பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சியைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையும் மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த பிறகு பல வாலிபர்கள் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுத்து சத்தியாக்கிரகத்தை சடுதியில் ஆரம்பிக்கும்படியாகச் சொல்லி தங்கள் உற்சாகத்தைக் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பயனுள்ள வேலை செய்யவேண்டுமானால் அது சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறில்லை என்பதை நாம் மனப்பூர்த்தியாக ஒப்புக் கொள்கிறோம். நமது நாட்டில் ஆசாரச் சீர்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும் ஆரம்பித்து எவ்வளவு காலமாய் நடைபெற்று வருகிறது? இவ்விரண்டிற்காக நமது மக்கள் சிலவழித்த காலம், பொருள் எவ்வளவு? இவ்வளவு ஆகியும் இதன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தலைவர் என்போரும் மக்களை ஏமாற்றி தன் தன் சுயநலத்திற்கு வழி தேடிக் கொண்டார்களேயல்லது நாடு அடைந்த பலன் என்ன?

periyar karunadhini 450நாட்டில் மதிக்கத்தகுந்த ஒவ்வொரு பெரியாரும் ஆசாரத்திருத்தம் ஏற்பட வேண்டும், தீண்டாமை ஒழிய வேண்டும், யாவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும், வைதீகப் பிடிவாதங்கள் ஒழிய வேண்டும், அதில்லாவிட்டால் விடுதலையில்லை, சுயராஜ்யமில்லை என்பதாகப் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். இதை நாடு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் குறிப்பு காட்டி இருக்கிறார்கள். அநேக மகாநாடுகளில் இதைப் பற்றிய தீர்மானங்களை ஏகமனதாய் நிறைவேற்றியும் இருக்கிறார்கள். இவற்றைச் செய்த பெரியார்கள் மக்களால் மதிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால் அனுபவத்தில் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது? இன்று வரை ஒரு காரியமும் இல்லையே. இக்குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா நேற்றா? ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பாடுபட்டு வந்திருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்து வருகிறது. அவ்வாதாரங்கள் எல்லாம் மதிக்கப்படுகிறது, பூஜிக்கப்படுகிறது. ஆனால் பலன் என்ன? என்று மறுபடியும் கேட்கிறோம்.

ராமாயணத்தில் குகனுடன் ராமர் சரிசமமாய் உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள்.

பாரதத்தில் விதுரன் வீட்டில் கிருஷ்ணன் சாப்பிட்டார் என்கிறார்கள். பாகவதத்தில் திருப்பாணர் ஆழ்வாரானார் என்கிறார்கள்.

திருவிளையாடல் புராணத்தில் நந்தனார் அறுபத்து மூவரில் ஒருவராகி நாயனாராயிருக்கிறார் என்கிறார்கள். இவ்விருவரும் கோயில்களில் பூஜிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். பெரிய புராணத்தில் ஜாதியில்லை என்று சொல்லி இருக்கிறது என்கிறார்கள்.

உமாபதி சிவம், பெத்தான் சாம்பானுக்கு முத்தி கொடுத்ததாய் சொல்லுகிறார்கள். கபிலர் பார்ப்பனனுக்கும் பறையனுக்கும் வித்தியாசமில்லை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள். அவ்வை “ஜாதியிரண்டொழிய வேறில்லை” என்று சொன்னாள் என்கிறார்கள்.

திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னதாக சொல்லுகிறார்கள்.

இராமலிங்க சுவாமிகள் “ஜாதி குலம் பேசும் சகடர்கள்” என்று பாடியதாகச் சொல்லுகிறார்கள்.

திருநாவுக்கரசு நாயனார் “சாத்திரம் பல பேசும் சளாக்கார்காள் கோத்தி ரமுங்குலமுங் கொண்டென் செய்வீர்கள்” என்று கேட்டதாகச் சொல்லுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஆதாரமுங் காட்டுகிறார்கள்.

மதாச்சாரியார்கள் என்போர்களான ராமானுஜர், ஜாதி வித்தியாசமில்லை என்று சொல்லி பறையர்களையெல்லாம் பிடித்து, நாமம் போட்டு, பூணூல் போட்டு, பஞ்சகச்சம் கட்டச் செய்து, அய்யங்காராக்கினதாகச் சொல்லுகிறார்கள். சங்கராச்சாரியார் தீண்டாமை இல்லை என்று சொன்னதோடு பறையனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக சொல்லுகிறார்கள். இந்து மதத்திலேயே தீண்டாமை இல்லை என்கிறார்கள்.

