UK தேசிய மருத்துவ சேவை அமைப்பு (NHS) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மார்பகப் புற்றுநோயை அறியும் உலகின் முதல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முறை வெற்றி பெற்றால் நோய் அறிதலுக்கு செலவிடப்படும் நேரம் மிச்சமாகும். கதிரியக்க ஆய்வாளர்களின் (radiologists) வேலைப் பளு பாதியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகை புற்றுநோய் கண்டறிதலில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்துவது இதுவே முதல்முறை.

இந்த புற்றுநோய் உள்ளதை அறிய வழக்கமாக எடுக்கப்படும் 700,000 மாமோகிராம் (mammograms) ஸ்கேன் படங்களில் மூன்றில் இரண்டு பகுதி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்படும். இத்தொழில்நுட்பம் ஸ்கேன்களை வாசித்தறிந்து நோய் உள்ளதைக் கண்டறியும். இந்த முறை வெற்றி பெற்றால் மருத்துவமனைகளில் ஸ்கேன்களை ஆராய்ந்து நோய்க்கான அறிகுறிகளை அறிய இரண்டு கதிரியக்க நிபுணர்கள் தேவையில்லை.

ஒரு நிபுணர் வாசித்தறிந்த பின் இரண்டாவது நிபுணருக்கு பதில் வாசிக்க உதவும் (read assisstant) தொழில்நுட்பம் நோய் இருப்பதை துல்லியமாக ஆராய்ந்து கூறும். எடுக்கப்படும் ஸ்கேனை முதலில் ஒரு நிபுணர் ஆராய்வார். பிறகு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் இரண்டாவது முறை அந்த ஸ்கேன் ஆராயப்படும். இதனால் பல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தங்கள் நேரத்தை வேறு பணிகளுக்கு செலவிடமுடியும். எக்ஸ் கதிர், எம் ஆர் ஐ ஸ்கேன்கள் போன்றவற்றின் பகுப்பாய்வு முடிவுகளை நோயாளிகள் விரைவாகப் பெற முடியும்.

புற்றுநோய் பகுப்பாய்வு மற்றும் சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கத்துடன் UK ஆரோக்கியம் மற்றும் சமூக நலத் துறை (Department of Health and Social Care (DHSC)) இந்த பரிசோதனை முறையை தொடங்கியுள்ளது.

2023ல் ஸ்வீடனில் 80,000 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இதே போன்ற சிறிய அளவிலான தொழில்நுட்பத்தின் உதவியுடனான பரிசோதனையில் இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று தெரிய வந்தது.

மேலும் இந்த முறை நோய் இருப்பதாக தவறுதலாகக் கூறும் (false positives) முடிவுகளை பெருமளவில் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். விரைவில் தேசிய மருத்துவ சேவை அமைப்பின் 30 மார்பகப் புற்றுநோய் ஸ்கேனிங் மையங்களில் இந்த புதிய பரிசோதனையில் ஐந்து வெவ்வேறு வகையான வாசித்தறிய உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முறைகள் 700,000 ஸ்கேன்களில் 462,000 படங்களை வாசித்து நோய் இருப்பதை எடுத்துக்கூறும்.

“திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படும் இந்த புதிய முறை இந்த புற்றுநோயை துல்லியமாக முன்கூட்டியே கண்டறிய பெரிதும் உதவும்” என்று ஆரோக்கியம் மற்றும் சமூக நலத் துறையின் தலைமை ஆலோசகரும் இத்திட்டத்திற்கு 11 மில்லியன் பவுண்டு நிதியுதவி வழங்கும் தேசிய ஆரோக்கியம் மற்றும் உடல் நல ஆய்வுக் கழகத்தின் தலைமை செயல் அலுவலருமான பேராசிரியர் லூசி சேப்பல் (Prof Lucy Chappell) கூறுகிறார்.

“ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான புற்றுநோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பணியாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும். நோயாளிகளின் காத்திருப்பு நேரம் குறையும். இத்துறையில் இந்த தொழில்நுட்பத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி தீவிரமாக ஆராயப்பட வேண்டும்” என்று UK புற்றுநோய்க்கான முக்கிய சான்று ஆய்வு மையத்தின் தலைவர் சமந்தா ஹாரிசன் (Samantha Harrison) கூறுகிறார்.

“அதிகரிக்கும் புற்றுநோயாளிகள், அவர்களின் நலனை பகுப்பாய்வு சோதனைகள் மூலம் மருத்துவர்கள் திறம்பட மேலாண்மை செய்வதற்கு இத்தொழில்நுட்பம் அளவற்ற பயன்களைத் தரும். ஆனால் இதற்கான படி முறைகள் (algorithms) மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட வேண்டும். அப்போது அவை வெவ்வேறு பகுதிகளைப் பின்புலமாகக் கொண்டுள்ள பல்வேறு பெண்களுக்கு சமமான, நம்பகத் தன்மையுடன் கூடிய சரியான முடிவுகளைத் தரும். இந்த முறையில் நடத்தப்படும் பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்குமாறு செய்யப்பட வேண்டும்” என்று ராயல் கல்லூரியின் கதிரியக்க நிபுணர்கள் பிரிவின் தலைவர் பேராசிரியர் கேத்தரீன் ஹாலிடே (Prof Katharine Halliday) கூறுகிறார்.

உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் பெண்களின் உயிர் பறிக்கும் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இந்த புதிய கண்டுபிடிப்பு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.