களப்பிரர் காலத்திற்குப் பிந்தைய தமிழ்ச் சமூகம் ஒரு பின்தங்கிய, பிற்போக்கான சமயம் சார்ந்த கிராமச் சமூகமாக ஆகியிருந்தது. வட இந்தியாவில் பெரும்பாலும் அன்று அநாகரிக தொல்லினக்குழு அரசுகளோ அல்லது அந்நிய அரசுகளோ இருந்தன. தென்னிந்தியாவில் களப்பிரர்காலச் தமிழ்ச்சமூகம் போலவோ அல்லது சிறுகுறு அரசுகளோ இருந்தன. ஆகவே கி.பி. 250க்குப்பின் இந்தியா முழுவதும் தொல்லினக்குழு அரசுகளைக் கொண்ட அநாகரிக மக்களும், அந்நிய அரசுகளும், சிறுகுறு அரசுகளும் அல்லது பின்தங்கிய பிற்போக்கான கிராமச் சமூகமும் தான் இருந்து வந்தன. இந்நிலையில் வைதீக பார்ப்பனியம் தனது கருத்தியல்களுக்கு மதத்தையும், கடவுளையும், வேதாந்தம், மீமாம்சம் போன்ற தத்துவங்களையும், மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களையும், பல்வேறு புராணங்களையும், மனு சுமிருதி போன்ற சட்ட நூல்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்தியா முழுவதையும் அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வைதீக பார்ப்பனியத்தையும், சமற்கிருதமயமாக்கலையும் இந்தியச் சமூகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையை வெற்றிகரமாக உருவாக்கிவிடுவதைக் காண்கிறோம்..

பல்லவர்களும் வைதீகமும்:

வைதீக பார்ப்பனியத்தின் பரப்புரை காரணமாக, ‘பல்லவர் காலத்திலிருந்து தமிழ் மன்னர்கள் தம் மதிப்பு நிலைக்கும் தனிச்சலுகைகளுக்கும் சட்ட ஏற்பிசைவிற்கும் பார்ப்பனர்களின் துணையை எதிர்பார்த்திருந்தனர்…. பல்லவர் காலந்தொட்டு (கி.பி.250) பழங்குடி மன்னர்களாகிய பல்லவர்கள் கடம்பர்கள் ஆகியோர் பார்ப்பனிய வேதவழி உரிமைகளைக் கோரினர் என ந.சுப்ரமண்யன் கூறுகிறார் (1). கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தென்னகத்தில் இருந்த பழங்குடி அரசுகளும், சிறுகுறு அரசுகளும் தங்கள் அரசியல் அதிகாரத்திற்கு பார்ப்பனர் ஏற்பிசைவை எதிர்பார்த்தார்கள் என்பதோடு வட இந்திய அரசுகள் போன்றே தாங்கள் சத்திரியர்கள் என உரிமை கொண்டாடவும் செய்தார்கள். கி.பி.க்குப்பின் வெளி நாட்டிலிருந்து இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அந்நியர்களும், இந்தியா முழுவதிலிருமிருந்த பழங்குடித் தலைவர்களும், தொல்லினக்குழுத் தலைவர்களும் சிறுகுறு அரசுகளும் தம்மதிப்பு நிலைக்கும் தனிச் சலுகைகளுக்கும் சட்ட ஏற்பிசைவிற்கும் பார்ப்பனர்களின் துணையை எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையை பார்ப்பனர்கள் திட்டமிட்டு உருவாக்கியது என்பது இந்தியா முழுவதும் அவர்களை வலிமை வாய்ந்தவர்களாகவும் அரசியல் அதிகாரத்தை முடிவு செய்பவர்களாகவும் மாற்றியமைத்தது.

இதே காலகட்டத்தில் அவர்கள் இந்தியா முழுவதும் சமற்கிருதமயமாக்கல் என்பதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். அந்த நோக்கில் 1000 வருடங்களுக்கும் மேலான நகர நாகரிக வளர்ச்சியில் தமிழில் உருவாகி இருந்த அனைத்துக் கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறை சார்ந்த அனைத்து நூல்களும் சமற்கிருதத்துக்கு மொழி மாற்றம் செய்யப்படுகின்றன. பாலி, பிராகிருத நூல்களும் இவ்வாறு சமற்கிருதத்துக்கு மாற்றப்படுகின்றன. அதன்பின் சமற்கிருதம்தான் அறிவியல் மொழி, அதுதான் புனிதமொழி போன்ற வைதீக பார்ப்பனியப் பரப்புரைகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. அதுவரை இருந்த தமிழ், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின்றன. சமற்கிருதமயமாக்களோடு, வேதகாலம் பொற்காலம் என்ற புனைவுக் கருத்துகளும் உருவாக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன.

தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வேதகாலத்தில் வட இந்தியாவில் உருவானதாகப் பார்ப்பனியம் பரப்புரை செய்கிறது. தமிழகம் தவிர இந்தியாவின் பெரும்பகுதி கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுக்குள் பார்ப்பனியமாக்கப்படுகிறது. களப்பிரர் காலக் கேரளம் ஒரு பின் தங்கிய கிராமச் சமூகமாக ஆகியதால் அப்பகுதி தமிழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தமிழ்மொழி சமற்கிருதக் கலப்பால் மலையாள மொழியாக உருவாகிக் கொண்டிருக்க, கேரளச்சமூகம் ஒரு முழுமையான வைதீக பார்ப்பனியச் சமூகமாக கி.பி. 9ஆம் 10ஆம் நூற்றாண்டுக்குள் மாற்றப்படுகிறது. இந்தியாவிலேயே மிக அதிக அளவான சாதியமும், தீண்டாமையும் அங்குதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மறுமக்கள் தாயமுறை, சம்பந்தம் முறை போன்ற புதிய முறைகள் புகுத்தப்பட்டு நம்பூதிரி பார்ப்பனர்களின் நலனையும், உயர் நிலையையும் பாதுகாக்க கேரளச் சமூகத்தின் ஆண், பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது. அவர்களது பண்டைய தமிழகம் சார்ந்த நகர நாகரிக வரலாறு என்பது பார்ப்பனியப் புராணக் கதைகளாலும் பொய்யான புனைவுகளாலும் மூடி மறைக்கப்படுகிறது.

பல்லவர்கள் தொடக்கத்தில் ஒரு சிறிய அரசாகவும், முதலில் பாலி, பிராகிருத மொழிகளை ஆதரித்தவர்களாகவும் இருந்துள்ளனர். பின்னர் வைதீக பார்ப்பனியத்தால் உள்வாங்கப்பட்ட அவர்கள் முழுமையான பார்ப்பனிய ஆதரவாளர்களாக ஆகி, வைதீக பார்ப்பனியர்களின் ஏற்பிசைவை எதிர்பார்ப்பவர்களாகவும் வேதவழி உரிமைகளைக் கோருபவர்களாகவும், ஆகி விடுகின்றனர். தமிழகத்தில் சங்கம் மருவிய காலம் வரை பிரமதேயங்கள், பார்ப்பனர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்டது போன்ற தோற்றம் பொய்யாக உருவாக்கப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்துப் பதிகத்தில் செய்யப்பட்ட நிலதான இடைசெருகல்களும், பொய்யான வேள்விக்குடி செப்பேடும் அது போன்ற தோற்றத்தை உருவாக்கவே பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் பல்லவர்களும், களப்பிரர்களும்தான் முதல்முறையாக பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் எனப்படும் நிலக்கொடைகளை வழங்கியவர்கள்.

பல்லவர் காலச் செப்பேடுகள்:

தமிழ் நாட்டின் எல்லையில் தொண்டை மண்டலத்தையும் ஆந்திரத்தின் தெற்குப் பகுதியையும் ஆண்ட பல்லவர்களை முற்கால பல்லவர்கள் எனவும், அவர்களின் கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் இருப்பதால் பிராகிருத சாசனப் பல்லவர்கள் எனவும் கூறுவர். அவர்களின் முதல் மூன்று கல்வெட்டுகளிலும் தானம் வழங்கிய இடங்கள் ஆந்திரப் பகுதியில் உள்ளன. இடைக்காலப் பல்லவர்கள்காலச் செப்பேடுகள் 16 உள்ளன. அவை சமற்கிருதத்தில் உள்ளதால் அவர்களை சமற்கிருத சாசனப்பல்லவர்கள் என்பர். இச்செப்பேடுகள் கிரந்த லிபியைக் கொண்டுள்ளன. அதில் ஓரிரண்டு பழைய கன்னட தெலுங்கு லிபியில் உள்ளன. மொத்தமுள்ள 32 செப்பேடுகளில் மீதியுள்ள 13 செப்பேடுகள் பிற்காலப்பல்லவர்கள் காலத்தவை. அவை பெரும்பாலும் வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளன. ஓரிரு செப்பேடுகள் வடமொழியில் மட்டும் உள்ளன. இரண்டு சமணப்பள்ளிக்கும், இரண்டு சிவன் கோயில் எடுக்கவும், ஒன்று திருத்தணி முருகனுக்கும், ஒன்று பாகூர் கல்வி நிலையத்துக்கும், ஒன்று சத்திரியருக்கும் மீதி உள்ள 25 செப்பேடுகளும் பார்ப்பனருக்கும் என 32 செப்பேடுகளும் நிலதானம் வழங்கும் செப்பேடுகளாகும்(2)

