மானுட விடுதலையின்பால் மட்டற்ற நாட்டமுடைய தற்சிந்த னையாளர் தந்தை பெரியார்! அறிவு வாயிலின் கதவுகளை அகலத் திறந்து வைத்து, ஏன், எதற்கு என்கிற வினாக்களின் அணிவகுப்பை நடத்திக் காட்டியவர் அவர். கட்டற்ற சிந்தனைகளின் உலைக்களமாய் அவர் உள்ளம் கனன்று கொண்டே இருந்தது.

சிற்றூர் பேரூர் என அவர் கால்கள் செல்லாத இடமில்லை. தமிழகம் முழுவதும் தன்மானச் சுடரொளியாய்ச் சுற்றிச் சுழன்ற பகுத்தறிவுச் சூறாவளி! மொழி, இனம், நாடு, கலை, இலக்கியம், பண்பாடு எனப் பல்வேறு தளங்களில் தத்துவ ஒளி பாய்ச்சிய தணல் நெருப்பு!

மொழி உணர்ச்சி பற்றிப் பெரியார் :

‘மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானால் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய இனஉணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்! (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பகுதி 6 பக்கம் 2797).

இப்படிக் கருத்துச் சொன்ன பெரியார், ‘மொழிப்பற்று’ என்கிற செய்தியில் வேறு மாதிரியும் பேசுகிறார்.

‘மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல; அது இயற்கை ஆனதும் அல்ல; அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்குக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு - விஷயங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதே யொழிய பற்றுக் கொள்வதற்கு அவசியமானதல்ல. (பெரியார் சிந்தனைகள் 3-2, பக்கம் 1752).

இங்கு மொழியின் பயன்பாட்டுத் தன்மை பற்றிப் பேசும் பெரியார், தமிழை அறிவுகொள் கருவியாகக் கையிலெடுத்துத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பாமரர் மொழியி லேயே பேசி அவர்தம் உள்ளங்களில் ஊடுருவினார். மாபெரும் அறிவுப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டி னார். தன்னலமற்ற தலைவராக மக்கள் நெஞ்சங் களில் ஒளிர்ந்தார்.

மொழியாயினும் சமுதாயமாயினும் ஒன்று மற் றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது. சமத்தவமும் சம உரிமையும் பேணப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரின் நிலைப்பாடு. மேலும் மொழியின் மீது தெய்வீகத்தன்மை ஏற்றப் படுவதையும் அவர் கண்டித்தார்.

தமிழ் பரமசிவன் டமாரத்திலிருந்து வந்ததா?

‘தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதி யிடம் பேசிய பாஷையென்றோ சொல்லி விடுவதாலும் - ‘தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும்’, ‘முதலை உண்ட பாலனை அழைத்ததாலும்’, ‘எலும்பைப் பெண்ணாக்கினதாலும்’, ‘மறைக்கதவைத் திறந்ததாலும்’ தமிழ் மேன்மை உற்றதாகிவிடாது. அன்றியும் அந்தப் படியிருந்தால், பார்ப்பான் தமிழ்மொழியைச் சூத்திர பாஷையென்றும், அதைக் காதிலே கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா என்று யோசித்துப் பாருங்கள்!’ (13.1.1936, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழர் திருநாள் விழா உரை, குடிஅரசு 26.1.36)

கம்பநாடனின் ஆள்காட்டி வேலை

தமிழ்மொழிக்குக் கிடைத்த அழியாத கலைச்செல் வங்கள் கம்பராமாயணமும், பெரியபுராணமும், இன்ன பிற இலக்கியங்களும் ஆகும். இவற்றையெல்லாம் பெரியார் கண்டபடி இழித்தும் பழித்தும் பேசியுள்ளார் என்று பெரியார் மீது குறைபட்டுக் கொள்வோர் இன்றும் இருக்கிறார்கள். பொதுவுடைமைத் தலைவர் ஜீவா போன்றவர்கள் கம்பராமாயணத்தில் காரல்மார்க்சைக் கண்டு வியந்தார்கள். ஆனால் கம்பரோ பார்ப்பன மனு தர்மக் கருத்தியலைத் தன் இராமகாதையில் பச்சை யாகவே பாடிவைத்தார்.

