எழுத்தாளரின் முதல் பத்திரிகைப் பிரவேசம் எந்தப் பத்திரிகையில் எந்த வயதில் என்பது சுவாரஸ்யம். பத்து வயதில், ஆனந்த விகடனில். இன்று இவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வுக்கும் சேர்த்து பிள்ளையார் சுழியை இட்டது விகடன், இவரது நகைச்சுவை துணுக்கைப் பிரசுரித்து. பிறகு பதின்மங்களில் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் தொடர்ந்த எழுத்து, கல்லூரி வயதில் மறுபடி விகடனில் கட்டுரையாகக் கால் பதித்து எம்பிப் புறப்பட்டு, இன்று வரையிலும், இவர் எழுத்துக்கள் வெளிவராத பத்திரிகைகளே இல்லையென சொல்லக்கூடிய வகையில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது 230-க்கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள்,கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 2  தொலைக்காட்சி நாடகங்கள், சில கவிதைகள் என இடைவெளி என்பதே இல்லாமல் இருபத்து ஐந்து ஆண்டுகளாய்.

1996-ல் விகடனின் பவழவிழா  ஆண்டில் நடந்த  போட்டியில்  இவரது படக்கதை நாவலுக்கு ரூ.30,000 பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

லில்லி தேவசிகாமணியின் ‘பெண் எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு’;  எழுத்தாளர் உத்தமசோழன் தயாரித்த ‘மழைசார்ந்தவீடு’; மகரம்  தயாரித்த ‘வானதி சிறப்பு சிறுகதைகள்’ ஆகிய மூன்று தொகுப்புகளில் பிற எழுத்தாளர்களின் கதைகளுடன் இவரது கதைகள் இடம்பெற்றிருப்பினும், இவரது  தனிக் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு 2001-ல் திருமகள் நிலையம் வெளியிட்ட,  14 சிறந்த கதைகளை உள்ளடக்கிய ‘திரும்பத் திரும்ப’ என்பதாகும். பிறகு வெளிவந்த நல்ல கதைகளை  இசைக்கவி ரமணன் அவர்கள் ஊக்கம் தந்து எடுத்த முயற்சியில், திரிசக்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டு கௌரவித்திருந்தது சென்ற ஆண்டில்.  அதுவே நம் கைகளில் தவழ்கிறது “அவனும் இவனும்” ஆக. 

பிரபல எழுத்தாளர்கள்  ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின்  அணிந்துரைகளோடு, கதாசிரியரின் ‘என்னுரை’யும்  பதிப்பகத்தாரின் முன்னுரையும் சிறப்பு சேர்க்கின்றன நூலுக்கு. தொகுப்பில் இருக்கும் பதினாறு சிறுகதைகளும் பத்திரிகைகளில் வெளிவந்தவை. கலைமகள், கல்கி, அமுதசுரபி, கணையாழி, தினமலர், தினமணி கதிர், இலக்கிய பீடம் என நீள்கிறது பட்டியல். 

இவரது கதைகள் மானுடத்திற்கு பெருமதிப்பு அளிப்பவையாகவும், குடும்பம் சார்ந்தவையாகவும், முதியோர்களின் மனவலியைப் பிரதிபலிப்பவையாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது. சமீபமாக இணையத்தில் பெண் எழுத்தைப் பற்றி தொடர் சங்கலியாகப் பலரும் எழுதி வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பெண் எழுத்து பேசப்படவேண்டும் பலராலும் அறியப்படவேண்டும் எனும் ஆசையிலும் அக்கறையிலும் ஷைலஜாவின் இத்தொகுப்பினைப் பாராட்டி, சிறப்பானதொரு பெண் எழுத்தை அற்புதமாய் அடையாளப்படுத்தி அங்கீகாரம் தந்திருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கும் நன்றி சொல்லி, தொகுப்புக்குள் செல்கின்றேன்.

