இன்று தொலைத்தொடர்புத் துறையில் அதிகம் விவாதிக்கப்பட்டு, சர்ச்சையான ஒரு விசயம் இலவச இனையத்தளத் திட்டங்கள். அண்மையில் பிரி பேசிக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அது இதற்குமுன் அறிமுகப்படுத்திய இண்டர்நெட் ஆர்க் போன்ற அம்சத்தையுடையது, அதாவது சில அடிப்படையான இணையத் தளங்கள் மட்டும் இலவசமாக (அதாவது டேட்டா கட்டணமின்றி) அணுகக்கூடியவகையில் மக்களுக்கு வழங்குவதாகும். பலர் விரும்பினர், பலர் விரும்பவில்லை. இதற்கிடையில் இது இணையச் சமநிலைக்கு எதிரானது அதாவது இத்திட்டம் இணையச் சமநிலையைப்(net neutrality) பாதிக்கும் என்று ஒரு பிரிவினர் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இது ஒருவகையில் தொழிற்நுட்பம் சார்ந்துள்ளதால் தொழிற்நுட்ப வல்லூனர்கள் எதைச் சொன்னாலும் ஏற்கும் போக்குவுள்ளது. கம்பசூத்திரமாக இருப்பதால் சாதாரண மக்களும் இவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டிய நிலையில் உள்ளனர். உண்மையில் இது தொழிற்நுட்ப பின்புலம் என்றாலும் இது சமூகப் பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. ஒவ்வொருவரும் யோசித்து சரியான முடிவை எடுக்கவேண்டும்.
பேஸ்புக் மீதுள்ள ஆதரவு எதிர்ப்பு நிலையைத் தாண்டி அடிப்படையான விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இலவசத் தளச் சேவையை அனுமதிக்கும். அதைக் கொண்டு பல நிறுவனங்கள் சேவை அளிக்க முன்வரலாம். குறுகிய தளங்கள் மட்டும் தருவதால் புதியவர்களுக்கு வெளி இணைய உலகம் தெரியாது என்பதை ஏற்கமுடியாது. நியாயவிலை கடையில் அத்தியாவசிய அரிசியும் கோதுமையும் மட்டும் போடுவதால் முந்திரியும் பிஸ்தாவும் அறியமாட்டார்கள் என்பது போல உள்ளது. முதலில் இணையத்திற்கே வர செலவு செய்ய இயலாதவர்கள் குறைந்தபட்சம் பேஸ்புக் போன்ற சமூகத் தளத்திற்கு வந்தால்தானே சமூக மாற்றத்தைக் கற்றுக் கொடுக்க முடியும். பிற நாடுகளைவிட குறிப்பாகத் தமிழகத்தில் சமூகத் தளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறோம். அரசியல் மாற்றங்கள் இங்கிருந்து உதயமாகிறது. இதையெல்லாம் யோசிக்காமல் இலவசங்களைத் தடுப்பதால் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை. கீழ்த்தட்டு மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை வறட்டு சமநிலை பேசி கெடுக்கிறோம்.
