கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று (மார்ச் 24,2011) தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான இரண்டு கடுமையான சட்ட முன்வடிவுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட ஒரு மசோதா  “தொழிலாளர் சட்டங்கள், திருத்த முன்வடிவு 2011” என்பதாகும். இன்னொன்று நாடாளுமன்ற மக்களவையில் முன்வைக்கப்பட்ட “ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய சட்ட முன்வடிவு (Pension Fund Regulatory and Development Authority Bill)” என்பதாகும்.

தொழிலாளர் சட்டங்கள் திருத்த மசோதா ஒரே அடியில் மிகப்பெரும்பாலான தொழிலாளர் களைத் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கி வைக்கிறது. இச்சட்டத்திருத்தத்தின்படி ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிகை 40க்கும் குறைவாக இருந்தால் அந்நிறுவனங்கள், எல்லா தொழிலாளர் சட்டங்களிலிருந்தும் விலக்குப் பெறுகின்றன. அதாவது தொழிற்சாலைச் சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், உள்ளிட்ட எந்தச் சட்டத்தின் பாதுகாப்பும் இந்நிறுவனத் தொழிலாளர்களுக்குக் கிடையாது.

இந்தியாவின் தொழிலாளர்களில் மிகப்பெரும் பாலோர் 50 பேருக்கும் குறைவாகப் பணியாற்றும் சிறு தொழிலகங்களில்தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் சிறு தொழிலகங்கள் தாம் முதன்மையான இடங் களாக உள்ளன. தமிழ்நாட்டுத் தொழிலாளர் களில் மிகப்பெரும் பாலோர் 50 பேருக்கு கீழ் பணியாற்றும் தொழிலகத் தொழிலாளர்கள் தாம்.

இந்நிலையில் 40 பேருக்கும் குறைவாகப் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு பெற்றால், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களில் மிகப்பெரும்பாலோர் இருக்கிற அரைகுறை சட்டப் பாதுகாப்பு கூட கிடைக்காமல் நிறுத்தப்படுவார்கள்.

ஏற்கெனவே 12 மணி நேர வேலை என்பது சிறு தொழிலகங்களில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. அந்நிறுவனத் தொழிலாளர்கள் விபத்து பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் இத்திருத்தச் சட்டம் செயலுக்கு வருமானால் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வேலை நிலைமைக்கு தொழிலாளர்கள் விரட்டப் படுவார்கள்.

காங்கிரசு அரசு முன்மொழிந்த இச்சட்டத் திருத்த முன்வடிவிற்கு அறிமுக நிலையிலேயே முதன்மை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளித்தது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த முன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்படும் ஆபத்து தொழிலாளர்களின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஒழுங்கமைக்கப்படாத மற்றும் சிறு தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது மேற்கண்ட சட்டத் தாக்குதல்கள் என்றால் ஒழுங் கமைக்கப் பட்ட தொழில் நிறுவனப் பணியாளர்கள் மீது ஓய்வூதிய சட்டத்திருத்தம் இன்னொரு தாக்குதலைத் தொடுக்கிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுத்துறை தொழில் நிறு வனத் தொழிலாளர்கள் ஆகி யோருக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதனை நிலைப்படுத்தவே இவ்வரைவுச்சட்டம் நாடாளு மன்றத்தில் முன்வைக்கப்பட் டுள்ளது.

முதியோர் வாழ்வியல் சிக்கல் என்பது அண்மைக்காலமாக இந்தியாவையும், தமிழ்நாட்டையும் தீவிரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை ஆகும். முதலாளிய--நுகர்வியம் மற்றும் நகர்மயமாதல் ஆகி யவை இணைந்து கூட்டுக் குடும்பங்களைச் சிதறடித்து வருகின்றன. குடும்பம் என்ற அலகு மிகவும் சுருங்கிவிட்டது. உழைத்து சம்பாதிக்க முடியாத முதியோர் வேண்டாத சுமை யாகப் பார்க்கப்படுகிறார்கள். உயர் வருமானம் உள்ளோரி டையே கூட இப்பிரச்சினை முதியோர்களைத் தாக்குகிறது. இப்பிரிவினரிடையே மே லோங்கியுள்ள நுகர்விய- தன் னலப் பண்பாடு முதியோரிடம் அன்பு பாராட்டுவதை, அவர் களுக்காக சிறு சிறு பணிகளைச் செய்து தருவதை பெரும் சுமையாக கருதவைக்கிறது. இந்நிலையில்  உழைத்துக் களைத்த வயது முதிர்ந்தோர் தற்சார்பான வாழ்க்கை நடத்த பணமின்றி தவிக்கும் அவலம் தீவிரப்பட்டுள்ளது. ஓய்வூதியம் (பென்சன்) என்பது அரசு ஊழியர்களுக்கும் அரசுத் துறை தொழிலாளர்களுக்கும் வாழ்வின் கடைசி காலப் பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் ஓய்வூதியப் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள முயல்கிறது. ஏற்கெனவே அனைத்துத் தொழில்துறை தொழிலாளர் களுக்கும் ஓய்வூதியம் கிடைப்ப தில்லை. இந்தியாவில் மொத்த முள்ள 50கோடி தொழிலாளர் களில் 3.5 கோடி தொழிலாளர் களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் வாழ்நாள் அதிகரித்து வருவதால் பணிஓய்வுக்குப் பிறகு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உயிருடன் வாழும் காலம் அதிகரித்து, அதன் காரணமாக ஓய்வூதியம் வழங்கும் தன்னுடைய நிதிச் சுமை அதிகரித்து வருவதாக அரசு கூறுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் திட்டங்கள் தீட்டி வருகின்றன.

அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் ஓய்வூதியம் என்பது கொடுபடாத சம்பள மாக ஏற்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கும், அவர்கள் இறப்புக்கு பிறகு அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அரசுத் துறை தொழிலாளர்களுக்கும், வருங்கால வைப்பு நிதியில் உள்ள தனியார் துறை தொழி லாளர்களுக்கும் தொழிலாளர் பங்கேற்பு முறையுடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் செயலில் உள்ளது.

இவற்றை முற்றிலும் மாற்றியமைத்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2004-ஆம் ஆண்டு இந்திய அரசு செயல்படுத்தியது. இதன்படி 2004 சனவரி 1-ஆம் நாளிலிருந்து இந்திய அரசுப் பணியிலும் அரசுத்துறை பணியிலும் சேரும் தொழி லாளர்கள் புதிய திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப் பட்டார்கள். இதற்கான ஆணையை 2003 டிசம்பர் 22-ஆம் நாள் இந்திய அரசின் நிதித்துறை பிறப்பித்தது. ஆயினும் இதற்கு முன்னர் பணியில் இருக்கும் ஊழியர் களும் பல்வேறு வகையில் வலியுறுத்தப்பட்டு புதிய ஓய்வூ தியத்திட்டத்திற்கு விரட்டப்பட்டு வருகிறார்கள்.

இத்திசையில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழக அரசு விளங்கியது. தமிழ் நாட்டில் 2001-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் மாநில அரசால் தொடங்கப் பட்டு பெரும்பாலான ஊழியர்கள் அதன் கீழ் கொணரப்பட்டனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மைய நோக்கமே ஓய்வூதிய நிதியை தனியாரிடம் ஒப்படைப்பதுதான்.

உலகமயம் - திறந்த பொருளாதாரக் கொள்கை ஆகியவை 1990- களில் தீவிரப்பட்ட பிறகு இதற்கான திட்டமிட்ட முயற்சிகள் தொடங்கின.

1999-ஆம் ஆண்டு உலக வங்கியின் ஆலோசனைப்படி இந்திய அரசு அமைத்த ஒரு குழு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்கும் ஆலோச னையை முன்வைத்தது. இதற்கு இரண்டாண்டுகள் கழித்து 2001-இல் காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணைய அறிக்கை உறுதியான சில முன்மொழிவுகளை அரசுக்கு வழங்கியது. ஓய்வூதிய நிதியை நிர்வாகம் செய்து அதனை உரியோருக்கு வழங்கும் பொறுப்பை தனியாரிடம் விடுவது என்றும், அந்நிதியைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கியது.

இதே போல் அரசு ஊழியர் தொடர்பான ஓய்வூதியம் குறித்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட பட்டாச் சார்யா குழுவும் இதையொத்த பரிந்துரைகளை வழங்கியது. அரசு ஓய்வூதியத்திற்கு முழு பொறுப்பு ஏற்பதிலிருந்து விலக்களிக்கப் பட்டு ஊழியர்களும் அரசும் சமஅளவில் நிதி பங்கேற்கும் ஓய்வூதியத்திட்டம் ஒன்றை இப்பரிந்துரை முன் வைத்தது. ஓய்வூதிய நிதியை தனியாரிடம் ஒப்படைக்கவும் அந்நிதியை பங்குச்சந்தையில் ஈடுபடுத்தவும் ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனைகளே 2004-லிருந்து செயலுக்கு வந்தன.

