தமிழர் தலைவர் ஆசிரியர் ஐயா வீரமணி அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தக காதலும் தலைப்பில் எழுதிய நூல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திலும் கவனம் பெற்றுள்ளது. டாக்டர் அம்பேத்கர் அதிகம் படித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த நூலைப் படித்துப் முடிக்கும் பொழுது புத்தகங்களைப் படிப்பதற்காகவே இந்த மானுட பிறவி எடுத்தவர் போலும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்தி பிரம்மாவின் தலையிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிறந்தவர்கள் என்று கூறி மக்களை பிளவுபடுத்தியதை மிக மூர்க்கமாக எதிர்த்தவர் டாக்டர் அம்பேத்கர். அதனால் தான் இந்து மதத்தைவிட்டு பௌத்த மார்க்கத்தை தழுவினார் என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது. ஆனால் ஒருமுறை டாக்டர் அம்பேத்கரின் கார் விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்து அவரை மிகவும் அச்சமூட்டியது. அதுவரை இல்லாத பயம் அவரை தொற்றிக்கொண்டது. நான் இறந்து விட்டிருந்தால் என்னவாகியிருக்கும். இந்தக் கேள்வி அவர் மரணத்தைக் கண்டு எப்படி பயந்தார் என்பதை நினைக்கக்கூடும். ஆனால் அதற்காக பயப்படவில்லை. ஒருவேளை நான் செத்துப் போயிருந்தால் ஓர் இந்துவாக அல்லவா செத்துப் போய் இருப்பேன். என்ற கூற்று எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படி பக்கத்திற்கு பக்கம் புதுப்புது தகவல்களையும் கருத்தையும் இந்நூல் விதைக்கிறது.

veeramani book on ambedkarஇந்தியாவை இரண்டு வகையாக பிரிக்கவியலும். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் வருகைக்கு முன் இருந்த இந்தியா. வருகைக்குப் பின் உருவான நவீன இந்தியாவென்று.

டாக்டர் அம்பேத்கரின் வருகைக்குப்பின், தான்மட்டும் படிக்காமல் ஒட்டுமொத்தமாக இந்தச் சமூகத்தையே படிக்க வைத்தார். அதுவரை குறிப்பிட்ட ஒரு மக்களைத் தவிர மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது. மீறிப் படித்தால் தீட்டு. அந்தத் தீட்டிலிருந்து விடுதலை அடைய வேண்டுமென்றால் அவர்கள் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற வேண்டும். இப்படித்தான் ஒரு பிற்போக்கான சூழல் இருந்தது. அந்த நிலையை தன் அறிவாற்றலால் சுக்குநூறாக அடித்து நொறுக்கியவர் டாக்டர் அம்பேத்கர். அவர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கவனமாகப் படித்து முன்னேறி, மற்றவர்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்.

வெளிநாட்டுக்கு படிக்க சென்ற முதல் இந்தியர் மட்டுமல்ல. வெளிநாட்டில் முனைவர் பட்டமும் (Ph.D) பெற்ற முதல் இந்தியரும் அவரே. 1917ல் THE NATIONAL DIVIDEND OF INDIA: HISTORICAL AND ANALYSTICAL STUDY என்ற தலைப்பில் அவர் அளித்த ஆய்வேடு பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் வளர்ச்சி கோட்பாடு என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. 1923 ஆம் ஆண்டு ரூபாயின் சிக்கல் லண்டன் பல்கலைக்கழகத்தில் டி.எஸ்சி (D.Sc) பட்டம் பெறுவதற்காக பொருளாதாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரை. இது போன்ற நூல்களால் தான் இன்று RESERVE BANK உருவாவதற்குக் காரணம்.

அவருடைய முனைவர் பட்ட நெறியாளர் (PhD Guide) பொருளாதார அறிஞர் Prof. Selignman. நவீன பொருளாதாரத்தின் தந்தை J.M. Keynes சும் பேராசிரியர் செலிக்மேனும் நல்ல நண்பர்கள். ஆனால் Keynes உடைய பொருளாதார சிந்தனையையும், கோட்பாட்டையும் மறுத்து டாக்டர் அம்பேத்கர் ஆய்வுக் கட்டுரைகள் (RESEARCH PAPERS) எழுதினார். இதை அறிந்த பேராசிரியர் செலிக்மேன் Prof. கீன்ஸ் கருத்தை மறுப்பதால் என்னுடைய கருத்தையும் மறுக்க வேண்டி இருக்கும். அப்படி இருக்க என்னை எப்படி நெறியாளராக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்விக்கு… டாக்டர் அம்பேத்கர் கொஞ்சமும் தயங்காமல் இனிமேல் உங்களுடைய சிந்தனையும் (Thought) மாறும் என்று பதில் அளித்தார். தன்னுடைய நெறியாளரின் கருத்தை மறுப்பதற்கு எத்தனை பெரிய வலிமை வேண்டும் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், என்னுடைய வழிகாட்டி டாக்டர் அம்பேத்கர் என்று பதிவு செய்துள்ளார். வறுமை ஒழிப்பைப் பற்றி என் சிந்தனையை கிளர்ந்தெழச் செய்தவரும் அவரே. அவருடைய பொருளாதார கொள்கையை பின்பற்றி ஆராய்ச்சி செய்தேன் என்று கூறியுள்ளார். இப்படி சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பை செலவிட்டவர் டாக்டர் அம்பேத்கர்.