‘உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத் துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப் பட்டது. எனவே பிராமணனே நமது தெய்வம் (தெய்வா தீனம் ஜெகத் சர்வம்; மந்தராதீனம் தெய்வதம்; தன் மந்தரம் பிராமணாதீனம்; பிராமனோ மம தேவதா) என வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

இதன் தன்மையிலான கருத்து இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளதைக் கீழ்க்காணும் ஒரு பாடலைக் கொண்டு அறியலாம்.

தசரதன் வசிட்டரை அழைத்து ‘இராமனுக்கு வேண் டுவன செய்து அரச நீதிகளை உரைத்தருள்க’ என்றதா கவும், அவ்வாறே வசிட்டர் இராமனிடம் சென்று, கீழ்க் கண்டபடி நீதிகள் உரைத்தாகவும் கம்பர் கூறுகிறார்.

‘கரிய மாலினும் கண்ணுற லானினும்

உரிய தாமரை மேலுறை வானினும்

விரியும் பூதம்ஓர் ஐந்தினும் மெய்யினும்

பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்’

அதாவது திருமால், சிவன், நான்முகம், அய்ம்பூதம், வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும் அந்தணர்கள் பெருமையுடையவர்கள்; ஆகையால் அவர்களை உள்ளன் போடு வழிபடுவாயாக! என்று அந்தணர் பெருமை யைக் கூறுகிறார். (குடிஅரசு கட்டுரை 12.2.1944)

இதுதானா தமிழருக்கு நீதி - பண்டிதர்களே கருணை காட்டிக் கூறுங்கள்.

பெரியபுராணம் - நஞ்சைக் கக்கும் மதவெறி :

ஆலவாய் அழகராம் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பாடும் திருத்தொண் டர் புராணத்தைச் (பெரிய புராணத்தை) சைவ மெய்யன் பர்கள் தலைமேல்வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் அந்த நாள் முதலே கட்சி மாறித் தனங்களும், மாற்று மதத்துக்காரனர் மனைவியரை மானபங்கப்படுத்த வேண்டும் என்னும் மதவெறியுணர்ச்சியும், 8000 சமணர்களை ஈவிரக்கமின்றிக் கழுவேற்றிக் கொன்ற கயமைத்தனங்களும் பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளன.

‘மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என் னும் தலைப்பில் 3ஆவது பாட்டு,

‘மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ண கத்திரு வாலவா யாய்அருள்

பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண்,

தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே’

என்பதாம்.

இந்தத் திராவிடர்களின் (பெண்களை) - மனைவி களை, தானே ‘கற்பழிக்கத் திருவுளமே’ என்பது சம்பந்தர் பாடினதா? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கிற விபரத் தைப் பண்டிதர்கள் - சைவப் பண்டிதர்கள், அல்லது கிருபானந்தவாரியார், திரு.வி. கல்யாணசுந்தர முதலி யார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கடப் பாடுடையவனாக இருப்பேன். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944).

பெரியாரும் மறைமலையடிகளும் :

மறைமலையடிகள் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பழுத்த சிவப்பழம். ‘கம்பராமாய ணம்’ போன்ற வைணவ இலக்கியங்கள் திராவிட இயக்கத்தவரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதைக் களிப்புடன் வரவேற்ற அடிகளார், பெரிய புராணத்தைப் பெரியார் தோலுரிக்கத் தொடங்கியபோது கடுப்பாகிப் போனார். பெரியாரையும் இவரது இயக்கத்தினைரையும் தனது பேச்சாலும் எழுத்தாலும் கடுமையாகத் தாக்கி வசைமாரி பொழிந்தார்.

மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழியக்க வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த இயக்கமாகும். பிறமொழியின் கலப் பின்றித் தூய தமிழில் பேசவும் எழுதவும் இயலும் என்பதை தன் அறிவார்ந்த வினைத்திறனால் நிறுவிக் காட்டிய பெருமகனார் மறைமலையடிகள் ஆவார். தனித்தமிழ் இயக்கப் பணிகள் பார்ப்பனரிடையே பெரும் அச்சத்தை உருவாக்கின. சமற்கிருதத்தை மிகுதியும் உச்சரிக்க உச்சரிக்க மாந்தனின் வாழ்நாட்குறையும் என்பதை மொழியியலின் வழிநின்று மறைமலை அடிகள் மெய்ப்பித்துக் காட்டியதை அறிந்து பார்ப்பனர் கள் அவர் மேல் எரிச்சலுற்றனர். அவரின் அறிவுத்திற னைக் கொச்சைப்படுத்திப் பகை கக்கினர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்புக்குப் (இன்டர் மீடியட்) பாடமாக வைக்கப்பட்டிருந்த ‘அறிவுக்கொத்து’ என்னும் அடிகளாரின் நூலைத் தடைசெய்ய வேண்டு மென்று கூக்குரல் எழுப்பினர். அதுபோழ்து தந்தை பெரியார், மறைமலையடிகளுக்கு அரணாய் நின்று அவரின் தமிழ்ப் பணியைப் போற்றினார். பார்ப்பனர் களால் வியந்து போற்றப்படும் ‘உ.வே.ச.’வைவிடப் பன்மடங்கு உயர்ந்தவர் மறைமலைகள் என்று தம் குடிஅரசு ஏட்டில் தலையங்கம் தீட்டினார்.

“இன்று தமிழ்பாஷையின் பேரால் பெருநிதி திரட்டிக் கொண்டவரும், பெரும் புகழ் அமைத்துக் கொண்டவரும், தமிழுக்குத் தாயகமென விளம்பரப்படுத்தப்பட்டு மகா மஹோபாத்தியாயர் எனப்பட்டம் சூட்டப் பெற்றவரு மான தோழர் உ.வே. சுவாமிநாதய்யர் அவர்களை ஒரு தட்டில் வைத்து, சுவாமி வேதாச்சலமவர்களை மற் றொரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமிநாதய்யர்களைப் போட்டால் சுவாமி வேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்க முடியும் என்பதை ஒவ்வொரு நேர்மையான மகனும் தன் நெஞ்சில் கைவைத்து உண்மை உணர்வோடு பார்ப்பானானால் நன்றாய் விளங்கிவிடும்.

...ஆதலால் ஒவ்வொரு ஊரிலுமுள்ள சுயமரியாதைச் சங்கங்களும், பார்ப்பனரல்லாத சங்கங்களும், பார்ப்பனர் களுடைய விஷமப் பிரச்சாரத்தைக் கண்டித்துச் சர்க்கா ருக்குத் தீர்மானங்கள் அனுப்பும்படி வேண்டுகிறோம்”. (குடிஅரசு தலையங்கம் 1.8.1935).

பெரியாரும் சமற்கிருத எதிர்ப்பும் :

1937இல் இராசகோபாலாச்சாரி இந்தியைக் கட்டாய மாக்கியதன் உள்நோக்கமே இந்தியைச் சமற்கிருதத்தின் இடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். சரிந்துவரும் சமற்கிருதத்தின் (வடமொழியின்) செல் வாக்கைத் தடுத்து நிறுத்தவும், அம்மொழிக்குத் தமிழ ரிடையே உருவாகிவிட்ட வெறுப்பைத் தடுக்கவுமே அவர் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க விரும்பி னார். இதனை இராசகோபாலாச்சாரியே பல கூட்டங் களில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்த வஞ்சகப் பார்ப்பன நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டதால் தான் பெரியார் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரைத் தமிழகத்தில் நடத்தி 2000 பேரைச் சிறைக்கனுப் பியதுடன், தானும் மூன்றாண்டுக்காலம் கடுங்காவல் தண்டனை ஏற்றார்.