இணையச் சமநிலை என்பது எதிர்ப்போரைப் பொறுத்த மட்டில் என்னவென்றால் அனைத்து இணையத்தளங்களும் சமமான வேகத்திலும், சமமான கட்டணத்திலும் கிடைக்கவேண்டும் என்பதாகும். இணையத்தில் இடவொதிக்கீடு வேண்டாம் என்ற ஒற்றைவரி புரிதலாகவும் கொள்ளலாம். ஆனால் ஆழமாகவும் பார்க்கவேண்டும். ஒரு வணிக நிறுவனம் இலவசமாகச் சில தளங்களைத் தருகிறார்கள் என்றால் அதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்குமானால் அதை எதிர்க்கலாம் ஆனால் அத்திட்டமே சமநிலை பறிப்பு என்பது எப்படிச் சரியாகும்? நாட்டில் எத்தனையோ மக்கள் அடிப்படை இணைய வசதியின்றி இருப்பது கணினிக்கு முன் அமர்ந்து கருத்துச் சொல்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு மாறாக ஒருசில தளங்கள் வழியாக இணையத்தை அனுபவிக்க முடியும். சில தளங்களை மட்டும் இலவசமாகத் தருவதால் மற்ற தளங்கள் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கிறோம் என்ற வாதமுண்டு. இலவசமாகக் கொடுத்தால் அனைத்துத் தளங்களையும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காதே என்பதாகும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம், இலவச நூலகமே இல்லாத ஓர் ஊரில் நீங்கள் மக்கள் கல்வி/விழிப்புணர்வு அடைய நூலகம் ஒன்றைக் கட்டி இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள். அங்கே உங்கள் பார்வையில் சிறப்பான நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிப் போடுகிறீர்கள். அப்போது ஒரு குழு எல்லா இதழ்களையும் சமமாக வாங்கிப் போடாவிட்டதால் அது பத்திரிக்கை சமநிலை பறிப்பு அதை எதிர்ப்போம் என்று கிளம்பினால் என்ன செய்வீர்களோ அதுதான் இன்றைய நிலை.
பிரிபேசிக்ஸ் திட்டமாகட்டும், ஏர்டெல் ஜீரோ திட்டமாகட்டும் அதில் திரைமறைவு தனிக்கையோ, கட்டுப்பாடோ இருந்தால் அந்நிறுவனத்தை எதிர்க்கலாம். அனைத்துத் தளங்களும் இலவசமாக வேண்டுமென்று அரசைக் கேட்கலாம். அதற்குமாறாக ஒரு சாதாரணப் பயனர் பலனைடையும் வகையில் வழங்கப்படும் இலவசத்தை எதிர்ப்பது ஆரோக்கியாமா என யோசிக்கவேண்டும். இலவசமாகக் கிடைக்கும் தளங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பிற நிறுவனத் தளங்களுக்குக் கட்டணம் கட்டி பயன்படுத்தமாட்டார்கள். இதனால் சிறு தளங்கள் பாதிக்கும் என்ற வாதமுண்டு. இது எப்படியுள்ளதெனில் கடலூர் வெள்ள நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற தன்னார்வலர்களைக் கொடுக்கவிடாமல் தடுத்து, "நீங்கள் கொடுத்தால் அரசியல்வாதியான எங்களை மக்கள் மதிக்கமாட்டார்கள்" என்றார்களாம் அதுபோலுள்ளது. பிரச்சனைகளைச் சீர்செய்ய வேண்டுமே தவிர காரணமானவர்களை விரட்டக் கூடாது.
இலவசத் தளங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்குக் குரல் கொடுப்பதே இணையச் சமநிலையாகும். காரணம் அதிகம் பொருளீட்டும் நிறுவனம் தங்களைத் தளத்தை விலையில்லாமல் அதாவது பயனரின் டேட்டா செலவைத் தாங்களே ஏற்றுக் கொண்டு இலவசமாகக் கொடுப்பது அவர்களின் விருப்பம். அதைப் பயன்படுத்துவதோ, தவிர்ப்பதோ மக்களின் உரிமை, இதற்கிடையில் இது இணையச் சமநிலை இல்லை என்று கொந்தளிப்பது தேவையற்றது. அனைவருக்கும் சம அளவிலா வருமானவரி கோரப்படுகிறது? அனைத்து உணவகங்களும் சமமான தரத்திலா உணவை வழங்குகின்றன? அனைத்து ஊர்களிலும் சமமான அளவிலா ரியல் எஸ்டேட் மதிப்புள்ளது? வெள்ள நிவாரணமாக அனைவருக்குமா வீடு கட்டிக் கொடுக்கிறோம்? வசதிக்கு ஏற்பவும், ஏழ்மைக்கு உதவவும், விருப்பத்திற்கு இணங்கவும், தேவைக்கு வழங்கவும் செய்யப்படுகின்றன. அதுதான் ஒரு சமூகத்திற்கு வளர்ச்ச்சியை அளிக்கும். லட்சம் சம்பாரிப்பவருகும், ஆயிரம் சம்பாரிப்பவருக்கும் சமமாக வரிவிதிக்கலாமா? எனவே பல்வேறு பொருளாதாரக் காரணங்களையும், சமூகக் காரணங்களையும் கணக்கில் கொண்டே சமநிலை தீர்மானிக்கப்படும் அதுபோல இணையச் சமநிலையும் அவ்வாறே இருக்கவேண்டும். அரசு தொலைக்காட்சி எப்படி கட்டணமின்றி செயல்படுகிறதோ அதுபோல அரசின் இணையத்தளங்கள் எல்லாம் இலவசமாக அரசே வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படும் போது இந்த இணையச் சமநிலை என்ற வாதம் வலுயிழக்க நேரும். வெளிப்படையான நிர்வாகத்திற்கு இணையச் சமநிலை பயன்படவேண்டுமே தவிர இலவசங்களைத் தடுப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.