பல்லவர்களின் பிரம்ம தேயங்களும் சதுர்வேதி மங்களங்களும்:

பல்லவ மன்னர்கள் முதலில் பிராகிருத மொழியையும், பின் சமற்கிருத மொழியையும் ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்களை பார்ப்பனர் எனவும் பரத்துவாச கோத்திரத்தவர்கள் எனவும் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆந்திரத்திலிருந்து மிகுதியான பார்ப்பனர்களை அழைத்து வந்து, பல ஊர்களை வரி நீக்கி பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர். பல்லவர் வெளியிட்ட பிராகிருதம், சமற்கிருத மொழிகளில் உள்ள செப்பேடுகள் ஆந்திராவிலிருந்து பார்ப்பனர்கள் கூட்டம் கூட்டமாக தமிழகத்தில் குடியேறி நிலங்களைத் தானமாகப் பெற்றதைக் கூறுகின்றன. சான்றாக இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் இரு ஊர்களை உதய சந்திர மங்கலம் என்ற ஒரே ஊராக மாற்றி 108 பார்ப்பனர்களுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அருகில் உதய சந்திர சதுர்வேதி மங்களம் என்ற பார்ப்பனர் குடியிருப்பும் ஏற்படுத்தப்பட்டது. பல செப்பேடுகளில் 108 பார்ப்பனர்கள் இடம் பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள். இவ்விதமாக சதுர்வேதி மங்களங்களும், பிரம்ம தேயங்களும் நிறைய உருவாக்கப்பட்டன. கல்வெட்டுகள் ஏறக்குறைய 38 பிரம்மதேய ஊர்களைக் குறிப்பிடுகின்றன. 27 வகைக் கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் வழங்கியதாகச் செப்பேடுகள் கூறுகின்றன (3)

‘கி.மு. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் இந்துமத வளர்ச்சி ஏற்பட்டதால் பார்ப்பனர்கள் இடம்பெயர்ந்து தமிழகத்தின் தென்பகுதி கடைக்கோடிவரை ஊடுருவினர். ஆதலால் பார்ப்பனர்களைத் தமிழ் மன்னர்கள் அழைத்து வந்தனர் என்ற சீனிவாச ஐயங்காரின் மிகைப்படுத்தப்பட்ட கருத்து கேள்விக்குள்ளாகிறது. அதற்கான வலுவான சான்றாதாரங்கள் இல்லை’ எனக் கூறும் எசு. செயசீலன் இசுடீபன் கீழ்க்கண்ட சில தகவல்களையும் தருகிறார்.

இரண்டாம் நந்திவர்மன் கி.பி. 765இல் 108 பார்ப்பனர்களுக்கு செய்யாற்றங் கரையில் நிலக்கொடை அளித்துள்ளான் என புல்லூர்ச்செப்பேடு கூறுகிறது. .மேலும் அவன் கும்பகோணத்தின் அருகில் உள்ள நல்கூரில் கி.பி. 789இல் நிறைய பார்ப்பனர்களுக்கு நிலத்தானம் வழங்கியுள்ளான் என்பதைத் தண்டன் தோட்டம் பட்டயம் தெரிவிக்கிறது. அதில் குண்டூர், கிருசுணா, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்து நிலதானம் பெற்ற 244 பார்ப்பனர்களின் பெயர்ப்பட்டியல் உள்ளது. மேலும் அதே செப்பேடு தென் காவிரிக்கரையின் தயாமுகாமங்கலம் என்ற முழு கிராமத்தையும் 308 பார்ப்பனர்களுக்கு தானமளிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. பல்லவர்களின் ஆதரவினால் 88 கிராமங்களில் வாழ்ந்த 45 கோத்திரங்களைச்சேர்ந்த பார்ப்பனர்கள் தெலுங்கு பேசும் பகுதிகளான குண்டூர், ஓங்கோல், நெல்லூர் ஆகியவற்றிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தனர். இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருசுணன் காலத்திய பாகூர் கல்வெட்டில் பட்டர்களுக்கு பட்டவிருத்தி என (தமிழகத்தில்) நிலக்கொடை வழங்கப்பட்டது. எனவே தமிழகப் பகுதியில் பார்ப்பனர்கள் குடியேற ஊக்கமளிக்கப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகிறது எனவும் எசு. செயசீலன் இசுடீபன் கூறுகிறார்(4). ஆகவே பார்ப்பனர்களை தமிழ் மன்னர்கள் அழைத்து வரவில்லை. அதற்கு முன்பே பல்லவர்களும் இன்ன பிறரும் கி.மு. 5ஆம் 6ஆம் நூற்றாண்டிலிருந்தே பார்ப்பனர்கள் தமிழகத்தில் குடியேற ஊக்கமளித்தனர். நிறைய பிரம்மதேயங்களை, நிலதானங்களை அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கி அவர்களை அதிக அளவில் குடியேறச்செய்தனர் எனலாம்.

பல்லவ மன்னர்கள் அசுவமேத யாகம், அக்நிசுடோமம், வாசபேயம் போன்ற யாகங்களையும் நடத்தியுள்ளனர். இவைகளை நடத்த பெருமளவில் ஆந்திராவிலிருந்து பார்ப்பனர்களை அழைத்து வந்தார்கள் எனவும் பல்லவர்களின் காரணமாக கிராம தேவதை வழிபாடுகளுக்குப் பதில் வேதநெறி வழிபாடுகள் பெருகியது எனவும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் வேதநெறியுடன் ஆகம வழிபாட்டை நாடெங்கும் பரப்பினர் எனவும் ஆந்திரப்பகுதியிலிருந்து பெருமளவில் பார்ப்பனர்கள் தமிழகம் வந்து குடியேறி செல்வாக்கு பெற்று நிலக்கிழார்களாக ஆனார்கள் எனவும் வரிவிலக்கு பெற்று வசதியாக வாழ்ந்த அவர்கள் சமற்கிருத நூல்களை எழுதியதோடு, தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற கிரந்த எழுத்தை வடமொழிக்காக உருவாக்கிக் கொண்டார்கள் எனவும் கூறுகிறார் ச.கிருசுணமூர்த்தி (5). பல்லவர் காலத்தில்தான் குடைவரைக்கோயில்களும், கற்றளிகளுடன் மண்டளிகள் எனப்படும் செங்கற் கோயில்களும் கட்டப்பட்டன. இந்த செங்கற்கோயில்கள் தான் நாயன்மார்கள் குறிப்பிடும் சிவத்தலங்கள் ஆகும் (6). தானம் பெற்ற பார்ப்பனர்கள் வேதம், வேதாங்கம், இதிகாசம், புராணம் ஆகியவற்றின் தத்துவங்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள் (7). இவைபோக தனிப்பட்ட நில தானங்களும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சான்றாக தயாமுகன் என்பவன் பல்லவமன்னனிடம் அனுமதி பெற்று தன்பெயரில் மங்களம் உருவாக்கி பார்ப்பனர்கள் 308 பேருக்கு தானம் அளித்துள்ளான். இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் தானம் பெற்றுள்ளனர் எனக் கூறுகிறார் ச. கிருசுணமூர்த்தி (8).

பல்லவ அரசர்கள்:

கி.பி. 315 வாக்கில் சிம்மவர்மன் என்பவன் ஆந்திரப்பகுதியில் பல்லவ அரசைத் தோற்றுவித்தவனாக அறியப்படுகிறான். இவர்களில் ஒருவனான சிவசுகந்தவர்மன் கடம்பகுலத்து மயூரவர்மனின் உடன் காலத்தவன். இன்னொருவன் விசுணகோபன். அவன் கி.பி. 380இல் சமுத்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்டதாக கருதப்படுகிறான். அதன்பின் வந்த முதல் இடைக்கால பல்லவன், விசயசுகந்தவர்மன். இவர்கள் தொண்டை மண்டலத்தின் காஞ்சியைத் தலைநகராக்கொண்டு ஆண்டுள்ளனர். அவனுக்குப்பின் வந்த சிம்மவர்மன் என்பவன் கி.பி. 450இல் கங்கமன்னன் ஆரியவர்மனுக்கு முடிசூட்டியுள்ளான். இதன் பின் வந்த இன்னொரு சிம்மவர்மனின் (கி.பி. 525-560) மகன் சிம்மவிசுணு (கி.பி.550-590) தான் முதல் முதலாக சோழர்களின் காவிரிப் பகுதியைக் கைப்பற்றிப் பிற்காலப் பல்லவர் ஆட்சியைத் தொடங்குகிறான். பிற்காலப் பல்லவர்கள் தமிழ்நாட்டு மன்னர்களாகவே ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் சிம்மவிசுணு (கி.பி.550-590) தொடங்கி அபராசிதன் (870-890) வரை ஆண்டுள்ளனர். இதில் மகேந்திரவர்மன் (கி.பி.590-630), முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630-668) ஆகியோர் மிகவும் புகழ்பெற்றவர்கள். முதலாம் நரசிம்ம வர்மன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்று வாதாபியை வெற்றி கொண்டு பெரும்பொருளோடு திரும்பினான். அடுத்தப் பல வருடங்களுக்கு மேல் பல்லவர், சாளுக்கியர்களுக்கிடையேயான போர் தொடர்ந்து நடந்தது. இதில் ஒரு சமயம் சாளுக்கியர்களால் காஞ்சி கொள்ளையடிக்கப்பட்டது. இறுதியில் 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழர்களால் வீழ்த்தப்பட்டனர். கிட்டத்தட்ட கி.பி. 315 முதல் கி.பி. 885 வரை 550 ஆண்டுகளுக்கு மேல் பல்லவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டனர். கி.பி. 550 முதல் கி.பி. 850 வரை 300 ஆண்டுகள் பல்லவர்கள் தொண்டை மண்டலத்தையும், சோழர் பகுதி முழுவதையும் ஆண்டு வந்தனர். பல்லவர்கள் சோழர் பகுதியை ஆண்ட போது, தென் தமிழகம் முழுவதும் பாண்டியர்களால் ஆளப்பட்டது (9).