இதன்படி தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10%ஐ ஓய்வூதிய நிதிக்கு வழங்கு கிறார்கள். அது தொழிலக நிர்வாகத்தால் சம்பளத்தி லிருந்து பிடித்தம் செய்யப் படுகிறது. இதே போன்று 10% அளவு தொகையை நிர்வாகமும் தனது பங்காக வழங்குகிறது. இவை இரண்டும் சேர்ந்தே ஓய்வூதிய நிதியாக சேமிக்கப் படுகிறது. ஓய்வு பெறும் முன் கடைசி 12 மாதங்களில் தொழிலாளர் பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியும் சேர்த்த தொகையில் ஒருமாத சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50% (பாதி) தொகை என்பது ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது முதலில் அறிவிக்கப் பட்ட திட்டமாகும்.

ஆயினும் இத்தொகையை தனியார் துறை நிதி நிறுவனங்களும் நிர்வாகம் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட பிறகுதான் இதிலுள்ள சிக்கல் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

எடுத்துக்காட்டாக ஒரு தொழிலாளிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 35 ஆண்டுகளுக்கு பிடித்தம் செய்து வைப்பு நிதி சேர்க்கப்படுவதாக கொள் வோம். இதற்கு வட்டி 9% ஆகும். பணிக்கால இறுதியில் அவருடைய கணக்கில் 29,41,780 ரூபாய் சேர்ந்திருக்கும். இந்நிதியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது அதற்கு நடப்பில் உள்ள நுழைவுக் கட்டணம் 5 விழுக்காடு ஆகும். தனியார் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்திற்காக வசூலிக்கும் கட்டணம் 2% ஆகும். இது பார்வைக்கு சிறிதாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பிடித்தம் செய்யப்படுகிற தொகைக்கு 2 விழுக்காடு என்று கணக்கிடும் போது அதன் கூட்டுத்தொகை 7 இலட்சத்தை தாண்டும். இது தவிர இப்போதைய சந்தை நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் விளம் பரம், நிர்வாகம் மற்றும் குறைந்த பட்ச இலாபம் போன்ற வற்றிற்காக 15 விழுக்காடு எடுத்துக் கொள்கின்றன. இவற்றையெல்லாம் கழித்தால் தொழிலாளர்கள் கணக்கில் உள்ள ஓய்வூதிய நிதியில் குறைந்தது 50 விழுக்காடு போய்விடும்.

இந்த இழப்பு இல்லாமல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதி யத்தை வழங்க வேண்டுமானால் அந்நிதி நிறுவனம் மிகப்பெரும் அளவிற்கு இலாபம் பெறத் தக்க வகையில் சந்தையில் முதலீடு செய்தால் தான் சாத்தியமாகும்.

இங்குதான் சூதாட்டம் தொடங்குகிறது. முதலில் ஓய்வூதிய நிதியை தன் பொறுப்பில் கொண்டுள்ள நிறுவனமானது ஒன்று, இதனை அதிக இலாபம் தரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். இது எல்லா நேரத்திலும் வாய்க்காது. அந்நிலையில் கூடுதல் வட்டி வழங்க உறுதி அளிக்கும் வேறொரு நிதி நிறுவனத்திடம் இந்நிதியைக் கைமாற்றிவிடும். அது அதைவிட கூடுதல் வட்டியை எதிர் நோக்கி வேறொருகைக்கு மாறும்.

இதே போன்று வங்கிக் கடன்கள் கைமாற்றி விடப்பட்டதால் தான் கடந்த 2008-ல் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவ னங்கள் அடுத்தடுத்து ஓட்டாண்டியாயின. அவ்வங்கிகளில் பணம் போட்டவர்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான நிலை ஓய்வூதிய நிதிக்கும் ஏற்படும் ஆபத்து உண்டு.

இவ்வாறான ஆபத்து நேர்ந்தால் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உறுதி செய்யும் பொறுப்பை அரசு ஏற்காது என்பது இச்சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. இதற்கான இழப்பு அச்சம் (ரிஸ்க்) முழுவதும் தொழி லாளர்களைச் சார்ந்தது. தங்கள் ஓய்வூதிய நிதி எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்படலாம் என்று எழுத்துப் பூர்வமாக கட்டளையிடும் வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை அத்தொழிலாளிக்கு உண்டு என்று அச்சட்டம் கூறுகிறது.