ஒரு சர்வே எடுத்து பார்த்தால் தெரியும். டாக்டர் அம்பேத்கர் இந்த தேசத்தை எத்தனை அறிவுடைய சமூகமாக மாற்றி உள்ளார் என்று. வாதத்திற்கு ஒரு கேள்வியை இப்படி முன்வைக்க முடியும். இன்றைய அறிவியல் புரட்சியால் அனைவரும் படிக்கத் தொடங்கி விட்டனர். அது எப்படி டாக்டர் அம்பேத்கர் தான், அனைவரையும் படிக்க வைத்தார் என்று?.

இதுவரை உலகில் அதிக கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு மின்சாரம், ரயில்வே துறை, தந்தித் துறை, தொலைபேசி, விமானம், நீராவி இன்ஜின், ஏன் இன்று எழுதும் பேனாவை இருக்கட்டும், படிக்கும் புத்தகமாக இருக்கட்டும் இதில் எத்தனைக் கண்டுபிடிப்புகளை இந்தியர்கள் கண்டுபிடித்தார்கள். ஒன்றுமில்லை என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

இக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை. இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை கல்வி அனைவருக்கும் சமமாக சென்று சேர்ந்தது இல்லை. பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூடாது என்று தான் அன்றைய சமூக நிலை இருந்தது. ஏன் இந்த நூற்றாண்டை எடுத்துக் கொண்டாலும் அனைவரும் படித்து முன்னேறி விடக்கூடாது என்பதால்தான் மருத்துவத்துறையில் நீட் தேர்வு (NEET) கொண்டு வரப்பட்டது.

நீட் தேர்வு ஏன் கொண்டுவரப்பட்டது என்றால் அனைவரும் படித்து மருத்துவர்கள் ஆகிவிடக்கூடாது என்பதை தந்திரமான முறையில் தடுக்கத்தான். நீட் தேர்விலும் நம்பகத்தன்மை இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமலும் நீட் கோச்சிங் சென்டருக்கு மட்டும் சென்று முதல் மதிப்பெண் எடுக்கலாம். இன்னும் ஒருபடி மேலே சென்று முறைகேடு செய்து கூட தேர்ச்சி பெற்றுவிட முடியும். இப்படிதான் முதலாளித்துவ அரசாங்கம் மருத்துவத்துறையில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆகிவிடக்கூடாது என்பதால் மருத்துவக் கல்வியின் கனவு தடை செய்யப்படுகிறது. இன்றும் மின்சாரமும், பேருந்தும் போய் சேராத கிராமங்கள் நிறைய உள்ளன. பாடத்திட்டத்திலும் பெரிய வேறுபாடு. பெரும் பெரும் பணக்காரர்கள் எல்லாம் வெளிநாட்டு பாட திட்டத்தில் படிக்க வைக்கின்றனர். ICS, CBSC, MATRICULATION சமச்சீர் கல்வி அரசு பாட திட்டம் இப்படி பெரிய அளவிற்கு வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தேர்வு மட்டும் அனைவருக்கும் பொதுவானது?.

இந்துக்களின் மிக முக்கியமான புனிதம் பெண்கள் தாலி அணிந்து கொள்வது. தேர்வை காரணம் காட்டி அந்தத் தாலியைக் கூட கழட்டச் சொல்லி அடம்பிடிக்கும் கலாச்சார கும்பல், இப்பொழுது அந்தப் புனிதம் இயங்குகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கத்தில் புதியக் கல்வி கொள்கை. இக் கல்விக் கொள்கை உண்மையில் மாணவர்களை படிக்க தூண்டுவதை விட, படிப்பதைத் தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது. ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு. எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது மாணவர்கள் மீது கல்வி என்கின்ற போர்வையில் வன்மத்தை செலுத்தப்படுகிறது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களை பெற்றோர்கள் செய்யும் பணியை விரும்பி கற்க வலியுறுத்தப்படுகிறது. ஏறக்குறைய குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாக நிறைவேற்ற துடிக்கும் இந்த சிந்தனை நவீன தீண்டாமையின் மொத்த வடிவம்.

