பூஞ்செடி கொடிகளை
அழகாக வெட்டி
நீர்பாய்ச்சி வளர்க்கும்
தோட்டக்காரனாக

ஆளில்லாதபோது
இரவுமுழுவதும் விழித்திருந்து
வீட்டைப் பாதுகாக்கிற
காவல்காரனாக

குவிந்து கிடக்கிற
துவைத்த ஆடைகளை
சலவை செய்துதருகிற
சலவைக்காரனாக

மளிகைச்சாமான்கள்
காய்கறிகள்
மாமிசம் வாங்குகிற
எடுபிடியாக

மலக்கறை படிந்த
கழிப்பறைக் கோப்பைகளை
தேய்த்துக் கழுவுகிற
கூலிக்காரனாக

குழந்தைகளைப்
பள்ளிக்கு அழைத்துபோகிற
பக்குவமாகப் பார்த்துக்கொள்கிற
ஆண் ஆயாவாக

உண்டு மிஞ்சியதைத்
தின்று வாழ்கிற
உயர்திணை நாயாகக்கூட
இருக்க முடிகிறது!

வயதான கிழவன்களால்
பெரும்பாலான வீடுகளில்
தாத்தாவாக
இருக்கவே முடிவதில்லை!
**************************************
எதிர்வீட்டுக் குழந்தை
வாழ்க்கைப்பாடம்
படிக்கிறது...
பப்பி - உயர்திணை
தாத்தா -
அஃறிணை

- நாவிஷ் செந்தில்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.