சந்தை சூதாட்டத்தைப் புரிந்துக்கொண்டு இலாபகரமாக முதலீடு செய்யவைக்கும் வாய்ப்பு இந்நாட்டு தொழி லாளர்களில் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? கிட்டத்திட்ட யாருக்கும் அவ்வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. ஆயினும் தொழிலாளர்கள் ஒப்புதலோடு அவர்களது ஓய்வூதிய நிதி பங்குச்சந்தை சூதாட்டத்திலும், நிதி நிறுவனப் போட்டியிலும் இறக்கிவிடப் படுவதாக ஒரு சட்ட ஏற்பாடு நடக்கிறது.

பங்குச்சந்தையில் இறக்கிவிட சம்மதிக்கவே முடியாது என்று ஒரு தொழிலாளி மொத்தமாக மறுத்துவிடவும் முடியாது என இச்சட்டம் நிபந்தனை விதிக்கிறது. 35 வயது வரை அத் தொழிலாளியின் ஓய்வூதிய நிதியில் குறைந்தது 50% நிதி பங்குச்சந்தையில் இறக்கி விடப் பட்டே ஆக வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. 36 வயதுக்கு பிறகு பங்குச்சந்தையில் இறக்கிவிடப்படும் தொகை படிப்படியாக குறைந்து அது அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்யப்படுவது அதிகரிக்கும்.

ஓய்வு பெறும் போது ஒரு தொழிலாளி தன்னுடைய ஓய்வூதிய நிதியிலிருந்து அதிகப்பட்சம் 60 விழுக்காட்டு தொகையை மொத்த பணமாக பெறலாம். மீதி உள்ள 40% விழுக்காட்டு தொகை கட்டாயம் ஓய்வூதிய நிதி நிறுவனத் திடம் விட்டு வைக்கப்பட வேண்டும். அதிலிருந்து மேற் சொன்ன வகையில் மாத ஓய்வூதியம் வழங்கப்படும். ஒரு வேளை ஓய்வு பெறும் வயதுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வில் செல்வதானால் அவரது ஓய்வூதிய நிதியிலிருந்து 20% வரை மட்டுமே மொத்தப் பணமாக வழங்கப்படும். மீதமுள்ள 80 விழுக்காடு தொகை நிதி நிறுவனத்திடமே இருக்கும். அதிலிருந்து கிடைக்கும் ஓய்வூதியமும் 58 வயதிலிருந்துதான் கிடைக்கும்.

பங்குச்சந்தையிலோ, நிதிச் சந்தையிலோ இறக்கிவிடப்படும் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதி அந்நிதிநிறுவனத்திட மிருந்து கைநழுவிப் போகுமானால் தொழிலாளர்கள் தாங்கள் உழைத்து சேமித்த தொகை அனைத்தையும் இழக்க வேண்டியதுதான். அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அரசு தெளிவாக அறிவித்து விட்டது.

ஓய்வூதிய நிதியை நிர்வாகம் செய்வதற்கு ஒழுங்காற்று ஆணையம் நிறுவுவதற்கான அவசரச் சட்டம் ஒன்றை 2004 -டிசம்பரில் இந்திய அரசு பிறப்பித்தது. அதை நிரந்தரச் சட்டமாக்கும் முயற்சியில் அதற்கான சட்ட முன்வடிவு 2005-ல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அம்மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் காக அனுப்பபட்டது. அந்நிலைக்குழு சில திருத்தங்களை முன்வைத்தது. ஆயினும் விவா தத்திற்கு முன்பாகவே அந்நாடாளுமன்ற மக்களவையின் வாழ் நாள் முடிந்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அத்தோடு அம்மசோதாவின் வாழ்நாளும் முடிந்தது.

இந்நிலையில் இதனை உயிர்ப்பித்து புதிய சட்ட வரைவாக நாடாளுமன்ற மக்களவையில் இந்திய அரசு இப்போது முன்வைத்துள்ளது. ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ள தொழிலாளர்களே எண்ணிக்கையில் மிகக்குறை வானவர்கள். அவர்களது ஓய்வூதியமும் மேற்சொன்னவாறு தனியார் கைகளில் விடப்படுகிறது. தொழிலாளர்களுக்கு எதிராக இந்திய அரசு தொடுத்துள்ள மிகப்பெரும் தாக்குதல்கள் இச்சட்டங்களின் வாயிலாக செயலுக்கு வருகின்றன.

இந்திய அரசு முன் வைத்துள்ள  “தொழிலாளர் சட்டங்கள் திருத்த மசோதா 2011”  “ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி மசோதா” ஆகியவற்றைத் தொழிலாளர்களும் ஒட்டு மொத்த சனநாயக சக்திகளும் ஒன்றுப்பட்டு எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
Pin It