விளம்பரம்

பாட்னா முடிவிற்குப் பிறகு, சுயராஜ்யக் கக்ஷியார் வெற்றிக்கொடி பிடித்து திக்விஜயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காரியத்தில் எப்படியிருந்த போதிலும், இவர்கள் போகிற பக்கங்களில் எவ்வளவு இழிவபட்டுக் கொண்டு வந்தாலும் பத்திரிகைகளில் மாத்திரம், “சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி மேல் வெற்றி, சுயராஜ்யக் கட்சி ஸ்தாபனம் செய்தது, சுயராஜ்யக் கட்சியில் அவர் சேர்ந்தார், இவர் சேர்ந்தார்” என்கிற விளம்பரங்களுக்குக் குறைவில்லை. ஆனால் கட்சிக்குள்ளிருக்கிற பழைய தலைவர்களோ ஒருவருக்கொருவர் அபிப்பிராயபேதங்களால் சண்டைபோட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.

தினந்தோறும் விடிந்தெழுந்தால் சுயராஜ்யக் கக்ஷியாரின் நடபடிக்கைக்குச் சமாதானம் சொல்லுவதும், சரியான சமாதானம் ஒன்றும் கிடைக்காத சந்தர்ப்பங்களில் மகாத்மாவின் பெயரைச் சொல்லி மழுப்பி விடுவதுமான தந்திரங்களோடே, பாமர ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு வரப்படுகிறது.

அச்சில்லாமல் தேரோட்டம்

சுயராஜ்யக் கக்ஷி, சுயராஜ்யக் கக்ஷியென்ற பேர் மாத்திரம் இருக்கிற தேயல்லாமல், சுயராஜ்யக்கட்சிக்கென ஏற்பட்டிருக்கும் திட்டமென்ன? ராஜீயத் திட்டம் ஏதாவது இருக்கிறதா? பொருளாதாரத் திட்டம் ஏதாவது இருக் கிறதா?சமூக முன்னேற்றத் திட்டம் என ஏதாவது இருக்கின்றதா? வென ஊன்றிப் பார்த்தால் உத்தியோகத்தையெல்லாம் தாங்களே கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்பதைத்தான் ராஜீயத் திட்டமாகவும், அதன் சம்பளமெல்லாம் தங்களுக்கே வரவேண்டு மென்பதுதான் பொருளாதாரத் திட்டமாகவும் இந்த உத்தியோகமும் சம்பளமும் பிராமணர்களாகிய தங்கள் ஜாதி யாருக்கே வந்துவிட வேண்டுமென்பதுதான் சமூகத் திட்டமாகவும் வைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வேறொன்றும் காணோம். இதைத் தவிர தேசநலத்தை யுத்தேசித்தாவது, ஏழை ஜனங்களையும், தொழிலாளரையும் உத்தேசித்தாவது, தாழ்த்தப்பட்டவர்களும், கொடுமை செய்யப்பட்ட வர்களுமான தீண்டாதார் முதலியோர் முற்போக்கைப் பற்றியாவது ஏதாவது ஓர் திட்டம் சுயராஜ்யக்கக்ஷியினர் வசமிருக்கிறதா? என்றாவது பார்த்தால், கதரிலும் நம்பிக்கையில்லை. தீண்டாமையும் காங்கிரசில் இருக்கக்கூடாது. பிராமணரல்லாதார் வசம் இருக்கும் உத்தியோகங்களையும் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்கிற கொள்கைதான் நிறைந்து கிடக்கிறது.

