காட்டு மிராண்டியாய், நாடோடியாய் வாழ்ந்த மனிதன், கூட்டமைப்பு வாழ்வை மேற்கொள்ளத் தொடங்கிய போதே ‘சமூகம்’ என்ற கட்டமைப்பு உருவாகியது. அச்சமூக வாழ்க்கைக்கு அடிப்படையாய் அமைந்தது. கால்நடை வளர்ப்பும், விவசாய உற்பத்தியுமே ஆகும். நாடோடி வாழ்விற்குப் பின்னர் நிலையான குடியிருப்பு அமைத்து நதிக்கரையோர வாழக்கை முறையை அமைத்துக் கொண்டு விவசாய உற்பத்தியில் ஈடுபடலாயினர். விவசாய உற்பத்தியும், அதனைச் சார்ந்த மாறுபட்ட தொழில்நுட்பக் கூறுகளும் தோன்றி சமூகத்தை மேலும் பலப்படுத்தியது.

இச்சூழலிலேயே ஒருபுறம் செல்வம் குவிய மறுபுறம் வறுமையும் தோன்றி மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகத் தொடங்கின. இச்சூழல் பழங்காலத்திலேயே தோன்றியிருந்தது. அடிமைச் சமூகத்தின் தோற்றமே சுரண்டல் வர்க்கம் தலைதூக்குவதற்குரிய தோற்றுவாயாக அமைந்தது என்கிறார் மார்க்ஸ்.

விவசாய உற்பத்தியில் ஈடுபட்டோர் பல்வகைப் பெருகினர். குறிப்பாக நிலவுடைமையாளர்களாக சிலரும், நிலமற்றவர்களாக பலரும் இருக்கும் சூழல் உருவாயின. நிலமற்றவர்கள் நிலவுடைமையாளருக்கு சேவை புரியவும், ஏவலளாளர்களாகவும் மாறினர். அன்று முதலே உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவோராகவும், கீழ்நிலையினராகவும், சுரண்டுபவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தோராகவும், சமூகத்தில் மேல்நிலையினராகவும் மாற்றப்பட்டனர். அது முதலே வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து வருவது  கண்கூடு. ஆம், காரல்மார்க்ஸ் குறிப்பிடுவது போல, வரலாறு யாவும் வர்க்கப் போராட்டத்தின் விளைவே’ என்பது பொருத்தமாகிறது.

உழைக்கும் மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள். அன்று முதல் இன்று வரையுமாய் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேராடியும், (வருகின்றனர்) பல்வேறு போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

மக்கள் வரலாற்றை சில இலக்கிய, கல்வெட்டு, இன்ன பிற சான்றுகளின் வழியாகவே அறிந்து கொண்டு வருகின்றோம். இதில் விவசாய மக்களின் வாழ்க்கையை பண்டைக் காலந் தொட்டு இன்று வரையும் எடுத்துரைப்பதை காண முடியும். அவ்வகையில், கு.சின்னப்ப பாரதி யின் ‘தாகம்’ நாவல் தமிழகத்தின் மக்கள் வரலாற்றை மிக இயல்பாக உண்மைப் போக்கினில் எடுத்துரைத்து முற்போக்கு (நடை) வலம் வருகிறது எனலாம்.

“சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழன்றும் உழவே தலை” (குறள்பா) என்றார் வள்ளுவர். இவ்உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கை இன்றோ பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது. உழைப்பில் ஈடுபட்ட மக்களை அடிமைகளாக்கி அவர்களை பெருங்கொடுமைக்கு உள்ளாக்கியது நிலபிரபுத்துவம். இதனைப் பற்றி 19, 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிறுகதை, நாவல், புதுக்கவிதை போன்ற இலக்கியங்கள் வெளிப்படுத்தின. இதில் நாவல்கள் தனி முத்திரைப் பதித்தன. நாவல்கள் அதிகார வர்க்கத்தினரின் கருத்துகளை எடுத்துரைப்பதைத் தாண்டி அடிப்படை பாமர மக்களின் வாழ்க்கையை நேரடியாக விளக்கி சமூகத்தில் தவறுகளை எடுத்தியம்பும் ஆயுதங்களாக வலம் வந்தன. குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் சர்வதேசிய சூழலுக்குப் பின்னர் விவசாய தொழிலில் ஈடுபட்ட பாமர மக்கள் அதிகார மையத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். அக்குரல் ‘தீ’ அதிகார மையத்தை உடைத்தெறியும் தீயாய் மாற்றம் பெற்றது. குறிப்பாக பொதுவுடைமை இயக்கங்கள் தோற்றம் பெற்றும் விவசாய சங்கம் அமைக்கப்பட்டு விவசாய மக்களை பாதுகாப்பதற்கான, அவர்களின் விடுதலைக்கான உரிமைக் குரலாகவும் பல்வேறு மக்கள் இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதனை நாவல்கள் மிக அதிகமாக பதிவு செய்தன. குறிப்பாக 21-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பல நாவல்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் முறை, அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களை அடிமைகளாக்கி சுரண்டும் வர்க்கத்தின்ரின் செயல்கள். அதற்கெதிரானப் போராட்டங்கள் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டின. அவற்றுள் கு.சின்னப்ப பாரதியின் நாவல்கள் முதலிடம் பிடிக்கின்றன.

20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மக்களின் வாழக்கை. அவர்கள் பெரு நிலக்கிழார்களை எதிர்த்து நடத்தியப் போராட்டங்கள், அவர்கள் படும்பாடுகள், அதிகார வர்க்கத்தின் செயல்கள் என அனைத்து சூழலையும் தெளிவுற எடுத்தியம்புவதை காண முடிகிறது.

“தாகம்” நாவலின் கதைக் கருவும், கதையமைப்பும் சிறப்புற அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இக்கதையில் மையக்கருவாக, விவசாய உற்பத்தியில் ஈடுபடும் பாமர மக்கள், பெருநிலக்கிழார்களிடம் சிக்கிக் கொண்டு மக்கள் படும்பாடு பற்றியும், உடைமை வர்க்கத்தினரை எதிர்க்கும் களமாகவும் கதைக்கரு பின்னப்பட்டிருக்கிறது.

விவசாய மக்களின் துன்பமான வாழ்க்கை நிலையையும், நிலவுடைமைச் சமுதாயத்தில் நிலச்சுவான்தார்களின் கொடுமையான செயலையும், விவசாயிகளின் அடிமைத் தனத்தையும், நிலவுடைமையினருக்கு எதிரான போராட்டங்களையும் மையமிட்ட கதைக்கரு ஆகும்.

விவசாயம் சார்ந்த உற்பத்தி முறை இக்கதையின் பின்புலமாக அமைக்கபட்டிருப்பதால் இயற்கைச் சூழல், நிலங்கள் பற்றியும், விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மாடுகள், அதனைப் பற்றிய குறிப்புகள், பிற பொருட்களின் பயன்பாடு, விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறை, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், கல்வி, நோய் எனும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் படும்பாடு போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறார்.

பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமாகவும், மிகச் சிறப்பாகவும் படைக்கப்பட்டிருக்கின்றன. புதினத்திற்கே உரிய சிறந்த உத்தி முறைகளை ஆசிரியர் மிகத் தெளிவாக கையாண்டுள்ளார். மொழிநடையில் கிராமிய வழக்கோடு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு, பிற மொழி சொல் கலப்பு, ஒலிக்குறிப்புச் சொற்கள், கதைக் கூறி விளக்கம் செய்தல், விவரிப்பு நடை, வருணனை, இரட்டைக்கிளவி, உவமை, உருவகம் பழமொழி என நடை யாவும் கிராம புற மக்களின் இயல்பு நிலையை அப்படியே கண்முன் நிறுத்தும் சிறப்பான மொழிநடை. 

நாவலில் பாத்திரப்படைப்பே கதையை அழகுற நகர்த்திச் செல்லும். பாத்திரப்படைப்பு இல்லையெனும், கதை நகர்வு, ஓட்டமென யாவும் வெறுமையான பயணிப்பாக அமையும். ஆக, பல்வேறுப்பட்ட பாத்திரங்களை நிரல்நிறையாக அமைத்தும் நேரிடையான, முரண்பாடான, முதன்மை மற்றும் துணைப் பாத்திரங்களைப் படைத்து இலக்கிய ஓட்டத்தையும், நுகரும் வாசகனுக்கு சலிப்பு, எரிச்சல் ஏற்படாத வண்ணம் கதை நகர்கிறது.

