருக்க வேண்டும். சும்மா அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருப்பது போல் வெறும் ஆகாரம் உட்கொள்ளவும், உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீனவுணர்ச்சியும், ஞானமுமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதே. இது போதாதா? இனி மனிதன் என்றும், ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும் பணக்காரன் என்றும், கடவுளை கண்டு பிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கின்றேன். இதைப் போன்ற அறிவீனமும் அவமானமும் ஆன காரியம் மனித சமூகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமூகம் அழிந்துபோவது ஜீவகாருண்ணியத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது.

ஆகவே உங்கள் லக்ஷியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள். அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள் அதை மற்றொரு ஜன்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜன்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜன்மம் என்னும் புரட்டை கற்பித்திருக்கின்றார்கள். முன் ஜன்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த் துண்டாவது உங்களுக்கு இந்த ஜன்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜன்ம காரியங்களின் செய்கைகளோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜன்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்து விட்டார் என்று முட்டாள் தனமாய்க் கருதி உங்கள் கஷ்டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததிகளுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள்.

உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அதுசிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேரியாகின்றீர்கள் - கடவுளுக்கு இடம் கொடுத்து கோயில்கட்டி உறுப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும் கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுது வந்தது போதும் என்றே சொல்லுகின்றேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள். உங்கள் பொருப்பை அதின் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள். அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களை சரியான வழியில் செலுத்தும். ‘கடவுளை’ப்போல் அவ்வளவு மோசமும், புரட்டும், ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்தமானங்களும் உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்கு பூசை போட்டீர்களானால் வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்!! விடுதலை!!! இதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.

தவிர பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்ல வேண்டி யிருக்கின்றது. அதை சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரன் கீழ் ஜாதிக்காரனை நடத்துவதை விட, பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.

அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்மந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின்றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள். அதுவும் நமது நாட்டில் மிகவும் மோசமாய் நடத்துகின்றார்கள். அந்த ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருக பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும். நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளால் வளர்க்கப் பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்; எத்தனைக் கிழவனானாலும் எனக்கு பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டு அனுபவிப்பேன்; ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன்தான் கட்டிக்கொள்ள வேண்டும். அவன் செத்துப் போனாலும் புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு; ஆண் பெண் சேர்ந்து அனுபவிக்கும் இன்பம் என்பதாக ஒரு குணம் உண்டு என்பதை மறந்து விடவேண்டும் என்று விதி ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. இதற்கும் கடவுள், மதம், முன்ஜன்மப் பலன் சம்பந்தப்படுத்தப் பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும்.

இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக் கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள நினைப்பது சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப் பட்டிருக்கின்றது. ஆண்களைப் போலவே பெண்கள் செய்யத் தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படிச் சொல்லுவது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப் போகும் என்றும் ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்கு புத்தி அநேககாலமாக சொல்லியாய் விட்டது. கல்யாணம் செய்து கொள்ளுவதே அடிமைப் பிரவேசம் என்றாய்விட்டது. ஒரு மனிதனாவது இவர்கள் சொல்லுகிறபடி யோக்கியனாகவில்லை.

ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டியதாய் விட்டது. இதுவரையில் ஆண்கள் பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம்; பலனேற்படவில்லை என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம் சென்று இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்லுகின்றோம். இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இது போல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்லுகின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்டம் இல்லாதவர்கள் கல்யாணத்தை ரத்து செய்து கொண்டு தனித்தனி வாழட்டும். இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும். பயப்படக் கூடாது.

பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகை செய்து கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும். முக்கியமாய் கண்டபடி கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. இதில் அதிக ஞாபகம் இருக்க வேண்டும். பிள்ளை பெறுவது கடவுள் செயல் என்றும், அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள் தனமாய் மக்கள் கஷ்டப் படுகின்றார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது 16 பிள்ளைகள் பிறக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்கின்றார்கள். இது அவர்கள் சொல்லுகின்றபடியே நடக்கும் என்று பயந்து கொண்டு நான் பேசவரவில்லை. ஆனால் இப்படி ஆசீர்வாதம் செய்வது எவ்வளவு முட்டாள்தனமும் பொறுப்பற்ற தன்மையும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே இந்தக் காரியத்தில் எத்தனைக்கெத்தனை ஜாக்கிரதை யாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்ளுகின்றீர்களோ அத்தனைக்கத்தனை கவலையும் தொல்லையும் ஒழிந்து சுதந்திரமும் விடுதலையும் அடைந்தவர்களாவீர்கள். எவனோ தெரிவில் போகின்றவன் “இப்படிச் சொல்வதால்” ஒரு சமயம் எல்லோருமே பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விர்த்தியாவது எப்படி என்பான். இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான் அருத்தம் . உலகம் விர்த்தியாவதற்காக மனிதன் பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம் பட்சி ஊர்வன முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளுக்கும் பொறிக்கும் குஞ்சுகளும் பீச்சும் குஞ்சுகளும் போதாதா என்று கேட்கின்றேன்.

வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள் அபிப்பிராயப்படி எதையும் முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.

(குறிப்பு :- ஈரோடு பெருந்துறையை அடுத்த கிரே நகரில் 26.01.1931 அன்று நடைபெற்ற ஆதிதிராவிட ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 08.02.1931)

Pin It