‘அவனும் இவனும்’ தலைப்புச் சிறுகதையை கலைமகளில் வெளியான போதே, சம்பவங்களை அழகாகக் கோர்த்திருந்த விதம் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறேன்.  நாயகன் அமெரிக்காவில். குடும்பமே இவன் ஒருவனை நம்பியிருக்க, தன் வேலை போய்விட்டதை சொல்ல இயலா தவிப்புடன் இருக்கையில் கிடைக்கிறது தந்தையின் மறைவைப் பற்றிய தகவல். மூன்றாம் நாள் ஊர் போய் சேருகிறவன் ஒருவருக்கும் உண்மையை சொல்லாமல் இருப்பதும், அண்ணனின் மகள் இவன் வாங்கிக் வ்ந்திருந்த க்ரேயான் பென்சில்களை சிலாகித்தபடி இருப்பதும், காரியம் செய்ய வந்த இளைஞன் வேறு வழியில்லாமல் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இவனிடம் வெளிநாட்டு வேலை கேட்பதும், ‘இருட்டு அறையில் எல்லா வர்ணங்களும் ஒன்றுதான்’ என அக்கணத்தில் தான் பெற்ற தெளிவையே சொல்லி அண்ணன் மகளின் சந்தேகத்தை தீர்ப்பதுமாக, ஆரம்பித்த புள்ளிக்கே கொண்டு வந்து முடித்து அழகான கோலத்தை இட்டிருக்கிறார் இக்கதையில்.

ஸ்ரீரங்கத்தை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ‘அரங்கபவன்’ கதையோடு அதிகமாக ஒன்றிட இயலும். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை முகத்தில் அடித்த மாதிரி நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிய வைக்கிற இக்கதை இலக்கியபீடம் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றதாகும்.

தவழ்ந்து வளர்ந்த, பிறந்த வீட்டின் மீது கல்லால் மண்ணால் ஆன கட்டிடம் என்பதை மீறி தீராத ஒரு பாசம் வைத்திருப்போர் எத்தனையோ பேர் இந்த உலகினில். ‘மனிதரை நேசியுங்கள். உயிரற்ற உடமைகள் மேல் வைக்காதீர் அநாவசிய ஒட்டுதல்கள்.’ ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமென்றாலும், நம் உணர்வுகளால் உயிர் கொடுத்து விடுகிறோம் அவற்றிற்கு என்பதே உண்மை. ‘காத்திருக்கிறேன்’ கதையில் தன் மேல் கசிந்துருகி அன்பு வைத்திருக்கும் வசந்தாவுக்காக, அவளது கொலுசுச் சத்தத்தை ஒரே ஒரு முறையேனும் கேட்பதற்காக, மண்ணோடு போகும் கடைசி நிமிடம் வரை பரிதவித்துக் காத்திருப்பது.. ஆம் வீடேதான். அது பேசுவதாகவே கதையை அமைத்திருப்பது வித்தியாசம், உணர்வுப் பூர்வம்.

கல்லூரி மாணவியர் உயிரோடு பேருந்தில் கொளுத்தப்பட்ட அநியாயம், ஈவ் டீஸிங் தொல்லையால் சிலர் உயிரை விட்ட அவலம் போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டு கொந்தளித்த தன் உணர்வுகளை, படிப்பறிவில்லாத சின்னசாமியின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ‘தப்புப் பண்ணியவர்கள்’ தினமலர் போட்டிக் கதையில்.

நடுத்தர வர்க்கத்திலிருந்து அமெரிக்கா சென்று, ஒருவர் கொண்டு வரும் டாலர்கள் எப்படி சில குடும்பங்களில் அன்பை பாசத்தை மறக்க வைத்து, பகட்டுக்கும் போலித்தனத்துக்கும் வழிவகுத்து, சம்பாதிப்பவரை ஒரு பணங்காய்ச்சி மரமாகப் பார்க்கவும் வைக்கிறது என்பதைச் சொல்லுகிறது ‘பாரத சமுதாயம் வாழ்கவே’.

நம் கலாச்சாரத்தில் குடும்ப உறவுகளின் பின்னல், பிணைப்பு ஒரு காலத்தில் மற்ற நாடுகளால் வியந்து பார்க்கப்பட்டு வந்தது. இப்போது எங்கெங்கும் முளைத்து நிற்கின்றன முதியோர் இல்லங்கள். வளர்த்து ஆளாக்கியவர்களை எப்படி கைகழுவத் துடிக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என்பதைப் பேசுகிறது ‘மானுடம் வெல்லும்’.

தன்னலமற்ற மனிதநேயம் மரித்துப் போகவில்லை என நம்பிக்கை தருகிறது ‘புதிய உறவு’. கோவிலின் கருவறைக்குள் சென்று இறைவனை பூஜிக்க பிறப்பு முக்கியமன்று, நல்ல மனதும் ஆத்ம சுத்தியுமே போதுமெனக் கூறி உயர்ந்து நிற்கிற ‘மனம் நிறைந்தது’ கதையுடன் நிறைவடைகிறது தொகுப்பு. நிறைந்து போகிறது மனமும்.

***

விலை ரூ:70. பக்கங்கள்: 120. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்

Comments

1 comment

1
vichithra
shylaja deservs it! iam her fan!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.