கீற்றில் தேட...

பூவின் நரம்புகள் என்று நாம் நினைப்பவை
கைகளை கிழிக்கும் போது தான்
முட்கள் என்று தெரிய வருகின்றன

ஒரு துளிக் குருதி
மண்ணில் விழுந்ததும்
அது சிறகடிக்கும்
ஒரு புறாவாக
மாறிவிடக் கூடாதா என்று
ஏங்குவதும்

வார்த்தைகளின் கயமைகளை
கண்டு கொள்ளும் பொழுதுகளில்
மார்பில் வெண்பஞ்சு ரோமங்களடர்ந்த
ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவியாகி
பறந்து விடக் கூடாதா என்று துக்கிப்பதும்

நாம் வானத்தின் மீது
கொண்ட பிரியத்தினால் அல்ல

அவைகள்
நட்சத்திரங்களின் புதைகுழிகள்
என்ற அறியாமையால் தான்

- தங்கேஸ்