ஆனால், இந்த விஷயம் பாமர ஜனங்களுக்குத் தெரியாமலிருக்கும் பொருட்டாக, கூட்டங்களுக்கு வருகிறபோது மாத்திரம் இரண்டொருவர் கதர்த்துணிகளை உடுத்தியும், கதர்க்குல்லாயைப் போட்டும், பொது ஜனங்களை ஏமாற்றுவதும் “தன்னைப் பொறுத்தவரையில் ஜாதி வித்தியாசம் கிடை யாது. ஆனால், தன் ஜாதியார் ஒப்புக்கொள்ளாததினால் அதை இப்போது ஒரு கொள்கையாய் எடுத்துக் கொள்ளுவதற்கில்லை” என்று சொல்லிவிட்டு மகாத்மா காந்தியை வைவதற்கும், தங்கள் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்து வதற்கும், ‘பிராமணன்’ என்ற ஓர் பத்திரிகையை நடத்தப் பணங்கொடுப்பதும், வருணாசிரமமென்னும் பிராமணாதிக்கத்தை நிலை நிறுத்த சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு அக்கிராசனாதிபதியாயிருப்பதும் ஆன காரியங்களைச் செய்துகொண்டு, பிராமணரல்லாதாரில் சில சுயநல அபிமானிகளையும், உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டவர்களையும் தங்கள் சுயாதீனம் செய்து கொண்டு அவர்களைக் கொண்டே தங்களை விளம்பரம் செய்து கொள்ளுவதும், அவர்களைக் கொண்டே தங்கள் கட்சிப் பிரசாரம் செய்து கொள்ளுவதும், வயிற்றுக் கொடுமையினால் கஷ்டப்படுகிறவர்களையும், கீர்த்திக்கு ஆசைப்படுகிறவர்களையும், நிலையில்லாத பயங்கொள்ளிகளை யும் காசு பணம் கொடுத்தும், விளம்பரங்களுக்கு இடம் கொடுத்தும் தங்கள் சுயாதீனப்படுத்திக் கொண்டு, பிராமணரல்லாதாரையும் மற்றும் பல கக்ஷிக் காரர்களையும் காட்டிக் கொடுக்கும் படியும், வையும் படியும் செய்து அச்சில்லாமல் தேரை ஓட்டிக் கொண்டு போகிறார்கள்.

இதுவரையில் செய்தது

சுயராஜ்யக் கட்சி ஆரம்பித்த காலத்தில் சர்க்காரை ஸ்தம்பிக்கச் செய்ய வெளியில் ஒத்துழையாமை செய்தால் மாத்திரம் போதாது, உள்ளே போயும் ஒத்துழையாமை செய்ய வேண்டும். சட்டசபைகளைக் கைப்பற்றி முட்டுக்கட்டை போட வேண்டும்.

சர்க்கார் எந்தத் தீர்மானம் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும். எதிர்க்கச் சக்தியில்லாவிட்டால் ஒரு நடவடிக்கையிலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்க வேண்டும்.

கமிட்டிகளிலோ அல்லது வேறு எந்தத் தெரிந்தெடுப்பிலோ ஸ்தானம் பெறக்கூடாது. போக்குவரத்து படிச்செலவு ரயில் சார்ஜ் கூட வாங்குவதில்லை என்று இன்னும் பலவாறாக சொல்லிப் பாமர ஜனங்களை நம்பும்படிச்செய்து சட்டசபை ஸ்தானங்களை வெகுவாகக் கைப்பற்றினார்கள்.

ஒருவாறாக உள்ளே சென்று இரட்டையாட்சியை ஒழிக்கிறோம், ஒழிக்கிறோமென்று சொல்லிக்கொண்டு, சட்டசபையிலுள்ள மந்திரி முதலிய இந்திய உத்தியோகஸ்தர்களை மாத்திரம் குறை கூறிக்கொண்டும், அவர்களை உபத்திரவப்படுத்திக்கொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சட்டசபைகளின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்து எவ்வளவு உத்தியோகங்களை யும், பணங்களையும் சம்பாதிக்கச் சாத்தியப்படுமோ அவ்வளவிற்குத் தகுந்தபடி, கிடைக்கக் கூடாத இடத்தில் வேண்டாமெனச் சொல்லிக் கொண்டும், கிடைக்கக்கூடிய இடத்தில் அதுவேறே சங்கதி, இதுவேறே சங்கதி. அது வேறே விஷயம், இது வேறே விஷயம். அந்த மாகாணத்தின் நிலை வேறு, இந்த மாகாணத்தின் நிலை வேறு எனச்சொல்லிக் கொண்டும், இது கக்ஷி சம்மதத்தின் பேரில் செய்யப்பட்டது, அது கட்சி சம்மதமில்லாமல் செய்யப் பட்டது எனச் சொல்லிக்கொண்டும் அகப்பட்ட வரையிலும் அபகரித்துக் கொண்டு வருகிறார்கள். கேட்டால் சுயராஜ்யக் கட்சியாரின் தீர்மானமென்றும், சமயத்துக்குத் தக்கப்படி நடந்து கொள்வது ராஜதந்திரமென்றும் சொல்லிக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்.