வெள்ளையன் வெளியேறி, நாடு பார்ப்பனக் கொள் ளையரின் கைக்கு வந்தபின் 1956இல் நடுவண் அரசு ‘சமற்கிருதக் கமிஷன்’ என ஒன்றை அமைத்துப் பல கோடி ரூபாயைக் கொட்டி அழத் திட்டமிட்டது. இச் செயலை வன்மையாகக் கண்டித்துப் பெரியார் தொடர்ந்து விடுதலை ஏட்டில் ஆசிரியவுரை எழுதினார்.

“இதனால் யாருக்காவது ‘காதொடிந்த ஊசியளவு’ பிரயோசனம் உண்டா? விரயம் செய்யப்பட்ட பணம் அத்தனையும் நம்மிடத்திலிருந்து வரியாகக் கோடிக் கணக்கில் - தில்லி சர்க்காரால் - பகற்கொள்ளையரைப் போல் எடுத்துச் செல்லப்படுவது தானே? பார்ப்பனரிட மிருந்து போகும் வரி விகிதாசாரம் என்ன? நம்மிடம் இருந்து போகும் வரியின் விகிதாசாரம் என்ன? ‘அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே’ என்கிற தன்மையில், இலட்சக்கணக்கில் இப்படி வாரியிறைத்துப் பதறப்பதற நாசமாக்கிக் கொண்டிருப்பதை நாம் இன் னமும் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ் வாறுதான் இருக்க வேண்டுமா?...

இப்படிப் பல இலட்ச ரூபாயைக் கரியாக்குவதன் மூலம் யாருக்கு என்ன நன்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அரசியல் சட்டத்தில் உள்ள மற்ற 13 மொழி களுக்குக் காட்டாத சலுகை, சமற்கிருதத்திற்கு மட்டும் என்ன தேவை? அப்படிச் சமற்கிருத இலக்கியத்திற்கும் மொழிக்கும் ஊக்கம் அளிப்பது என்றால் அதைத் தனிப் பட்டவர்களான பிர்லா, கே.எம். முன்ஷி போன்றவர் களால் அதற்கெனவே ஏற்படுத்தப்பட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்ற - பாரதிய வித்யா பவனம், பாரத இதிகாச சமதி, சமற்கிருத விசுவ பரிஷத் போன்ற வைகளில் செய்து கொள்ளலாம் அல்லவா? மத்திய சர்க்கார் மாத்திரம் இதற்கு ஏன் இவ்வளவு சலுகை காட்ட வேண்டும்?

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? இவ்வளவு ஆர்வம் செலுத்துவதன் நோக்கம் என்ன? என்று ஆராய்ந்தால்தான் பார்ப்பான் தனது ஆதிக்கத் தையும் ஏகபோக உரிமையையும் பாதுகாப்பதில் எவ்வளவு கண்ணுங்கருத்துமாக இருக்கிறான் என்பது விளங்கும்.

சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழ முடியும்; சுரண்ட முடியும்; நம்மைக் கீழ்ச்சாதி மக்களாக ஆக்கமுடியும்; அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிர தையாக-விழிப்போடு காரியம் செய்து வருகி றார்கள்”.

(விடுதலை, கட்டுரை, 15.2.1950, பெரியார் சிந்தனைகள் தொகுதி 3-2, பக்கம் 1764, 1765).

ஆக, சமற்கிருத எதிர்ப்பையும், தமிழ்மொழிக் காப்பு, தமிழரின் இன உரிமைக்காப்பு என்கிற கண்ணோட்டத்தில்தான் பெரியார் அணுகினார்.