- நீச்சல்காரன்
முதலாவதாக நீங்கள் சொல்வதை போல் இது சாதாரண மக்களுக்கு இணையம் சென்றடையவேண்டும ் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல , மாறாக இது Facebook போன்ற வணிக நிறுவனங்கள் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த மற்றும் போட்டியாளர்களிட ம் இருந்து தங்கள் நிறுவனத்தை வருங்காலத்தில் காப்பாற்ற கையாளும் ஒரு யுத்தி அவ்வளவே. ஒரு வேளை உண்மையிலேயே மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கு இருந்தால் எதற்காக சில இணையத் தளங்கள் மட்டும் இலவசமாக தர வேண்டும் (Conflict of interest )? அதற்காக இவ்வளவு செலவு செய்வதற்கு பதிலாக அணைத்து இணையத் தளங்களையும் பார்க்கலாம் ஆனால் ஒரு மாததிற்கு 100MB தான் உபயோகிக்கலாம் என்று கொண்டுவந்திருக் கலாம் அல்லவா? அது மக்களுக்கு இன்னும் பயன்படுமே ? தங்களுக்கு ஆதாயம் இல்லாவிட்டால் தங்களது மற்றும் தாங்கள் முடிவு செய்யும் இணையத் தளங்கள் மட்டும் இலவசமாக தருவோம் என்பதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்?
Orkut, MySpace போன்ற தளங்கள் ஞாபகம் இருக்கிறதா? Facebook என்று ஒன்று வந்த பின் இந்த தளங்கள் தங்களது பயன்பாட்டை இழந்தன. நாளை Facebook ஐ விட சிறப்பான ஒரு சேவை வந்தால் அதற்கும் இதே கதி தான். ஆனால் இப்படி தங்களது தளத்தை இலவசமாக மக்களுக்கு தருவதன் மூலம் தங்களுக்கு போட்டியாளர்கள் உருவாகுவதை தடுக்க முடியும். இலவசமாக தரப்படும் தளங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் போட்டி போட இயலாது. இதனால் Facebook நாளை ஒரு Monopoly ஆகிவிடும் ஆபத்துள்ளது.
"குறுகிய தளங்கள் மட்டும் தருவதால் புதியவர்களுக்கு வெளி இணைய உலகம் தெரியாது என்பதை ஏற்கமுடியாது" என்று தெரிவித்துள்ளீர ். இது தாமாக யாரும் சொல்லவில்லை , ஏற்கனவே இது செயல்படுத்தப்பட ்ட நாடுகளில் அந்த மக்களிடம் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்ப ின் பேரிலேயே சொல்லப்படுகின்ற து. அது மட்டும் அல்ல, ஏற்கனவே நமது இளம் பருவத்தினர் அதிகமாக பயன்படுத்தும் தளங்கள் Facebook மற்றும் Whatsapp என்பதை யாரும் மறுக்க முடியாது. நாளை இந்த தளங்களை இலவசமாக தருவதால் தனியாக காசு கட்டி மற்ற தளங்களை எத்தனை பேர் உபயோகிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இந்த இரு தளங்களுக்கு பல பேர் அடிமை என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.