காஞ்சி நகர்:

காஞ்சி நகரானது கி.பி. 300 க்குப்பின் தென்னிந்தியா முழுவதற்குமான சமய, அறிவியல், தத்துவார்த்த மையமாக ஆகியிருந்தது. களப்பிரர் படையெடுப்பால் தமிழகம் முழுவதும் வீழ்ச்சிக்குள்ளானபோது காஞ்சி அந்த பாதிப்பில் இருந்து பல்லவர்களால் பாதுகாக்கப்பட்டதால் தமிழகத்து அறிஞர்களில் பலர் பண்டைய தமிழ் நூல்களுடன் காஞ்சியில் குடியேறினர். அதன் காரணமாக காஞ்சி ஒரு சமய, அறிவியல், தத்துவார்த்த மையமாக ஆகியது. அங்குதான் சமற்கிருத மொழிக்கான கிரந்த எழுத்து உருவானது. அங்குதான் தமிழில் இருந்த பல்வேறு கலை, அறிவியல், தொழில்நுட்ப நூல்கள் சமற்கிருதத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. பரதநாட்டிய சாத்திரம், சரகசம்கிதை (மருத்துவ நூல்), கட்டடக்கலை, சிற்பக்கலை சார்ந்த மானசாரம், மயமதம் போன்ற ஒருசில நூல்கள் இக்காலகட்டத்தில் தான் தமிழில் இருந்து வடமொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. இவைபோன்ற பல பண்டைய தமிழ் நூல்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வடமொழியில் கிரந்த எழுத்தில் ஆகமங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆரியபட்டரின் ஆரியபட்டியம் கூட தமிழில் இருந்த வானவியல், கணிதம் போன்றவற்றின் மூல நூல்களைக் கொண்டு உருவானதுதான். அதனால்தான் தின்னாகர் முதலான பௌத்த தருக்கவியல் அறிஞர்கள் பலரும் இங்கு தோன்றினர். ஆகவே தமிழில் இருந்த பல அறிவியல் தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டதன் காரணமாகவும், தமிழின் மூல நூல்களைக் கொண்டு உருவான ஆரியபட்டியம் போன்ற தமிழ்வழி நூல்களாலும்தான் வடமொழி ஒரு தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக மாறியது. அதே சமயம் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழின் மூல நூல்கள் அனைத்தும் நாளடைவில் கவனிப்பார் இன்றி அழிய விடப்பட்டன (10). இவை அனைத்தும் பல்லவரின் காஞ்சி நகரில்தான் நடைபெற்றன. இவற்றின் காரணமாக கி.பி. 250க்குப்பின் காஞ்சி நகர் தமிழகத்தில், வடமொழிக்கான அறிவியல் கலை இலக்கிய நகராக மாறியது. அங்கு வடமொழிக்கான கடிகைகள் அல்லது சாலைகள் எனப்படும் கல்லூரிகள் பல உருவாகியிருந்தன. நாளடைவில் தென்னகத்தின் புகழ்பெற்ற நகராகவும், பல்வேறு சமயங்களின் மையமாகவும், தத்துவப் பிரதிவாதங்கள் நடக்கும் இடமாகவும் காஞ்சிநகர் உருவானது.

தமிழ்மொழியும் சமற்கிருதமும்:

தமிழகத்தின் பண்டைய புகழ்பெற்ற வஞ்சி, கரூர், மதுரை, புகார், உறையூர், கொற்கை போன்ற நகரங்கள் மீண்டெழ ஒருசில நூற்றாண்டுகள் ஆகியது. அதே சமயம் 1500 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி மொழியாக, அறிவியல்மொழியாக, கல்வி மொழியாக, வணிகமொழியாக, வழிபாட்டு மொழியாக என எல்லாவுமாக இருந்த தமிழ்மொழி களப்பிரர் காலத்தில் ஒரு கீழ்மக்களின் மொழியாக, அறிவியல் தத்துவம் தொழில்நுட்பம் போன்றவைகளுக்குத் தகுதியற்ற மொழியாகக் கருதப்படும் சூழ்நிலை உருவானது. தொடக்கத்தில் பிராகிருதமும் பின்னர் சமற்கிருதமும் களப்பிரர் காலத்தில் ஆட்சிமொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக மாறிப்போயின. இந்த மாற்றங்கள் அனைத்தும் தொடக்க காலப் பல்லவர் ஆட்சியில் நடந்தேறின. இருந்த போதிலும் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் தமிழ்மக்களின் பேராதரவால் தமிழ்மொழி மீண்டும் மக்களுக்கும் அரசுக்குமான ஒரு தொடர்பு மொழியாக, இலக்கியமொழியாக பக்தி மொழியாக உருவாகத் தொடங்கியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி தமிழில் பக்தி இலக்கியம் உருவாக வழிவகுத்தனர்.

அதே சமயம் ஆட்சியாளர்களின் ஆதரவாலும் வைதீக பார்ப்பனியத்தாலும் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக, கல்வி மொழியாக சமற்கிருதம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. தமிழில் இருந்த தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மூல நூல்கள் அனைத்தும் அழிந்து போனதாலும், தமிழ்மொழி ஒரு கீழ்மக்களின் மொழியாக, அறிவியல் தத்துவம் தொழில்நுட்பம் போன்றவைகளுக்குத் தகுதியற்ற மொழியாகக் கருதப்பட்டதாலும் தமிழ் அத்தகுதிகளை நிரந்தரமாக இழந்து போனது. வடக்கே குப்தர் ஆட்சியும், தமிழகத்தில் பல்லவர், களப்பிரர் ஆட்சியும் வைதீக பார்ப்பனியமும் இவற்றைச் சாத்தியமாக்கின. கி.பி. முதல் நூற்றாண்டுவரை எழுத்தில்லாத, செவ்விலக்கியங்கள் உருவாகாத, மக்கள் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ இல்லாத, தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் எதுவும் உருவாகாமல் இருந்த சமற்கிருதம் கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுக்குள் இந்தியாவின் பெரும்பாலான அரசுகளின் ஆட்சிமொழியாகவும், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாகவும், கல்வி மொழியாகவும் உருவாகியிருந்தது. இந்திய அரசியல் சூழ்நிலையும், பார்ப்பனக் குழுக்களின் திட்டமிட்ட உழைப்பும், வடக்கே குப்தர் ஆட்சியும் தெற்கே பல்லவர் களப்பிரர் ஆட்சியும் இதற்குக் காரணம்.

பல்லவர்காலக் கல்வி:

பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே காஞ்சியில் வடமொழிக் கல்லுரி ஒன்று (கடிகை) தொடங்கப்பட்டிருந்தது. கடம்ப அரசன் மயூரசர்மன் அங்கு கல்வி கற்றான். வேதங்களில் உயர்நிலைக்கல்வியும் ஆராய்ச்சிக் கல்வியும் அங்கு அளிக்கப்பட்டன. அக்கல்லூரி பல்லவ அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. சமந்த பத்திரர், பூச்யநாதர் போன்ற சமண ஆசிரியர்களும் பெரும்புலவர்களும் இங்கு வந்து கல்வி தந்தனர் என்பதால் இது அனைவருக்குமான பொதுக்கடிகையாக இருந்தது. பலநாட்டவரும் இங்கு வந்தனர். இங்கிருந்து சென்ற தருமபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தார். சோளிங்கர் மலையிலும் கடிகை இருந்தது. தென்னார்க்காடு கோட்டத்தின் பாகூரிலும் வடமொழிக் கல்லுரி இருந்தது. இக்கல்லூரிகளில் 14 கலைகளும், நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சம், தர்மசாத்திரம், நியாயம், புராணம், மருத்துவம், வில்வித்தை, இசை, பொருள்நூல் ஆகிய 18 வகையான வித்தைகளும் கற்பிக்கப்பட்டன. இக்கல்லூரிகளில் படைக்கலப்பயிற்சியும் கற்பிக்கப்பட்டது (11).

