கீற்றில் தேட...


Sunஅம்மா தரும் நீராகாரம்
ஆளுக்கொரு கலயம் குடித்துவிட்டு
சூரியனும் நானும்
அதிகாலை கிளம்பினோமானால்
வழியெல்லாம் பராக்கு பார்த்தபடி
உச்சிக்கு வந்துசேர
நடுப்பகல் 12 மணியாகிவிடும்

களைப்பு நீங்க
மேகத்தில் படுத்து
கதைபேசுவோம் கொஞ்சநேரம்
தாகமானால்
வெயிலுக்குள்ளேயே மழை
பெய்வித்து குடிக்க
காக்காய்க்கும் குருவிக்கும்
கல்யாணம் செய்விப்போம்

நடுவானத்திலிருந்து நாலாதிசைக்கும்
குடைக்கம்பி மாதிரி
சூரியன் விரிக்கும் கதிரில்
ஏறி இறங்கி சரித்து
விளையாடுவதில் நேரம் போவதே தெரியாது

வெக்கையில் உப்புப் பூத்து
சூரியக் கதிரொளி மங்கும்போது
தங்கத்தில் லாடமும்
வைரத்தில் சேணமும் பூட்டிய
ஏழுகுதிரை ரதமேறி நீராடப்போவோம்
மலைக்கப்பாலிருக்கும் கடலுக்கு

உன் சகவாசத்துக்காகத்தான்
இன்றும் பொசுக்காமல்
விட்டுவிட்டேன் உலகத்தை என்று
ஒவ்வொரு நாளும்
உறங்கப் பிரியும் முன்
சூரியன் சொல்லும்
நாளைக்கும் விளையாடப்
போகலாமென்பேன் நான்.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)