நாட்டை பாதுகாகப்பது ராணுவத் துறை ஆகும். ராணுவத் துறையில் கூட அக்னிபாத் என்கின்ற திட்டத்தை கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்தும் முதலாளித்துவ அரசாங்கம், ஏழை எளிய மக்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து விடக்கூடாது என்பதற்காக அல்லது எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதனால் கடைநிலையில் இருக்கும் சிப்பாய் பணிக்கு வேட்டு வைத்துவிட்டனர். இந்த திட்டம் நிறைவேற்ற கூடாது என்பதற்காக வட இந்தியாவில் பெரிய கலவரமே வெடித்ததை நாடே அறியும்.

இப்படி அரசுத்துறைகளிலும், பொதுத் துறைகளிலும் ஏழை எளிய மக்களும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முன்னேறி வருவதை ஒடுக்குவதற்கு கொண்டுவருவதற்காக புதிய புதிய திட்டங்களை அறிமுகப் படுத்துகின்றனர். பொதுத்துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. எப்பொழுதும் மக்கள் சுயசிந்தனை அற்றவர்களாகவும், பொருளுக்காக தேடி அலைபவர்களாகவும் இருந்தால் மட்டுமே தங்கள் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் ஒரு பாதுகாப்பு என்பதை கருதி தான் இதுபோன்ற திட்டங்கள் செயல் வடிவம் பெறுகிறது.

இந்த நூற்றாண்டில் இத்தனை பெரிய வன்மம் நிலவுகிறது என்றால், டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த போது எத்தனை மூர்க்கமாக இந்த சமூகம் இருந்திருக்க கூடும்?... அதனால்தான் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி முன்னேறினார். யாரை படிக்கக்கூடாது, படித்தால் தீட்டு என்று சொல்லி பள்ளியில் இருந்து ஓரம்கட்ட பார்த்தார்களோ? இன்று அவர் வகுத்து தந்த அரசியல் அமைப்புதான் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அன்றைக்கு இந்தியாவில் இருந்தவளுக்கு சட்டம் எழுதத் தெரியாமல் போனதா என்ன?. தெரிந்தாலும் உடன்படவில்லை. காரணம் இந்தியாவைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன தெரியும்?. டாக்டர் அம்பேத்கருக்கு இந்தியாவில் அகமும் தெரியும், புறமும் தெரியும் மட்டுமல்ல அதன் கோர முகமும் தெரியும். இந்திய அரசியல் சாசனத்தை எழுதுவதற்கு எத்தனை பெரிய அறிவு வேண்டும்?. இவை எல்லாவற்றுக்கும் அவருடைய தீராத அறிவுத்தாகம் அல்லது அறிவுப்பசி என்று சொல்லமுடியும். அவர் தன் தாகம் தீர எவ்வளவு படித்தார் எத்தனை நேரம் படித்தார் என்பது வரலாறு.

ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் படிப்பதற்கு செலவழித்தார். ஆங்கிலத்தில் இப்படி சொல்வார்கள். WHAT EVER, WHEN EVER, WHICH EVER, WHERE EVER READ, READ, READ ONLY படிப்பதற்காகவே இந்த மானுட பிறவியை எடுத்து வந்ததைப் போல பிறந்தவர். ஒருமுறை நேர்காணலின் போது டாக்டர் அம்பேத்கரிடம் கேட்ட கேள்வி இது. ஒருவேளை கல்வித்துறை அல்லாமல் வேறு எந்தத் துறைக்கு சென்று இருந்தால் நீங்கள் என்னவாக இருந்திருப்பீர்கள் என்பதற்கு, டாக்டர் அம்பேத்கர், எந்த துறைக்கு சென்றாலும் அந்தத்துறையில் என்னை கரைந்தே என்னுடைய அழுத்தமான பதிவை பதிவிட்டு இருப்பேன் என்றார்.

இப்படி ஒரு மனிதர் இந்த தேசத்தில் பிறந்தார் என்பது சரித்திரம். ஆனால் இந்தச் சாதிய சமூகத்தில் பிறந்தார் என்பது பெரிய துரதிஷ்டம். அதனால்தான் இந்து மதம் அடிமைத்தனத்தை போதிக்கிறது என்பதால் அதை மிகவும் வெறுத்தார். இதற்கு முன்பு தீண்டாமை கொடுமையை யாரும் அறிவிக்கவில்லையா என்ற கேள்விக்கு அவரே பின்வருமாறு பதில் அளிக்கிறார்.

