கீற்றில் தேட...

1.

ஒவ்வொருவருக்காக
ஒவ்வொன்றைக் கைவிடுகிறேன்.

இழக்க இழக்க
இலகுவாதல் வரம்!

நீரை இழப்பதாய் வருந்துவதில்லை,
ஆறு ஓடிக் கொண்டிருப்பது
அதிக இடங்கள் சேருவதற்கே!

இழப்பின் சுமை வருத்தாத வாழ்க்கை –
பேரானந்தம்!

2.

விடு(ம்)க(வி)தை!

இதில் ஒன்றும் இல்லை என்கிறார்கள்.
எதில் என்ன இருக்கிறது என்கிறேன் நான்...

இல்லை என்பதையும் தேடிக்
கண்டுபிடிக்கிறார்கள்.

3.

அவ்வளவு சீக்கிரம்
என்னை நீங்களும்
நிராகரித்து விடாதீர்கள்.

உங்களை யாராவது நிராகரிக்கும்போது
கட்டாயம் நான் தேவைப்படுவேன்!

4.

கடவுள் இருந்திருந்தால்
நன்றாகத்தான் இருந்திருக்கும்.

அவரும் நினைப்பார்!

5.

களையெடுக்கும் கை
தான் உரிமையுடன்
பூவையும் கொய்கிறது!

- அ.சீனிவாசன்