உயரதி காரமும் பெருவரு வாயும்
வியர்வை சிந்தா மென்மைத் தொழிலைத்
தமக்கே உரித்தெனக் கொண்ட பார்ப்பனர்
அமைவது அறிவால் என்றே சாற்றினர்
எந்தப் பிரிவிலும் அனைவரும் அறிஞர்
என்ற கருத்தை மூடனும் ஒப்பான்
மென்மையே குணமெனச் சொல்லும் பார்ப்பனர்
புன்மை அறிவினர் அவரிலும் உளவே
அத்தகை பாரப்பனர் உடலால் உழைத்தால்
உத்தம சூத்திரர் மேல்வர எனிலோ
ஒத்தைப் பார்ப்பனும் ஒப்ப மாட்டான்
பொத்திக் காக்கும் மென்மை மறையும்
உண்மை உருவாம் வன்மை தெரியும்
பண்புடை மக்களே அறிவீர் உணர்வீர்
 
(உயர் அதிகாரமும், அதிகமான ஊதியமும், வியர்வை சிந்தத் தேவையற்ற (அதாவது உடலுழைப்பு தேவைப்படாத) தொழில்களை எல்லாம் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டுள்ளனர். அறிவு நிலையில் உயர்ந்து இருப்பதால் அப்படி முடிகிறது என்று கருத்துப் பரவலையும் செய்து வைத்துள்ளனர். (ஆனால்) எந்த ஒரு பிரிவு மக்களும் அனைவரும் அறிஞர்கள் என்ற கருத்தை ஒரு மூடனும் ஒப்புக் கொள்ள முடியாது. தாங்கள் (வம்பு தும்புக்குப் போகாத) மென்மையானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களிடம், அவர்களிடையே உள்ளஅறிவுத் திறன் குறைந்தவர்கள் (அதிகாரமற்ற, ஊதியம் குறைந்த) உடலுழைப்பு மிகுந்த தொழில்களில் ஈடுபட்டால் (அப்படிக் காலியாகும் இடத்தில) சூத்திரர்களில் உள்ள அறிவத் திறன் மிகுந்தவர்கள் வர முடியுமே எனக் கேட்டால், ஒரு பார்ப்பனனும் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டான். (இந்நிலையில் பார்ப்பனர்கள்) தாங்கள்  கட்டிக் காத்த மென்மையானவர்கள் என்ற பெயர் மறைந்து போகும்; அவர்கள் வன்மையானவர்கள் (அதாவது கொடூரமானவர்கள்) என்ற உண்மை தெரியும். பண்புடைய மக்களே இதை அறிந்து கொள்ளுங்கள்; உணர்ந்து கொள்ளுங்கள்.)
 
- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.