சுதந்திரமானவன் என்று நான் யாரை வரையறுப்பேனென்றால் - எவனொருவன் தன்னுடைய உரிமை, பொறுப்பு. கடமை ஆகியவை பற்றிய விழிப்போடு இருக்கிறானோ. எவனொருவன் தன்னை அடக்கி ஆளும் சூழலுக்கு அடங்க மறுத்து, அந்தச் சூழலை தனக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்கிறானோ, எவனொருவன் இது பழகிப்போய் விட்டது. வழிவழியாய் இதுதான் நடைமுறை. இதுதான் மரபு இப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்று சொல்லி அதற்கு முன்னோர்களை சாட்சிக்கு இழுக்காமல் இருக்கிறானோ அவனிடமே பகுத்தறியும் சிந்தனையின் சுடர் அணையாமல் எரிகிறது. அவனையே நான் சுதந்திரமான மனிதன் என்பேன். எதற்காகவும் தன்னை ஒப்புக்கொடுத்து விடாத, மற்றவருடைய அறிவுரைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாத எதையும் காரண-காரிய பின்புலத்தில் கேள்விக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்வதில்லை. என்ற முடிவு கொண்டவன் எவனோ அவனே சுதந்திர மனிதன். எவன் ஒருவன் தன் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னிற்கிறானோ, இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்பதைப் பற்றிய அச்சம் இல்லாதவன் எவனோ, அடுத்தவரின் கைப்பாவையாக மறுக்கும் மானமும் அறிவும் எவனுக்கு இருக்கிறதோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். அடுத்தவர் சொல்லும் வழியில் தன் பார்வையை செலுத்தாது, தன் இருத்தலின் நோக்கத்தை, தன் சுய சிந்தனைப்படி தானே அமைத்துக் கொண்டு அதன்படி தன் வாழ்வு எப்படி - எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அவனே முடிவு செய்து கொள்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். சுருங்கச் சொன்னால் எவனொருவன் தன்னை, தான் மட்டுமே வழி நடத்துகிறானோ அவனை மட்டுமே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

நான் மேலே சொன்ன வரையறைகளின் படி கேட்கிறேன். நீங்கள் சுதந்திரமானவர்களா? உங்கள் இலக்கை நீங்களே நிர்ணயித்துக் கொள்ள உங்களால் முடியுமா? என்னுடைய பார்வையில் நீங்கள் சுதந்திரமிழந்தவர்கள் மட்டுமல்லர். அடிமைகளைக் காட்டிலும் கீழாக இருப்பவர்கள். உங்கள் அடிமைத்தனத்திற்கு ஒப்பீடே கிடையாது. இந்து மதத்தில் எவருக்கும் பேச்சுரிமை கிடையாது. இந்து மதத்திற்குள் வாழும் யாரும் தங்கள் பேச்சுரிமையை இழந்துதான் ஆக வேண்டும். வேதங்கள் என்ன சொல்கின்றனவோ அதன்படி தான் அவர்கள் நடக்க வேண்டும். அவர்களின் நடத்தையை வேதங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் ஸ்மிருதிகள் என்ன சொல்கின்றன என்றும், ஸ்மிருதிகளும் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் புனித மகான்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்து மதத்தில் ஒரு மனிதனின் தன்னுணர்வு, பகுத்தறிவு சிந்தனை இவைகளுக்கெல்லாம் எந்தவொரு இடமும் கிடையாது. அதற்கான தேவையும் அங்கே எழாது. ஓர் இந்துவானவன் வேதங்கள் அல்லது ஸ்மிருதிகளுக்கு அடிமையாக அல்லது கண்ணை மூடிக்கொண்டு புனிதர்களின் வழியில் நடப்பவனாக இருந்தால் மட்டும் போதும். அவன் எதையும் பகுத்தறிந்து கேள்வி கேட்க அனுமதியில்லை. ஆகவே நீங்கள் எவ்வளவு காலம் இந்து மதத்திற்குள் உங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்களோ அதுவரை உங்கள் சிந்தனைக்கு விடுதலை என்பதே கிடையாது (பக்.24,25) என்ற கேள்வி கணையால் மக்களை சிந்திக்கத் தூண்டி கொண்டிருந்தார்.

அதன் வெளிப்பாடுதான் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள். சுமார் 10 லட்சம் மக்களோடு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார்.பௌத்த மார்க்கத்தை தழுவும் பொழுது அவர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுதான் முழு விடுதலைக்கான வழி. அந்த உறுதிமொழிகள் அடங்கிய நூல் உலகத்தில் தலை சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

ஜாதி என்பது ஒரு மனநிலை. நோயுற்ற மனநிலை. இந்து மதத்தால் கற்பிக்கப்பட்ட விழுமியங்களே இந்த நோய்க்கான மூலகாரணம். நாம் ஜாதி வேற்றுமையைக் கடைப்பிடிக்கிறோம். தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் இப்போது நாம் இருக்கும் இந்து மதமானது நமக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதனால்தான். கசப்பான ஒரு பண்டத்தை, இனிப்பாக்கலாம்: உப்பான புளிப்பானவற்றின் சுவையைக் கூட மாற்றி விடலாம். ஆனால் நஞ்சை எப்போதும் அமிழ்தமாக்க முடியாது. இந்து மதத்தில் இருந்து கொண்டே ஜாதியை ஒழித்துக் கட்டலாம் என்று கதைப்பது நஞ்சை அமிழ்தமாக்கி விட முடியும் என்று சொல்வதைப் போன்றதுதான்.