தொடக்கக் காலங்களில் கல்லூரிகளில் சமற்கிருதப் பேராசிரியர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருந்தது. சமற்கிருத ஆசிரி யருக்கு மட்டுந்தான் ‘புரொஃபசர்’ என்று பெயர். தமிழ்ப் பேராசிரியர் வெறுமனே ‘ஆசிரியர்’ என்று அழைக்கப் பட்டார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் பெற்ற மாத ஊதியம் வெறும் 81 ரூபாய் மட்டுந்தான். ஆனால் அதே கல்லூரியில் சமற்கிருதம் கற்பித்த குப்புசாமி சாஸ்திரி மாத ஊதியம் ரூ.300/-க்கு மேல்!

இதுபற்றிப் பெரியார் எழுதும்போது

“ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு. பனகல் ராஜா அவர்களே இதைக்கண்டு மனங்கொதித்து என்னிடம் நேரில் சொல்லி நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்” என்று சொன்னார். அவர் சமற்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்ற போதிலும் அந்த மாதிரி - அந்தஸ்திலும் சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்று மையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலையில்தான் இருந்திருக்கக் கூடும்”.

(பெரியார் சிந்தனைகள் தொகுதி 3-2, பக்கம் 1761)

அக்காலத்தில் மருத்துவப் படிப்பிற்குச் சமற்கிருத மொழி கட்டாயம் என்கிற கேடான நிலை இருந்தது. மருத்துவப் படிப்பு என்பதே பார்ப்பனர்களின் பண் ணையமாக இருந்த பாழான அந்த நிலையை மாற்றிய ஆட்சியும் நீதிக்கட்சியின் ஆட்சிதான் என்பதை இன்றுள்ள தமிழர்கள் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெரியாரும் தமிழில் வழிபாடும் :

பெரியார் இறை மறுப்புக் கொள்கை உடையவர். சமய நம்பிக்கை இல்லாதவர். ஆயினும் தமிழன் கட்டிய கோயிலில் கடவுள் வழிபாடு தமிழில்தான் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயக் கொள்கை யாகப் பின்பற்றியவர்.

15.12.1956 அன்று மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் தமிழகக் கோயில் களில் தமிழ் வழிபாட்டை வலியுறுத்திப் போராட்டம் நடத்தப் போவதாகப் பெரியார் அறிவித்தார். இது தொடர்பாக 26.12.1956இல் குன்றக்குடி அடிகளால் பெரியாருக்கு எழுதிய மடலில் இரண்டு வினாக்களைத் தொடுத்திருந்தார்.

“1.    தாங்கள் நடத்த இருக்கும் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையையும், திருக்கோயில் வழிபாட்டையும் அடிப்படையாக வைத்திருக்கின்றீர்களா? அல்லது சிலர் கருதுவது போல இனம் அல்லது சாதியின் அடிப் படையில் கிளர்ச்சிதான் நோக்கமா?

2.     ‘தமிழன்’ வழிபாட்டிற்கு நியமிக்கப் பெற வேண் டும்’ என்று நிபந்தனை கூறியுள்ளீர்கள். ‘தமிழன்’ என்றால், தாங்கள் யாரைத் தமிழன் என்று கூறு கிறீர்கள். இதில் சாதி அல்லது இனம் உணர்ச்சி தலை காட்டுகின்றதா? இது சம்பந்தமாகத் தாங்கள் தெளிவு படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்”

இதற்குப் பெரியார் விடுத்த விடை மடல் :

போராட்டத்தின் இலட்சியம் இரண்டு.

“1.    தமிழ்நாட்டில் தமிழன் கோவிலில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும்.

2.     தமிழ்நாட்டில், தமிழன் கோயிலுக்குள் தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும்”.

இந்த இரண்டு காரியமும் கடவுளையும், வழிபாட் டையும் பற்றியது மாத்திரமல்ல. தமிழ்மொழியின் தன்மானத்தையும், தமிழனின் தன்மானத்தையும் பற்றியதுமாகும்.

