குழந்தைப் பருவத்தில் பெண்ணின் தந்தை (அவளை) பாதுகாக்கிறார்; இளமையில் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருப்பவளல்ல. தீய மன இசைவுகளுக்கு எதிராக – அவை எவ்வளவு அற்பமாகத் தோன்றியபோதிலும் – பெண்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கெதிராகத் தற்காப்பு செய்து கொள்ளப்படவில்லையெனில், அவை இரண்டு குடும்பங்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தும்.

எல்லா சாதிகளின் உயர் கடமையை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, பலவீனமான கணவர்களும்கூட தமது மனைவிகளைப் பாதுகாப்பதற்கு முயல வேண்டும். ஒரு சிறுபெண்ணோ, ஓர் இளம் பெண்ணோ அல்லது வயதான பெண்ணும்கூட – தனது சொந்த வீட்டிலும்கூட – எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. (IX3,5) (V147, 148)

அவள் தனது தந்தை, கணவன் அல்லது மகன்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முயலக்கூடாது; அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதன் மூலம் அவள் இரு (தனது சொந்த மற்றும் தனது கணவனின்) குடும்பங்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்குவாள். (ங149) பெண்ணுக்கு விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை இருக்கக்கூடாது. கணவன், மனைவியுடன் ஒன்றிணைவதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளப்பட்டுவிட்டால், அதற்குப் பிறகு பிரிந்து செல்ல முடியாது என்பதே (IX45).

பல இந்துக்கள், மநுவின் விவாகரத்து தொடர்பான முழுக்கதையுமே இவ்வளவுதான் என்று இத்துடன் நின்று விடுகிறார்கள். திருமணத்தை ஒரு புனித சடங்காக மநு கருதினார். அதனால் விவாகரத்தை அனுமதிக்கவில்லை என்ற சிந்தனை யுடன் தமது மனசாட்சியைத் திருப்திப்படுத்திக் கொள்வதோடு இதைத் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இது, உண்மைக்குப் புறம்பானது என்பதை கூறத் தேவையில்லை. விவாகரத்துக்கு எதிரான அவருடைய சட்டம் மிகவும் வேறுபட்ட உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது. இது, ஓர் ஆணை ஒரு பெண்ணுடன் பிணைத்து விடுவதற் கல்ல. ஆனால் இது, பெண்ணை ஓர் ஆணுடன் பிணைத்து வைப்பதற்கும், ஆணை சுதந்திரமாக விடுவிப்பதற்குமாகும்.

ஏனெனில், மநு ஓர் ஆணை தனது மனைவியைக் கைவிடுவதைத் தடுப்பதில்லை. உண்மையில் தனது மனைவியைக் கைவிடுவதற்கு அவர் அவனை அனுமதிப்பதோடு மட்டுமன்றி, அவன் அவளை விற்பதற்கும் அனுமதிக்கிறார். ஆனால், அவன் செய்வது என்னவெனில், மனைவி சுதந்திரமடைவதைத் தடுக்கிறார். இது குறித்து மநு கூறுவதைப் பாருங்கள் : விற்பனையோ அல்லது நிராகரிக்கப்படுவதன் மூலமாகவோ ஒரு மனைவி தனது கணவனிடமிருந்து விடுதலையாவதில்லை (IX46).

இதன் பொருள், தனது கணவனால் விற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஒரு மனைவி, அவளை விலைக்கு வாங்கிய அல்லது நிராகரிக்கப்பட்ட பின் அவளைத் தன் வசப்படுத்திக் கொண்ட மற்றொருவருக்கு – ஒருபோதும் சட்டப்பூர்வமான மனைவியாக முடியாது என்பதேயாகும். இது அட்டூழியமானதல்ல என்றால், வேறு எதுவும் அட்டூழியமானதாக இருக்க முடியாது. ஆனால், தனது சட்டத்தை உருவாக்கும்போது, நீதி அல்லது அநீதி என்ற கருத்தோட்டங்களைப் பற்றி மநு கவலைப்படவில்லை. பவுத்த ஆட்சியின் கீழ் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தைப் பறிப்பதற்கு அவர் விரும்பினார். சுதந்திரத்தைக் கண்டு மநு ஆத்திரமடைந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அவளுடைய சுதந்திரத்தைப் பறித்தார்.

சொத்து தொடர்பான விஷயத்திலும் மனைவியை ஓர் அடிமையின் நிலைக்கு மநு தாழ்த்திவிட்டார். ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை – இம்மூவருக்கும் சொத்தில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பாதிக்கும் செல்வம், அது யாருக்கு சொந்தமானதோ அவருக்காகப் பெறப்படுகிறது (IX416). ஒரு மனைவி விதவையாகும்போது, அவளுக்கு பராமரிப்புச் செலவையும் வாழ்வாதாரத்தையும் மநு அனுமதிக்கிறார். அவள் அவளுடைய குடும்பத்திலிருந்து தனித்திருந்தாளேயானால், அவளுடைய கணவனின் சொத்தில் அது விதவையின் பாதுகாப்புக்குரிய சொத்தாகிறது. ஆனால், சொத்தின் மீது அவளுக்கு எந்த ஆதிக்கத்தையும் மநு ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

மநுவின் சட்டங்களின் கீழ் ஒரு பெண், கொடிய உடலுக்கு ஊறுவிளைவிக்கும் தண்டனைக்குரியவளாகிறாள். தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதற்கு அவளுடைய கணவனை மநு அனுமதிக்கிறார். தவறுகள் செய்த ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை, ஒரு மாணவர், ரத்த சம்பந்தமுடைய ஒரு இளைய சகோதரர் ஆகியோர் ஒரு கயிற்றினாலோ அல்லது ஒரு மூங்கில் கழியினாலோ அடிக்கப்படலாம். மநுவின் விதிப்படி அறிவு பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லை. வேதம் படிப்பதற்கு அவளுக்கு உரிமை இல்லை. இதையெல்லாம் மநு தடை செய்திருக்கிறார்.

எந்த ஒரு பெண்ணுக்கும் சமஸ்காரங்களை நிறைவேற்றுவது அவசியமாகும், ஆனால் அவள் வேத மந்திரங்களைக் கூறாமல் அவற்றை நிறைவேற்ற வேண்டும். பலியிடுவது மதத்தின் உள்ளார்ந்த ஆத்மாவாகும் என்று பார்ப்பனியம் கூறுகிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு – 17(2), பக்கம் – 124)

Comments

1 comment

1
s p Balamurugan
Manu was a lawgiver for a society that existed 2000 years ago. Any law is made to regulate the society within the existing social realities. As time passes, society evolves and social realities also change. so criticizing him or his laws as viewed from present social conditions does not make much sense. It's as foolish an act as some like to apply those laws to present society. keep what is applicable and rational now and discard those irrational aspects of his law.
just remeber that his is an effort to give a code of conduct to Indian society when other societies (except chinese) still lived in primitive lawless conditions

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.