சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
கூடு.
கூட்டில் குலவும்
இணையின்
இதமான உரசலும் நெருக்கமும்,
நெருக்கத்தில் விளைச்சலில்
கூடுநிறை முட்டைகள்,
சிறகணைப்பின் சூட்டில்
சிலிர்த்துத் தலைநீட்டும்
குஞ்சுகள்,
வழியெல்லாம் தேடி
வாகாய்க் கொணர்ந்த
இரை,
இரை கேட்டு
வாய் பிளக்கும்
குஞ்சுகளின் பசிக்குரல்,
பசி தீர்க்கும் தாய்மையின்
பரிவான வாய் ஊட்டல்.
ஓயாத பகற்கனவும்
அயராத உழைப்புமாய்க்
காலம் கடக்க,
நனவானது
முதல்கனவு
கூட்டின் முழுமையில்
குதூகலித்துத்
துயில் கொண்ட
முதல்நாள் இரவு
கருத்தது மேகம்
சிறுத்தது மேனி
சுழன்றது காற்று
உழன்றது மரக்கிளை
கூடு சிதைந்தது
காடு கவிழ்ந்தது
உயிர்த்தெழுந்த காகம்
மீண்டும்
சுள்ளிகள் பொறுக்கும்.
சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
மீண்டும் கூடு..
காக்கையின் கனவுகளில் கூடு
More articles by நா.இளங்கோ
- கம்பனின் போர் எதிர்ப்புச் சிந்தனை (19 மே 2023)
- ஒற்றையடிப் பாதை... (31 மார் 2023)
- பாரதியின் கடவுள் கோட்பாடு (30 மார் 2023)
- குகை ஓவியம் (21 மார் 2023)
- பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு (17 மார் 2023)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.