பல்லவர் காலத்தில் அக்கிரகாரங்கள் எனப்படும் பார்ப்பனச்சேரிகள் இருந்தன. பல்லவர் காலத்தில்தான் பார்ப்பனர்கள் கோவில்களில் வழிபாடு செய்யும் புரோகிதர் உரிமை பெற்றனர். அவர்கள் இக்காலத்தில்தான் மக்களிடம் குருக்களுக்கான பணிகளைச் செய்யவும் தொடங்கினர். நகரங்களிலும், பேரூர்களிலும் மறையவர்கள் (வேதங்களில் சிறந்த பார்ப்பனர்கள்) தங்கியிருந்த இடங்கள் பிரம்மபுரிகள் எனப்பட்டன. இவர்களுக்கு பிரமதேயங்கள் இல்லை எனினும் கல்வி கற்பிப்பதற்காக நிலம் மானியமாக விடப்பட்டது. மறையில் சிறந்த தனிப்பட்ட பார்ப்பனர்களுக்கு பல்லவர் நிறைய இறையிலி நிலங்களை வழங்கினர். பல்லவர் காலத்தில் கோவில்கள் பல்கலைக்கழகங்களாக விளங்கின. கோவில்களில் சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், சமயக்கல்வி, சாத்திரக்கல்வி போன்ற பல விடயங்கள் கற்பிக்கப்பட்டன. சமயநூல்கள், தேவாரப்பதிகங்கள் முதலியன கோவில்களில்தான் பாதுகாக்கப்பட்டன. கோவில்களில்தான் பத்திரப்பதிவும், பட்டயமும், கல்வெட்டும் இன்னபிறவும் தயாரிக்கப்பட்டன.

இவைபோக இக்காலத்தில் மடங்களும் இருந்தன. இம்மடங்கள் மாணவர்களுக்கு உணவும் விடுதியும் வழங்கி கல்வியும் தந்தன. துறவிகள், அறிவைத்தேடும் பெருமக்கள், ஏழைகள், திக்கற்றவர் ஆகியவர்களுக்கு இந்த மடங்கள் புகலிடமாகவும் இருந்தன. இவை சமய உயர்தரக்கல்வியைத் தந்து வந்தன. மடங்களில் சமயக்கல்வி, தர்க்கம், காவியம், இலக்கணம், நாடகம், பரதசாத்திரம் போன்றவைகள் கற்பிக்கப்பட்டன. மடங்கள் மதம் சார்ந்தவை. சைவ, வைணவ மடங்கள், பௌத்த சமண மடங்கள் காளமுகர் மடங்கள் என பலவகைப்பட்ட மடங்கள் இருந்தன. இவைபோக சமண, பௌத்த விகாரங்களும் பள்ளிகளும் இருந்தன. இங்கும் சமயக்கல்வியுடன் பல்வேறு கலைகளும் கல்வியும் கற்பிக்கப்பட்டன. தமிழ்ப்பள்ளிகளும் இருந்தன. ஆனால் கலை, அறிவியல் ஆகியவற்றில் உயர்கல்வி என்பது இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படுவதுபோல் அன்று சமற்கிருதத்தில் தான் வழங்கப்பட்டது. தமிழில் அடிப்படைக்கல்வியும் பின் தமிழ் மொழியின் இலக்கியம், இலக்கணம் போன்றவைகளும் அடிப்படைச் சமயக் கல்வியும் வழங்கப்பட்டன எனலாம். ஆனால் அதற்கு அரசு ஆதரவு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. தனிப்பட்டவர்களே அவற்றை வழங்கிவந்தனர் (12).

பல்லவர்கால இலக்கியம்:

பல்லவ மன்னர்கள் அனைவரும் சமற்கிருத மொழியை அறிந்தவர்களாகவும் பெரும்பாலான மன்னர்கள் அதில் புலமை பெற்றவர்களாகவும் இருந்தனர். இலோகவிபாகம், கிராதார்ச்சுனீயம், அவந்தி சுந்தரி கதை, மத்தவிலாசப் பிரகசனம், காவ்யாதர்சம் போன்ற புகழ்பெற்ற வடமொழி நூல்கள் பல்லவர் காலத்திய சமற்கிருத மொழியின் வளர்ச்சிக்குரிய சான்றுகள். பல்லவர் அவைக்களத்தில் சிறந்த வடமொழிப்புலவர்கள் பலர் இருந்து வந்தனர். பல்லவர் காலத்தில், பல்லவர் தந்த ஆதரவால் சமற்கிருதம் ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக தமிழகத்தில் உருவாகியிருந்தது. அதன் காரணமாக வடமொழிக்கலப்பு என்பது சங்ககாலத் தமிழில் இல்லாத அளவு பல்லவர்காலத் தமிழில் உண்டாகிவிட்டது. புகழ்பெற்ற பாரவி, தண்டி போன்ற வடமொழிப்புலவர்கள் பலர் பல்லவர் அவையில் இருந்தனர். பல்லவர்கள் வட மொழியை, வடமொழிப்புலவர்களை ஆதரித்தனர். ஆனால் தமிழ்மொழியை தமிழ்ப்புலவர்களை அவர்கள் ஆதரிக்கவில்லை. பல்லவ வேந்தர்களில் ஒருசிலர் மட்டுமே தமிழ் மொழியை அறிந்தவர்களாக இருந்தனர். ஆனால் அனைவரும் சமற்கிருத மொழியை அறிந்தவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் தாய்மொழிபோல் இருந்தது.

முற்காலப் பல்லவர்களும் இடைக்காலப்பல்லவர்களும் தமிழை அறிந்தவர்கள் அல்ல. பிற்காலப் பல்லவர்களில் ஒரு சிலர் தமிழை அறிந்தவர்களாக இருந்தனர். பக்தி இலக்கியம் அக்காலகட்டத்தில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தது. அன்று வைணவப்பாடல்கள் பல உருவாகியிருந்தன. அவை அரசு ஆதரவில் வளரவில்லை. மக்களின் ஆதரவால் அவை வளர்ச்சி பெற்று வந்தன. இக்காலகட்டத்தில் சிற்றிலக்கியங்கள் சிலவும் உருவாகியிருந்தன. பிற்காலப் பல்லவர் காலத்தின் இறுதியில் இருந்த மூன்றாம் நந்திவர்மன் தமிழில் புலமை பெற்றவனாக இருந்தான். அவன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தான். அவன்காலத்தில்தான் அவன் குறித்து, நந்திக் கலம்பகம் என்ற தமிழ் நூல் உருவானது. பாரத வெண்பா என்ற தமிழ்நூலும் இவன் காலத்ததாகும். அதற்கு முந்தைய பல்லவமன்னர்கள் யாரும் தமிழ்ப்புலவர்களை ஆதரிக்கவில்லை. (13).

இசை, நடனம், ஓவியம் சிற்பம்:

பல்லவர்கள் இசை, நடனம், ஓவியம் சிற்பம் ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். அவர்களது காலத்திய ஓவியம் சிற்பம் ஆகியவற்றின் சிறப்பை அவர்கள் கட்டிய குகைக்கோவில்களிலும், கைலாசநாதர் கோவில், வைகுந்தப்பெருமாள் கோவில் போன்றவற்றிலும் காணலாம். மகேந்திரவர்மன் இசையில் வல்லவனாக இருந்தான். அவன் தன்னை பல்லாவரம் குகைக்கல்வெட்டில் சங்கீரன சாதி என கூறிக் கொள்கிறான். தான் இயற்றிய மத்த விலாசம் என்ற நூலில் இசை, நடனம் குறித்த தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளான். இராசசிம்மனும் இசையில் வல்லவனாக இருந்தான். மகேந்திரன் காலத்தில் இருந்த அப்பர் திருநாவுக்கரசர் பலவகைப் பண்களைக் கொண்ட தேனினும் இனிய தேவாரப் பதிகங்களை தலங்கள் தோறும் பாடி மக்களை மகிழ்வித்தார். அவர் காலத்துச் சம்பந்தரும் இசையில் வல்லவராக இருந்தார். இக்காலகட்டத்தில் தமிழ் இசையும், தமிழ்ப்பண்களும் சிறப்புடன் இருந்தன. அக்கால சைவரும் வைணவரும் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி தமிழ் அருட்பாக்களைப் பாடினர். சித்தன்ன வாசல் ஓவியங்களில் இருந்து அக்காலத்தில் நடனக்கலை மிகச்சிறப்பாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ள பல்வேறுவகையான மெய்ப்பாடுகள் தோன்றும் வகையில் நடித்தலே நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும். சித்தன்ன வாசல் நடன ஓவியங்கள் அற்புதமாகத் தீட்டப்பட்டுள்ளன. பல்லவர் காலத்துக் கோவில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன. நடனங்களில் இருபாலரும் இணைந்தே நடித்தனர். அன்று நடனமும் இசையும் சமயத்தின் கூறுகளாகப் பார்க்கப்பட்டன. சிவபெருமான் கூத்துவகைகள் பல்லவர்க்கு முற்பட்டவை. சிறந்த சிவ பக்தனான இராசசிம்மன், தான் அமைத்த கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய பலவகை நடனங்களை சிற்பவடிவில் அமைத்துள்ளான். சிற்பங்களில் மாமல்லபுரம்தான் சிறந்த பல்லவர் சிற்பக்கூடம். (14).

சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர் காலத்ததாகவும் சமண மதம் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஆனால் அது ஆசிவக மதத்தைச் சார்ந்தது எனவும் பல்லவர் காலத்துக்கு முந்தைய சங்ககாலத்தைச் சார்ந்தது எனவும் முனைவர் க. நெடுஞ்செழியன் கருதுகிறார் (15). பல்லவர்கால இசை, நடனம், ஓவியம் சிற்பம் ஆகிய அனைத்துமே ஆகமங்களில் இருந்த பண்டையத் தமிழ் மரபுகளை அடிப்படையாகக்கொண்டவை.

பல்லவர் காலச் சமயம்:

கி.பி. 600க்குப்பின் சமண பௌத்த மதங்கள் வீழ்ச்சியுறத்தொடங்கின. சமணத்துறவிகள் ஆடையின்றி நீராடாமல் அழுக்குடன் தனித்துத் திரிதலும், கடுமையான நோன்புகள் இருத்தலும், இசை, நடனம் போன்ற நாகரிகக் கலைகளை நிராகரித்தலும், பெண்களை, அவர்களின் தாய்மைப்பண்பை நிராகரித்தலும் போன்ற செயல்கள் தமிழர் மரபுக்கு ஏற்புடையதல்ல. அதே சமயம் சைவ வைணவ சமயங்கள், உலக வாழ்க்கை இன்பமானது; ஆண்-பெண் சேர்ந்து வாழ்வதே இயற்கை வாழ்வு; அதுவே இன்ப வாழ்க்கை; அதுவே இறைவன் ஆணை; உலக இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவன்மேல் பக்தி பூண்டு அவரவர் நிலைக்கு ஏற்ப திருப்பணிகளும் தூயவாழ்வும் வாழ்தலே போதும் என்றனர். கோவில்களில் ஆடல்பாடல்கள் தோன்றின; நாடகங்கள் நடிக்கப்பட்டன; இறைவன் மீது உள்ளத்தை உருக்கும் பதிகங்கள் இசையுடன் பாடப்பட்டன. ஆதலால் மக்கள் சைவ வைணவ மதங்களை நாடினர். சமண பௌத்த மதங்கள் செல்வாக்கு இழந்தன.

தமிழ் மக்கள் களப்பிரர் காலத்தில் நடந்த பேரழிவால் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்திருந்த போதிலும் தமிழ்மொழி மீதான பற்று என்பது தமிழ் மக்களின் உள்ளத்தின் அடியாழத்தில் நிலைத்திருந்தது. சைவ வைணவப் பெரியார்கள் அதனைப் புரிந்துகொண்டு பக்திப் பாடல்களை இசையோடு தமிழில் பாடியது என்பது பொதுமக்களை ஈர்த்தது. சைவ வைணவச் சமயங்களின் வளர்ச்சி என்பது தமிழ் மக்களால் தமிழ் மொழியின் வளர்ச்சியாகவும் பார்க்கப்பட்டது. எனவே பக்தி இயக்கத்தை தமிழ் மொழியின் மீட்சியாகவே தமிழ்மக்கள் கருதினர். மேலும் பக்தி இயக்கம் என்பது சமூகத்தில் இருந்த பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து சமத்துவத்தை கொண்டு வருவது போல் தோன்றியது. அதனாலும் பக்தி இயக்கம் செல்வாக்கு பெற்றது. சமண பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்கு இவை போன்ற பல காரணங்கள் இருந்தன.

பல்லவர் காலத்தில் வைதீக பார்ப்பனர்கள் அதிக அளவில் குடியேற்றப்பட்டனர். நிறைய நிலதானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பல்லவ அரசின் ஆதரவும் அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாகவும் ஆனார்கள். ஆதலால் அவர்கள் பெருகப்பெருக, வைதீக சமயம் சைவ சமயத்தோடு இரண்டறக் கலந்தது. அவர்தம் உருத்திர வணக்கம் சைவத்தின் சிவ வணக்கத்தோடு இணைக்கப்பட்டது. திருவாசகத்தில் அந்த சிவ உருத்திரக் கலப்பு பேசப்பட்டுள்ளது. வேள்வியே இல்லாத சிவன் வடவர் மதக்கலப்பால் வேள்விக்குரிய மகாதேவனாக மாறிப்போனான். தமிழ் முருகன் சுப்பிரமணியன் ஆனான். தமிழ்க்கொற்றவை துர்க்கை ஆனாள். பல கிளைச்சமயத்தினர் வழிபட்டு வந்த உள்ளூர் தெய்வங்கள் எல்லாம், ‘ஐயனார் சிவனது அம்சம், விநாயகர் சிவனது பிள்ளை, பெண் தெய்வங்கள் எல்லாம் பார்வதியின் அம்சம், பார்வதி சிவனின் மனைவி’ என ஆனார்கள்.

பாசுபதம், கபாலிகம், காளமுகம் போன்ற தமிழ்நாட்டின் வடக்கே தக்காணப்பகுதியில் இருந்த பல சிறு சமயங்கள் பல்லவர் களப்பிரர் காலத்தில் தமிழ்நாடு வந்தன. அவை சைவ சமயத்தின் கிளைகளாக மாறின. தமிழ் மரபுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்டவை அவை. இச்சமயங்களின் கொள்கைகள் பல தேவார பதிகங்களில் புகுந்துவிட்டன. பௌத்த சமண சமயங்களை அகற்றி வெளிவந்த சைவ சமயம் இறுதியில் வைதீக மதத்தோடும் இக்கிளைச் சமயங்களோடும் கலந்து போனது. சைவத்தைப் போன்றே வைணவமும் தமிழ் நாட்டிற்கே உரியது. மாலிய சமயமாக சங்க இலக்கியத்தில் அதனைக் காணலாம். சைவத்தைப் போன்றே வைணவத்திலும் பல கலப்புகள் நடந்தேறின. திருமாலின் பல அவதாரக் கதைகளும், புராணக்கதைகளும் தோன்றி வைணமும் வைதீகத்தோடு இரண்டறக்கலந்து போனது. பல்லவ அரசர்களில் பலர் வைணவப்பற்று உடையவராக இருந்தனர். ஆதலால் பல்லவர் நாட்டில் பல பெருமாள் கோவில்கள் தோன்றின. பல்லவர்கள் சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் வளர்த்தனர் (16).

பௌத்தத் தருக்கவியல்:

கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழரான தின்னாகரே பௌத்த தருக்கவியலின் தந்தை. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தருக்க நூல்களை எழுதியதாக திபெத்தியச் சான்றுகள் கூறுகின்றன. புகழ்பெற்ற சில நூல்கள் இன்றும் உள்ளன. தின்னாகருக்கு முன் அளவை நூல்கள் எதுவும் இல்லை (17). தின்னாகரைப் பின்பற்றி அளவை இயலை வளர்த்தவர் தர்மகீர்த்தி. இவரும் தமிழரே. இவர் நாளந்தா சென்று அங்கு நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த தமிழரான தருமபாலரிடம் பௌத்த அறிவியல் நூல்களைக் கற்றார். தர்மகீர்த்தி அவர்களை, ‘இந்தியாவின் கான்ட் (Kant) என அழைக்கிறார் செர்பாட்சுகி. இவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு. திக்நாகர், தருமபாலர், போதி தருமர் ஆகியோர் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை காஞ்சியில் வாழ்ந்து பின் நாளந்தாவில் அறம் போதித்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார் தெ.பொ.மீ. ஆகவே அவர்களும் தமிழர்களே! தின்னாகர், தருமபாலர் போன்றோர் தமிழராக இருந்தும் அனைத்தையும் சமற்கிருதத்தில் தான் எழுதினர் (18). இத்தரவுகள் வட இந்தியாவிலும் தமிழகத்திலும் கி.பி. 5 முதல் 7ஆம் நூற்றாண்டு வரை பௌத்தமதம் ஓரளவு வலிமையோடு இருந்து வந்ததை தெரிவிக்கிறது. ஆனால் சமண பௌத்த மதங்களின் பிராகிருதம், பாலி மொழிகள் வழக்கிழந்து சமற்கிருதமாக ஆகியிருந்தன.