சுருக்கமாக. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அசுத்தமானவனாக. தீண்டத்தகாதவனாகப் பார்க்கும் பார்வையை கற்றுக் கொடுக்கும் இந்து மதத்திற்குள் இருக்கும் வரைக்கும் ஜாதியின் பெயரால் நம் சிந்தையில் ஆழப்பதிக்கப்பட்டிருக்கும் - தீண்டத்தகாதோருக்கு இடையில் நிலவும் ஜாதியும் தீண்டாமையும் அழித்து ஒழிக்கப்பட வேண்டுமானால் மதமாற்றம் ஒன்றுதான் மருந்து (ப.27) என்ற தீர்க்கமான தன் கருத்தை முன்வைத்தார்.

இப்படி இந்நூலைப் படிக்கும் பொழுது பக்கத்திற்கு பக்கம், வரிக்குவரி அடி குறிப்பிட்டு படிக்கத் தோன்றும். டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாளில் இதுவரை சுமார் 15,000 பக்கங்களுக்குமேல் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் தொகுத்து இந்திய அரசாங்கம் 37 தொகுதிகளாக வெளியிட்டுள்ளன (இன்றைய அரசாங்கம் அவற்றை மறுபதிப்பு செய்வதற்கு போதிய அளவிற்கு பணம் இல்லை என்று நிறுத்தி விட்டது). அவை வேண்டாம் என்றோ? காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள் என்று சொல்லி நூல்களை ஒரே ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்கிவிட முடியாது. அதில் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சினை, தொழிலாளர் உரிமை, நீர்ப்பாசனம், பொருளாதாரச் சிக்கலுக்கு தீர்வு என்று இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு கூட இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கு கூட சிக்கலை தீர்ப்பதற்கு காரணத்தைச் சொல்லியிருக்கிறார். (அதனால்தான் உலகத்தில் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படுகிறார். உலகில் அதிக சிலைகளைக் கொண்ட மனிதர் என்றால் அது பாபாசாகேப் அம்பேத்கர் மட்டும்தான்). 

எந்த ஒரு நூலும் சமகால பிரச்சினைக்கு பதில் சொல்வதோடு நின்று விட்டால் அது எதிர்காலத்தில் இறந்தகால நூலாகிவிடும். டாக்டர் அம்பேத்கரின் நூல்கள் எல்லா காலத்திற்கும் வேண்டப்படுபவை.

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், எனக்கு பொருளாதாரத்தில் ஏதாவது சிக்கல் இருந்தால் உடனே டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூல்களைப் படித்துத் தெளிவு பெறுவேன் என்று கூறியுள்ளார். அதேபோன்று முன்னாள் நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த ப. சிதம்பரம் அவர்கள், எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால்… டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூல்களைப் படித்து அறிந்து கொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும் விஐடி வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் விழா மேடை ஒன்றில், எனக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பவர் டாக்டர் அம்பேத்கர் தான். அவர் எழுதிய நூல்களில் இருந்து நான் தெளிவு பெறுவேன் என்று கூறியுள்ளார். இதுபோன்று இவ்வுலகில் ஆயிரமாயிரம் சான்றோர் பெருமக்களும், ஆய்வாளர்களும் டாக்டர் அம்பேத்கரின் நூல்களைப் படித்த வண்ணம் இருக்கின்றனர். அவர் எந்த அளவிற்கு இச்சமூகத்திற்கும், நாட்டுக்கும் தேவையானவற்றை பதிவு செய்துள்ளார் என்பதை ஆராய வேண்டும்.

முன்னர் கூறியதைப் போன்று டாக்டர் அம்பேத்கர் எழுதியவற்றை தொகுத்து 37 தொகுதிகளாக வெளிக்கொண்டு வந்துள்ளனர். "அசோகர் ஆட்சி புரிந்த மகத நாட்டின் தொன்மையாக இருந்தது - பாலி. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்பேத்கர் பாலி மொழிக்கான இலக்கண அகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார் (ப. 457) என்று எனது இந்தியா என்கின்ற நூலில் எஸ். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். ஒரு வேளை பாலி மொழி அகராதி வெளிவரும் பொழுது நூல் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதோடு மட்டும் அல்லாமல் டாக்டர் அம்பேத்கரை பற்றிய புரிதலும் இன்னும் கவனம் பெறும்.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தவை. இன்னும் சொல்லப்போனால் அதைப் புரிந்து கொள்வதற்கு தீவிர வாசிப்பு தேவை. ஏதோ பக்கங்களை நிரப்பி ஒரு புத்தகத்தை ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அவருடைய நூல்களில் ஒரு பக்கத்தையோ , அல்லது ஒரு பத்தியையோ படித்துப் புரிந்து கொள்வதற்கும் ஒவ்வொரு சொற்களையும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய எல்லா நூல்களைப் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிச்சயம் இந்த ஒரு ஆயுள் போதாது. அல்லது தொடர்ந்து இடைவிடாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் எழுதிய நூல்களை மட்டும் படித்தால் ஓரளவு உள்வாங்க முடியும். அதனால் அவர் எழுதிய எல்லா நூல்களைப் படிக்க முடியாவிட்டாலும், ஒரு சில குறிப்பிட்ட நூல்களைப் படிக்க விரும்பினால் முழு விடுதலைக்கான வழி, புத்தரும் அவர் தம்மமும், சாதி ஒழிப்பு, காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்ததென்ன உள்ளிட்ட புத்தகங்களைப் படித்தால் போதும் இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு போதுமானவை. மற்ற எந்தெந்த தேவை இருப்பினும் அந்த தேவைக்கு உண்டான புத்தகங்களை படித்து அறிந்து கொள்ளவும் முடியும்.