முதன்மைப் பாத்திரமாக மாரப்பன் மற்றும் அவன் மனைவி மாரக்காள், துணைப் பாத்திரமாக கந்தன், பழனியம்மாள், முத்தம்மாள், ஆகிய மூன்று பிள்ளைகள். இவர்களில் சீர்திருத்தவாதியாக, கந்தன் பரிணமிக்கிறான். அவன் தனக்குக் கீழான சாதியை சார்ந்த ‘பாப்பாயி’ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சமத்துவ கருத்தை விதைக்கின்றான். மேலும் நாட்டில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடற்ற சமநிலை சமுதாயம் படைக்க போராட்டக் குழுவில் தம்மை இணைத்துச் செயல்படும் மிகச் சிறந்த பாத்திரமாகப் பரிணமிக்கிறான்.

எதிர்நிலைப் பாத்திரமாக சேனாதிபதி கவுண்டர் படைக்கப்பட்டுள்ளார். இப்பாத்திரத்தின் வழியாக சமூகத்தில் நிலபிரபுக்களின் அதிகாரச் சூழலையும், அவர்களால் மக்கள் படும் இன்னல்களையும் ஆசிரியர் தெளிவுபட எடுத்துரைக்கின்றார்.

மேலும், சண்முகம், மாயாண்டி போன்ற சீர்திருத்தப் பாத்திரங்களையும், காத்தான், வள்ளி போன்ற பாத்திரத்தை படைத்து அடிமை மக்களின் துன்பத்தை உணர்த்தும் பாத்திரமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நாவலின் கருத்தினை வெளிப்படுத்தும் நூலாசிரியர், “ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் - இரண்டு வர்க்கங்களின் கலாச்சாரத் தடயங்களும் மனித மதிப்பீடுகளும் இதில் பதமாகப் பதிவாகியிருக்கின்றன” என்கிறார்.

இக்கதையில் போராட்டமான விவசாய பெருங்குடிகளின் வாழ்வு, பொதுவுடைமை கட்சியில் இணைந்து அதிகாரத்திலிருக்கும் நிலபிரபுக்களுக்கு எதிரான மக்கள் திரட்சி, அதனால் போராடும் மக்களை அழிக்கும் அதிகாரம், காவல்துறையினர் அவர்களுக்கு துணை போகும் போக்கு புரட்சிக்கான பின்புலத்தில் மக்கள் ஒன்று திரண்டு நிலவுடைமையாளரை அழிக்க வேண்டும் என்ற பார்வை புரட்சியின் தாகம் வேகம் என கதை சிறப்பாக மக்களுக்கானதாக பரிணாமம் பெற்று புத்துயிரூட்டுகிறது.

***

‘பிறகு’ புதினம் - நிலவுடைமைச் சமூகத்தின் எதார்த்த பின்புலம்

முதன்மை மாந்தர்கள் :

அழகிரி         - செருப்பு தைக்கும் தொழிலாளி : காணிக்காரன்

ஆவடை       - அழகிரியின் 2 வது மனைவி

முத்துமாரி               - அழகிரிக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த பெண்

கந்தையா - மேல்குடி சாதியர் (ஊர்க் காவலர், நியாயவாதி)

கருப்பன்     - அநாதை (ஊரில் உள்ள வேலை செய்யும் பொதுஆள்)

துணை மாந்தர்கள்

காளி                              - அழகிரியின் முதல் மனைவி

வண்டாரி   - சக்கிலிக்குடி தலைவர்

ரெங்கராமானுஜ நாயக்கர்  (எ)        ஊர் பெருந்தலைவர் (எதிர்ப்பாத்திரம்)

வில்லிச்சேரிக்காரர்

குருசாமி நாயக்கர் -      ஊரில் 2 வது பெரிய அந்தஸ்து உடையவர்.