பண்டைய கோவில்களும் பல்லவர் கோவில்களும்:

பண்டைய கோவில்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் ஆகியவற்றால் கட்டப்பட்டவை. ஆகையால் இக்கோவில்கள் அழியத்தக்கவை. தரையும் சுவரும் செங்கற்களால் ஆனவை. மேற்கூரை மரத்தால் அமைக்கப்பட்டது. இணைப்புக்காக ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய கோவில்கள் இன்றும் கேரளாவில் உள்ளன. இத்தகைய கோவில்களையே மகேந்திர பல்லவன் கற்களில் செதுக்கி அமைத்தான். தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்துக்குரிய நடுகல் கோவில்களும் முருகன், திருமாள் ஆகியவர்களுக்கான கோவில்களும் இருந்தன. தொகை நூல்களில் சொல்லப்படும் இன்னபிற சிவபெருமான், பலராமன் போன்றவர்களுக்கும் கோவில்கள் இருந்தன. முருகனுக்கு வேலும், சிவனுக்கு லிங்கமும் கொண்ட கோவில்கள் அன்று இருந்தன. சிலப்பதிகாரம் சிவன், முருகன், பலராமன், திருமாள் ஆகியவர்களுக்குக் கோவில்கள் இருந்தன எனக் கூறுகிறது. பண்டைய கோவில்களும் அரசர் மாளிகைகளும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து நாழிகை பார்த்து, நேரறி கயிறிட்டுத் திசைகளையும், அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வடிவமைக்கப்பட்டன என நெடுநல்வாடையும் (வரி: 75-78), சிலப்பதிகாரமும் (நடுகற்காதை, வரி: 222-225) தெரிவிக்கின்றன.

பண்டைய கோவில்கள் சுற்று மதிலையும், உயர்ந்த வாயில்களையும், வாயில்கள் மீது உயர்ந்த மண்ணீடுகள் எனப்படும் கோபுரங்களையும் கொண்டன. அவ்வாயில்களில் துருப்பிடிக்காத செந்நிறம் பூசப்பட்ட இரும்புக்கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 200-250 காலகட்டத்தில் கோச்செங்கட் சோழன் 70 கோவில்களைக் கட்டினான் என திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். இவன் கட்டியவை மாடக்கோவில்கள். பண்டைய கோவில்கள் பெருங்கோவில், இளங்கோவில், மணிக்கோவில், கரக்கோவில், தூங்காணை மடம் என பலவகைப்படும். அப்பர் காலத்தில் 78 பெருங்கோவில்கள் இருந்தன என அவர் கூறியுள்ளார். தேவார காலத்தில் சிறிய கோவில்களான சில இளங்கோவில்கள் இருந்தன. தேவார காலத்தில் விமான அமைப்புடைய தேர்போன்ற பண்டைய கோவில்கள் இருந்தன.. இத்தேர்க் கோவில்கள் முன்பு மரக் கோவில்களாக இருந்தன. இந்த மரக்கோவில்கள் பின்னர் செங்கற்கோவில்களாக ஆகின. அப்பர், சம்பந்தர் பாடிய பாடல்களில் 200க்கு மேற்பட்ட கோவில்கள் பாடப்பட்டுள்ளன (19).

சென்னை அருகே இருந்த சங்ககால முருகனின் செங்கற்கோவில் வெளிவந்துள்ளது. அதில் கடவுள் உருவம் இருக்கவில்லை. ஆனால் முருகனின் வேல் இருக்கிறது. ஆகமம், குமரி நிலப்பரப்பில் சேயோன், மாயோன் ஆகியவர்களுக்குக் கோவில்கள் இருந்தன எனக் கூறுகிறது. ஐந்து பூதங்களுக்கும் மிகப்பண்டைய காலத்திலேயே கோவில்கள் இருந்தன. ‘தீ’ க்கு திருவண்ணாமலையிலும், வெளி எனும் விசும்புக்கு சிதம்பரத்திலும் கோவில்கள் இருந்தன. ஆகவே களப்பிரர், பல்லவர் காலத்துக்கு முன்பே சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் (கி.பி. 250வரை) சிவனிய மாலிய கோவில்களும் வேறுபல கோவில்களும் இருந்துள்ளன.

முற்கால, இடைக்காலப் பல்லவர் காலத்தில் கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை பல புதிய கோவில்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் அழியும் பொருட்களால் ஆனவை. மகேந்திரன்தான் முதல் முதலாகக் கற்கோவிலைக் கட்டினான். ஆனால் பண்டைய கோவில் வடிவத்தில்தான் அவனது கற்கோவில்கள் இருந்தன. மகேந்திரன் அமைத்த குகைக்கோவில்கள் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் என்னும் சபையையும், தில்லை கோவிந்தராசர் உள்ள இடத்தையும் அமைப்பில் ஒத்துள்ளன. அவனது மகன் நரசிம்மன் அமைத்த ஒற்றைக் கற்கோவில்கள் பழந்தமிழ்நாட்டில் இருந்த தேர்வடிவில் இருந்த கோவில்களைப் பார்த்து அமைத்தவை. இராசசிம்மன் கட்டிய கரையோரக் கோவிலும் தேர்போன்ற கோவில் அமைப்பை உடையதுதான். அதன் வளர்ச்சிதான் கைலாசநாதர் கோவில் விமானம். அதன் வளர்ச்சியே தஞ்சை பெரிய கோவில் விமானம். தமது காலத்தில் இருந்த பாடல்பெற்ற கோவில்களில் காணப்பட்ட ஓவியங்களையே பல்லவர்கள் சிற்பங்களாக வடித்தனர்.

முன்னோர் வணக்கத்திற்காக அமைக்கப்பட்ட கோவில்களும், பண்டைய சிவனிய மாலிய கோவில்களும் பிற்காலத்தில் முழுமுதற் கடவுளர்களின் கோவில்களாக ஆகின. பண்டைய கோவில்களைப் பார்த்தே பௌத்தரும், சமணரும் தம் கோவில்களை அமைத்தனர். அவற்றைப்பார்த்தே பல்லவர்கள் மாமல்லபுரம் போன்ற இடங்களில் கற்கோவில்களை அமைத்தனர். பண்டைய கோவில்களில் இருந்த மண்பதுமைகளையும், விமானங்களையும், தூபிகளையும் பிறவற்றையும் பார்த்தே கற்கோவில்களில் பதுமைகளும், விமானங்களும், தூபிகளும் பிறவும் அமைக்கப்பட்டன. தென்னாட்டுக் கட்டடக்கலை தமிழ்நாட்டுக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள், அதில் காணப்படும் வேலைப்பாடுகள் ஆகிய அனைத்தும் பழந்தமிழ்நாட்டுக் கட்டடக்கலை, கோவில் கட்டுமானங்கள் போன்றவைகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவைதான் (20). அதாவது பண்டைய தமிழ் ஆகமங்களில் இருந்த கட்டடக்கலை, சிற்பக்கலை போன்ற பல்வேறு தமிழ் அறிவு மரபு சார்ந்த நூல்களில் இருந்துதான் பல்லவர்களின் கோவில்களும் அக்கால வழிபாட்டு முறைகளும் உருவாகின. அன்றே தமிழ் ஆகமங்களை வடமொழியில் மொழிபெயர்த்து, சமயம் சார்ந்தனவாக அவை ஆக்கப்பட்டன.

ஆகமங்கள் – தமிழ் அறிவு மரபின் பல்கலைக்களஞ்சியம்:

ஆகமங்கள் என்பன பண்டைய தமிழர்களின் மரபு வழிபட்ட அறிவைப் பாதுகாத்து வந்த தொகுப்புகள். தொன்றுதொட்டு இருந்துவந்த பழந்தமிழ் அறிவு அனைத்தும் ஆகமங்கள் மூலம்தான் பாதுகாக்கப்பட்டு வந்தன. நூற்றுக்கணக்கான ஆகமங்களும் உப ஆகமங்களும் உள்ளன. ஆகமங்கள் கடல் போன்ற பரப்பை உடையன. தமிழர்கள் பாதுகாத்து வந்த ஓவியம், சிற்பம், நாட்டியம், இசை, மருத்துவம், மெய்யியல், கட்டிடக்கலை, வானவியல், நகர அமைப்பு, வேளாண்மை போன்ற பல விடயங்களை ஆகமங்கள் பேசுகின்றன. ஆகமத்தில் உள்ள யாமளைகள் வானவியல், கணிதம், பரிணாம வளர்ச்சி முதலியன குறித்துப் பேசுகிறது. ஆகவே ஆகமங்களில் இடம்பெற்றுள்ள பலவும் தமிழர் கலைகள். ஆனால் அவை பண்டைய தமிழகத்தில் மதச்சார்பற்றவையாக, பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டனவாக இருந்தன. ஆனால் இன்று அவை சிதைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, இடைச்செருகல்களால் நிறைக்கப் பட்டு, மதச்சாயம் பூசப்பட்டு மீட்டெடுக்கமுடியாத அளவு மாறுபட்டுப் போயுள்ளன. ஆகமங்களில் பௌத்த, சமண ஆகமங்களும் உண்டு. சைவ ஆகமங்களில் ஒன்றான சந்திர ஞான ஆகமம், கடற்கோளால் குமரி நிலப்பரப்பில் இருந்து அழிந்து போன நகரங்கள் குறித்தும், நகர அமைப்பு குறித்தும் பேசுகிறது. மயமதம், மானசாரம் போன்ற கட்டிடக்கலை, சிற்பக்கலை நூல்கள் ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆகவே ஆகமம் என்பது மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், பல்வேறு கலைகள் முதலியன குறித்த பண்டையகாலத் தமிழர்களின் மரபு வழிப்பட்ட அறிவு. இதனை பக்தி காலகட்டத்தில், முக்கியமாக பல்லவர் காலகட்டத்தில் கோயில் வழிபாட்டுக்கானதாக அன்றைய சமயங்கள் மாற்றியமைத்துக் கொண்டன. இதனைச் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமல்ல சமண, பௌத்த சமயங்களும் பயன்படுத்திக் கொண்டன. ஆகமங்களில் வைதீகமோ, வர்ணங்களோ, சாதிகளோ இல்லை (21).