இதுவரையில் சில மாகாணங்களில் தங்கள் உத்தேசப்படி பெரும் பான்மை ஸ்தானங்களைக் கைப்பற்றி மந்திரி பதவிகளை ஒழித்தார்கள். மேலே இனி என்ன செய்வதென்று அதைப்பற்றி யாதொரு வார்த்தையும் காணோம். ஆனால், அதை யார் பெறுவதென்கிற ஓர் முடிவுக்கு தங்களுக்குள் இன்னும் வராததால், மந்திரி பதவியை ஒப்புக்கொள்ள வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டுமெனச் சிலரும், தங்கள் மாகாணத்தில் தங்களுக்குக் கிடையாதென்னும் எண்ணமுள்ளவர்கள் கிடைக்கிற சந்தர்ப்பம் வரையில் வேண்டாம், வேண்டாமெனச் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்கக்கூடிய இவர்களில் வெகு சீக்கிரம் பெற்றுக் கொள்ளப் போகிறார் கள். அதிலொன்றும் ஆnக்ஷபனையில்லை. தவிர, 4000, 5000 சம்பளம் பெறும் உத்தியோகங்கள் பல பெற்றாகிவிட்டது. தினம் 100, 200 கமிஷன் கிடைக்கக்கூடிய கமிட்டிகளில் ஸ்தானம் பெற்றாகிவிட்டது.

சில ஸ்தானங்கள் உத்தியோகம் ஏற்றுக்கொண்டது, கட்சி கொள்கைகளை மறந்து கட்சியையே விலகும்படியாகிவிட்டது. உதாரணமாக, ஸ்ரீமான்கள் படேலும், தாம்பேயும் சட்டசபைத் தலைவர்கள் ஸ்தானங்களைப் பெற்ற காரணங்களால், தாங்கள் இனி அக் கட்சிக்காரர்களென்னும் கொள்கைகளிலிருக்கமுடியாமல், ஒரு கட்சியிலும் சேராத பொது மனிதர்களாயிருக்க வேண்டியதென்றும் அதனால் ஒருவர் வைஸிராய் வீட்டுக்கு பத்து தடவை போவதினால் குற்றமில்லையென்றும், மற்றொருவர் நிர்வாக சபை அங்கத்தினர் பதவியை ஒப்புக்கொள் வதில் குற்றமில்லையென்றும் நியாயம் சொல்லி அந்தப்படிக்குச் செய்துமாகி விட்டது.

இவற்றை கட்சியின் முக்கியஸ்தர்களான தலைவர், உபதலைவர், மாகாணத் தலைவர், காரியதரிசி முதலியோர்களும் ஒப்புக்கொண்டும் ஆகிவிட்டது. பொது ஜனங்களுக்குப் பயந்து கொண்டு ஸ்ரீமான் தாம்பே விஷயத் தில் மட்டும் கட்சியின் சம்மதமிராமல் போனது மாத்திரம் தப்பிதமென்றும் அதைத் துரோகம் என்றும், வெட்கம் என்றும் சொல்லி வருகிறார்கள். ஸ்ரீமான் தாம்பேக்கோ, கக்ஷியின் சம்மதம் பெறுவதில், ஒருவித ஆnக்ஷபனையில்லா விட்டாலும், சுயராஜ்யக் கட்சியின் சம்மதங் கேட்க ஆரம்பித்தால், தன்னை ஏமாற்றிவிட்டு வேறு சுயராஜ்யக் கட்சிக்காரர் அதை ஏற்றுக்கொண்டால் என்ன செய்வதென்னும் பயத்தைக் கொண்டு, சட்டசபை அக்கிராசனராயிருக்கச் சம்மதம் கொடுத்ததே போதுமென்று சொல்லுகிறார்.