எந்த அளவிற்கு டாக்டர் அம்பேத்கர் புத்தகத்தை நேசித்தார் என்பது அவரது வாசிப்பு பழக்கத்தில் இருந்து உணர முடியும். இந்தச் சூழலில் அய்யா வீரமணி எழுதிய இந்த ஒரு நூலைப் படித்தால் போதும், டாக்டர் அம்பேத்கரின் நூல்களை வாசிக்க தூண்டும். எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் அடி குறிப்பிட்டும், குறிப்பெடுத்தும் படிக்கத் தோன்றும். அந்த வகையில் அவர் புத்தகப் பிரியராக இருந்தார்.

தாக்கர் அண்ட் கோ வெளியீட்டகம் டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூல்களை வெளியிடும் பொறுப்பைப் பெற்றிருந்தது. அவர் எழுதிய புத்தகங்களுக்காக ராயல்டியை ரொக்கமாகவோ காசோலை மூலமாக எடுத்து செல்வதே அரிது. அபூர்வம். காரணம், அத்தொகையை முழுவதற்கும் அல்லது பெரும் அளவிற்கு அவர்கள் கம்பெனியில் விற்கப்படும் பல புதிய வெளியீடு நூல்களை விலை கொடுத்து வாங்கி போவாராம். அவரது பொருளாதார நெருக்கடி பற்றி அவர் சிந்திப்பதே கிடையாதாம்.

உலகில் அதிக புத்தகங்களைப் படித்த பெருமைக்குரிய மனிதர் டாக்டர் அம்பேத்கர் எப்பொழுதும் வாசிப்பு தான். யு.ஆர்.ராவ் அவர்கள் டாக்டர் நீங்கள் எவ்வளவு புத்தகங்களை வாங்கிக்கொண்டு சென்று சேர்த்து வைக்கிறீர்களே இவைகளை உங்களால் எப்படி படிக்க முடிகிறது என்று கேட்டதற்கு அதற்கு டாக்டர் புன்னகைத்தவாறே சில புத்தகங்களை தான் நாம் அப்படி ஆழமாக படித்து, உள்வாங்கி செரிமானம் செய்யும் நிலை உள்ளது. அவை மிகவும் சொற்பமே! மற்றவை நாம் அறிந்த பல செய்திகளின் தொகுப்பு தான். அப்படிப்பட்ட புத்தகங்களில் முக்கிய பகுதிகளை படிப்பேன். மற்றவை நமக்கு அறிமுகமான பகுதிகள். இப்படி செய்தாலே புத்தகத்தை படித்து முடிப்பதாக பொருள் என்றார் ப44) எந்த அளவிற்கு புத்தகங்களை படித்து இருந்தால் இந்த கருத்தை சொல்ல முடியும்.

1945இல் டாக்டர் அம்பேத்கர் காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்தது என்ன என்ற புத்தகத்தை எழுதிக் கொண்டு உள்ளார். அவரது அந்த புத்தகத்தில் ஒரு மேற்கோளை இணைக்க விரும்புகிறார் டாக்டர் அவர்கள். அவர் சங்கரானந்தை அவருக்கு தேவைப்படும் குறிப்பிட்ட புத்தகத்தை எடுக்க சொல்லிவிட்டு எழுதிக் கொண்டுள்ளார்.

இவர் அந்த நூலை தேடுகிறார். அவரது நூலக அலமாரியில் சற்று காலதாமதம் ஆனது. டாக்டர் எழுந்து வந்து இவர் தலையில் ஒரு தட்டு தட்டு, விட்டு (குட்டு என்று வைத்துக் கொள்ளலாம்) அவரே, இவர் தேடும் புத்தகத்தை உடனே எடுத்து விட்டு சொன்னார். என்னிடம் நீங்கள் வரும்போது ஏராளம் புத்தகங்களை படிக்கிறீர்கள். என்ன பயன் -இதை புரிந்துகொள்ள முடியவில்லையே என் முன்னே நின்று உங்கள் நேரத்தை ஏன் வீணாக்குகிறார்கள்? என்று செல்லமாக கடிந்து கொண்டார்(ப.50).