பல்லவர்காலத் தமிழ் மரபுச் சிந்தனைகள்:

பல்லவர் காலகட்டத்தில் சமண பௌத்த, சைவ, வைணவ சமயங்கள் போக பூதவாதி (உலகாயதம்), சாங்கியவாதி (எண்ணியம்), வைசேடிகவாதி (சிறப்பியம்), அளவைவாதி (நியாயவியல்), ஆசிவகவாதி போன்ற பல பொருள்முதல்வாதச்சிந்தனைகளும் இருந்துள்ளன. இவை அனைத்தும் தமிழ் மரபுச் சிந்தனைகளாகும். இவை குறித்து கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டு நூல்களான மணிமேகலையும், குண்டலகேசியும் விரிவாகப் பேசியுள்ளன. இதில் சமண மதமும் ஆசிவக மதமும் கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் இருந்துள்ளன. நரசிம்ம போத்தரையணின் தேவார காலத்தில் காஞ்சியில் ஆசிவகப்பள்ளி இருந்தது என ஒரு கல்வெட்டு உறுதி செய்கிறது. அரசியின் நோயைக்குணப்படுத்தும் அளவு அவர்கள் செல்வாக்காக இருந்துள்ளனர் (22). இந்தத் தமிழ் மரபு சிந்தனைகள் அனைத்தும் பார்ப்பனியத்தின் வைதீகச் சிந்தனைகளுக்கும், சாதியத்துக்கும் எதிரானவை.

பல்லவர் காலத்திய சாதியம்:

சமற்கிருதப்பண்பாட்டின் பிரதிநிதிகளாகவே பல்லவர் இருந்தனர் என செயசுவால் குறிப்பிடுவதாக கே.இராசய்யன் கூறுகிறார். சிவனின் வாகனமான எருது அரசின் சின்னமாக இருந்தது. தலைநகர் காஞ்சியில் பார்ப்பனியத்தின் செல்வாக்கால் எண்ணற்ற ஆலயங்கள் உருவாகி இருந்தன (23). பல்லவர் காலத்தில்தான் பார்ப்பனப் புரோகிதர்கள் கோவில் உரிமை பெற்றனர். அவர்கள் தமிழ் மக்களிடம் குருக்கள் வேலையைச் செய்யத் தொடங்கியதும் இக்காலம்தான் (24) பார்ப்பனியப்பண்பாட்டின் பிரதிநிதிகளாக இருந்த பல்லவர்கள் நிலத்திற்கு (தமிழ்) அந்நியராகவே இருந்தனர். சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவினைகள், தடுப்புகள் பற்றி காசக்குடி செப்பேடுகளும், கூரம் செப்பேடுகளும் பேசுகின்றன என இராசய்யன் கூறுகிறார் (25). சமூக அமைப்பின் மிக உயரிய இடத்தில் பார்ப்பனர்கள் இருந்தனர். அவர்களுக்கு குடியானவர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து இறையிலியாக பிரம்மதயம் தேவதானக் கிராமங்கள் என நிறைய நிலதானங்கள் வழங்கப்பட்டன. இதனால் குடியானவர்கள் மேல் வரிச்சுமை அதிகரித்தது.. ஆனால் சூத்திரர்கள் என்போர் தாழ் நிலையில் இருந்தாலும் பாரிய செல்வாக்குப் பெற்றிருந்தனர் (26).

கூரம் செப்பேடு போன்ற சில செப்பேடுகள் பல்லவ மன்னர்கள் வர்ணாசிரமத்தை பாதுகாத்ததாகக் கூறுகின்றன. மேலும் பல்லவர் காலத்தில்தான் முதல்முதலாக தமிழ் ஊர்கள் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டு செப்பேடுகளில் இடம்பெற்றன (27). பொதுவாக அரசர்கள் செப்பேடுகளை வழங்குவதில்லை. அவர்களது ஆணைகள் ஓலைகள் மூலமே வழங்கப்படும். அதன்பின் தானம் பெற்றவர் செப்பேட்டை எழுதிக் கொள்வர் (28), ஆகவே செப்பேடு சொல்லும் கருத்துகளை வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. அன்று பார்ப்பனர்கள் சமூகத்தின் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டதோடு நிலபுலங்களும் செல்வமும் செல்வாக்கும் அரசியல் அதிகாரமும் கொண்டவர்களாக இருந்தனர். வேளாளர், கம்மியர் போன்ற பிற வகுப்பினரும் சமூகத்தில் செல்வாக்கும் செல்வமும் அதிகாரமும் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். ஆதலால் நடைமுறையில் பிறப்பின் அடிப்படையிலான சாதியம் இருக்கவில்லை. அன்று வகுப்புகள்தான் இருந்தன. சமண, பௌத்தச் செல்வாக்கும், பக்தி இயக்கச் சூழ்நிலையும், தமிழ் மரபுச் சிந்தனையும் சமூகத்தில் சாதியத்திற்கு ஆதரவான சூழ்நிலையை வழங்கவில்லை. சான்றாக அப்பர் வேளாளர்; சம்பந்தர் பார்ப்பனர்; வேளாளர், பார்ப்பனர் ஆகிய இருவருக்குமிடையே பக்தி இயக்கத்தின் போதே வகுப்பு வேறுபாடுகளும், மோதல்களும் இருந்துள்ளன. அப்பர் பல இடங்களில் அந்தணர்களை, பார்ப்பனர்களை, வேதம் ஓதுபவர்களை தாக்குகிறார். வேதம் ஓதி என்ன பயன்? சாத்திரம் எதற்கு? தண்டமும், பூணூலும் அணிவது எதற்கு? எனக் கேட்கிறார். இறுதியாக ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?’ எனக் கேலி செய்கிறார். அதன் மூலம் சாதி அமைப்பைக் கோருகிற கோத்திரமும், குலமும் வேண்டாம் எனக்கூறுகிறார். இவர் போன்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதி அந்தணர்களாக இருந்தாலும் திருமாலின் தொண்டர்களைப் பழித்தால் அவர்கள் புலையர்களே எனச் சாடுகிறார். ஆகவே அன்று வைதீக பார்ப்பனியத்தின் சாதியச் சிந்தனைக்குப் பக்தி இயக்கங்கள் எதிராகவும் குரல் கொடுத்தன. கடுமையாக எதிர்க்கவும் செய்தன (29). வேளாளர்களும், கம்மாளர்களும் பார்ப்பனியத்தை அதன் சாதியச்சிந்தனையை எதிர்த்தனர். சமண, பௌத்தச் செல்வாக்கும், பக்தி இயக்கச் சூழ்நிலையும், தமிழ் மரபுச் சிந்தனைகளும் பார்ப்பனியத்தின் சாதியத்தை நிராகரித்தன.

பல்லவர் காலத்தில் வலங்கை இடங்கைச் சாதிகள்:

பல்லவர் காலத்தில் கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் வேளாளர்கள் மிகக்கடுமையாக வைதீக பார்ப்பனியத்தையும் அதன் சாதியத்தையும் எதிர்த்து வந்தனர். வேளாளர்களின் ஆதரவு இன்றி சாதியத்தை நிலை நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள் பல்லவர்களின் இறுதிக் காலத்தில் வேளாளர்களுக்குத் தங்களுக்கு அடுத்த நிலையை வழங்கியதோடு தங்களுக்குரிய அனைத்துச் சலுகைகளையும் அவர்களுக்கும் வழங்கினர். அதன் மூலம் பார்ப்பனர்கள் அவர்களது ஆதரவைப் பெற்றனர். ஆனால் கம்மாளர்களும் அவர்களைப் பின்பற்றிய நகரத்தவர்களும் மற்றவர்களும் பார்ப்பனர்களை, அவர்களது சாதியத்தை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் தான் பார்ப்பனியத்தை அதன் சாதியத்தை ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என்ற இரு பிரிவுகள் உருவாகின. அவைதான் வலங்கை-இடங்கைச் சாதிப்பிரிவுகள்.