மகமதியம், கிறிஸ்தவம், பௌத்தம், சமணம், பாரசீகம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம சமாஜம் முதலிய மதங்களிலெல்லாம் தீண்டாமை இல்லை என்கிறார்கள். அறிவாளிகளான தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், ராமதீர்த்தர், ராமகிருஷ்ண பரம அம்சர், ஜோதிறாம்பூலே, ரபீந்ரநாத் டாகூர், காந்தி முதலிய மகாத்மாக்கள் தீண்டாமை இல்லை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள்.

இவைகள் தவிர, வேதத்தில் தீண்டாமை இல்லை, கீதையில் தீண்டாமை இல்லை, சைவத்தில் தீண்டாமை இல்லை, வைணவத்தில் தீண்டாமை இல்லை என்றும் சொல்லுகிறார்கள். இவ்வளவு மதங்களும் இவ்வளவு மதாச்சாரியார்களும் இவ்வளவு பெரியார்களும் இவ்வளவு ஆதாரங்களும் தீண்டாமை இல்லை என்று சொல்லியும் எழுதியுமிருந்தும் நமது நாட்டில் மாத்திரம் பிரத்தியக்ஷத்தில் தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா? என்று பாருங்கள். தீண்டாமை மாத்திரம் என்று சொல்ல முடியுமா? தீண்டாமை, பேசாமை, நடக்காமை, நிழல் மேலே படாமை, கண்ணில் தென் படாமை முதலியவைகள் இருக்கிறதா இல்லையா? அதுவும் கோவில், குளம், பள்ளிக் கூடம், தெருவு முதலிய இடங்களிலும், பூச்சி, புழு, நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் முதலியவைகள் இருப்பதற்கு நடப்பதற்கு மலஜலம் கழிப்பதற்கு ஆட்சேபணையில்லாததுமான இடங்களில் எல்லாங்கூட தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா? சோத்துக்கடை, காப்பிக்கடை, ரயில் வண்டி முதலிய இடங்களில் இருக்கிறதா இல்லையா? இதற்காக எத்தனையோ காலமாய் எத்தனையோ பேர் பாடு பட்டும் முடியாமலிருக்கிறதா இல்லையா?

ஏன் இப்படி இருக்கிறது? என்பவைகளை யோசித்துப் பாருங்கள். வாலிபர்களே! உங்களைத்தான் கேட்கிறோம். தயவு செய்து யோசித்துப் பாருங்கள். இவற்றைப் போக்கடிக்க யோக்கியமான முறையில் சரியான விலை கொடுக்க முன் வந்து நீங்கள் யாரும் இதுவரை முயற்சிக்கவேயில்லை என்பதும், அதனால்தான் அது (தீண்டாமை) இன்னமும் நமது நாட்டில் நமது உருவமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். எனவே இதைப் போக்கடிக்க வேண்டாமா? வேண்டுமென்பீர்களானால் உங்கள் கையில் புஸ்தகம் கூடாது. நீங்கள் இது முடியும் பரியந்தம் படிக்கக்கூடாது. பள்ளிக்குப் போகக்கூடாது. கோவிலுக்குப் போகக்கூடாது. ஏன் என்று கேட்பீர்களானால் நீங்கள் எவ்வளவு படித்து எவ்வளவு உத்தியோகம் பார்த்து எவ்வளவு பெரிய மனிதனாகி எவ்வளவு பக்திமானாகி கடவுளோடு கடவுளாய் உரைந்து கொண்டிருந்தாலும் தீண்டாமை யென்பது ஒருக்காலும் உங்களை விட்டுப் போய் விடாது. ஜஸ்டிஸ் கிருஷ்ணன், ஐகோர்ட் ஜட்ஜ் வேலை பார்த்தும் தீண்டாதவராய்த்தான் செத்தார். அவர் பிள்ளை குட்டிகள் இன்னமும் தீண்டாதவராய்த்தான் இருக்கிறார்கள். மந்திரி முதலிய பெரிய உத்தியோகம் பார்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது தீண்டாதார்களாகிய சூத்திரர்களாய்த்தானிருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மடாதிபதிகள் தம்பிரான்கள் எல்லாம் என்னதான் ஸ்ரீலஸ்ரீ பட்டமிருந்தாலும் சூத்திரர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். மைசூர், புதுக்கோட்டை மகாராஜாக்களெல்லாம் சூத்திரர்களாய்தான் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியை உலகமெல்லாம் போற்றினாலும் அவரும் தீண்டாதார் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த நிலையில் நீங்கள் படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? யாரை காப்பாற்றப் போகிறீர்கள்? நீங்கள் பாசானதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; பெரிய உத்தியோகம் பார்த்துப் பணம் சம்பாதித்து அரசபோகம் அனுபவித்தாகவே வைத்து கொள்ளுங்கள் ; சாகும் போது யாராய்ச் சாவீர்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். குற்றமற்ற மனிதனாய்ப் பிறந்து இருந்தும் சூத்திரர்களாய், தீண்டாதவர்களாய், பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்களாய், மிருகத்திலும் தாழ்ந்தவர்களாய், மனிதத்தன்மை அற்றவர்களாய், சுயமரியாதை இல்லாமல்தான் சாவீர்களா? அல்லது வேறுவிதமாய் சாவீர்களா? என்பதை நினைப்புக்கு கொண்டு வாருங்கள். நீங்கள் எவ்வளவு பணந் தேடி வைத்திருந்தாலும் உங்கள் பிள்ளைகளும் குட்டிகளும் அப்படித்தான் சாகுமா? வேறு விதமாய்ச் சாகுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள். எனவே உங்கள் போக போக்கியமும் வாழ்வும் பணமும் பதவியும் பட்டமும் என்ன செய்வதற்கு? ஒரு நாய்க்கு இருக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லையென்று ஒப்புக் கொள்ளுகிற நீங்கள் ஒரு பன்றிக்கிருக்கிற யோக்கியதை உங்களுக்கில்லையென்று ஒப்புக் கொள்ளுகிற நீங்கள் இதைப் பெறாமல் எதற்காக இருக்கிறீர்கள் என்பதற்காகத்தான் படிப்பை விட இதை முக்கியமாய் கவனியுங்கள் என்கிறோமே யொழிய வேறில்லை.