கோவிலிலுள்ள கடவுள் என்பதைத் தமிழில் பூசை செய்யாததற்குக் காரணம், வடமொழியிலேயே பூசை செய்வதற்குக் காரணம் - ‘தமிழ் மிலேச்சமொழி’ என்பதும், வடமொழி ‘தேவமொழி’ என்பதுமேயாகும்.

அதுபோலவே, தமிழன் பூசை செய்யக்கூடாது என்பதற்கு, ‘தமிழன் சூத்திரன், இழிமகன்’ என்பதும், பார்ப்பான் ‘மேல்மகன், பிராமணன்’ என்பதுமே கார ணம். இதை அடிகளார் ஒப்புக்கொள்ளாதிருக்கலாம்; ஒப்புக் கொள்ள மறுக்கலாம்.

‘இந்தப் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு நம்பிக்கையும் அடிப்படையா? அல்லது இனம் சாதி அடிப்படையா?’ என்று அடிகளார் கேட்டிருக் கிறார்கள். அடிகளார் அருள்கூர்ந்து முன்னின்று செய்யும் போராட்டத்திக்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு நம்பிக்கையும் உயைவர்களையே கலந்து கொள்ளும்படி பார்த்துக் கொள்கிறேன். இதில் அடிகளாருக்குச் சங்கடம் வேண்டியதில்லை.

தவிர, ‘தமிழன் என்று யாரைக் கருதுகிறீர்கள்?’ என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள். நான் ‘தமிழன்’ என்று கருதுவது - பெரிதும் நம் நாட்டில் ‘சூத்திரர்கள்’ என்று சொல்லப்படுகிறவர்களையேயாகும்”.

(தொகுதி 1, விடுதலை 7.11.1957,

பெரியார் சிந்தனைகள், 6-1, பக்கம் 3055 - 3057)

பெரியார் பிறப்பால் கன்னடராகப் பிறக்க நேர்ந்தி ருக்கலாம். அவர் ஒருநாளும் கன்னடர்க்காகச் சிந்தித்தவர் அல்லர். தமிழையும், தமிழரையும் சிதைக்க அரசியல் நடத்தியவர் அல்லர்.

பெரியார் நாத்தழும்பேறும் அளவு நாத்திகம் பேசினார். தமிழரின் இலக்கியங்களையெல்லாம் சாடித் தீர்த்தார். தமிழைக் காட்டுமிராண்டி மொழியென்று காய்ந்தார் என்ற கருத்தும் இப்போது முன்நிறுத்தப் படுகிறது.

பெரியார் தனது எழுத்திலும் பேச்சிலும் ஒரு கருத்தை மிகவும் முகாமையாய் முன்வைப்பார். தன் கருத்துகள் மட்டுமே முடிந்த முடிவானவை அல்ல. ஏற்பன ஏற்கலாம். தள்ளுவன தள்ளலாம் என்பார். தமிழ்ப்பாட்டனார் வள்ளுவரும்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்றுதான் பாடிச் சென்றுள்ளார். எல்லா நிலையிலும் தமிழர்க்கு உற்ற அடிமைத்தளைகள் அறுபட வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோள். அந்த அடிப்படை யிலே அவர் எல்லாத் தளங்களிலும் இயங்கினார்.

ஆதிக்கமற்ற பொதுமைச் சமுதாயத்தின் கூறுகள் தமிழனின் பண்பாட்டு அடையாளமாக இருந்துள்ளது என்பதைப் பெரியார் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.

"சிந்து தீரத்தைப் பற்றியும் அங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பூர்வ சின்னங்களைப் பற்றியும் பேசுவதில், ஆரியர்களுக்கு முன் தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும், இந்தியா கண்டம் பூராவும் தமிழர்கள் இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இன்றைக்கு 6000, 7000 வருடங்களுக்கு முந்தியது என்று சொல்லப்படுகிறது." (சித்திரபுத்திரன் என்ற பெயரில் குடிஅரசு கட்டுரை, 20.9.1947)

கலாசாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்ட வர்கள் தங்களது கலாசாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டில் தமிழனின் கலாசாரங்களை - பழக்கவழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாசாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. (விடுதலை கட்டுரை 30.1.1959)

நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்திற்கும் தன்மான உணர்ச்சிக்கும், தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்குகளாகவே (அனுமார்களா கவே) இருந்திருப்போம். (குடிஅரசு 6.3.1938)

ஒரு நண்பர் சொன்னார் ‘இந்த நவராத்திரிப் பண்டி கையும் ஆடிப்பெருக்குப் பண்டிகையும் நம் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப் பதற்குப் பயன்பட்டு வந்திருக்கின்றன’ என்று! நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப் பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டுபோய்ப் போடப்படுவதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழையவைகளையும் குப்பையில் எறிந்துவிடுவதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.....

இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்து போய்விட்டன. இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதாரங்கள் ஒழிந்தே போய்விட்டன. (பெரியார் சிந்தனைகள் தொகுதி 5-2, பக்கம் 126)

ஆரியப் புராணங்களில் அநேகம் முத்தமிழ்க் கலை இலக்கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய் திருக்கும் கேட்டை ஒழிக்க மானத்தில் கவலையுள்ள நாம் எதைப் பலிகொடுத்தாவது இந்த நிலையை மாற்றி யாக வேண்டும்; அடியோடு ஒழித்தாக வேண்டும். (குடிஅரசு தலையங்கம், 29.1.1944)

மேற்காண் கூற்றுகளிலிருந்து தமிழர்களின் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய பெரியாரின் உணர்வுகளை உய்த்துணர முடிகிறது. அதேநேரத்தில் மானுட விடுதலைக்குத் தடையாய் இருந்த எந்தக் கருத்தியலையும் அவர் மறுத்தார்.

வீட்டுமொழியாகவும், வேலைக்காரி பேசும் மொழி யாகவும் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று அவர் அவாவியது தமிழின்பால் கொண்ட வெறுப்பினால் அன்று. ஆங்கிலக் கல்வியின் வழியே பார்ப்பனர்கள் அனைவரும் வாழ்வின் உச்சத்தை எட்டுகிறார்களே! தமிழர்களும் அந்த நிலையை அடைய ஆங்கிலவழிக் கல்வியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே! என்கிற ஆற்றாமையால்தான். ஆனாலும் பெரியாரின் அக்கருத்து பிழைபட்ட கருத்தே ஆகும்.

1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போரின் மூலவராய் நின்ற பெரியார், 1965இல் தமிழகத்தில் தோன்றிய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரில் மக்கள் எழுச்சியைக் கொச்சையாக மதிப்பிட்டதும், அப்போருக்கு எதிராய் நின்றதும் வரலாற்று அவலமே ஆகும். நம் இன மானத் தந்தை இடறி விழுந்த இடங்களில் அதுவும் ஒன்று.

ஆனாலும் ஒடுக்கப்பட்ட, உழைப்புச் சாதித் தமிழர் களின் உரிமைப் போருக்குக் கிடைத்த ஒப்பற்ற கள மறவர் தந்தை பெரியாரே ஆவார். அவரின் நீண்ட நெடிய பொதுவாழ்வில் காணும் உள்ளங்கை அளவுள்ள பள்ளங்குழிகளைச் செப்பனிட்டுப் பண்படுத்திப் பயணத்தைத் தொடர வேண்டியது நம் முன்னுள்ள மாபெரும் பணியாகும்!

“உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டாற்று!

உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு!

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்று!

தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம்போல - கோடரி கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம் போல் - தானாகவே விழுந்து விடும்!

தன் இனத்துக்குத் தொண்டாற்றுபவனுக்கு அடையாளம் என்னவென்றால் - அத்தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும் உடலையும் ஒப்புவித்துக் கொண்டவனாக இருக்க வேண்டும்!

இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியம்”.

- திருச்சியில் 27.8.1945இல் திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய உரை, குடிஅரசு 1.9.1945

Pin It