தரையில் கால் பாவாது
வித்தை காட்டியும்
காசு பெயராது
கவலை கொண்டவன்
மிதிவண்டியை
அமைதியாக்கி
அடுத்த அஸ்திரத்தைக்
கையிலெடுத்தான்

ஆடையற்ற வெற்றுடம்பை
கிடத்தினான்
தரையில் படர்ந்திருந்த
டியூப்லைட் குவியலில்

உணவருந்தா வயிறு
உள்வாங்கிக்கொள்ள
உடையத் தொடங்கிய
எந்தவொரு விளக்கின்
சத்தத்துக்கும் சலனமற்றிருந்தான்

முடிவாய் எழுந்தவன்
கையேந்தியபோது
உதிரத் தொடங்கியிருந்தன
உடலில் ஒட்டியிருந்த
உதிரம் படிந்த கண்ணாடிச் சில்லுகள்

இந்தமுறை அவன்
கணிப்பு தப்பவில்லை

சாகசக்காரன்
தெரிந்து வைத்திருந்திருக்கிறான்
ரத்தம் பார்த்தால்
இரக்கம் பிறக்கும் வித்தையை

மாறன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.