periyarr 450உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத் தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகியாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை நிறுத்தி தனது செல்வமெல்லாவற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு ஸ்தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர்.

அஹிம்சையில் மிக்க நம்பிக்கை யுமுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் தமது சமுகமான நாயர் சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மானித்து மற்றும் சில பாரிஸ்டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தியாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால் 6 மாதம் காவலில் வைக்கப் பட்டாலும் சிறையில் மிக்க கௌரவமாய் நடத்தப்பட்டு தண்டனை காலம் தீருவதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டு அவர் கோரியபடியே திருவாங்கூர் அரசாங்கம் இணங்கி வந்து வைக்கம் தெருக்களை பொதுஜன நடமாட்டத்திற்கு எல்லோருக்கும் பொதுவாய் விட்டு விட்டதுடன் மற்றும் பல ரோட்டுகளையும் எல்லா ஜாதியாருக்கும் பொதுவாக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

ஆகவே இவைகளிலிருந்து திரு. கே.பி. கேசவ மேனன் அவர்களின் யோக்கியமும், முயற்சியும் எப்படிப்பட்டதென்பது யாரும் நன்றாய் உணரலாம். அன்றியும் அவர் தென்னிந்தியாவிலுள்ள கௌரவமான கனவான்களில் ஒருவராகவும், எல்லா கௌரவமான கனவான்களின் சிநேகிதராகவும், ஐகோர்ட் ஜட்ஜ், திவான். நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகினவராகவுமிருந்து வந்ததும் இம் மாகாணத்தாருக்கு நன்றாய் தெரியும்.

இந்தப்படி உள்ள இவர் இங்கு வக்கீல் தொழில் நடத்துவது என்பது பிடிக்காமல் ஏனெனில் இவ்விடத்திய நியாயாதிபதிகள் பெரிதும் பார்ப்பனர்களாக ஏற்பட்டு வருகின்றபடியாலும், அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனச் சலுகையிலிருப்பதாகவும் மற்றும் பல காரணங்களாலும் அவருக்கு ஏற்பட்ட சில குடும்ப துக்கத்தாலும் இந்தியாவிலிருக்க மனமில்லாமல் மலேயா நாட்டுக்குப் போய் தனது தொழிலை கண்ணியமாய் நடத்தி வரலாமென்று கருதி அங்குள்ள நியாயாதி பதிகளின் நேர்மை குணத்தை நம்பி மலேயா நாட்டுக்குச் சென்றால் அங்கும் இவ்விடத்திய பார்ப்பனர்களே தொல்லை கொடுக்க ஆரம்பித்து அவருக்குப் பல உபத்திரவம் செய்து வருவதாகத் தெரிகிறது. இதைப்பற்றி முன்னொரு தடவையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.

அதாவது திரு. கே. பி. கேசவ மேனனவர்கள் மீது மலாய் நாட்டு வக்கீல்களில் சிலர் பொறாமை காரணமாக குறிப்பாய் சொல்ல வேண்டு மானால் ஒரு பார்ப்பனரின் கிருத்துருவத்தின் மீது அவரை கு.ஆ.ளு. கோர்டு களின் வக்கீல்கள் சங்கத்தில் சேர்க்கக் கூடாதென்று பல முயற்சிகள் செய்யப்பட்டன.

அதென்னவெனில் திரு. கே. பி. கே. மேனன் ராஜத்துரோகி என்றும், அவர் சிறை சென்றவர் என்றும், வக்கீலாயிருக்க லாயக்கற்ற வரென்றும், தொழிலாளர்களை தூண்டிவிட்டு கலகம் செய்பவரென்றும், பல மாதிரியான விஷமப் பிரசாரங்கள் செய்து அவரை அங்கு அனுமதிக்காமல் இருக்கும் படியாகச் செய்யப் பல விதத்திலும் பலமாக முயற்ச்சித்தார்கள்.

எவ்வளவு சூட்சி செய்தும் கடைசியாக திரு. மேனன் அவர்கள் ஆதியில் எதிர்பார்த்தது போலவே மலாய் நாட்டு ஜட்ஜிகளின் நேர்மை குணத்தால் வெற்றி பெற்று அந்த நாட்டு நீதிவாத வக்கீலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் என்ற சேதி கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

திரு. கே.பி.கே. மேனன் அவர்களையும் பாராட்டுவதோடு மலாய் நாட்டுத் தலைமை நீதிபதி அவர்கள் பார்ப்பது போலவே நாமும் அவர் மலாய் நாட்டுத் திலகமாய் விளங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.12.1930)

Pin It