பம்பாய் மாகாண சுயராஜ்யக் கக்ஷித் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சி நிர்வாக சபை மெம்பருமான, ஸ்ரீமான் ஜெயகர் அவர்கள், “ஸ்ரீமான் படேல் இந்தியா சட்டசபை அக்கிராசனப் பதவியை ஒப்புக் கொண் டதற்கும், ஸ்ரீமான் தாம்பே நிர்வாக சபைப் பதவியை ஒப்புக் கொண்டதற்கும் வித்தியாசமில்லை” என்று சொல்லிவிட்டார். இவர் பம்பாய் மாகாணத்தில் சட்ட ஞானத்திலும் வரும்படியிலும் சென்னை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் சட்ட ஞானத்திலும், வரும்படியிலும் இளைத்தவரல்ல.

இனி மகாராஷ்டிர தேசத்திய தலைவரும், அகில இந்திய சுயராஜ்யக் கட்சியின் உபதலைவருமான ஸ்ரீமான் கேல்கர், “சுயராஜ்யக் கட்சியின் தலைவரும் காரியதரிசியுமான ஸ்ரீமான்கள் மோத்திலால் நேரு, ஏ.ரெங்க சாமி ஐயங்கார் இவர்கள் ராணுவக் கமிட்டியிலும், கோர்ட்டு அவமதிப்பு மசோதா கமிட்டியிலும் ஸ்தானம் பெற்றதைவிட, ஸ்ரீமான் தாம்பே நிர்வாக சபை ஸ்தானம் பெற்றது மோசமல்ல”வெனச் சொல்லி விட்டார். இவர் சென்னையிலுள்ள ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கும் மத்திய மாகாணத் திலுள்ள பண்டித நேருவுக்கும் ஒரு விதத்திலும் இளைத்தவரல்ல. அதோடு ஸ்ரீமான் திலகருடைய மருமகப் பிள்ளையென்றும், பிரதம சிஷ்யரென்றும் தனி யோக்கியதைப் படைத்தவர். சென்னையிலுள்ள சுயராஜ்யக் கட்சிக்காரர் களோ, ஸ்ரீமான் தாம்பேயின் நியமனத்தைப் பற்றிக் கண்டிக்கக் கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தின் போது, சுயராஜ்யக் கட்சித் தலைவர்களிலொருவர் ³ தீர்மானத்தைக் கண்டித்ததாகவும், இவ்விதம் கண்டித்தால் நமது செல்வாக்கு குறைந்து போய்விடும் என்று அவரைக் கண்டித்ததாகவும், அதனால் அவர் எழுந்து வெளியில் வந்து விட்டதாகவும் ஒரு குருவி வந்து சொல்லியிருக்கிறது. இது உண்மையற்றதாயிருந்தாலும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. அல்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் விருந்து முதலியவற்றுக்குப் போகக் கூடாதென்று, சென்னை சுயராஜ்யக் கட்சிக்காரர் பறையடித்துக் கொண்டது பொது ஜனங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கும்.

