
வெகு நாட்களுக்குப் பின்
தர இசைந்தாய்
எனக்கு அறிமுகமாவதன் மூலம்
பிறருக்கு அம்பலமாகிவிடும்
அபாயம் குறித்து அஞ்சினாய்
காற்று நாமும்
தனித்திருக்கும் நேரத்தில்
சுற்றும் முற்றும் பார்த்து
கை திணித்துப் பறந்தாய்
அதன்பின்
உன் தொகுப்புக்கும் உனக்கும்
யாதொரு சம்பந்தமும்
இல்லாதவனாகவே
நடந்துகொண்டாய்
பாராட்டை விலக்கும்
முதல் கலைஞனாக
உன்னை தரிசித்தேன்
ஒரு மழை நேரத்து
ஆசுவாசத்தின்போதுதான்
உன் விசும்பல்
‘கடைநிலை ஊழியனுக்குக்
கவிதை ஒரு கேடா’
அன்றைக்குத்
தேநீரை விடவும்
அதிகம் சுட்டது
உன் வார்த்தைகள்தான்
- மாறன்