Loveபுதைத்துவிட்டு
திரும்பிப் பாராமல் நகர்ந்தபின்
தவித்துக் கிடக்கும் பிணம்போல்
நீயற்ற தனிமையில்
நான்

உடனிருக்கும் போது சண்டையிடுகிறேன்
அழவைக்கிறேன்
சலிக்கும் அளவிற்கு
இறுக்கம் கொள்கிறேன்
பெயர் தெரியாப் பூச்சிகளைப் போல்
என் வசவுகள்
உன் கண்களில் விழுந்து
சுரீரென்கிறது
தெரியுமா
அனைத்தையும்
எனக்கு நானே இப்போது...

தாகம் தணிக்கவும்
தலைமுழுகவுமான தோட்டக் கிணறுபோல்
உன்னையன்றி
எவரைச் சொல்ல

மண்டிக்கிடக்கும் காரமுட்களுக்கிடையில்
தளிர்த்தவைகளைப்
பசியோடு கடிக்கும் வெள்ளாட்டினைப் போல்
ஆடைகளுக்குள் உன்வாசம் தேடி
குளிர்கிறதென பூமி

மானாவாரியில் விதைத்த விதைப்பாடாய்
ஏகாந்தத்திற்கு
நாலு இலைவிட்டுக் கிடக்கிறது மனசு
மந்தை மந்தையாய் இறங்கும்
கம்பளிப் பூச்சிகளைப் போல
இந்த இரவு இருக்கிறது

என்னிடம் ஏராளமாய்க் கண்ணீருண்டு
எவரிடமும் காதுகளில்லை
இருக்கும் இந்த உயிருக்காக மட்டும்
எல்லோரிடமும் முழக்கயிறு இருக்கிறது
உன்னையுட்பட

பச்சியப்பன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.