காலக் கூட்டில்
முடங்கிய இளமை

தம் கன்னிமைப் பருவத்தில்
கம்பளிப் புழுவாய்
மேய்ந்து மேய்ந்து
இடங்கொடுத்த
இலை, தழைகளை
மென்று செரித்து

மேனி முட்களால்
தீண்டிய இடத்தில்
தீமை புரிந்து..

தீமை கண்டு
பிறர் அஞ்சி ஒதுங்க

தம்மை நொந்து
தனியே ஒதுங்கி
காலக் கூட்டில்
கவனிப்பார் இன்றி
முடங்கிக் கிடந்த இளமை
இன்று
இல்லாதொழிந்தது

கூட்டில் சுருண்டு
சுயத்தை இழந்து
சும்மாக் கிடந்த
காலங்கள் எல்லாம்

தன்னை இழந்தது
தன்;உரு தொலைத்தது
இறந்தகால
இகழ்ச்சிகள் எல்லாம்
காலக் கூட்டில்
கழன்று விழுந்தன.

இன்று
அனுபவச் சிறகுகளால்
அழகு பெற்றுக்
காலக் கூட்டைக்
கிழித்துக் கிளம்பியது
முதுமை.

பார்ப்பவர் எல்லாம்
பரவசம் அடைந்தனர்
வண்ணங்களை
வாரி இறைக்கும்
சிறகுகளால்
அது
வானை அளந்தது
மண்ணை
வலம் வந்தது.

காண்போர் களிக்கப்
பட்டாம்பூச்சியாய்ப்
முதுமை இன்று
முழுமை பெற்றது.

Comments

1 comment

1
சோமா
பூச்சிக்கு முன்னால் புழுவாகவும் அதற்கு முன்னால் ப்யூப்பா, இன்னும் முன்னால் முட்டை என்று செல்லாமல் விட்டு விட்டீர்களே.:-)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.