போருக்குச் செல்லும்
ஒருவன் துப்பாக்கியை
மறந்து வைத்துவிட்டு
"வேறொரு போருடன்"
களமுனை காண்கிறான்.

போர்களின் ஜன்னலை பலநூறு தடவைகள் திறந்து பார்த்த அவனுக்கு,
துப்பாக்கி பற்றிய நினைவுகள் வாராமல் போனது
ஜன்னல் வழிவந்த நதிக்காற்றுகளுக்கு மட்டுமே ஆச்சர்யம்.

அருகிருந்த நதியொரு
கடலாக மாறி அலைகளை வீசாதவரையிலும் போர் தொடங்காதிருந்தது.
முதலில் தொடங்கியது போரா அல்லது அலையா என்று ஊகிக்க முடியாமைக்கு அந்த ஜன்னல்
ஒரு காரணமாயின், நதிக்காற்றுகள் "வேறொரு போருடன்" ஜன்னலை நெருங்கலாம்.

அவன் மறந்து வைத்த துப்பாக்கிகள் எந்தவொரு நேரத்திலும் வெடிக்கலாம்.
அவனது வீட்டிலோ,
அவனது நினைவிலோ,
அவனது நதியிலோ,
அவனது ஜன்னலிலோ,
அவனது கடலிலோ.
அது ஒரு துப்பாக்கி
ஆதலால் எந்நேரமும் வேறொரு
போரையும், போராளியையும் தேடித் தொலைந்தும் போகலாம்.

- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.