முதலில் தீண்டாமையை விட இழிவான சூத்திரத் தன்மையை ஒழிக்க முயலுங்கள். அதற்குத் தக்க விலை கொடுங்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்துவரும் அக்கிரமத்தை மேடைப் பேச்சினாலும் பத்திரிகைப் பிரசுரத்தினாலும் புராண உபதேசத்திலும் தீர்த்து விடலாம் என்று எண்ணுவது அறியாமையேயாகும். அதனால்தான் மேற் கண்ட இத்தனை பெரியோர்களின் உபதேசமும் கட்டளையும் பாடல்களும் படிப்பினைகளும் ஆதாரமும் ஒரு கூட்டத்தாரின் வயிறு வளர்ப்புக்கு உதவுகிறதேயல்லாமல் தீண்டாமையை அசைக்கக்கூட முடியவில்லை. தீண்டாமையிலிருந்து விலகுவதேதான் சுயராஜ்யம். அதுவேதான் விடுதலை, அதுவேதான் உரிமை, அதுவே தான் சுயமரியாதை என்பதை உணருங்கள். விடுதலை சும்மா கிடைக்காது. உயிரை விட வேண்டும், இரத்தம் சிந்த வேண்டும், வெட்டுப்பட வேண்டும், குத்துப்பட வேண்டும், சுட்டுக் கொல்லப் பட வேண்டும், ஜெயிலில் சாக வேண்டும். இம் மாதிரி காரியமில்லாமல் உண்மையில் விடுதலை பெற்ற நாடு எது? ஜாதி எது? சுயமரியாதை பெற்ற சமூகம் எது? என்பதை யோசியுங்கள்.

இதற்குத் தயாராயிருக்கிறீர்களா? இருக்க முடியுமா? என்று உங்கள் வீரமுள்ள பரிசுத்தமான மனத்தைக் கேளுங்கள். அது சம்மதங்கொடுத்தால் உடனே உங்கள் புஸ்தகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சத்தியாக்கிரகத்தை நடத்த வாருங்கள். நாங்கள் வரத் தயாராயிருக்கிறோம் என்று எழுதுங்கள். இப்படிச் செய்வீர்களானால் இங்கு மாத்திரமல்லாமல் எங்குமே தீண்டாமை என்கிற வார்த்தையே இல்லாமல் செய்து விடுவீர்கள். சூத்திரத் தன்மை ஒழித்தவர்களாவீர்கள். வாலிபர்களாகிய உங்களால் தான் இந்தப் பெரிய காரியம் செய்ய முடியும். வாலிபர்களாகிய நீங்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு மனிதத் தன்மையையும் சுயமரியாதையையும் விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்க யோக்கியதை உடையவர்கள். எனவே தியாகத்திற்கு, அஹிம்சையும் குரோதமும் துவேஷமுமற்ற தியாகத்திற்கு தயாராகுங்கள்.

(குடி அரசு - தலையங்கம் - 25.09.1927)

Pin It