அப்பையா                              -              வட்டிக்கு விடுபவர் (எதிர்பாத்திரம்)

மாடசாமி, வீரி      -              கணவன், மனைவி (சக்கிலியக்குடி)

சக்கணன், சித்திரன்    -              ஊரில் பொழுதுபோக்குபவர்கள்

(தாயம், வேட்டையாடுதல் போன்றன)

நடுக்கடை சங்கரலிங்கம் - ஊரில் கடை வைத்திருப்பவர்

வயிரவன்                                 - முத்துமாரியின் முதல் கணவன்

முனியாண்டி                       - முத்துமாரியின் இரண்டாவது கணவன்

சுப்பையா                                              - மணலூத்தில் தட்டரை வைத்திருப்பவர்

சுடலை                                       - முத்துமாரிக்கும் வயிரவனுக்கும் பிறந்தவன்

கதைக்களமும், கதை நகர்வும்

துரைசாமிபுரத்திலிருந்த அழகிரி மணலூத்திற்கு வந்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறான். மனைவி காளி, மகள் முத்துமாரியோடு வாழ்ந்த சில வருடங்களில் மனைவி காளி இறந்து விடுகிறாள். முத்துமாரியை வளர்க்க சிரமப்பட சில நாட்களில் மாட்டுத் தாவணியில் சந்தித்த ‘ஆவடை’ என்பவளை மறுமணம் செய்து கொள்கிறான்.

வில்லிச்சேரிக்காரர் ஊர் பெரியவர். குருசாமி நாயக்கர், போத்து நாயக்கர், அப்பையா ஆகியோரும் ஊரில் முக்கியத்துவம் உடையவர்கள். கந்தையா ஊரில் காவல் காக்கும் காவலர். சித்திரன், சக்கணன், கருப்பன், வண்டாரி (சக்கிலியர் தலைவர்) மற்றும் பலரும் அவ்வூரில் வசிக்கின்றனர்.

அழகிரி மகள் பருவடைகிறாள். அவளுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்கிறான் அழகிரி. ஓர் நாள் மாடு ஒன்று இறந்து போக, அதனை சக்கிலியர் சிலர் வெட்டி உணவாக எடுத்துச் செல்ல முடிவு செய்கின்றனர். அப்போது ‘மாடசாமி’ வீட்டிற்குப் பாத்திரம் வாங்க செல்லும் அழகிரி, ‘மாடசாமியின் மனைவி வீரியோடு, அப்பையா தகாத பாலியல் உறவில் ஈடுபடுவதைக் கண்டதும் அப்பையாவை அடித்து விட்டு, வீரியை எச்சரிக்கை செய்கிறான்.

ஊரில் திருவிழா ஏற்பாடாகிறது. வசூல் செய்து விழா நடத்துகின்றனர். சக்கிலியர் கடமையாக ‘லைட்’ தூக்குவது, வேலு, குப்பாண்டி, சக்கணன், சித்திரன் போன்றோர் வேட்டையாடுவது, தாயம் ஆடுதல் போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

ஊரைப் பொறுத்தமட்டில் நிலம் வைத்திருப்பவர்களே மிக பெரிய ஆள். சக்கிலியர் குடியில் நிலம் வைத்திருப்பவன் அழகிரி மட்டுமே. நிலம் வைத்திருப்வர்களுக்குள் முரண்பாடுகள் பல நிகழ்கின்றது. ஊரில் தேர்தல் வருகிறது. வில்லிச் சேரிக்காரர் தேர்தல் நிற்கின்றார். அதனால் சக்கிலியர் மக்களிடம் சொல்லி எல்லோரும் ஓட்டுப் போடும்படி கட்டளையிடுகின்றனர். ‘வண்டாரி’ சரி என்கின்றார் பின்னர் வில்லிச் சேரிக்காரர் வெற்றி பெறுகின்றார்.

நாட்கள் நகர்கிறது. அப்பையாவின் கமலச் சாமான் காணாமல் போகிறது. பலி அழகிரி மேல் விழ, அழகிரியோ மறுக்கின்றான். இச்சூழிலிலேயே முத்துமாரியும், வைரவனும் மணம் முடிக்கின்றனர். பின்னர், வைரவன் இராணுவத்தில் வேலை செய்து வந்த பின்னர் முத்துமாரியை கடுமையாக துன்புறுத்த தான் பெற்ற முதல் மகன் சுடலையை விட்டுவிட்டு அழகிரியோடு வந்து வசிக்கிறான். சில காலத்திற்குப் பின் முனியாண்டி என்பவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனர்.