உலகிலேயே டாக்டர் அம்பேத்கரிடம் இருந்த நூலகம் தான் மிகப்பெரிய நூலகம். அதைக்குறித்து நாம்தேவ் காடே உங்கள் நூலகம் தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அதற்கு அம்பேத்கர், அப்படி நான் உங்களிடம் பெருமையாக இதுதான் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக் கொள்ள மாட்டேன். சிறந்த தொகுப்புகள் தான் என்பது உண்மை. பனாராஸ் இந்து பல்கலைக் கழகத்திற்கு இதனை அளித்து விடுங்கள் - விலைக்கு | தான் என்னிடம் கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன் என்று கூறினார் (ப51) இப்படி தன்னிடம் அரிய பெரிய நூலகம் இருந்தபொழுதும் பெருமை கொண்டதில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆய்வு ஒன்றை சமர்ப்பிப்பதற்கு அரசு ஆவணங்களை இந்தியா முழுவதும் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக டாக்டர் அம்பேத்கரை கேட்டபொழுது அவர்கள் கேட்ட ஆவணங்கள் அவரிடம் மட்டும்தான் அன்று இருந்ததன. அதன்பிறகு அங்கு ஆய்வு செய்வதற்கு டாக்டர் அம்பேத்கரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவரும் உடனே இசைவு தந்தார். இப்படி தன்னுடைய வீட்டையே ஆவணக்காப்பகமாக வைத்திருந்தவர் டாக்டர் அம்பேத்கர்.

டாக்டர் அம்பேத்கரிடம் ஒருமுறை நாம்தேவ் கேட்கிறார்: 'அய்யா நீங்கள் இவ்வளவு சலிப்பின்றி, களைப்பின்றி அதிக நேரம் புத்தகங்களை எப்படி வாசிக்க உங்களால் முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில் சற்று இளைப்பாறிட (Relax) மாட்டீர்களா??

அதற்குப் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்கிறார் டாக்டர்.

எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்திற்கு மாறுவதுதான் என்றார்.

அதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி சீரியசான ஆய்வு நூலைப் படித்து சற்று நிறுத்திவிட்டு உடனே நிகழ்கால நடவடிக்கைப்பற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது என்றார்(ப.52)

புத்தகங்களைப்பற்றிய - அவர் படித்த கொலம்பியா பல்கலைக் கழக நூலகத்தின் புத்தகங்கள்பற்றி டாக்டருக்கு மனதில் அத்துப்படி அவரது நினைவும், ஆற்றலும் அபாரமானது!

தான் எழுதிக் கொண்டிருந்த ஒரு நூலுக்குரிய மேற்கோள் / (Reference) வேண்டியிருந்ததால், ஒரு குறிப்பிட்ட புத்தகம் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள நூலகங்களில் கேட்டுப்/ கிடைக்கவில்லை. பிறகு தான் படித்த அமெரிக்கப் பல்கலைக் கழகமான கொலம்பியா பல்லைக் கழகத்தில் அப்போதிருந்த ஒரு மாணவரை நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாணவராக அவர் இருந்திருக்கக்கூடும் என்பதால். குறிப்பிட்ட அந்த புத்தகத்தை நூலகத்தில் தேடிக் கண்டுபிடித்து எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அம்மாணவர் அங்கு தேடியபோது கிடைக்கவில்லை; இதை டாக்டரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக டாக்டர். 'எனக்கு 'Card Catalogue' நூலக புத்தக எண் வரிசை அட்டை நினைவில் இல்லை என்று கூறி, நூலகத்தின் அலமாரிகளில் ஓர் அடையாளம் சொல்லி அந்த மூலைப் பகுதிக்குச் சென்று தேடிப் பாருங்கள் என்று சொன்னதும், அம்மாணவர் அந்தப் புத்தகத்தை குறிப்பிட்ட அவ்விடத்தில் கண்டுபிடித்தார்! 

என்னே... யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!

இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டரின் வழக்கம்: அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.

அப்படி படிப்பு! வாசிப்பு வாசிப்பு சில அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் டாக்டரைத் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்க பேட்டி காண வசதியான நேரத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டனராம். அப்போது இரவு நடுநிசி! நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இரவிலும் வந்து என்னைப் பார்க்க வரலாம்; உங்களுக்கு அனுமதி உண்டு என்றவுடன். நடுநிசி நேரத்தில் சென்று அதிசயத்துடன் அவரைச் சந்தித்துள்ளனர்.