மேலும் இலவசாமாக கொடுக்கப்படும் தளங்களை மட்டும் பயன்படுத்தும் பொழுது, மக்கள் பார்க்கும் விஷயங்கள் மற்றும் அவர்களது கருத்துக்கள் உருவாக ஒரு சில மக்களினால் தீர்மானிக்கப்பட ும் ஆபத்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சில வணிக நிறுவனங்கள் தங்களுக்கு ஆதாயமான விஷயங்கள் பிரசாரம் செய்ய ஒரு வாய்ப்பாக அமையும். ஏற்கனவே செய்தி நிறுவனங்கள் நம் நாட்டில் அந்த நிலையில் தான் இருக்கின்றது, இணையமும் அப்படி ஆகா வேண்டுமா ? அவ்வளவு ஏன் இந்த சேவையை TRAI அனுமதிக்க வேண்டும் என்பதற்காக Facebook மக்களிடம் எப்படி விளம்பரம் செய்தது? நாளை அவர்கள் கட்டுப்பாட்டில் அனைத்தும் வந்தால் இதற்கு எதிர்ப்பு குரல் இருக்கின்றது என்பதையே மறைக்க கூடிய சக்தி அவர்களுக்கு உண்டு.
ஒருவன் வாழ்நாள் முழுதும் ஜெயா டிவி யோ அல்லது கலைஞர் டிவி யையோ பார்த்தால் அவனுடைய கருத்துகள் எப்படி இருக்கும் ?
நீங்கள் கொடுத்த இலவச நூலகம் இதற்கு சரியான எடுத்துகாட்டு அல்ல , சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த நூலகம் யாராவது கட்சியினர் திறந்து வைத்து, தங்களுக்கு சாதகமான கருத்துக்கள் மட்டும் இருக்கும் புத்தகங்களை வைத்திருந்தால் அந்த ஊர் எப்படி இருக்குமோ அப்படித்தான் இது.
சற்று சிந்தியுங்கள்.
இதுதான் பிரச்சினை. இங்கு பேஸ் புக்கின் திட்டத்தை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ நோக்கமல்ல. பேஸ்புக்கைக் காரணம் காட்டி மொத்தமாக இலவசத் தளத்தை எதிர்க்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. மேற்கண்ட உதாரணத்தில் சொல்வதென்றால் உதாரணத்திற்கு ஒரு கட்சிக்காரரே நூலகத்தைத் தொடங்குகிறார் என்பதால் நாட்டில் யாரும் நூலகத்தைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்பது சரியா என யோசிக்க வேண்டும். அதனால் யார் பலனடைவார்கள் என்று புரிந்துவிட்டால ் போதும்.
//இங்கு பேஸ் புக்கின் திட்டத்தை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ நோக்கமல்ல. பேஸ்புக்கைக் காரணம் காட்டி மொத்தமாக இலவசத் தளத்தை எதிர்க்கும் போக்கு // என்று சொல்கிறீர்கள். இங்கு யாரும் அப்படி எதிர்க்கவில்லை. இணையத்தை இலவசமாக எல்லா மக்களுக்கும் கொடுக்க ஃப்ரீ பேசிக்சை விட ஏர்செல்லின் திட்டம்(medianama.com/.../... ), மொசில்லாவின் சம மதிப்பீட்டுத் திட்டம்(thehindubusinessline.com/.../. .. ), ஜிகாட்டோவின் சுங்கமில்லா இணையத் திட்டம் (digit.in/.../... ) எனச் சிறந்த பல திட்டங்கள் இருக்கின்றன. ப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்பது பேஸ்புக்கை முன்னிறுத்தும் திட்டமே தவிர, இலவச இணையத்தை முன்னிறுத்தும் திட்டமாக இல்லை என்று தான் சொல்கிறார்கள். இலவச இணையம் பற்றிப் பேசும் வல்லுநர்கள் மேல் உள்ள திட்டங்களைப் பற்றியும் அரசே இப்படி இலவசமாக இணையம் கொடுக்கலாமே என்பது பற்றியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள், அவசரப் புரிதலுடன் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறீர ்கள்.
RSS feed for comments to this post