நான் எப்படியோ
அப்படி இல்லை என் கவிதை
ரயில் கதவுகளில் தொங்கும்
மரணங்களை உட்கொள்ளும் பழைய பிரதேசத் திமிர் நான்
என்று நீங்கள் நினைக்கையில் குளிர் தேசச் சுவடுகளென
கப்பல் விட்டுக் கொண்டிருப்பேன்
பனிமலை தேசத்து புதிர் தோண்டி புதையலாய்
நானே மறைந்து கொள்ளும் தத்துவமும் நடப்பதுண்டு
மெய்நிகர் உள்பகர் என கூழாங்கல் செய்தலின் மறுபக்கத்தில்
புதுக் கவிதை உருண்டோட தவளையின் உயிர் காத்துக் கொண்டு
மணல் நுகரும் சருகு தேசத்தோடும் சில உடன்படிக்கையில் உண்டு
காணாத உயிர் தேடும் கல்லான உடல் கொண்ட தேகச் சுவர் உடைக்கும்
சித்திரப் பறவைகளை கொன்று கொண்டே வானம் ஏறும் வேட்டையனை
வெகுளி என்பீர்களா இல்லை வெளி என்பீர்களா
மடல் கண்டு மறுகணம் விடை உடைக்கும் மிகச் சிறந்த கேள்வியின் நாயகன் நான்
உடைபட உடைபட குமிழிகள் என் வேதம்
காதுக்குள் நான் பேசும் ரீங்காரம் இக் கவிதையை படிக்க விடாமல் செய்யலாம்
என் கவிதை எப்படியோ அப்படி இல்லவே இல்லை நான்

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.