கமலச் சாமான் அப்பையா வீட்டிலேயே இருப்பது தெரியவர, அவனோ மாடசாமி மீது பலி சுமத்துகின்றான். கோடைக்காலம் வருகிறது. ஊர் மிகப் பெரிய வறட்சியை சந்திக்கிறது. சக்கிலியர் தெருவில் குப்பையைக் கொட்டுகிறார்கள். புறம்போக்கு நிலத்தை வில்லிச்சேரிக்காரர் அப்பையாவிடம் விற்று விடுகிறார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மேட்டுக் குடியினருக்கே பல செய்யப்படுகிறது. இச்சூழலில், விவசாய பயனாக அமைந்த ஊரணி அடைக்காமல் இருக்கின்றனர். ஊரார் கூடுகின்றனர்.

ஊர் பொதுக் கூட்டம் நடக்கிறது. சங்கரலிங்கம் கடை நடத்துவது, முத்தையா காபி கடை போன்ற பல விசயம் பேசப்பட்டு, இந்த வருடம் ஊர்க்காவல் வேண்டாம் என கூற, முரண்பாடாகி மீண்டும் கந்தையா ஊர்க்காவலராக ஆகிறார்.

முத்துமாரிக்கும் 2-வது பெண் குழந்தைப் பிறக்கிறது. பின்னர் முத்துமுருங்கன் (முத்துமாரி மாமன்) இறந்த தகவல் கேட்டு, அய்யங்குளம் செல்கிறான். அங்கு மூத்தமகன் ‘சுடலை’யை பார்த்து அவன் அழுக எண்ணி அவள் தன்னோடு அழைத்து வர அது கண்டு கோவப்பட்ட முனியாண்டி அவளை அடித்து உதைக்கிறான். அதனால் சுடலையோடு தம் ஊர் நோக்கி வருகிறாள். கருப்பன் வேகமாக ஓடி வருகிறான். தன் பெண் குழந்தையோடு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள் முத்துமாரி. அது கண்ட பெருந்துயருற்ற அழகிரி மனம் உடைந்து போகிறார்.

நாட்கள் நகர்கிறது. மழையில்லாமல் ஊரே வறட்சியாகிறது. கருப்பன் இருப்பதால் தான் வறட்சி நிலவுகிறது என்று கூற அவனை 2 நாள் வெளியூர் செல்ல வேண்டுமென முடிவு எடுக்க, அதன்படியே அவன் செல்கின்றான். கொடும்பாவி கட்டி இழுக்கின்றனர். பின், கருப்பனுக்கு மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரில் சுற்றுகின்றனர். 2 நாளுக்கு மேலாக கீழுருக்குச் செல்ல 2-ம் நாள் மழை பொழிகிறது.

தன் மனைவி அழகிரி முத்துமாரியையும், குடும்பச் சூழலையும் எண்ணி இருக்க, கந்தையாவும் திடீரென இறந்து விடுகிறார். இறுதிச் சடங்கு நடக்கிறது. பின்னர் ‘சுடலை’ தான் இராணுவத்தில் வேலைக்குச் செல்வேன் எனக்கூற அதைவிட பெரிய வேலைக்குச் செல்ல வேண்டுமென கூறுவதாக கதை முடிவடைகிறது.

இக்கதை அடிப்படையில் கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு, அங்குள்ள இருவேறுபட்ட சாதியைச் சார்ந்த மக்களின் நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக, கவுண்டர், சக்கிலியர் ஆகிய இரு குடிகளைப் பற்றியும் அக்குடியினரின் வாழ்நிலை, உயர்சாதி, கீழ்சாதி என்று சொல்பவர்களின் வாழ்க்கை நிலை, சமூக சிக்கல்கள் என பலவற்றையும் மிகத் தெளிவாக விளக்கி, அவர்களின் மொழிநடையோடு அழகுற தமது எழுத்தாளுமையில் எடுத்துரைத்து செல்கின்றார் ஆசிரியர் பூமணி.

- பா.பிரபு

Pin It