அவர்கள் கேட்ட முதல் கேள்வியும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த சமூகப் பொறுப்பு மிகுந்த பதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். இதை நாம்தேவ் நிம்காடே தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

"காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டுமென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகே அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே" என்று அந்த நிருபர்கள் கேட்டதற்கு

பாபா சாகேப். "காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Lucky Leaders) அவர்களை பின்பற்றுவோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே இவர்கள் தூங்குகிறார்கள். எனது நிலை அப்படியில்லையே! என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே" என்று கூறினார். டாக்டரின் சமூக உணர்வும், ஈடுபாடும். உறுதிப்பாடும் கண்டு வியப்புக் கடலில் வீழ்ந்தனர்!(ப.55)

டாக்டரின் நூலகத்தில் பற்பல தலைப்புள்ள நூல் வகையறாக்களும் இருக்கும். எல்லா விஷயங்கள் பற்றியதாக தெரிந்துகொள்ளும் வகையில், Theory of Relational முதல் புத்த மார்க்கம் அரசியலில் இருந்து கோழி வளர்ப்புவரை எல்லா விதமான புத்தகங்களும் இருக்கும். அவரிடம் எந்த விஷயம்பற்றியும் உரையாடி விவாதிக்கலாம். நீர்ப்பாசனம் தொடங்கி, அணுமின் சக்தி நிலக்கரி சுரங்கம்வரை* பலதரப்பட்ட தலைப்புகளிலும் ன்று அவர் படித்த செய்திகளையும் இணைத்துக் கூறத்தயங்கவே மாட்டார் டாக்டர்!(ப.52) எல்லா தலங்களிலும் ஆளுங்கள் பட்டவர். அதனால்தான் பாராளுமன்ற அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் என்று பல துறைகளில் இருந்ததோடு அல்லாமல் அவற்றில் புதுப்புது திட்டங்களை நிறைவேற்றியவர். புத்தகங்களோடு வாழ்ந்தவர். புத்தகங்களுக்காக வாழ்ந்தவர் என்றால் டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய உடலில் தீராத நோய்கள் இருந்த போதும் நோய் தீர்க்கும் மருந்து புத்தகங்களாகவே இருந்தன.

இரவு தூங்கச் செல்லும் போது தன் படுக்கையில் குறைந்தது 8, 10 புத்தகங்களாவது இருக்க வேண்டும். தூக்கம் வரவில்லை என்றாலும் தூங்கி எழுந்தாலும் புத்தகங்களில் தான் அவர் முழிப்பார். ஒருமுறை கடுமையான கால்வலி இருந்தது அந்த வலியை மறந்து புத்தகத்தில் ஆழ்ந்து போனதைப் பற்றி தேவதையால் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

தாங்க முடியாத கால் வலி - பல நேரங்களில் டாக்டருக்கு வந்தால், அவர் அதைப் போக்கிக் கொள்ள மருத்துவ டாக்டரிடம் செல்லுவதற்குப் பதிலாக, மருந்தினைத் தேடி எடுத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, சில புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டு, பிறகு சொல்வர். "புத்தகப் படிப்பு எனக்கு வலி தெரியாமல் செய்துவிட்டது" அவருக்கு நன் மருந்தாம்! என்னே ஆர்வம் - அதிசயம்(ப. 66) மேலும் விவரிக்கிறார்.

ஒருநாள் காலை நான் அவர் அறைக்குச் சென்று நேற்று இரவு கால் வலி பற்றி கூறினீர்களே அது இப்பொழுது எப்படி இருக்கிறது என்று விசாரித்தேன்.

அதற்கு டாக்டர். "நேற்றிரவு அவ்வலி 12.30 மணியளவில் ஆரம்பித்தது; என்னால் தூங்கவே முடியவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தேன். அதை விடியற் காலை 5 மணிவரை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். வலியே தெரியவில்லை" என்றார்.

தேவிதயாள் அசந்து போய்விட்டார்! என்னே விசித்திரமான மருத்துவம்!!(ப.67) இப்படி காலம் முழுவதும் புத்தகங்களோடு உறவாடிய மனிதர். அவர் கற்ற கல்வியும், படித்த புத்தகங்கள் சமூக மறுமலர்ச்சிக்கு பயன்படுத்தியவர்.

இறுதியாக 1956 டிசம்பர் 5 இரவு தன் படுக்கைக்குச் சென்றவர், டிசம்பர் 6 படுக்கையை நிரந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார் அந்த ஓய்வறியா சூரியன். உயிர் பிரிவதற்கு முன்னர் கூட அவர் இறுதியாக எழுதிய புத்தரும் அவர் தம்மமும் எனும் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒரு சாட்சி.

கவிஞர் ரூசோ சொல்வதைப்போல, எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை போன்றுதான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையும்.

- எ.பாவலன்

Pin It