பூமியை
தன் தாய்வீடாகக் கொண்டு
நடைபாதையில் படுத்துறங்கும்
மனிதன் -
வெயிலை உடையாகவும்
மழையைக் குடையாகவும் கொண்டு
கொசுக்களின் ரீங்காரத்தில்
பசியின் தாலாட்டில்
மயங்கிக் கிடக்கிறான்..!

பூமியில் அவனுக்கான
நிலத்தைப் பறித்துக்கொண்டு
புன்னகைக்கிறது முதலாளித்துவம்..!

ஏழ்மையும் அறியாமையும்
ஏற்படுத்திய
கண்ணுக்கு தெரியாத இருளில்...
காணக் கிடைக்கவில்லை
காறி உமிழ
கடவுளின் முகம்..!

ஏற்கெனவே இறந்து விட்ட
கடவுளின் தோளில்
இன்னுமொரு மாலை விழுகிறது..!
அபிஷேகத்தின் பெயரால்
மூடி மறைக்கப்படுகிறது
அயோக்கியத்தனத்தின் உச்சம்..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It