இப்போது, சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் ஓர் தபால் இலாகா அதிகாரிக்கு நடந்த விருந்திற்கு, சென்னை சுயராஜ்யக் கட்சித் தலைவர்களெல்லாம் போயிருந்தார்கள். இதன் காரணம் விருந்தாளிக்கு பூணூல் இருந்ததினாலும், தங்கள் வகுப்பாருக்கு உத்தியோகங்கள் கொடுக்கத் தகுந்த அதிகாரம் அவர் கையில் இருந்ததினாலும் குற்றமில்லையென்றும் நினைத்துவிட்டார்கள் போலும். இதர மாகாணங்களிலேயும் இதைப் பின்பற்றுவதோடு விருந்துகள் நடத்துவதற்குப் பணமுங் கொடுத்திருக்கிறார் கள். பணம் கொடுப்பதற்கு ஒரு நிபந்தனை மாத்திரம் வைத்துக்கொண்டிருக் கிறார்களாம். அதென்னவென்றால், தாங்கள் கொடுக்கும் பணத்தில் மாத்திரம் சாராயம் வாங்கக் கூடாதாம். வேறு யார் பணத்தில் வாங்கிக் கொண்டாலாவது உபயோகப்படுத்திக் கொண்டாலாவது தங்களுக்கு தோஷமில்லையாம்.

உள்ளே ஒத்துழையாமை

ஒத்துழையாமையென்பது சென்னையில் சர்க்காருக்கனுகூலமாய், பிராமணரல்லாதாருக்கு விரோதமாய், பிராமணரல்லாதாருடன் ஒத்துழையாமை என்பதுதான் சென்னை, பம்பாய், மராட்டா முதலிய சுயராஜ்யக் கட்சியாரின் அகராதியில் ஏற்பட்டுப் போய்விட்டது. அல்லாமல் சுயராஜ்யக் கக்ஷி ஸ்தாபனம் செய்யும் இடங்களிலெல்லாம் ராவ் பகதூர், ராவ் சாகிப் முதலிய பட்டதாரிகளையும் ஒத்துழைப்புக்காரர்களையும், பூணூல் போட்டவர் களையும் பார்த்தே அவர்கள் வசம் ஸ்தாபனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் அடுத்த தேர்தலை உத்தேசித்து ஸ்தல ஸ்தாபனங்களில் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் ஒரு மூச்சுப் பறந்து பார்த்தாய் விட்டது. இனி அடுத்தாற் போல் சட்டசபைத் தேர்தல்கள் இருக்கிறது. இப்பொழுதே அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பணங்களும் லக்ஷக்கணக்காய்ச் சேகரிக்க முற்பட்டாகிவிட்டது. காங்கிரசையும் சுயாதீனம் செய்துகொண்டாகிவிட்டது. மகாத்மாவின் சம்மதமும் கிடைத்துவிட்டது.

இனி நடக்க வேண்டியதென்ன ?

பிராமணர்களும், அவர்கள் இஷ்டம் போல் நடப்பதாய் வாக்குக் கொடுத்துள்ள பிராமணரல்லாதார்களும், சட்டசபை ஸ்தானங்களைக் கைப்பற்ற வேண்டியதுதான் . கைப்பற்றி, பிராமணரல்லாதார்களுக்காக பிராமணரல்லாத மந்திரிகளும், செய்து வைத்துள்ள பிராமணரல்லாத அங்கத்தினர்களும், தேவஸ்தான மசோதா, சர்வகலாசாலை மசோதா, தொழி லாளரின் அனுகூலங்கள், தீண்டாதாருக்கென ஏற்பட்ட அனுகூலங்கள், சகல சமூகத்தாரும் சமத்வமாய் அநுபவிக்கக் கூடிய சில ஸ்தானங்கள், இவற்றை அடியோடு தலைகீழாகக் கவிழ்த்தி வருணாச்சிரம தருமமென்கிற பிராமணாதிக்கத்தை நிறுத்தி வெற்றிக் கொடி நாட்டி, பிராமண சுயராஜ்யம் அடைவது தான் பாக்கியாயிருக்கிறது. பிராமணரல்லாதாரின் தலையெழுத்து எப்படி யிருக்கிறதோ, அதை அனுசரித்துத்தான் இப்போது அவர்கள் புத்தியும் போகும். ஆனால், பாமர ஜனங்கள் ஏமாந்து போகாமலிருக்கும்படி கேட்டுக் கொள்ளுவதைவிட நாம் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.

(குடி அரசு - தலையங்கம் - 25.10.1925)

Pin It