இந்தப் பிரிவுகள் பல்லவர் காலத்தில் காஞ்சியில்தான் முதலில் தோன்றின. இப்பிரிவுகளை நாம் அவர்களின் தொழில் அடிப்படையில் வேளாண்பிரிவு, தொழில்பிரிவு என இரண்டாகப் பிரிக்கலாம். வேளாண்பிரிவு வலங்கைச் சாதிகளாகவும், தொழில்பிரிவு இடங்கைச்சாதிகளாகவும் உருவானது. நாளடைவில் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட பார்ப்பனியம் சாதியம் குறித்த வேறுபாடுகள்தான் வலங்கை இடங்கைச் சாதிகளாக உருவாகின.. இவை பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்தில் தான் முதலில் தோன்றின. ஆனால் பல்லவர் காலத்தில் பக்தி இயக்கம், வேளாளர், கம்மாளர் - நகர மக்கள் போன்றவர்களின் எதிர்ப்பு போன்ற பல காரணங்களால் பார்ப்பனியத்துக்கும் சாதியத்துக்கும் கடுமையான எதிர்ப்புகள் இருந்ததால், சாதியத்தை தொடக்க நிலையிலேயே பார்ப்பனியம் கைவிட்டது. ஆதலால் வலங்கை – இடங்கைச் சாதிப் பிரிவுகள் இடையே இருந்த வேறுபாடுகள் பெரிய அளவில் வெளிவரவில்லை. ஆனால் வலங்கை – இடங்கைப் பிரிவுகள் கருத்தளவில் பல்லவர் காலத்தில்தான் உருவாகின. நாளடைவில் அவை உருவான காரணத்தை அதன் அடிப்படையை அவை மறந்தன.

பல்லவர்காலம்:

பல்லவர் காலம் என்பது ஒருவகையில் வைதீக பார்ப்பனர்களுக்குக் குப்தர்காலம் போன்றே ஒரு பொற்காலமாக இருந்தது. ஆனால் சாதாரணப் பொதுமக்களின் வாழ்நிலை குப்தர் காலத்தைப்போன்றே கீழ்நிலையில் இருந்ததோடு, அடிக்கடி ஏற்பட்ட வறுமையும் பஞ்சமும் அவர்களுக்குச் சகிக்க முடியாத துன்பத்தை வழங்கி வந்தது. முதலாம் நரசிம்மவர்மன், பரமேசுவரன் போன்றவர்களின் காலத்திலும் அதன் பிந்தைய பல்லவர் காலத்திலும் அடிக்கடி பஞ்சங்கள் ஏற்பட்டன எனவும் இராசசிம்மன் கால கொடிய வறுமை குறித்து புலவர் தண்டி பாடியதையும் குறிப்பிடுகிறார் இராசமாணிக்கனார் (30) பல்லவர்கள் தங்களது ஆட்சியில் வைதீக பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதும், பார்ப்பனர்களைப் பாதுகாத்து அவர்களுக்குப் பேரளவான சலுகைகளை வழங்கி வந்ததும்தான் பொதுமக்களின் நிலை மிகவும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம். பல்லவர் வளர்த்த கல்வி. இலக்கியம், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இயல், இசை, நடனம் போன்றவைகள் அனைத்தும் தமிழ் மரபிலிருந்தே எடுக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வைதீக பார்ப்பனியத்தையும், சமற்கிருதத்தையும் வளர்த்தெடுப்பதாகவும் தமிழ் மொழியையும் தமிழ் மரபையும் புறக்கணிப்பதுமாகவுமே இருந்தது. அதன்மூலம் பல்லவர்கள் ஒருவகையில் தமிழ் மக்களையும் புறக்கணித்தனர் எனலாம்.

பல்லவர்கள் தொடக்கத்தில் வைதீக பார்ப்பனியத்தின் ஆதரவாளர்களாகச் செயல்பட்டு, 1000 வருடங்களுக்கு மேலாக உயர்நிலையில் இருந்துவந்த தமிழர் நாகரிகத்தையும் தமிழ் மொழியையும் இல்லாது செய்து, அவ்விடத்தில் வைதீக பார்ப்பனியத்தையும், சமற்கிருதத்தையும் பாதுகாத்து வளர்த்தெடுக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை எனினும் வைதீக பார்ப்பனியமும், சமற்கிருத மொழியும், இன்னபிற வடமொழிச் சிந்தனைகளும் தங்களுக்கான அடித்தளத்தை தமிழ்நாட்டில் நிறுவிக் கொண்டன. ஆகவே பிற்காலச் சோழப்பேரரசு உருவாவதற்கு முன்பே அதாவது கி.பி. 850க்கு முன்பே சோழர்பகுதி முழுவதும் பார்ப்பனர்கள் பெருஞ்செல்வமும், நிலபுலன்களும் சமூகச் செல்வாக்கும், ஓரளவு அரசியல் அதிகாரமும் கொண்ட மேல்வகுப்பாகவும், வைதீக பார்ப்பனியமும், சமற்கிருதமும் ஓரளவு வலுவான நிலையிலும் இருந்தன. ஆனால் சாதியம் உருவாகவில்லை. தொழில் அடிப்படையிலான வகுப்புகள் மட்டுமே இருந்தன. பல்லவர்காலம் குறித்துப் பல்லவர் விட்டுச்சென்றவை வளமானதாகவும், பல்வேறானதாகவும் இருந்த போதிலும் அவை பார்ப்பனியம் சார்ந்தவையாகவும், சமூகத்தின் கீழ்மக்களைச் சுரண்டும் தன்மை கொண்டதாகவும் இருந்தன என்கிறார் கே. இராசய்யன். (31).

பார்வை:

1. தமிழகத்தில் பார்ப்பனர்கள், ந. சுப்ரமண்யன், தமிழாக்கம் - மு.வி. சோமசுந்தரம், பெரியார் சிந்தனை உயராய்வு மையம், 2018, பக்:17.

2. தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, ச.கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002, பக்: 161, 162, 172. & தமிழ்நாட்டு வரலாறு, கே.இராசய்யன், தமிழில் சா.தேவதாசு, எதிர்வெளியீடு, 2015, பக்: 109, 110.

3. தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, ச.கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002, பக்: 164– 169.

4. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மை நிலையும், சாதியும் (கி.பி. 600-1565), எசு.செயசீல இசுடீபன், தமிழில் கி.இளங்கோவன், NCBH, பக்: 19, 20.

5. தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, ச.கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002, பக்:167

6. . “ “ “ பக்:173

7. “ “ “ பக்:195

8. “ “ “ பக்:202 233, 234 & 109,110).

9. தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி-1, ச.கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002, பக்: 233, 234. & தமிழ்நாட்டு வரலாறு, கே.இராசய்யன், தமிழில் சா.தேவதாசு, எதிர்வெளியீடு, 2015, பக்: 109 - 116.

10. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவரி - 2023, புத்தகம் – 2, பக்: 496-499, 526-531 & க. நெடுஞ்செழியன், ஆசிவகமும் ஐயனார் வரலாறும், பாலம், 2014, பக்:188-192.

11, 12 மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 286-289, 289-302.

13. பக்: 350-367.

14. பக்: 317-333.

15. முனைவர். க. நெடுஞ்செழியன், ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம், மனிதம் பதிப்பகம், 2002, பக்: 154-173.

16. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 304-315.

17, 18. நா.வானமாமலை, தமிழர் பண்பாடும், தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், சூலை-2008, பக்:96, 126 - 130.

19, 20. மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, பாரதி பதிப்பகம், சனவரி-2022, பக்: 335-348.

21. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவரி - 2023, புத்தகம் – 2, பக்: 528-532

22. ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம், க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், டிசம்பர்-2022, பக்: 339.

23. தமிழ்நாட்டு வரலாறு, கே.இராசய்யன், தமிழில் சா.தேவதாசு, எதிர்வெளியீடு, 2015, பக்: 120

24. பல்லவர் வரலாறு, மா. இராசமாணிக்கனார், பாரதிபதிப்பகம், 2022, பக்: 293.

25, 26. தமிழ்நாட்டு வரலாறு, கே.இராசய்யன், தமிழில் சா.தேவதாசு, எதிர்வெளியீடு, 2015, பக்: 121-124

27. தமிழ்நாட்டுச்செப்பேடுகள் தொகுதி-1, ச.கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002, பக்: 170-172

28. ஆதித்த ச்கரிகாலன் கொலை, மன்னர்மன்னன், பயிற்று, 2023, பக்: 47-68

29. தமிழகத்தில் வைதீக சமயம், தி.சு.நடராசன், NCBH, 2008, பக்: 195-199

30. பல்லவர் வரலாறு, இராசமாணிக்கனார், பாரதிபதிப்பகம், 2022, பக்: 274-276.

31. தமிழ்நாட்டு வரலாறு, கே.இராசய்யன், தமிழில் சா.தேவதாசு, எதிர்வெளியீடு, 2015, பக்: 128.

- கணியன் பாலன்